Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 05

புளொட்டின் பின்தளமகாநாட்டை நடாத்துவதற்கு பின்தளம் சென்றவர்கள் குறிப்பாக நீங்கள், ஈஸ்வரன், சுப்பையா (கெளரிகாந்தன்) போன்றவர்கள் எந்த அரசியல் அடிப்படையில் ஈ.என்.டி.எல்.எப் ல் இணைந்தீர்கள் ?

குலம்.

சில வரலாற்றுக் குறிப்புக்களோடு இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன்.

தளமாநாட்டில் பின்தளத்தில் புளொட் அமைப்பின் பின்தள மாநாட்டை நடத்துவதற்கு ஒரு குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அதில் கெளரிகாந்தன் தீபநேசன், பிரசாத், ஜெயந்தி, முத்து ,ராஜன், தவநாதன், செல்வம், அர்ச்சுணா முதலியோர் தெரிவு செய்யப்பட்டனர். (இன்னும் சிலபேர் தெரிவு செய்யப்பட்டார்கள் பெயர்கள் ஞாபகம் இல்லை. தெரிந்த தோழர்கள் தெரியப்படுத்தவும்) தெரிவு செய்யப்பட்ட இக் குழுவினரோடு தளத்திலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களாகிய குமரன், ஈஸ்வரன், நானும் இணைந்து பின் தளம் சென்றோம்.

அங்கு சென்ற பின்தான் புளொட்டின் அவல நிலை தெரியவந்தது. புளொட் பயிற்சி முகாம்களிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளியேறி இருந்தார்கள். ராஜனோடு கணிசமான தோழர்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவுத் தோழர்கள் வெளியேறி இருந்தனர். மத்தியகுழு உறுப்பினர்களான சரோஜீனி ,ஆதவன் ,பாபுஜீ ,செந்தில் போன்றவர்களும் வெளியேறி ராஜன் குழுவினருக்கு ஆதரவளித்திருந்தனர்.

டேவிட் ஐயா, சண்முகலிங்கம், துளசி, யூலி, தங்கராஜா தோழர், மணியம் போன்றோர்களும் ராஜனோடு ஆதரவாக நின்றார்கள். முகாம்களில் எல்லாம் ஓரே குழப்ப நிலை. ஒவ்வொரு நாளும் தோழர்கள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். எங்களால் பின்தள மாநாட்டை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை. உமாமகேஸ்வரன் குழுவிடமிருந்து பலத்த அச்சுறுத்தல்களும், நெருக்கடிகளும் எம்மை தொடர்ந்தன. எங்களை நம்பி பல தோழர்கள் உமாகுழுவினரோடு முரண்பட்டு முகாம்களிலிருந்து வெளியேறி எங்களிடம் வரத் தொடங்கினார்கள். இது எங்களுக்கு பலத்த நெருக்கடியை தந்தது. எங்களுக்கே பாதுகாப்பு, இருப்பிடவசதி, பணப்பிரச்சனை என்று தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந் நிலையில் ராஜனிடம் எங்களுக்கும், எங்களோடு வெளியேறிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கும் பாதுகாப்பும், இருப்பிட வசதியும் கோருவதென்று முடிவு எடுக்கப்பட்டது. ராஜன் குழுவினர் இவற்றை செய்து தந்தார்கள். இதன் பின் வெளியேறிய எல்லாத் தோழர்களையும் இணைத்து பின்தள மாநாட்டை நடாத்துவதென முடீவு செய்தோம்.

தஞ்சாவூரில் ஐந்து நாட்கள் இவ் பின்தள மாநாடு நடைபெற்றது. தளத்தில் நடைபெற்ற மாநாடு போன்றே தீர்மானங்களும் செயல் திட்டங்களும் உருவாக்கப்பட்டது. அத்தோடு இம் மாநாடே புளொட்டினுடைய உத்தியோக பூர்வ மாநாடு என அறிவிக்கப்பட்டது. இதன் பின் சென்னையில் பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. இதில் நாங்கள்தான் புளொட் என உரிமைகோரி அறிக்கை வெளியிடப்பட்டது. அத்தோடு பெரும்பாண்மை மத்திய குழு உறுப்பினர்கள் உமாவைவிட்டு வெளியேறி இருந்தமையால் மத்திய குழு உறுப்பினர் சார்பிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கெளரிகாந்தன், வ.ஐ.ச. ஜெயபாலன், தீபநேசன், பிரசாத், ஈஸ்வரன் முதலானோர் கலந்துகொண்டனர். பின் நாங்கள் புளொட் என்ற பெயரில் இயங்கத் தொடங்கினோம். எங்களுக்கு பல பக்கங்களிருந்தும் குறிப்பாக தமிழ்நாடு-இந்திய அரசு சார்ந்த பக்கங்களிருந்து புளொட்டின் பெயரோடு நாங்கள் இயங்குவதற்கு பல தடைகள் உருவாகின. உமாவின் புளொட்டையே அவர்கள் உத்தியோக பூர்வமான அமைப்பாக அங்கீகரித்தார்கள்.

இக் காலத்தில் உமாகுழுவின் பக்கத்திலிருந்து கொலை பயமுறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கின. பலர் எம்மைவிட்டு வெளியேறத் தொடங்கினர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந் நேரத்தில் இப் பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு எம்மை அழைத்த கண்ணன், வாசுதேவா ஆகியோர்களை சந்திக்க அசோக்நகர் காரியாலயம் சென்ற ஈஸ்வரன், நான் அடங்கிய தோழர்கள் மீது மாணிக்கதாசன் நடாத்திய துப்பாக்கி சூட்டில் நான் படுகாயமுற்றேன். தோழர்கள் சிறுகாயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பினார்கள். தற்காப்புக்காக தோழர் ஒருவர் சுட்டதில் அவர்கள் பக்கத்தில் ஒருவர் படுகாயமுற்று பின்னர் மரணமானார். . இது எங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், பாதுகாப்பு இன்மையையும் தந்தது. இக் காலங்களில் இலங்கைக்குச் செல்லக்கூடிய தோழர்கள் சென்றார்கள். பல தோழர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் இருப்பிட வசதிகளை தேடிக் கொண்டார்கள்.ஒரு சிலர் வெளிநாடு சென்றார்கள். மிஞ்சியவர்கள் என்னசெய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தோம்.

எங்களோடு மிஞ்சிய தோழர்கள் பெரும்பான்மையானவர்கள் கிழக்கு மாகாணத் தோழர்கள். மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு தோழர்கள். இந் நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் லிருந்து டக்ளஸ் தேவானந்தா, ரமேஸ் (அற்புதன்), அசோக் (சந்திரகுமார்), இப்ராகிம், இராஜமாணிக்கம் ஜீவன் போன்றோர் தனியாக விலகி இருந்தனர். அவர்களோடு நிறையத் தோழர்களும் வெளியேறி இருந்தனர். எனவே இவர்களோடு சேர்ந்து புதிய பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கலாம் என எண்ணினோம். அவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி ஈ.என் .டி.எல் .எப் எனும் ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை தொடங்கினோம். இந்தப் பெயரை முன்மொழிந்தது ரமேஸ் எனும் அற்புதனகும். நாங்களும் இப் பெயரை ஏற்றுக்கொண்டோம். டக்ளஸ் குழுவினரோடு என்.எல்.எப்.ரி யிலிருந்து பிரிந்து வந்த பி.எல்.எப்.ரி தோழர்களும், ஈரோசிலிருந்து பிரிந்துவந்த தோழர்களும் இணைந்திருந்தனர். ஈ.என்.டி.எல்.எப்க்கான அரசியல்- இராணுவ அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அமைப்புக்கள் தனிநபர் அன்றி கூட்டுத் தலைமைகளாகவே உருவாக்கப்பட்டன. இதில் ராஜனும் ஒருவர். சுமார் ஐந்து மாதங்கள் எங்களுடைய இயங்குதலும், வேலைத் திட்டமும் இருந்தது. அதற்கிடையில் ராஜனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பலத்த முரண்பாடு உருவாகத் தொடங்கிற்று.
இதனால் டக்ளஸ் தேவானந்தா குழுவினர் ஈ.என்.டி.எல்.எப் விட்டு வெளியேறினர். இந்த வெளியேற்றதினால் நாங்கள் ராஜனோடு முரண்பட்டோம். நாங்களும் டக்ளஸ் தேவானந்தா குழுவைத் தொடர்ந்து வெளியேறினோம். ஈ.என்.டி.எல்.எப் உடனான எங்கள் ‘’அரசியல் வாழ்க்கைக் காலம்’’ சுமார் ஆறு மாதங்கள்தான். அதன் பின் ஈ.என்.டி.எல்.எப் க்கும் எங்களுக்கும் எந்த உறவுகளும் இருந்ததில்லை.

வெளியேறிய நாங்கள் மிகவும் கொடுமையான துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்தோம். கிழக்கு மாகாணத் தோழர்கள் என்பதால் உடனடியாக தோழர் களை இலங்கைக்கு அனுப்பமுடியவில்லை. மிக மிக உளச்சுமைகளை இக் காலங்களில் நான் அனுபவித்தேன். தோழர்களை நாட்டுக்கு மிகவும் பாதுகாப்பாக அனுப்பிவைப்பதில் எங்கள் காலம் கழிந்தது. அதன் பின் தோழர் ஈஸ்வரன் நாட்டிற்கு சென்றார். என்னால் செல்லமுடியவில்லை. நானும் மிஞ்சிய தோழர்களும் தமிழ்நாட்டுக் கிராமம் ஒன்றில் விவசாயத் தோட்டம் ஒன்றைச் செய்தோம். அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டினோம்.

1992ல் நான் பிரான்ஸ் வந்தேன். அதன் பின் ஒருசில தோழர்களை என் தனிப்பட்ட உழைப்பின் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிவைத்தேன். ஏனைய தோழர்கள் இந்தியாவில் இன்றுவரை இருக்கிறார்கள்.இதுதான் நண்பர்களே தோழர்களே ‘’ஈ.என்.டி.எல்.எப் அசோக்கின்’’ வரலாறு !.

அந்நேரங்களில் தோழர்களின் துன்ப துயரங்களிலிருந்து தப்பியோடியவர்களும், இன்று தங்கள் சொகுசான வாழ்க்கைக்கான வளங்களை உத்தரவாதப்படுத்திக்கொண்டு, முள்ளிவாய்க்காலுக்குப் பின் ‘’பிழைப்பு அரசியல்’’ செய்யவந்தவர்களுமே இன்று எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள். புளொட் தோழர்களின் துயரங்களோடும், கண்ணீரோடும் பங்குகொண்டவர்கள்- அவர்களின் துயரங்களை போக்கியவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுக்களை, கட்டுக்கதைகளை, வதந்திகளை என்றுமே உருவாக்கியதில்லை. அவர்கள்தான் இன்றும்கூட எம்மக்களுக்காக, எம்மால் கைவிடப்பட்ட துயர்கொண்ட எம் தோழர்களுக்காக உதவிக்கரம் நீட்டுபவர்களாகவும் அவர்களின் கண்ணீரை துடைப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

மட்டக்களப்பில் பாடுமீன்கள் இருப்தாக சொல்லப்படுகிறதே இது உண்மையா? நீங்கள் இவ் மீன்களின் இசையை கேட்டுள்ளீர்களா?

RANGA

நண்பரே, உங்களைப்போல்தான் நானும். வெறும் கேள்விப்படலே. கேட்டதில்லை. என்னுடைய நண்பர்கள் பலர் இவ் இசையை கேட்டதாக கூறியுள்ளார்கள். ‘’சிங்கிங் பீஸ்’’ என அழைக்கப்படும் இவ் இசை ஒருவகை ஊரிகளினால் இசைக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். ஊரி எனப்படுவது சங்கு இனத்தைச்சேர்ந்தவை என்றும், இவை மட்டக்களப்பு வாவியின் அடியில் காணப்படும் பாறைகளில் படிந்துகிடப்பனவென்றும், நீர் கலங்கமற்று, வானமும் கலங்கமற்ற காலமாகிய சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் பெளர்ணமி நிலவு காலங்களில், நீரின் அடியிலிருந்து ஓசை இடுவதாக இப் பகுதிகளில் வாழும் அனுபவம் வாய்ந்த மீன்பிடியாளர்கள் கூறுவதாக மட்டக்களப்பு தமிழகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. விபுலாந்த அடிகளார் இதுபற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். விபுலாந்த அடிகளார் இவ்விசையை ‘’நீரக மகளீர் இசை’’ என அழைக்கிறார்.

சிலர் நூற்றுக்கணக்கான வயலின் கொண்டு இசைக்கப்படும் ஒலி வடிவத்தை ஒத்ததாக இது இருப்பதாக கூறியுள்ளார்கள். இது பற்றி இவ் இசையை கேட்டவர்கள்- தெரிந்தவர்கள் தெரிவித்தால் நல்லது.

புளொட் உட்கட்சிப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது ?.

விஜய் -இலங்கை

இதற்கு பல்வேறு காரணங்களை கூறமுடியும். அடிப்படையில் புளொட் ஒரு புரட்சிகர அமைப்பல்ல. அது புரட்சிகர மேற்கோள்களை கோசங்களாக முன்வைத்ததேயன்றி மார்க்ஸியத்தின் வழிகாட்டலின் ஊடாக தன் பயணத்தை தொடங்கவில்லை. மத்தியதரவர்க்க குணாம்சம் கொண்டவர்கள் பெரும்பான்மையாகவும், புரட்சிகர சக்திகள் சிறுபான்மையினராகவுமே இருந்தனர்.

இவர்களும்கூட அடையாள இருப்புக்காக ‘மார்க்ஸிய சொல்லாடல்களை’ சொல்லிக்கொள்வோர்களாகவே காணப்பட்டனர். ஒரு புரட்சிகர கட்சிக்குரிய அரசியல் கோட்பாடுகளையும் அதன்வழியமைந்த செயல்பாடுகளையும் போராட்ட குணாம்சங்களையும் கொண்டிராத, அதிகாரமும் கண்காணிப்பும் கொண்ட ஒரு சர்வாதிகார மையமாகவே தலைமை இருந்தது.

இந்த மையத்தை கைப்பற்றுவது அல்லது அதன் மீது தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வது என்பதிலேயே புளொட்டினுடைய உள்ளக முரண்பாடு தொடங்கியது. இவ் அதிகாரப்போட்டியை உட்கட்சி போராட்டமாக ஒரு பகுதி பின்தளத்தில் ‘’படங்காட்ட’’ பல நல்ல தோழர்கள் இதனால் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டார்கள். இதுவே பின்தள உட்கட்சி போராட்ட வரலாறாக இருந்தது.

ஆனால் தளத்தில் சூழ்நிலை வேறுகொண்டமைந்தது.மத்தியதர வர்க்க குணாம்சத்தை கொண்டிருந்தபோதிலும் அரசியல் மயப்பட்ட மக்கள்நலன் சார்ந்த போராட்ட உணர்வு கொண்டவர்களாக தோழர்கள் இருந்தார்கள். மக்களோடு மக்களாக களப்பணியாற்றியதால் ஏற்பட்ட அனுபவபூர்வமான ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சிந்தனைகளும், தோழர்களை மார்க்ஸிய வழிப்பட்ட போராட்ட முறைமைகள் மீது ஆர்வத்தையும் நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியிருந்தன. தளப்பிரதேசம் ஓரளவு ஜனநாயக தன்மைகளை கொண்டதாக இருந்தது. இதனால் புளொட்டின் அதிகார தலைமைக்கெதிராக தளத்தில் உட்கட்சிப்போராட்டம் நடாத்துவதில் வெற்றிபெற முடிந்தது.

ஆனால் பின் தளத்திற்கு நாங்கள் சென்றபோது உட்கட்சிபோராட்டத்தை நடத்துவதற்கான தத்துவார்த்த அரசியல் செயலூக்கம் கொண்ட எந்த வெளியும் ஜனநாயகமும் அங்கு காணப்படவில்லை. அதிகாரமும் கண்காணிப்பும் பயமுறுத்தல்களும் எங்களையும் அங்குள்ள தோழர்களைளயும் தோல்வி அடையச் செய்துவிட்டன.

அத்தோடு பின் தளம் எங்களுக்கு பழக்கமற்ற புதியதொரு வெளி. அங்கு எங்களுக்கான ஆதரவு சக்திகளோ, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடுகளோ எதனையும் எங்களால் சுயமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலை. உட்கட்சி போராட்டத்தின் மையக்குறியான இயக்க தலைமை மிக கொடூர மானதாகவும், இந்திய- தமிழக அதிகார மையங்களோடு அதன் பிணைப்பும் எங்களை வலுவிழக்கச் செய்துவிட்டது என்றே கூறவேண்டும்.
இவை என்னுடைய பார்வையாக இருந்தாலும் உண்மையில் புளொட்டினுடைய உட்கட்சிப் போராட்டத்த்தின் தோல்வியை அரசியல் சமூகப் பார்வை கொண்டு மேலும் ஆராய்வது ஆரோக்கியமானது.

முன்னயவை:

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 03
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 02
அசோக் யோகனிடம் கேள்வி…..

 

Exit mobile version