எமது கட்சியும் தோழமைக்கட்சியான தி.மு.க.வும், ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக்கொண்டு தமிழ்ச் சொந்தங்களை பாதுகாக்க வேண்டும்” என்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நேற்று மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய தொல்.திருமாவளவன் இதைத் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் மீதான இனப்படுகொலை பற்றி இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்த வகையான ஆதரவினைத் தந்தது என வெள்ளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், ”தலித், பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களை மக்களவையின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பாராட்டுகிறேன். இக்கால கட்டத்தை எளியோரின் காலம் என கூற விரும்புகிறேன்.
குடியரசுத் தலைவர் உரையில் பெண் கல்விக்கான தேசிய இயக்கம், அடையாள அட்டை வழங்கும் திட்டம், குப்பம் இல்லா இந்தியா, தேசிய அளவிலான உணவு உறுதிச்சட்டம், சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியவையாகும்.
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை பற்றியும், சேது சமுத்திரத் திட்டம், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை தமிழர் மீதான இனப்படுகொலை பற்றி இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
அதைப் போலவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான ‘தனி அமைச்சகம்’ உருவாக்க வேண்டும். மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான ‘தலித் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு’வின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி உள்பட அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.







