முன்னிலை சோசலிச கட்சியை புகலிடதிலிருக்கும் அரச ஆதரவாளலர்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்களே என்ன காரணம்? சுயநிர்னய உரிமையை ஏன் எதிர்கிறார்கள்?
சசி
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை நண்பரே.மகிந்தா அரசு சொல்லும் அதே ‘’கோசத்தையே’’ இவர்களும் வைப்பதால், அடிப்படையில் முன்னிலை சோசலிச கட்சியும், மகிந்தாவும் ஓரே புள்ளியில் சங்கமிக்கின்றனர். மேலும் இந்த புகலிட அரச ஆதரவாளர்கள் தமது சுய திருப்திக்கான விருப்பங்களிலிருந்து, மகிந்த அரசிடமிருந்து தாங்கள் பெறும் ‘’உச்ச கட்ட லாபங்களிலிருந்தே’’ தமது அரசியலை தீர்மானிக்கின்றார்கள்.
முன்னிலை சோசலிச கட்சியை ஆதரிப்பவர்களின் பெயர்களை ஒரு தடவை பட்டியல் இட்டுப்பாருங்கள். ஆள்கடத்தல், கப்பம் , கொலை என்று இலங்கை புலனாய்வுத் துறையோடு சேர்ந்து இயங்கும் கும்பல்களும், கே.பி யோடு இயங்கும் நபர்களும், பெருவியாபாரிகளாக இருந்துகொண்டு “மார்க்ச்சிய” முகமூடிபோடுபவர்களும், பிள்ளையானின் அடியாட்களும், ‘’தலித்தியம்’’ என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டி ; மகிந்தா அரசுக்கு சேவகம் செய்பவர்களுமே இப் பட்டியலில் பெரும் இடத்தை பிடிப்பார்கள்.
இவர்களுக்கும் இலங்கையில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்கும் என்னதான் உறவு?
இன்னும் சிலர் புலிகளின் அரசியலின் எதிர் நிலையிலிருந்து முடிவுகளுக்கு வருகிறார்கள்.
இதன் விளைவே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோட்பாட்டின் மீதான இவர்களின் எதிர்வினைகளாகும். புலிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய கோட்பாட்டை தமக்கு உகந்த அரசியல் நலன்களுக்கு, தங்களின் அபிலாசைகளுக்கு கீழ்நிலைப்படுத்தி, புதிய வியாக்கியானங்களை கொடுத்ததன் விளைவே இதுவாகும். சுயநிர்ணயக் கோட்பாடு என்பது ‘பிரிந்துபோதல் மாத்திரமே’ என்ற அவர்களின் ஒற்றைப் பரிமாண சொல்லாட்சி ஏற்படுத்திய தாக்கம் இதுவாகும்.
உண்மையில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது ; ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்கள் தமது அரசியல் உரிமைகளை, தமது சுதந்திரத்தை, தமது அரசியல் வடிவத்தை தீர்மானிப்பதற்கான வழிமுறையாகும். இதில் ‘பிரிந்துபோதல்’ என்பது ஒரு அம்சமே அன்றி சுயநிர்ணய கோட்பாடு என்பதே ‘’பிரிந்துபோதலும் தனி அரசு அமைத்தலும்’’ என்பதல்ல.
இதனை நாம் இவ்வாறு விளங்கிக்கொள்ளமுடியும்.குடும்ப உறவில் மனைவி கணவன் இருவருக்கும் இடையில் உள்ள விவாகரத்து என்ற சட்ட உரிமை போன்றதே இதுவாகும். விவாகரத்து உரிமை இருக்கின்றது என்பதற்காக மனைவியும் கணவனும் பிரிந்து செல்ல வேண்டுமென்று முடிவெடுப்பதில்லை. மனைவி கணவன் இருவருக்கும் இடையில் இணைந்து வாழ்வதில் உடன்பாடற்ற தன்மைகள் முரண்பாடுகள் பகமைகள் தோன்றி ஐக்கியப்பட்ட உறவு சாத்திய இன்மையாகி சகிக்க முடியாத நிலமை தோன்றும்போதே விவாகரத்து உரிமை பயன்படுத்தப்படுகின்றது. இதே தன்மையை ஒத்ததே சுயநிர்ணய உரிமை கோட்பாடாகும்.
இறைகுமாரன் உமைகுமாரன் கொலைக்கு சந்ததியார்தான் காரணம் என்று
சொல்லப்படுகிறது. உண்மையா?
மகேஸ்
இதில் தோழர் சந்ததியார் சம்பந்தம் பற்றி என்னிடம் தெளிவான முடிவு எதுவுமில்லை. ஆனால் இப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் சந்ததியாரின் மிக நெருக்கமான ஆட்கள் என்பது தெரியும். இக் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளையும் சந்ததியார், உமாமகேஸ்வரன் போன்ற அதிகாரத்தில் இருந்த எவரும் எடுக்கவில்லை என்பதும், கொலையாளிகள் புளொட்டில் இந்த இருவரின் ‘செல்லப்பிள்ளைகளாக’ இருந்தார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது.
இக் கொலை நடந்தகாலத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தேன்.
இறைகுமாரன் எனது நண்பர் என்பதும், இப் படுகொலை எனக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்ததினாலும் இப் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஓர் கண்டன கூட்டத்தை நடாத்தினேன். புளொட்தான் இக் கொலையை செய்தது என்ற சந்தேகம் எனக்கிருந்தாலும் அதனை அந்நேரத்தில் உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை. எனினும் கூட்டத்தை நடாத்தினேன். இதன்பின் இக் கூட்டம் நடாத்தியது தொடர்பாக நான் புளொட்டினால் விமர்சிக்கப்பட்டேன்.
இதைப்பற்றி நான் நிறைய எழுத முடியும். எனது வரலாற்றை எழுதும்போது நிச்சயம் இது பற்றி எழுதுவேன்.
அதிகமான தலித் அமைப்புக்கள் வலதுசாரி பிற்போக்கு அரசியலையே கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலைக்கு இன்றைய இடதுசாரி அமைப்புக்களின் அரசியலும் காரணம்தானே இது பற்றிய உங்கள் கருத்து என்ன.
விஜயன்
இது தத்துவார்த்த நடைமுறை சார்ந்த பிரச்சனை. முழமையாக ஆராயப்படவேண்டியது. கேள்வி பதிலில் என்னால் முழுமையாக ஒரு புரிதலை கொண்டுவரமுடியுமோ தெரியவில்லை.
தலித் இயக்கங்கள் இவ்வாறான வலதுசாரி அரசியல்போக்கை கொண்டு இயங்குவதற்கு அடிப்படைக் காரணம் இன்றைய அடையாள அரசியல் தன்னகத்தே கொண்டு இயங்கும் அதன் “அரசியலே” என நினைக்கிறேன். வர்க்கம், இனம், பால், நிறம், மொழி போன்ற பன் முக அடையாளங்களுக்கூடாக இனம் காணப்படும் ஒடுக்குமுறைகள், முரண்பாடுகள் ,புறக்கணிப்புக்கள் போன்றவை எவ்வாறன அரசியல் நலன்சார்ந்து மதிப்பிடப்படுகின்றன என்ற வழிமுறையில் இருந்தே இதன் அரசியல் கட்டமைக்கப்படுகின்றது.
நீங்கள் சொல்வதுபோல் இவ் இயக்கங்கள் அநேகமானவை வலதுசாரி அரசியலை பின்புலமாகக்கொண்டு இயங்குவதற்கு இவ் அமைப்புக்களை வழி நடாத்துகின்ற நபர்கள் வலதுசாரிகளாகவும், பிற்போக்காளர்களாகவும், தலித் அரசியலை தங்களுடைய அரசியலுக்கு ‘’மூலதனமாக’’ கொள்பவர்களாகவும் இருப்பதுவே காரணமாகும். சமூகங்களை பற்பலவாறாக கூறுபோடவும், சமூகங்களிடையே காணப்படும் அடையாளம் சார்ந்த வேறுபாடுகளை ; முரண்பாடுகளாக, மோதல்களாக கூர்மை அடையச் செய்யும் பின் நவினத்துவ அரசியல் சிந்தனையின் போக்கும் இன்னொரு காரணமாகும்.
அதே வேளை இந்த பன்முக ஒடுக்குமுறைகளை விளங்கிக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தீர்வு காணவும் முயலாத சில இடதுசாரி அமைப்புக்களின் போக்கும் காரணம் என்றே சொல்லவேண்டும். எமது தலித் மக்கள் சாதிய ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கபடுகிறார்கள். வர்க்கத்தளத்திலான போராட்டங்கள் மட்டுமன்றி ; சாதியத் தளத்திலான சாதிய ஆதிக்க எதிர்ப்பு அரசியலை, போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். அதே நேரம் சாதியம் இன்றைய உற்பத்தி முறைகளிலும் ,அரச அதிகாரங்களிலும், கருத்துருவங்களிலும் மிகவும் இறுக்கப்பட்டு காணப்படுகின்றது. எனவே தலித் அரசிலை, சாதிய ஆதிக்க எதிர்ப்பு அரசியலை, மாக்சியத்தின் வழிகாட்டலோடு ; பெரியாரியம்- அம்பேக்காரியம் போன்றவற்றின் கூறுகள் இணைக்கப்பட்டு ஒரு புரட்சிகர தலைமையில் போராட்டங்கள் வழிநடத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் கேட்கும் இக் கேள்வி காலம்பூராகவும் கேட்கப்படும் கேள்வியாகவே மாறக்கூடும்.
மட்டக்களப்பு பில்லி சூனியம் மந்திரம் பற்றி சொல்லுங்களேன். அறியவிரும்புகிறேன்.
வாசன்
மட்டக்களப்பு போடியார்கள் பற்றிய கேள்வியையும் நீங்களே கேட்டிருந்தீர்கள். இப்போது இக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நன்றி.
உண்மையில் அரசியல் கேள்விகளைவிட இக் கேள்விகளே என் மனதிற்கு சந்தோசம் அளிப்பதாய் உள்ளது. நீங்கள் மட்டக்களப்பு கலை, கலாச்சார ,பண்பாட்டு விழிமியங்களை அறிய ஆவலானால் பின்வரும் புத்தகங்களை வாசிக்க முயலவும். மட்டக்களப்பு தமிழகம் – வீ.சி. கந்தையா , மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் – எவ்.எக்ஸ். நடராஐர், மட்டக்களப்பு குகன் குல முக்குவர் வரலாறு- ஞா. சிவசண்முகம், அக்கரைப்பற்று வரலாறு – ஏயாரெம் சலீம் , மட்டக்களப்பு மான்மியம்.-எவ்.எக்ஸ். நடராஐர், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் – வெல்லவூர்கோபால், மகோன் வரலாறு- க.தங்கேஸ்வரி.
நீங்கள் இந்த பில்லி ,சூனியம் பற்றிய கேள்வியை என் பால்ய பருவத்தில் கேட்டிருந்தால் இது பற்றி விதம் விதமான கதைகளை பலவகைப்பட்ட ‘தினிசிகளோடு’ சொல்லியிருப்பேன். என்னிடம் இவ்வகைப்பட்ட கதைகள் நிறையவே இருந்தன. பில்லி- சூனியம்- மந்திரம் பற்றி சொல்லும் நல்ல அழகான “கதை சொல்லியாக” நான் இருந்தேன்.
இளமையில் சின்ன வயதில் எனக்கொரு “ஆளே” இருந்தான். (‘ஆளே’ என்பது மட்டக்களப்பு கிராமிய வழக்கில் நெருங்கிய கூட்டாளியை, நண்பனை குறிப்பது) அவனின் தாத்தா மந்திரவாதியாக இருந்தார். அவன் மிகச் சிறந்த ‘கதை சொல்லி’. தினம் தினம் கதை சொல்வான். அவன் சொல்லும் கதைகளை கேட்பதற்காக நாங்கள் ஒரு கூட்டமே அவன் பின்னால் அலைவோம். பில்லி விட்ட கதை, சூனியம் செய்த கதை, மருந்துபோட்ட கதை, மை போட்டுப் பார்த்த கதை, பேய் ஆட்டக்கதை என்று ஆயிரம் கதைகள் அவன் வைத்திருந்தான்.
நானும் அவனால் பில்லி- சூனிய கதை சொல்லியாய் மாறினேன். காலத்தின் வளர்ச்சி ; அறிவியலும், அரசியலும் என்னோடு இருந்த “கதை சொல்லியை” என்னிடம் இருந்து அந்நியப்படுத்திவிட்டது.
இன்றைய காலம் மட்டக்களப்பு மந்திரவாதிகள் அருகிவிட்ட காலமாக மாறிவிட்டது. அவர்களின் மறைவுகளோடு கிராமிய வைத்தியங்களும் சிகிச்சை முறைகளும் சடங்குகளும் அருகிவிட்டன. இந்த மந்திரவாதிகள் மிகவும் சிறந்த மூலிகை வைத்தியர்களாகவும், சிறந்த ஏடு படிப்பவர்களாகவும் இருந்தார்கள். நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கிளம்பி எங்கோவந்துவிட்டேன்.
இன்று நீங்கள் கேட்கும் இக் கேள்விக்கு ; என்னை வளம்படுத்திய அறிவியலையும், அரசியலையும் கொண்டு பதிலளிக்க முயல்வேனானால் உங்கள் கேள்விக்குப் பின்னால் உள்ள “சுவாரசியம்” அழிந்துபோகும். அது வேண்டாம். எனினும் மட்டக்களப்பில் இதன் மீதான நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் தொடர்வதாகவே நான் நினைக்கின்றேன். உங்களின் கேள்வி என் பால்ய பருவ நினைவுகளை ‘இரைமீட்க’ உதவிற்று. நன்றி நண்பரே.








மட்டக்களப்பு மாந்திரீகம் பற்றி நான் வாசித்த ஓர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய மாதிரி வாழைப்பழத்தை துண்டு… துண்டாகா… வெட்டிய மாந்திரீகம்…!!!
நிங்களும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய மாதிரி மனதால் சுவையுங்கள்…
ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன்.மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை.
டேய் உன்னூர் பாயில் படுத்தால் அப்படியே ஒட்டி விடுமே என்பார்கள். நானும் பதிலுக்கு எங்களூர் உபசரிப்பில் நீங்கள் மயங்கி, சில பல வேளையில் காதலித்து கசிங்து உருகி எங்களூர் மனிதர்களாய் மாறிப்போவதை நாங்கள் மாந்தரீகம் செய்து பாயில் போடுகிறோம் என்கிறீர்கள் என்பேன்.
பின்பு மாந்தரீகம் பற்றி பேசுவார்கள். காதலித்த பெண்ணை வசியம் செய்வது பற்றித் தெரியுமா என்பார்கள் மிகுந்த ஆர்வத்துடன். நானும் அந்தக் காலத்தில் கேட்டறிந்த சில விடயங்களைக் கூறி எங்கள் ஊரின் மேலான அவர்களின் ஒரு வித பயத்தன்மையை ரசித்திருப்பேன்.
பெண்ணை வசியம் செய்வது பற்றியே அடிக்கடி கதை வரும். அப்போதெல்லாம் அமாவாசை அன்று காலை அவளின் காலடி மண் எடுத்து, ஒரு தலைமுடியுடன், ஒரு கோழி சாராயப்போத்தில் ஆகியவற்றுடன் மந்திரவாதியிடம் கொடுத்தால் அவர் அவளை உன் பின்னால் அலையவைப்பார் என்பேன். திறந்த வாய்க்குள் கொசு பூந்தது கூட தெரியாமல் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
எங்கள் ஏறாவூர் காளி கோயில் ”சாமி கட்டுதல், பலி கொடுத்தல்” விடயங்களையும் ஏகத்துக்கும் சஸ்பென்ஸ் கலந்து சொல்வதால் என்னைப் பற்றி ஒரு விதமாந்திரீகம் தெரிந்தவன் என்னும் எண்ணம் சிலரிடம் இருந்தது.
அதனாலோ என்னவோ ஒரிருவர் காதலுக்காக என்னை நாடிய கதையும் இருக்கிறது. உண்மையில் நமக்கு அதெல்லாம் தெரியாதப்பா என்று அவர்களை நான் நம்பவைக்க பெரும் பாடுபட்டேன்.
ஆனால் ஒரு இடத்தில் மட்டும் நமக்கு தெரிந்த ஜால வித்தையைக் காட்டினேன். அதனால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ”இமேஜ்” இன்னும் கலைந்ததாயில்லை.
என் நண்பர் ஒருவரின் நெருங்கிய உறவினர், பெண். எதற்கெடுத்தாலும் பயமும், சந்தேகமும் கொண்டவர். பேய், மந்திரம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதற்காகவே பல காலம் எடுத்தது அவர் என்னுடன் சகஜமாகப் பழக. எனது நண்பரும் மிகவும் ஜாலியான பேர்வழி. ஒரு நாள் தனது உறவினரை கலாய்க்க எண்ணி தனது உறவினரிடம் எனக்குமாந்திரீகம் தெரியும் என்றும், நான் அவருக்கு வாழைப்பழத்ததை உரிக்காமலே துண்டு துண்டாக வெட்டிக் காட்டினேன் என்றும் சொன்னதனால் அதை நிருபித்தக் காட்ட வேண்டும் என்று உறவினர் கேட்டிருக்கிறார். நண்பரும் என்னை அழைத்த வருவதாக கூறி என்னை அழைத்த வந்தார்.
நானும் இரண்டு பழுத்த வாழைப்பழங்களை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து மூடி, ஊதுபத்தி கொழுத்தி, கற்பூரம் காட்டி, தேசிக்காய் வெட்டி, மந்திரம் சொல்லிய பின் நண்பரின் உறவினரை அந்த இரண்டு வாழைப்பழங்களையும் உரிக்கச் சொன்னேன். அவர் அவற்றை உரித்த போது அவை கத்தியால் வெட்டப்பட்ட துண்டு துண்டுகள் போன்று கீழே விழ, அவர் பலத்த அலரலுடன் கத்தியபடியே வாழைப்பழத்தை கீழே போட்டுவிட்டு நண்பரின் பின்னால் நின்று கொண்டார். நண்பரும் பார்த்தீர்களா இவரின் சக்தியை என்று உறவினரை வெருட்டித் தள்ளினார். உறவினர் உண்மையாகவே என்னை ஒரு மந்திரவாதியாகவே நம்பிவிட்டார். அதன் பின் ஊருக்குள் தான் கண்ணால் கண்டதை சிலரிடம் கூறவும் செய்தார்.
நிலைமை சற்று மோசமடைவதை கண்ட நான் நண்பரை அணுகி உண்மையை கூறுவோம் என்றேன். அவருக்கும் ஏற்புடையதாய் இருந்ததால் உண்மையை செய்முறையால் செய்து காட்டினோம். அந்த உறவினரால் நம்ப முடியவில்லை. எனது நண்பனும் அதை செய்து காட்டிய பின்பே அவர் ஓரளவு நம்பினார். ஏறத்தாள 18 ஆண்டுகளின் பின் அவரை சில மாதங்களுக்கு முன் சந்தித்தேன். வாடா வா வாழைப்பழ மந்திரவாதியே என்று அன்பாய் அழைத்தார். சேர்ந்து சிரித்தோம்.
பி.கு: ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதனை ஒரு மெல்லிய ஊசியினால் குத்தி வாழைப்பழத்தினை குறுக்காக வெட்டினால் தோலின் உள்ளே வாழைப்பழம் வெட்டுப்படும். தோல் வெட்டுப்படாது. இது தான் எனது மாந்தரீகத்தின் சிதம்பர ரகசியம். இதை விடமட்டக்களப்பு மாந்தரீகம் தெரிந்தவன் நான் என்று நீங்கள் நினைத்தால் அது ரொம்ப டூமச்.
http://visaran.blogspot.ca/2011/11/blog-post_09.html
Alex Ravi. Great Names. Mattakkalappu Manmeeyam by Vidwan F. X. C. Nadarajah. Mattakkallappu Thamilagam by Pundit V. C. Kandiah. We are proud of our own separate identity. Both provinces are 4, 000 square miles in extent. I am proud to be a Sengunthar like Sri Sabaratnam too. They used to call him Tall Sri.
மட்டக்களப்பின் பெருமையை மட்டும் சொல்லாமல்… ஓர் ஆவணமாக மட்டக்களப்பின் சரித்திரப் பெருமையை எடுத்து வரும் மட்டக்களப்பு மான்மியத்தை இங்கு எடுத்து வந்த டாக்டருக்கு நன்றி!
வித்துவான் F. X. C. நடராசா அவர்கள் எழுதிய ‘மட்டக்களப்பு மான்மியதில்’ மட்டக்ககப்பு என்னும் பெயர் எப்படி வந்தது என்று கூறும் போது “மட்டக்களப்பு என்னும் பெயர் தொன்றுதொட்டு ஏற்பட்டதாகச் சாசனங்களிலும் காணப்படவில்லை. அக்காலம் இஃது காடடர்ந்த வனாந்தரமாகவிருந்ததாகவே எண்ண இடமுண்டு. அந்நிய தேசவாசிகள் மரமேற்றியகாலம் இங்குள்ள கண்டபாணத் துறையிற் றங்குவதுண்டாம். இஃதிவ்வாறாக இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடாமட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர். ஒல்லாந்தர் காலம் வரை வாவியின் தென் எல்லையே மட்டக்களப்பு என்னும் பெயரைப் பெற்றிருந்தது. ஒல்லாந்தர் தங்களுக்குக் கோட்டைகட்டுவதற்கு வசதியான ஒரு இடத்தைத் தெரிந்து 16-ம் நூற்றாண்டில் கட்டினர். அது தொடக்கமே வாவியின் வடபுறம் மட்டக்களப்பு என்னும் பெயராயிற்று.” என்றும்…
தொழில் ரீதியாக அமைந்த ஜாதிகள் பற்றிக் குறிப்பிடும் போது,
முக்குகர் வன்னிமை
சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
சிங்களக் குடி
அரியகல மிடுமுதலி மீகான் கோடை அவுறாளை மேலச்சேனை பள்ளச்சேனை
பெரிய கல்மடுமுதலி மூவாங்கல்லு பேர்களேழே
புத்தூரர் மருங்கூரர் வீரச்சோலைபுகழ் காரைக்காட்டாரும் கொங்கைந்தும்
வித்தகமாய் மேழிதொழில் செய்யுமென்றான்
வெள்ளாளக் குடி
விறல் கலிங்கன் படையாட்சி இருவருந்தான் முத்தகல்லிலிருத்தி வைத்து
மாகோன் தானும் முதன்மை தரும் படையாட்சி வன்னியைச் சேர்ந்துபெறும்
தோப்பாவையைக் கைவசப்படுத்திப் படையாட்சி குலத்தார்க்கும் பகுத்து ஈந்தான்
செட்டி குடி
செட்டி, மங்குச்செட்டி, மாணிக்கன். சங்குச்செட்டி, சதாசிவன், சிங்கச்செட்டி
சின்னவன். பங்குச்செட்டி, பகுத்ததேழே கொச்சி வயிற்றார் முதலைக்குடி குறித்த
தாழாங்குடா ஒழுங்கு உச்சக்கரையார் ஆறுடனே பாவாடை உவந்த சலவை
ஆறுடனே அச்சமின்றி அவரவர் அறிந்து பார் நடத்துவரே.
நாவிதர்
சாரியுறு மண்முனையதில் அறவுதங்கும் மகிழத்தீவு சவளக்கடை
ஏரியுறு பாலைமுனை வழலவாயி லங்கு சம்மான் துறையென்னுமேழாய்
வாரியுறு மானிழலில் ரசுசெய்யும் மாகோனும் இவர் குடியை வகுத்து வைத்தான்
தாரணியறிந்தவர்கள் நாவிதனைப் தக்கபடி வைத்தமுறை சாரலாமே.
கரையார்.
கரையூரார் கம்பிளியா ராறுகாட்டி கருதுமுதலித்தேவன் வயித்திவேலன்
தறைசெறி வங்காளம் வீரமாணிக்கன் தான் கரையார்குடி ஏழாய்த்தரித்தான் பாரில்
சீர்பரதர்
துரைபோர்வீரகண்டன் சீர்பாதம் துடர்சித்தாத்திரன் காலதேவன் காங்கேயன்
நரையாவி வேளாலி மூடவெனென்னும் நாடதனில் பொட்டப்பறைச்சிசூடி யேழே
வரையாக இவர்களையும் வகுத்து வைத்து மானிலத்தி
லொற்றுமையாய் வாழுமென்று
திரையகல் சூழல்;புவி யரசன் வகுத்து வைத்துச்சீர்பாதம்
செட்டியென்று செப்பினாரே
பண்டாரப்பிள்ளைகள்
பண்டாரப்பிள்ளை தேசத்து எச்சிக்கல்லகற்றி
பறைதூக்கி கொடிகட்டி குருத்துக்கட்டி
விண்டரும் வீதி அதிகாரம் திருவட்டி …………..
மன்றாடும் போடியார் வீடு கூட்டி
மடத்தடியார் குளிசீலை பிழியுந்தொழில்கொண்டு
குகமரபினனுக்குச் செய்வதன்றி
வேறு குலமக்களுக்குச் செய்யொண்ணாதே.
தட்டார்
களுவத்த பணிக்கன் வேலன் கறுத்தக்கண்ணி பத்திச்சி
கொளுங்க குப்பட்டி குசவன் பாலன்குட்டி வகைகளதாக்கி
நழுவிய நம்பிமாரை நழவரென்ற வரியிற்சேர்த்து
வழுவில்லா மதுவெடுக்கும் வருணமென்றியம்பினாரே.
பறையர்
வள்ளுவம் தொட்டி தோட்டி வாஞ்சொலி சக்கிலியன்
துள்ளும் வெட்டி யானந்தனேழாய்ச் சுகித்திடவகுத்தவாறே
பள்ளுடன் கலந்தாலுங்கள் வரன்முறை குறையுமென்று
வள்ளலார் காலிங்க மாகோனும் வகுத்திட்டாரே.
இதை ஓர் மட்டக்களப்பு சம்பந்தமான ஓர் ஆராய்ச்சி நூலாகவே எழுதியுள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல்… புலம்பெயர்ந்த மட்டகளப்பாரும்… இலங்கைத் தீவின் அனைத்தவரும் அறிய வேண்டிய பல உள்ளன.
நிங்களும் வாசித்து அறியாதவற்றை அறியுங்கள்… பகிருங்கள்…
http://www.noolaham.net/project/02/199/199.htm
செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்று கூறப்படுகிறது.
கனடாவில் எனது நண்பர் ஒருவன் தான் செங்குந்தவர் என்று பெருமையாகக் கூறுவார்.
அவர் கூறும்போது, தாம் நல்லூர் சங்கிலியன் ராஜதானியை சேர்ந்தவர்கள் என்றும்… மிகவும் நம்பிக்கைக்குரிய படை வீரர்கள் என்றும்… தமது பரம்பரை அரசனுக்கு மெய்ப்பாதுகாவலராக மட்டுமல்லாமல்… வெற்றிலை மடித்துக் கொடுப்பதும் என்றும் கூறுவார்.
காரணம்: அரசனுக்கு மெல்லுவதற்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பவர் மிகவும் நம்பிக்கையானவராக இருக்க வேண்டும்.
செங்குந்தர்களை கைக்கோளர் என்றும் கூறுவதாக சரித்திரம் உள்ளது (தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்
இன்று தமிழ்நாட்டில் பார்த்தால்… நெசவு செய்பவர்கள் கூடுதலாக செங்குந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நேசவுக்கும்… தறிகளுக்கும் பெயர்போன காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர் இவர்கள் கூடுதலாக இருப்பதோடு தற்போது செங்குந்த முதலியார்கள் என்று அழைக்கபடுகிரார்கள் .
இன்று இவர்களின் சந்ததிகள் யாழ்ப்பணத்தில் கல்வியங்காடு-கட்டைப்பிராய் இருப்பதாக அறிந்தேன் (1983 வரையில் என்று சொல்லலாம்-இப்பதானே எல்லோரும் எல்லா இடமும் immigrants)
இது மட்டுமல்ல… “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடிய பாரதியாரின் பாரத நாட்டில் இன்று சாதிகளின் பெயர்களில் கட்சிகள்… மாவட்டங்கள்… போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள்… என்று சாதிகள் நீன்று கொண்டு போக…
அகதியாக சென்று குடியேறிய ஓர் நெருங்கிய உறவினரை சந்திக்க கடந்த வருடம் திண்டுக்கல் சென்ற பொது “சோழியன் குடும்பி சும்மா ஆடாது” என்பதின் அர்த்தத்தை அறிந்து கொண்டேன்… சாதிகளின் சாதிமான்களிடம் என்னதான் ஒற்றுமை… ஹ்ம்ம்…!!!
யாழ்ப்பணத்தில் இருக்கும் போது எமது அயலில் உள்ள சாதி விபரங்களை கூட அறியாத நிலையில்… பாரதி பிறந்த பாரத மண்ணில் திருக்குறளின் குறள்களை விடக் கூடுதலான சாதிகளை அறிந்து… இன்று அகதியாக குடிபெயர்ந்த நாட்டில் எமது இனத்துவ அமைப்பில் என்னென்ன சாதிகள் உள்ளன என்று அறியக்கிடக்கிறது… அதுவும் 21ம் நூற்றாண்டில்…
செங்கொடியுடன் மக்கள் விடுதலைக்காக புறப்பட்டவர்கள்… இன்று “நாம் கீழ்சாதிக்குத்தான் உதவுவோம்; மேற்சாதிக்கு உதவத் தேவையில்லை” (இதை எனக்கு கூறியவரின் குறுகிய கண்ணோட்டத்தில் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் உயர் மேட்டுக்குடி.. உயர்சாதி மக்கள்) என்று கூறும் நிலையில்… எல்லாவற்றிக்கும் எங்கு போய் முட்ட…
இது பற்றி நான் அறிந்தது
இப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் சந்ததியாரின் மிக நெருக்கமான ஆட்கள் என்பது உண்மை. ஆனால் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் செல்லவில்லை. உண்மையில் வேறு விடயமக அவர்கள் நள்ளிரவில் போய்விட்டு வரும்பொழுது எதிரே வந்த மோட்டார்சயிக்கிள் வெளிச்சத்துக்கு மறையும்போது தான் பைக்கில் போவது உமைகுமரன் என்பது தெரிந்திருந்தது. அப்போதுதான் சுந்தரம் கொலைதொடர்பாக இவர்களை விசாரிக்கவேண்டும் என சொன்னது நினைவுக்கு வர பின்தொடர்ந்து சென்று உமைகுமரனை வீட்டில் கூட்டிச் சென்று பின்னர் இறைகுமரனை எழுப்பி வயல் வெளிக்கு கூட்டிச் சென்று விசாரிக்கும் போது, உமைகுமரன் புளட் உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டு காலால் அடித்து சண்டை போட்டுள்ளார். இந்த இழு பறியில்தான் இவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார்கள். கடைசியில் தம்மைக் காப்பாற்றும் முயற்சியில் விசாரணை ஒன்றும் இல்லாமல் கொலையில் முடிந்தது. உமைகுமரன் ஓரளவுக்கு சண்டை போடக்கூடியவ்ர்.விசாரிக்கப் போன புளட் உறுப்பினர்கள் எல்லோருமே அப்போது பதின்ம வயதினர்கள் என அறிந்தேன். இதை எந்த நியாயப் படுத்தலுக்காகவும் சொல்லவில்லை. இவர்களை விசாரிக்க வேண்டும் என சொன்னது யார் என்பது என்னால் இப்போது சொல்லமுடியாதுள்ளது.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – நூல் விமர்சனத்தில் இறைகுமாரன் – உமைகுமாரன் கொலை என்னும் தலைப்பின் கீழ் இப்படி கூறுகிறார்கள்…!!!
சுந்தரம் கொல்லப்பட்ட தினம் காங்கேசன்துறையில் இருந்து சுந்தரத்தைத் தொடர்ந்து வந்த உமைகுமாரனின் நெருங்கிய கூட்டாளியான புராந்தகன் கொக்குவில் புகையிரநிலையத்தில் இறங்கிய போது உமைகுமாரன் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்றுள்ளார். பின்பு அதே உமைகுமாரனின் மோட்டார் சைக்கிளில் வந்த சாள்ஸ் அன்ரனி, சித்திரா அச்சகத்தடியில் வைத்துச் சுந்தரத்தை சுட்டான் என்றே கூறப்படுகின்றது.
இறைகுமாரன், உமைகுமாரன் போன்றோர் சுந்தரம் கொலையினை எப்போதுமே நியாயப்படுத்தி வந்தார்கள். இருவரும் அமிர்தலிங்கம்; பிரபாகரன் இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாக அப்போது இருந்தார்கள். சந்ததியாரும் இந்தியாவில் ஒரு முறை பிரபாகரனால் கடத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு கொல்லப்படும் வேளையில் தப்பினார். அமிர்தலிங்கம் பிரபாகரன் கூட்டுச் சதியால் தான் சுந்தரத்தின் கொலை நிகழ்ந்தது.
1982 மே மாதத்தில் இறைகுமாரன் – உமைகுமாரன் இருவரும், அளவெட்டியில் கொலை செய்யப்பட்டார்கள். PLOT ஐச் சேர்ந்த பெரிய மெண்டிஸ் என அழைக்கப்படும் பாலமோட்டை சிவம் தலைமையில் சென்ற பாபுஜி, கந்தசாமி (சங்கிலி), மூர்த்தி, மன்னா (அற்புதம்), மீரான் வாத்தி (சத்தியதாசன்), செந்தில் ஆகியோரைக் கொண்ட குழுவே இக்கொலையைச் செய்தது.
இறைகுமாரனையோ, உமைகுமாரனையோ கொல்லும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என்றும், ஆட்களை விசாரித்து சுந்தரம் கொலை தொடர்பாகத் தகவல் பெறுவதே நோக்கமாக இருந்தது எனவும் உமைகுமாரன் எதிர்ப்புக் காட்டி திருப்பி தாக்கியதாலேயே கொல்ல வேண்டி வந்ததாயும், கொன்றவர்கள் பிற்காலத்தில் விளக்கம் சொல்லியுள்ளார்கள். இது பொதுவாக ஏற்கக்கூடியவாதமல்ல. ஏனெனில், சுந்தரத்தின் தீவிர அபிமானியான பெரிய மெண்டிஸ் சுந்தரத்தின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்து வைத்திருந்தாகவும், மற்றொரு சுந்தரத்தின் நெருக்கமானவரான செந்தில் மிஞ்சிய எலும்பு ஒன்றை தனது கழுத்தில் கட்டியிருந்ததாயும், சுந்தரத்தின் கொலைக்கு காரணமானவர்களைப் பழிவாங்காமல் விடுவதில்லை என்று அவர்கள் சபதம் பூண்டிருந்ததாகவும் தெரிகிறது. பின்பு, இவர்களே இறைகுமாரன் – உமைகுமாரனை அளவெட்டி “பினாக்கைவெளி” யில் சுட்டுக் கொன்றனர்.
இக்கொலைகளில் சந்தியாருக்கு உண்மையில் எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அவருக்கு தெரியாமலே இது நடைபெற்றது. இதற்கு பல தொகை ஆதாரங்கள் உண்டு. பழைய இடதுசாரியும், சிறிது காலம் PLOT அமைப்பிலிருந்தவரான சண்முகலிங்கம் இக்கொலைகளோடு சந்ததியாருக்கு எந்தவித சம்பந்தமும் இருக்கவில்லை, இது நடந்த பின்பே இவருக்கு தெரியும், இறைகுமாரனின் கொலைக்காக அவர் மிகவும் வருத்தமடைந்தார் என்று, இன்று நினைவு கூர்கின்றார்.
PLOT இல் உட்கொலைகள் நடைபெற்ற போது தப்பி வந்தவரான ரஜீன்குமார் இது பற்றிக் கூறுகையில், ஒரு முறை PLOT முகாம் ஒன்றில் இந்தியாவில் சந்ததியாருடன் நடந்த கலந்துரையாடலில் இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி சந்ததியாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது ” இது இயக்கத்திற்கு தெரியாமலே நடந்தது. இக்கொலைகட்கு காரணமானவர்கள் இயக்கப் பதவிகள் பறிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்” என்று கூறியதுடன், கூட்டத்தில் இருந்த பெரியமென்டிஸைச் சுட்டிக்காட்டி ” இவர்தான் இதில் சம்பந்தப்பட்டவர், அவரிடம் நீங்கள் இதுபற்றிக் கேட்கலாம்” என்று சொன்னதையும் ஞாபகப்படுத்துகின்றார்.
இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றிய பிரச்சனையை கூட்டத்தில் எழுப்பியமைக்காக ரஜீன்குமார் மீது ஆத்திரமடைந்த பெரிய மென்டிஸ் “உன்னை இலங்கைக்கு போகும்போது பார்த்துக் கொள்கிறேன்” என்று ரஜீன்குமாரை எச்சரித்துள்ளார். ‘ புதியதோர் உலகம்’ நூலில் அளவெட்டி உமைகுமாரன் – இறைகுமாரன் பற்றிய செய்தியும் வருகிறது. அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் ” நாம் பெரியய்யாவின் ஆட்கள்..இறை, உமைகுமாரனுக்கு நடந்தது தெரியும்தானே ?” என்று PLOT இன் அரசியல் துறையோடு சம்பந்தப்பட்டவர்களை பயமுறுத்தியமை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இறைகுமாரன் – உமைகுமாரன் கொலையில் பங்கேற்ற கந்தசாமி (சங்கிலி) சந்ததியார் கொலையிலும் பங்கெடுத்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், அமிர்தலிங்கத்தின் நேசரும், தேசியதலைவரைப் பராட்ட பின்னிற் காதவரும், வலதுசாரி தமிழ் தேசியவாதியுமான புஸ்பராசா ” சந்ததியார் ஆபத்தான பேர்வழி எல்லோரையும் குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பவர், கொலை செய்ய உத்தரவிடுவதில் உமாமகேஸ்வரனுக்கு ஒன்றும் குறையாதவர்” என்று எழுதுகின்றார்.
சந்ததியார் இழைத்த தவறுகள் அரசியல் தவறுகளே தவிர, அவர் கொலைகளோடு சம்பந்தமுடையவர் என்று உமாமகேசுவரானால் கூட குற்றம் சாட்டப்பட்டதில்லை. ” ஆட்களை குழப்பிக் கொண்டு திரிபவர்” என்று அமிர்தலிங்கம் சந்ததியாருக்கு முன்பு தந்த ஆசியுரை புஸ்பராசாவும் அதே வார்த்தைகளை வெளியிடுகின்றார். வலதுசாரிகள் அரசியல் ஆழங்களில் இறங்க முடியாதபோது, தம் சொந்த அரசியல் இருப்பு பற்றி சந்தேகங்களால் பீடிக்கப்படும்போது, இடதுசாரிகட்கு பதிலளிக்க முடியாதபோது இப்படித்தான் சத்தமிடுகிறார்கள். அரசியல் நியாயம் பேசுபவர்களை குழப்புபவர்களாக, கலகம் செய்பவர்களாக காண்பிக்கின்றனர்.
சந்ததியார் கொலை பற்றி புஸ்பராசா பேசாமல் விடுவது அதில் அமிர், உமா கூட்டணி செயற்பட்டதையிட்டு மௌனிப்பதும் இறைகுமாரன், உமைகுமாரன் கொலை பற்றி பெரும் இரைச்சலில் சந்ததியார் கொலையை மூழ்கடித்துவிட முயல்கிறார். இறைகுமாரனும் சந்ததியாரும் த.இ.பே இல் நீண்டகாலம் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். இறைகுமாரன் இடதுசாரி அரசியலை தொடமுயன்றவர். தொழிலாளர் பாதை போன்ற இடதுசாரிக்கு குழுக்களுடன் ஒரு காலத்தில் அரசியல் உறவு கொண்டிருந்தவர். ஆனால் சூழவுள்ள தமிழ் தேசியவாதப் போக்குள்ளே அவர் நின்று பிடிக்க முடியாமல் பிரபாகரன் போன்ற பாசிஸ்டுகளின் பின்பு இழுபட்டார். காந்தீயம் தமிழ் பகுதிகளில் ‘பாரதி விழாவை’ நிகழ்த்திய போது யாழ்ப்பாணம் பகுதியில் அதை ஒழுங்கு செய்யும் பொறுப்பை பல எதிர்ப்புகட்கு மத்தியில் சந்ததியார் இறைகுமாரனுக்கு வழங்கினார். இறைகுமாரனின் கடைசிக்கால அரசியல் ஈழவேந்தன், கோவை மகேசன் போன்ற தமிழ் தேசிய வாதத்தின் இறுதி நிலைக் கழிசடைகளோடு உறவு பூணும் வரை சென்றது.
http://udaippuu.blogspot.ca/2012/07/6.html
பிற்குறிப்பு: இறைகுமாரன் – உமைகுமாரன் கொலையின் காட்டிக் கொடுப்பு பேர்வழி இன்று வடஅமெரிக்காவில் ஒன்றும் அறியாத அப்பாவி போல் வசிக்கிறார் என்பது உண்மையா…???
Yes it is true, he even published a book in Canada couple of years ago In that book he mentions about Irai and Umai’s death and tries to defend himself against this allegation.
I also happened to read a privately circulated memo among the LTTE inteligence group, in that it was stated that Pallamoddai Sivam and Kannadasn ( VENKAT) were involved in this killings
இறையும் உமாவும் கொலைசெய்யப்பட்டது சுந்தரத்தின் கொலை தொடர்பாகவே. முக்கியமாக சுந்தரம் சித்திரா அச்சகத்துக்குப் போகிறார் என்ற தகவலை பிரபா: சாள்ஸ் அன்ரனிக்குக் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்திலேயே கொல்லப்பட்டார்கள். கொலைகாரர்களுக்கும் இறை உமாவுக்கும் இடையில் வாக்குவாதங்கள் நடைபெற்றன. இங்கோ உமாவுக்கு சுந்தரத்தில் கொலையில் தொடர்பு உண்டு. ஆனால் இறை அனேகமாக அனைவருடனும் பழகவல்லவர். இக்கொலையில் சம்பந்தப்படவர் பாலமோட்டை சிவம் என்பவரும் ஒருவர். கண்ணன் போன்றோருக்கு இறையில் சந்தேகம் இருந்தது. காரணம் புதியபாதை
புஸ்பராசா கண்ணை மூடிக்கொண்டு குருடன் பெண்டிலுக்கு அடித்தது போல் எழுதியிருக்கிறார். இறைகுமாரன் சந்ததி இருந்த இளைஞர் பேரவையில் புஸ்பராசா இருக்கவில்லை. புஸ்பராசா இருந்த இளைஞர்பேரவை அமிர் செல்வாவுக்கு நக்கும் இ.பேரவையே. இளைஞர் பேரவையில் இருக்கும் காலத்தில் இறை; சந்ததி நல்ல புரிந்துணர்வுகளுடன் நடந்து கொண்டார்கள். ஆனால் உமா இறையின் நண்பர் ஒரே ஊர். சுந்தரம் உமா இறை பற்றிப்பேசுவதற்கு புஸ்பராசாவுக்கு உரிமை கிடையார். கேள்விச் செவியன் ஊரைக் கொடுத்தான் என்பது போல் புஸ்பராசா சாட்சியம் எழுதியிருக்கிறார். உமாவின் புலிகள் தொடர்பே இறையையும் போடவேண்டி வந்தது என்பது சான்று.
இது அவசியமற்றது, அவதூறு என கருதினால் ஆசியர் இதை பதிவேற்றம் செய்யாமல் விட்டுவிடலாம்.
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் உண்மையில் புஸ்பராச்னால் எழுதப் படவில்லை என சிலர் சொல்கிறார்கள். இது சபாலிங்கத்தால் எழுதப்பட்டு அச்சுக்குப் போக முன்பு அபிப்பிராயம்,கருத்துக்கள் கேட்பதற்காக புஸ்பராசனிடம் வாசிக்க கொடுக்கப் பட்ட காலப் பகுதியில் தான் புலிகளினால் சபாலிங்கம் பாரிஸ்ஸில் படுகொலைசெய்யப்பட்டார் எனவும், சபாலிங்கம் படுகொலைசெய்யப்பட்ட பின் மூலப் பிரதியின் சில பகுதிகளை தனது அரசியல் விருப்பு வெறுப்பிற்கேற்ப மாற்றி அமைத்து “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என புஸ்பராசன் வெளியிட்டார் எனவும் சொல்கிறார்கள்.
இது பற்றிய விபரங்கள் உண்மைபொய்களை சபாலிங்கம்,அவரது குடும்பத்தினரை அறிந்தவர்கள் ஓரளவு தெளிவுபடுத்த முடியுமென நம்புகிறேன்.
இலங்கையில் சோழர் ஆட்சிக்காலம் தொட்டு படைவீரர்களாக இருந்த செங்குந்தர் சமூகம் பின்னர் நெசவுத் தொழில் புரியும் கைக்குளவர்களாக மாறியதாக வீரகேசரியின் கலைக் கேசரியில் இடம் பெறும் ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
இப்பிரபஞம், மனித உடல், மனம், இம்மூன்றிதுமான தொடர்புகள் விந்தையானவை. புதிர்கள்நிறைந்தவை. இதுவரை விடுவிக்கப்பட்ட புதிர்கள் அறிவியலாகவும் விடுவிக்கப்படாதவை செய்வினை, சூனியம், மூடநம்பிக்கை என்றும் முடுவு கட்டப்படுகின்றன.
பெப்ருவரி 12ம் திகதி கொழும்பில் இருந்து வெளியாகம் தினக்குரல் பத்திரிகையில் பாரிசில் குமார் குணரட்ணம் அவர்களது கூட்டம் பற்றிய ஒரு செய்தி வந்திருக்கிறது. இந்த செய்தியின்படி கூட்டத்தில் இவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் தமது அமைப்பானது தமிழரை ஒரு தேசிய இனமாக கருதவில்லை எனவும் தமிழர் தாயகம் மற்றம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை தாம் நிராகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது வேறு ஒரு இணைய தளத்தில் கூட வெளிவராமை ஆச்சரியமாக இருக்கிறது. இரயாகரன் வெறுமனே கூட்டம் பற்றிய படங்களை பிரசுரிப்பதுடன் நிறுத்திககொண்டுள்ளார். ஏனையவர்கள் கூட்டாக மெளனம் சாதிப்பதாக படுகிறது. நீங்கள் இருக்கும் ஊரில் இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான செய்திகள் நடைபெறும்போது அதனை பிரசுரிப்பதில் கவனம் செலுத்தாமல் பில்லி சூனியம் பற்றி கதைவிட்டுக்கொண்டு இருப்பது உங்களுக்கே அசட்டுத்தனமாக படவில்லை.
யாராவது இந்த கூட்டத்திற்கு சென்றிருந்தால் தயவு செய்து இந்த கூட்டம் தொடர்பான பதிவுகளை முன்வைப்பீர்களா?
ஜே .வி.பி லிருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோஷலிச கட்சி மற்றும் சமஉரிமை இயக்கம் ஆகியவற்றின் அரசியல் உயர்பீட உறுப்பினரும், ஜே . வி ,பியின் ஆரம்பகால உறுப்பினருமான குமார் குணரத்தினம் அண்மையில் சுவிசர்லாந்துக்கு வந்திருந்தார் அவருடன் தினக்கதிர் இணையதளத்தின் ஆசிரியர் இரா. துரைரத்தினம் நடத்திய நேர்காணல்
http://links.lankasri.com/thinakkathir
தரன்,
குமார் குணரட்ணத்தையும், அவரது கட்சியையும் புரிந்து கொள்ள உத்வியமைக்கு நன்றி. இன்னும் இப்படி தமிழ் மக்களின் உரிமைக்கு உலைவைக்க எத்தனை பேர் வருவார்களோ?