
இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடிய ஒரு அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிலையில் அதனை ஆதரித்து நிற்கும் தமது கடமைப்பாட்டை தமிழ் மக்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கான ஆதரவுத் தளத்தினை உருவாக்கிக் கொண்டதுடன் நடைபெற்ற தோதல்களில் கணிசமானளவு வாக்குகளைப் பெற்றும் கொண்டது.
புலிகள் அழிக்கப்பட்ட பின்னரான காலத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு கூட்டமைப்பும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக வழியில் போராட்டத்தினை நடாத்த முற்படுகிறோம் என்ற கோசமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உதவியிருக்கிறது.
ஆயினும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு முடியாமல் போகின்றமையை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலைமையானது தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும்; அரசியல் விமர்சகர்களின் மத்தியில் அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது. பல கண்டனக் குரல்கள் தோன்றியிருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வலுவான சக்தியாக இந்திய அரசின் அழுத்தங்களை நம்பியிருந்தமை பற்றி ஏற்கனவே கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளது. அவ்விடயம் குறித்து ஒரு மீள் பரிசீலனையை மேற்கொள்ளவோ அல்லது ஒரு விவாதத்திற்கு செல்லவோ கூட்டமைப்பால் முடியவில்லை. அவ்விடயம் குறித்து கூட்டமைப்பு மீள் பரிசிலக்கத் தயாராகவில்லை. மேலாக கூறியதைப் போன்று இந்திய அரசின் அழுத்தங்கள் குறித்து எந்தவிதமான சாதகமான நன்மைகளையும் பெற்றுக் கொள்ள கூட்டமைப்பால் முடியாமல் போயிருக்கிறது.
மற்றொரு புறம் ஆளும் கட்சிக்கெதிராகக் கடைப்பிடித்து வந்த எதிர்ப்பரசியலைக் கைவிட்டு இணக்க – விமர்சன அரசியலை மேற்கொள்வதற்கு முயற்சித்தமை அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது.
இதற்கெதிராக தொடர்ச்சியான கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றதனையும் காணமுடிகிறது. இணக்க அரசியலை மேற்கொள்வது ஆளுங்கட்சியுடனான பேச்சு வாhத்தைகளை மேற்கொள்வதற்கே என கூட்டமைப்பு காரணங் கூறியிருந்தது. அனால் கூட்டமைப்பு இன்று பேச்சு வார்த்தைகளை, தொடர்பான “நம்பிக்கையான செய்திகளை” மக்களுக்கு வழங்க முடியவில்லை. இறுதியாக தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற செய்தியை வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையே தோன்றியிருக்கிற முரண்பாடுகள் மற்றொரு பிரச்சினையாக தோன்றியிருக்கிறது. கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி தனித்து இயங்குதவற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையானது கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தினை தோற்று வித்திருக்கிறது. இந்த நிலைமையில் கூட்டமைப்பை ஒரு தனிக்கட்சியாகப் பதிவு செய்வதற்கான அழுத்தங்களும் ஏனைய கட்சிகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கான விருப்பங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து முதன்மையான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூட்டமைப்பு கூறிவந்திருக்கிற போதிலும், காணமல் போனேரின் விடுதலை தொடர்பாகவும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடுதலைக்காகவும் வன்னி யுத்த நிலைமைகள் குறித்தும் குறிப்பாக அரசாங்கம் குறித்த போர்க்குற்றச் சாட்டுக்கள் குறித்தும் வலுவான அரசியல் நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை.
கூட்டமைப்பின் இந்த அரசியல் நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக நோக்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் கூட்டமைப்பின் “தங்களைப் பலப்படுத்த வாக்களியுங்கள்” என்ற கோரிக்கைக்கு தமிழ் மக்கள் எவ்வாறு பதில் வழங்கப் போகிறார்கள் என்ற வினா எழுகிறது.
தமிழ் மக்கள் இத்தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதனை மீள் பரிசீலிப்பதற்கான நியாயங்கள் பலவற்றை கூட்டமைப்பினரே ஏற்படுத்தியுள்ளனர். இருந்த போதும் பல தரப்பிலிருந்தும் இறுதி வேண்டுதல்கள் ஊடகங்களில் வெளிவந்தமுள்ளன. இது ஒரு துயரத்திற்குரிய நிலையே.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெரிய அரசியல் சக்தியாக – தனிப் பெரும் அரசியல் சக்தியாக கருதிக் கொண்டு செயற்பட்டு வருகிற போதிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தலைமை தாங்கக் கூடிய “தனி ஒரு அரசியல் சக்தியாக” அது நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது போன்றே தோன்றுகிறது.
அதன் தற்போதைய தோல்விகள் தமிழ் மக்களின் எதிர்ப்பரசியலுக்கு எதிரானதாக அதாவது அரசாங்கத்தின் ஆதரவுக் கட்சிகளினைப் பலப்படுத்துவாதாக அமைந்து விடும் என்ற கருத்து மெய்யாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அதனை கூட்டமைப்பபின் அரசியல் பலவீனத்தால் ஏற்பட்டதாகவே நோக்கப்பட வேண்டும்.
அரச ஆதரவுக்கட்சிகளையும் அரசையும் பலப்படுத்தும் குறுந்தேசிய அரசியலுக்கு எதிரான அரசியல் தலைமை தாமதமின்றிக் கட்டியெழுப்பப்பட வேண்டும். தேசத்திற்கு வெளியில் வாழ்கின்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்களும், முற்போக்கு சக்திகளும் இலங்கையில் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்த அழுத்தங்களை வழங்கும் போதே புதிய மக்கள் சார் அரசியல் தலைமைக்கான ஆரம்பம் குறித்து சிந்திக்க வழிபிறக்கும்.