Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளும் பிழைப்புவாதிகளும் : வியாசன்

ஈழப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு என்பது கொலைகளையும் ரணங்களையும் அவலங்களையும் எச்சமாக விட்ட்டுவைத்த சாபக்கேடு என்றால் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் தலையிடு அதற்கும் மேலானது. பரந்துபட்ட தமிழ்நாட்டு மக்களுக்கோ அங்கே வாழ்வதற்காகப் போராடும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கோ முகவரி தெரியாத அரசியல் பிழைப்பு வாதிகள் ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று நரம்பு புடைக்கக் கொக்கரிக்கும் போது மனிதம் மறுபடி மறுபடி சாகடிக்கப்படுவதாய் உணர்கிறோம். புலம்பெயர் நாடுகளில் உணர்ச்சியூட்டும் கவர்ச்சிக் கூச்சல்களுக்கு விசிலடிக்கும் ஒரு சிறிய கூட்டத்தைத் தவிர இந்தப் பிழைப்பு வாதிகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், சீமான் என்ற ஒரு நீண்ட வரிசையைக் காணலாம். ஈழத்தில் மக்கள் சாரி சாரியாக் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் இந்த வரிசைப் படுத்ட்ல்களில் உள்ளடங்கியவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்க முயலவில்லை.

வழக்குரைஞர்கள், மாணவர்கள் என்ற தன்னெழுச்சியான மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புக்களின் போராட்டங்கள் முன்னெழுந்த ஒவ்வோரு தடவையும் அவற்றை அழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள் இவர்கள்.. அழிவுகளுக்கு எதிராகப் போராடியவகளிடம் நீங்கள் வாயை மூடுங்கள் நாங்கள் பேசித் தீர்த்த்துக் கொள்கிறோம் என்று நந்திக்கடல் இரத்தச் சிவப்பாகும் வரை பேசிக்கொண்டிருந்தனர்.

ஈழத் தமிழர்கள் மீது கைவத்தால் தமிழகம் பற்றி எரியும் என்று இன்று பேசும் அதே உணர்ச்சியோடு புலம்பெயர் மக்களை நம்பவைத்து ஏமாற்றியவர்கள்.

மிருகத்தின் வெறியோடு பல்தேசிய நலன்களுக்காக தமிழக மக்களை ஒடுக்கும் அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு அனாதரவாகத் தெருவோரங்களில் வீசியெறியப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழகத் தமிழர்களின் பிணங்களைக் கடந்து புலம் பெயர் நாடுகளுக்கு இலவச விமானச் சீட்டோடு வந்திறங்கி மேடைகளில் முழங்கிவிட்டுச் செல்லும் இந்த அரசியல் வியாபாரிகள் விலகிக் கொண்டாலே ஈழப் போராட்டத்திலும் அதன் வரலாற்றிலும் ஆயிரம் பூக்கள் மலரும்.

இவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழந்த வேளைகளில் தமிழக மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்திருக்கக் கூடும்.

அத்தனையையும் நடத்தி முடித்துவிட்டு தமிழின விரோதியாக தன்னைத் தானே பிரகனப்படுத்திக்கொண்ட ஜெயலலிதாவை நம்பக் கோரினார்கள். ரஜீவ் கொலையில் சட்டவிரோதமாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் மனுக் கொடுத்த பின்னரும் இவர்களிகளில் பெரும்பாலம்னவர்கள் ஜெயலலிதாவை ஈழத்தாய் என மகுடம் சூட்டினார்கள்.

ஜெயலிதா அரசு ஆட்சிக்கு வந்த மறுகணமே பரமக்குடியில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிட்டதை இந்த ஈழம் பெற்றுக்கொடுக்கும் பேர்வழிகள் கண்டுகொண்டதில்லை. மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் மனிதாபிமானம் இவர்களுக்கு வந்ததில்லை. ஈழத் தமிழர்களுக்காக மட்டும் தெரிந்தெடுத்த மனிதாபிமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு இவர்களது தலைகளில் ஏறிவிடும்.

இன்றுவரை இவர்கள் செய்த கைங்கரியம் எல்லாமே ஒடுக்கப்பட்ட, போராடுகின்ற தமிழ் மக்களை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாழும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் போராட்ட சக்திகளை அன்னியப்படுத்தியமையே ஆகும்.

சரி, இவர்கள் எல்லாம் பிழைப்புக்காக அன்றி, உண்மையிலேயே ஈழ மக்களுக்காக தமிழகத்திலிருந்து போராடுகிறவர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். 20 வருடங்களாக சிறப்பு முகாம் என்ற சித்திரவத்கைக் கூடங்களில், அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வந்த ஈழத் தமிழர்கள் வதைக்கப்படுகிறார்களே இவர்கள் இது குறித்து மூச்சுக்கூட விட்டதில்லையே ஏன்?

கியூ பிரிவு என்ற தமிழ் நாட்டு அரசின் ஈழத் தமிழர்களுக்கான போலிஸ் பிரிவின் நேரடிக் கட்டுப்பாட்டினுள் இயங்கிவரும் இந்தச் சிறப்பு முகாம் செங்கல்பட்டு என்ற இடத்தில் இன்னும் இயங்கிவருகிறது.

இதுவரை ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள், ஈழ அகதிகள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் இந்தச் சிறைகளில் அடக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இரட்டைப்பட்டு தங்கச் சங்கிலியோடு “உணர்ச்சிக் கவிஞர்” காசியானந்தன் தமிழகத்தின் தலையில் உட்கார்ந்து ஈழப் போர் நடக்கும் என சுதந்திரமாக கூச்சலிடும் அதேவேளை சிறப்பு முகாம்கள் என்ற சித்திரவதைக் கூடங்களில் சுதந்திரத்திற்காகப் போராடிய ஈழப் போராளிகள் கூடச் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

காசியானந்தனும் அவரது பரிவரங்களும் ரோவினால் இயக்கப்ப்படுகிறார்களா இல்லையா என்பதெல்லாம் எமது ஆய்வில்லை. ஈழத்தமிழர்கள் அவரது காலடியில் அவல நிலைக்கு உள்ளாக்கப்படும் போது எப்படி மௌனித்திருக்க முடிகிறது என்பதே எமது கேள்வி.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிராக மட்டுமல்ல இந்தியச் சட்டங்களுக்கும் எதிரான இந்தச் சட்டவிரோத சிறப்பு முகாம்களில், தமிழ் நாடு காவல்படை விரும்பிய போதெல்லாம் சித்திரவதை செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விசாரணையின்றி தடுத்துவைத்திருக்கலாம். செத்துப் போகாமல் இருப்பதகற்காக மட்டுமே உணவு வழங்கப்படும்.

காற்றோட்டமற்ற விலங்குகள் வாழும் இடம் போன்ற இருட்டறைகள்! வெளி உலகில் இருந்து முற்றாகத் தனிமைப்படுத்தப்ப்ட்ட சட்டவிரோத செயற்பாடுகள்!! இந்திய ஜனநாயகத்தின் விம்பத்தை ஈழத்தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் நுளை வாயில்!!!.

இலங்கை அரச பேரினவாதிகளின் கொலைக்கரங்களிலிருந்து தப்பியோடிப் பல இன்னல்களைக் கடந்து தமிழ் நாட்டில் வந்திறங்கிய அனாதரவான அப்பாவிகள் இன்னொரு அழிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள 28 அகதிகளில் 13 பேர் சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார்கள். இதில் மூன்று பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது.

சிறப்பு முகாம் தவிர ஈழத் தமிழ் அகதிகள் வாழும் ஏனைய முகாம்களிலும் அடிபடை மனித உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. .இவர்கள் குறித்தும் பிழைப்புவாத அரசியல்வியாபாரிகள் மூச்சுக்கூட விடுவதில்லை.
103 முகாம்களில் அகதிகள் வாழ்கிறார்கள். இந்த முகாம்களின் தெளிவற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஒரு லட்சம் அகதிகள் வாழ்கிறார்கள். பல அகதிகள் 25 வருடங்களுக்கு மேலாக அங்கே வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் திருமணம் செய்துகொண்ட பின்னர் கூட அங்கே அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியப் பிராஜா உரிமை வழங்கப்படுவதில்லை. இலங்கை மண்ணையே மிதிக்காத மனிதர்கள் இன்னமும் அகதி என்ற அடைமொழியுடனேயே வாழ்கிறார்கள்.

முகாம்களிலும் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற அகதிகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக்கலாம். அகதிகளின் குழந்தைகளுக்கு பல்கலைக் கழக அனுமதி பெறுவதே இயலாத காரியம். இந்தியப் பிரஜை இல்லை என்பதால் வெளி நாட்டவர்களுக்கான கட்டணக்மே அறவிடப்படுகின்றது. இதே காரணத்தால் முழு நேர வேலையில் இணைந்து கொள்வது பல சந்தர்ப்பங்களில் சாத்தியமற்றதாகின்றது.

உலகில் இந்த நூற்றாண்டின் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்த அகதிகள் குறித்து பிழைப்பு வாதிகள் தமது மாளிகைகளில் இருந்து கண்துடைப்பு அறிக்கை கூட எழுதியது கிடையாது.

– செங்கல்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

 – ஏனைய முகாம்களில் வாழும் அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

– பல வருடங்களாக தமிழ் நாட்டில் வாழ்பவர்களும் அங்கேயே பிறந்தவர்களும் விரும்பினால் இந்தியப் பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டும்.

– சரவதேசச் சட்டங்களின் அடிப்படையில் அந்த மக்களின் உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.

புராணக் கதைகளில் ஞானச்மபந்தர் என்ற பிராமணர் இலங்கையை நோக்கி ராமேஸ்வரத்திலிருந்து தேவாரம் பாடியது போன்று தமிழ் இனவாதிகள் ஐரோப்பிய புலம்பெயர் நாடுகளில் வாழும் அகதிகளின் பணத்தைக் குறிவைத்து உணர்ச்சிவசப்பட்டது போதும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். முடியாவிட்டால் போராடுங்கள். ஈழம் பெற்றுக்கொடுப்பதை விட இது இலகுவானது. சீமான் தனது கட்சி ஆவணத்தில் குறிப்பிட்டது போன்றே “இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பாதிப்பின்றியே” இந்த இலகுவான கோரிக்கைகளை நிறைவேற்றலாம்.

இவற்றை நிறைவேற்றாமல் ஈழம் பெற்றுக் கொடுக்கிறோம் பேர்வளிகள் என்று யாராவது வந்தால் அவர்களது முகத்தில் ………………!

Exit mobile version