முன்னிலை சோசலிச கட்சியை புகலிடதிலிருக்கும் அரச ஆதரவாளலர்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்களே என்ன காரணம்? சுயநிர்னய உரிமையை ஏன் எதிர்கிறார்கள்?
சசி
முன்னிலை சோசலிச கட்சியை ஆதரிப்பவர்களின் பெயர்களை ஒரு தடவை பட்டியல் இட்டுப்பாருங்கள். ஆள்கடத்தல், கப்பம் , கொலை என்று இலங்கை புலனாய்வுத் துறையோடு சேர்ந்து இயங்கும் கும்பல்களும், கே.பி யோடு இயங்கும் நபர்களும், பெருவியாபாரிகளாக இருந்துகொண்டு “மார்க்ச்சிய” முகமூடிபோடுபவர்களும், பிள்ளையானின் அடியாட்களும், ‘’தலித்தியம்’’ என்ற போர்வையில் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டி ; மகிந்தா அரசுக்கு சேவகம் செய்பவர்களுமே இப் பட்டியலில் பெரும் இடத்தை பிடிப்பார்கள்.
இவர்களுக்கும் இலங்கையில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்கும் என்னதான் உறவு?
இன்னும் சிலர் புலிகளின் அரசியலின் எதிர் நிலையிலிருந்து முடிவுகளுக்கு வருகிறார்கள்.
இதன் விளைவே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை கோட்பாட்டின் மீதான இவர்களின் எதிர்வினைகளாகும். புலிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய கோட்பாட்டை தமக்கு உகந்த அரசியல் நலன்களுக்கு, தங்களின் அபிலாசைகளுக்கு கீழ்நிலைப்படுத்தி, புதிய வியாக்கியானங்களை கொடுத்ததன் விளைவே இதுவாகும். சுயநிர்ணயக் கோட்பாடு என்பது ‘பிரிந்துபோதல் மாத்திரமே’ என்ற அவர்களின் ஒற்றைப் பரிமாண சொல்லாட்சி ஏற்படுத்திய தாக்கம் இதுவாகும்.
உண்மையில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது ; ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்கள் தமது அரசியல் உரிமைகளை, தமது சுதந்திரத்தை, தமது அரசியல் வடிவத்தை தீர்மானிப்பதற்கான வழிமுறையாகும். இதில் ‘பிரிந்துபோதல்’ என்பது ஒரு அம்சமே அன்றி சுயநிர்ணய கோட்பாடு என்பதே ‘’பிரிந்துபோதலும் தனி அரசு அமைத்தலும்’’ என்பதல்ல.
இதனை நாம் இவ்வாறு விளங்கிக்கொள்ளமுடியும்.குடும்ப உறவில் மனைவி கணவன் இருவருக்கும் இடையில் உள்ள விவாகரத்து என்ற சட்ட உரிமை போன்றதே இதுவாகும். விவாகரத்து உரிமை இருக்கின்றது என்பதற்காக மனைவியும் கணவனும் பிரிந்து செல்ல வேண்டுமென்று முடிவெடுப்பதில்லை. மனைவி கணவன் இருவருக்கும் இடையில் இணைந்து வாழ்வதில் உடன்பாடற்ற தன்மைகள் முரண்பாடுகள் பகமைகள் தோன்றி ஐக்கியப்பட்ட உறவு சாத்திய இன்மையாகி சகிக்க முடியாத நிலமை தோன்றும்போதே விவாகரத்து உரிமை பயன்படுத்தப்படுகின்றது. இதே தன்மையை ஒத்ததே சுயநிர்ணய உரிமை கோட்பாடாகும்.
இறைகுமாரன் உமைகுமாரன் கொலைக்கு சந்ததியார்தான் காரணம் என்று
சொல்லப்படுகிறது. உண்மையா?
மகேஸ்
இக் கொலை நடந்தகாலத்தில் நான் மட்டக்களப்பு மாவட்ட புளொட் அமைப்பாளராக இருந்தேன்.
இறைகுமாரன் எனது நண்பர் என்பதும், இப் படுகொலை எனக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்ததினாலும் இப் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஓர் கண்டன கூட்டத்தை நடாத்தினேன். புளொட்தான் இக் கொலையை செய்தது என்ற சந்தேகம் எனக்கிருந்தாலும் அதனை அந்நேரத்தில் உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை. எனினும் கூட்டத்தை நடாத்தினேன். இதன்பின் இக் கூட்டம் நடாத்தியது தொடர்பாக நான் புளொட்டினால் விமர்சிக்கப்பட்டேன்.
இதைப்பற்றி நான் நிறைய எழுத முடியும். எனது வரலாற்றை எழுதும்போது நிச்சயம் இது பற்றி எழுதுவேன்.
அதிகமான தலித் அமைப்புக்கள் வலதுசாரி பிற்போக்கு அரசியலையே கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலைக்கு இன்றைய இடதுசாரி அமைப்புக்களின் அரசியலும் காரணம்தானே இது பற்றிய உங்கள் கருத்து என்ன.
விஜயன்
தலித் இயக்கங்கள் இவ்வாறான வலதுசாரி அரசியல்போக்கை கொண்டு இயங்குவதற்கு அடிப்படைக் காரணம் இன்றைய அடையாள அரசியல் தன்னகத்தே கொண்டு இயங்கும் அதன் “அரசியலே” என நினைக்கிறேன். வர்க்கம், இனம், பால், நிறம், மொழி போன்ற பன் முக அடையாளங்களுக்கூடாக இனம் காணப்படும் ஒடுக்குமுறைகள், முரண்பாடுகள் ,புறக்கணிப்புக்கள் போன்றவை எவ்வாறன அரசியல் நலன்சார்ந்து மதிப்பிடப்படுகின்றன என்ற வழிமுறையில் இருந்தே இதன் அரசியல் கட்டமைக்கப்படுகின்றது.
நீங்கள் சொல்வதுபோல் இவ் இயக்கங்கள் அநேகமானவை வலதுசாரி அரசியலை பின்புலமாகக்கொண்டு இயங்குவதற்கு இவ் அமைப்புக்களை வழி நடாத்துகின்ற நபர்கள் வலதுசாரிகளாகவும், பிற்போக்காளர்களாகவும், தலித் அரசியலை தங்களுடைய அரசியலுக்கு ‘’மூலதனமாக’’ கொள்பவர்களாகவும் இருப்பதுவே காரணமாகும். சமூகங்களை பற்பலவாறாக கூறுபோடவும், சமூகங்களிடையே காணப்படும் அடையாளம் சார்ந்த வேறுபாடுகளை ; முரண்பாடுகளாக, மோதல்களாக கூர்மை அடையச் செய்யும் பின் நவினத்துவ அரசியல் சிந்தனையின் போக்கும் இன்னொரு காரணமாகும்.
அதே வேளை இந்த பன்முக ஒடுக்குமுறைகளை விளங்கிக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தீர்வு காணவும் முயலாத சில இடதுசாரி அமைப்புக்களின் போக்கும் காரணம் என்றே சொல்லவேண்டும். எமது தலித் மக்கள் சாதிய ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கபடுகிறார்கள். வர்க்கத்தளத்திலான போராட்டங்கள் மட்டுமன்றி ; சாதியத் தளத்திலான சாதிய ஆதிக்க எதிர்ப்பு அரசியலை, போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். அதே நேரம் சாதியம் இன்றைய உற்பத்தி முறைகளிலும் ,அரச அதிகாரங்களிலும், கருத்துருவங்களிலும் மிகவும் இறுக்கப்பட்டு காணப்படுகின்றது. எனவே தலித் அரசிலை, சாதிய ஆதிக்க எதிர்ப்பு அரசியலை, மாக்சியத்தின் வழிகாட்டலோடு ; பெரியாரியம்- அம்பேக்காரியம் போன்றவற்றின் கூறுகள் இணைக்கப்பட்டு ஒரு புரட்சிகர தலைமையில் போராட்டங்கள் வழிநடத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் கேட்கும் இக் கேள்வி காலம்பூராகவும் கேட்கப்படும் கேள்வியாகவே மாறக்கூடும்.
மட்டக்களப்பு பில்லி சூனியம் மந்திரம் பற்றி சொல்லுங்களேன். அறியவிரும்புகிறேன்.
வாசன்
உண்மையில் அரசியல் கேள்விகளைவிட இக் கேள்விகளே என் மனதிற்கு சந்தோசம் அளிப்பதாய் உள்ளது. நீங்கள் மட்டக்களப்பு கலை, கலாச்சார ,பண்பாட்டு விழிமியங்களை அறிய ஆவலானால் பின்வரும் புத்தகங்களை வாசிக்க முயலவும். மட்டக்களப்பு தமிழகம் – வீ.சி. கந்தையா , மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் – எவ்.எக்ஸ். நடராஐர், மட்டக்களப்பு குகன் குல முக்குவர் வரலாறு- ஞா. சிவசண்முகம், அக்கரைப்பற்று வரலாறு – ஏயாரெம் சலீம் , மட்டக்களப்பு மான்மியம்.-எவ்.எக்ஸ். நடராஐர், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் – வெல்லவூர்கோபால், மகோன் வரலாறு- க.தங்கேஸ்வரி.
நீங்கள் இந்த பில்லி ,சூனியம் பற்றிய கேள்வியை என் பால்ய பருவத்தில் கேட்டிருந்தால் இது பற்றி விதம் விதமான கதைகளை பலவகைப்பட்ட ‘தினிசிகளோடு’ சொல்லியிருப்பேன். என்னிடம் இவ்வகைப்பட்ட கதைகள் நிறையவே இருந்தன. பில்லி- சூனியம்- மந்திரம் பற்றி சொல்லும் நல்ல அழகான “கதை சொல்லியாக” நான் இருந்தேன்.
இளமையில் சின்ன வயதில் எனக்கொரு “ஆளே” இருந்தான். (‘ஆளே’ என்பது மட்டக்களப்பு கிராமிய வழக்கில் நெருங்கிய கூட்டாளியை, நண்பனை குறிப்பது) அவனின் தாத்தா மந்திரவாதியாக இருந்தார். அவன் மிகச் சிறந்த ‘கதை சொல்லி’. தினம் தினம் கதை சொல்வான். அவன் சொல்லும் கதைகளை கேட்பதற்காக நாங்கள் ஒரு கூட்டமே அவன் பின்னால் அலைவோம். பில்லி விட்ட கதை, சூனியம் செய்த கதை, மருந்துபோட்ட கதை, மை போட்டுப் பார்த்த கதை, பேய் ஆட்டக்கதை என்று ஆயிரம் கதைகள் அவன் வைத்திருந்தான்.
நானும் அவனால் பில்லி- சூனிய கதை சொல்லியாய் மாறினேன். காலத்தின் வளர்ச்சி ; அறிவியலும், அரசியலும் என்னோடு இருந்த “கதை சொல்லியை” என்னிடம் இருந்து அந்நியப்படுத்திவிட்டது.
இன்றைய காலம் மட்டக்களப்பு மந்திரவாதிகள் அருகிவிட்ட காலமாக மாறிவிட்டது. அவர்களின் மறைவுகளோடு கிராமிய வைத்தியங்களும் சிகிச்சை முறைகளும் சடங்குகளும் அருகிவிட்டன. இந்த மந்திரவாதிகள் மிகவும் சிறந்த மூலிகை வைத்தியர்களாகவும், சிறந்த ஏடு படிப்பவர்களாகவும் இருந்தார்கள். நண்பரே உங்கள் கேள்விக்கு பதிலளிக்க கிளம்பி எங்கோவந்துவிட்டேன்.
இன்று நீங்கள் கேட்கும் இக் கேள்விக்கு ; என்னை வளம்படுத்திய அறிவியலையும், அரசியலையும் கொண்டு பதிலளிக்க முயல்வேனானால் உங்கள் கேள்விக்குப் பின்னால் உள்ள “சுவாரசியம்” அழிந்துபோகும். அது வேண்டாம். எனினும் மட்டக்களப்பில் இதன் மீதான நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் தொடர்வதாகவே நான் நினைக்கின்றேன். உங்களின் கேள்வி என் பால்ய பருவ நினைவுகளை ‘இரைமீட்க’ உதவிற்று. நன்றி நண்பரே.