20.08.2008.
அமெரிக்கா திட்டமிட்டுள்ள பாதுகாப்பு ஏவுகணைகளில் ஒரு தொகுதியை, போலந்து நாட்டில் நிலைநிறுத்துவது பற்றிய உடன்படிக்கை, ரஷ்யாவின் பலத்த எதிர்ப்பையையும் மீறி போலந்தின் தலைநகரான வார்சாவில் கையொப்பமாகியுள்ளது.
நேட்டோ அமைப்பும் போலந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அச்சுறுத்தல்களை சமாளித்து, பதில் நடவடிக்கை எடுக்க இந்த உடன்படிக்கை உதவும் என்று அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் காண்டலீசா ரைஸ் வார்சாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
போலந்து தனது கேந்திர முக்கியத்துவம் மிக்க இலட்சியங்களை அடைந்துவிட்டது என்று அந்நாட்டின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஏவுகணைகளை தமது மண்ணில் நிலைநிறுத்தி வைக்க போலந்து இணங்கியதன் மூலம், தானே தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தையும் எதிர்நோக்குகிறது என்று ரஷ்யா போலந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?
ஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு “பனிப்போர்” காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு திரும்புகின்றதா, என்ற சந்தேகம் எழுவது இயல்பு.
போலந்தில் நிறுவப்படும் ஏவுகணைகள், ஈரான் போன்ற “முரட்டு நாடுகளில்” இருந்து வரும் அச்சுறுத்தலை தடுக்கவே, என்று அமெரிக்க அரசு கூறுகின்றது. ஆனால் இந்தக் கதையாடல்களை ரஷ்யா ஏற்கத்தயாராக இல்லை. போலந்து நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகளை நிறுத்தி வைக்கப் போவதாக ரஷ்ய பிரதி இராணுவ தளபதி கூறியுள்ளார். மேலும் போலந்து வடக்கு எல்லையோரமாக உள்ள, இன்னும் ஜெர்மனிக்கும் அருகில் உள்ள, “காலினின் கிராத்” என்ற ரஷ்யாவின் பகுதியில், அணுவாயுத ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_17.html