Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யார் தேசியவாதி? : வியாசன்

gajan_vikiஇலங்கையில் மகிந்த மைத்திரி ரனில் தொடர்பான பரப்புச் செய்திகள் ஒரு புறமும், 19 திருத்தச் சட்டம் தொடர்பான கோட்பாட்டு மோதல்கள் மறு புறமும், விக்னேஸ்வரனின் ராம ராஜ்யம் இன்னுமொரு புறமுமாக நடைபெற்றுக்கொண்டிருக்க வடக்கும் கிழக்கும் திட்டமிட்டு அழிக்கபடுகின்றன. இலங்கையில் தேசிய இன முரண்பாடே பிரதான முரண்பாடாக இன்னும் தொடர்கின்றது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்பைக் முறியடிப்பது இலங்கை அதிகாரவர்க்கத்தினதும் அதன் பின்னணியில் செயற்படும் பல்தேசியக் கொள்ளையர்களதும் பிரதான நோக்கமாக உள்ளது. இந்தப் பின்புலத்தில் வடக்குக் கிழக்கு இனப்பரம்பலின் செறிவைக் குறைப்பதற்காக திட்டங்கள் முழு அளவில் செயற்படுத்தப்படுகின்றன.

சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சார்ந்த பகுதி மக்கள் வாழ முடியாத நிலமாக மாற்றுவதற்குப் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய நிறுவனம் செயற்பட்டுள்ளது. மன்னார் கடற்படுக்கையை வேதாந்தா உட்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் சூறையாட ஆரம்பித்துள்ளன. மன்னார் கடலை அண்மித்த பகுதிகள் விரைவில் மற்றொரு சுன்னாகமாக மாற்றமடையும். சம்பூரை மையமாகக் கொண்டு திருகோணமலை அழிக்கப்படுகின்றது.

தேசத்தின் நிலம் அழிக்கப்படும் போது அதற்கு எதிராகப் போராடுவதே தேசியம். அதற்கான மக்களின் தற்காப்பு யுத்தமே தேசிய விடுதலைப் போராட்டம். இன்று விக்னேஸ்வரன் அதற்கு எதிராகப் போராடுகிறாரா?, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு எதிராகப் போராடுகின்றாரா?

இவர்கள் பல்தேசிய வியாபாரக் கொள்ளைக்குச் சார்பானவர்கள். இந்திய அரசும், அமெரிக்க – ஐரோப்பிய அரசுகளும் பல்தேசிய வியாபார நிறுவனங்களைப் பாதுகாக்கும் காவலர்கள். விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் போன்றவர்கள் இந்த அரசுகளை நம்பி அரசியல் நடத்தும் அடியாட்கள். இவர்கள் தமிழர்களின் அழிவிற்கு எதிராகப் போராடுவார்கள் என்பது எவ்வளவு மடமைத்தனம்?

இலங்கை அரசு நல்லாட்சி, 19 வது திருத்தச்சட்டம் என்று மேலே பேசிக்கொண்டு கீழே வடக்கையும் கிழக்கையும் அழிக்க பல்தேசிய நிறுவனங்களைச் சூறையாட அழைக்கின்றது. கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் போன்றவர்கள் தேசியம் என்று பேசிக்கொண்டு இச்சூறையாடலை அனுமதிக்கின்றனர். ஆக, இந்த இரண்டு பகுதியினரும் ஒருவருக்கு ஒருவர் முரணானவர்களாகக் காட்டிக்கொண்டாலும் ஒரே நேர்கோட்டிலேயே பயணிக்கின்றனர்.

இதற்கு மத்தியில் தேசியவாதிகள் என்று யாரைக் அடையாளம் காண்பது? சுன்னாகம் நீரைப் பாதுகாக்கப் போராடுகின்றார்களே, அவர்கள் தேசியவாதிகள். சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராகப் போராடுகின்றார்களே, அவர்கள் தேசியவாதிகள். தமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்களே அவர்கள் தேசியவாதிகள்.

கஜேந்திரகுமாருக்கும், விக்னேஸ்வரனுக்கும் சுன்னாகம் அழிப்படை நடத்தும் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய நிறுவனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட முடியவில்லை. அதேபோல சீமான் போன்றவர்கள் லைக்கா போன்ற பல்தெசிய நிறுவனங்களை ஆதரிக்கின்றனர்.

பல்தேசிய நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் கொள்ளையின் அடிவருடிகள் கூட்டம் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் எதிரிகள். இப் பல்தேசிய நிறுவனங்களின் தரகர்களையும் சேர்த்து தமிழினம் என்று அழைப்பது எதிரிகளின் தவறுகளை மூடி மறைப்பதற்கேயாகும். இதனால் தான் கஜேந்திரகுமாரும், விக்னேஸ்வரனும், சீமானும் தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என்கின்றனர்.

தமிழ்த் தேசிய இனத்தை அழிக்கும் கொள்ளையர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே, அவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் எதிரிகள். போலித் தேசியவாதிகள்.

விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் போன்றவர்களுக்கு மக்களைவிட இப் பல்தேசிய கொம்பனிகள் முக்கியமானவை. இவர்களைச் சுற்றியுள்ள சிறு கூட்டத்தின் நலன்களுக்காக இவர்கள் பேசும் தேசியம் போலியானது.

இலங்கையில் இன்று நடத்தப்படும் அழிவிற்க்கு எதிராக தேசிய பற்றுள்ளவர்கள் போராடவும் குரலெழுப்பவும் முன்வ்வரவேண்டும். அது போலித் தேசியவாதிகளை அழித்து அழிவிலிருந்து தமிழ்த் தேசிய இனத்தை மீட்கும்.

Exit mobile version