Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இறப்பிற்கு பின்னரான வாழ்வு-அறிவியல் வளர்ச்சி : வி.இ.குகநாதன்

soul-falseகடந்த வெள்ளியன்று( 18-11-16) பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததனைக் குறிப்பிடலாம். அதாவது இன்றைய நிலையில் குறித்த புற்றுநோயிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உதாரணமாக நூறு வருடங்களிற்கு முன்னர் உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, கசம் போன்றவற்றுக்கு இன்று மருந்து இருப்பது போன்றது. எனவே இறந்த சிறுமியின் உடலினை கடுங்குளிரூட்டல்..(Cryogenics)மூலம் நூறு வருடங்களிற்கோ அல்லது மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை சேமித்து வைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

தாய் சிறுமியின் விருப்பத்திற்கு இணங்கியபோதும் விவாகரத்து மூலம் பிரிந்துள்ள தந்தை முதலில் இதனை விரும்பவில்லை ,ஏனெனில் குறித்த வருடங்களிற்கு பின்னர் உயிர்ப்பிக்கப்படும்போது அவரது உறவினர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்பதாகும். ஆனால் தந்தையும் இறுதியில் மகளின் விரும்பத்திற்கு இணங்கினார். நீதிபதியும் மருத்துவமனைக்கே சென்று அனுமதி வழங்கினார். இச் சிறுமி ஒக்டோபர் 17 அன்று இறந்தார்.எனினும் இந்த விடயம் சில சட்ட நடைமுறைகளிற்காக இப்போதே வெளியிடப்படுகிறது. இப்போது இச் சிறுமியின் உடல் கடுங்குளிரூட்டலுடன் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு Michigan Cryonics Institute இல் பராமரிக்கப்படுகிறது.

கடுங்குளிரூட்டல் மூலம் செல்களை உயிருடன் பராமரிக்கும் முறை:

இவ்வாறான பராமரித்தல் முறையினை CRYOPRESERVATION என அழைப்பார்கள். இங்கு குளிரூட்டலிற்கு பனிக்கட்டிகளைப்பயன்படுத்த முடியாது, பனிக்கட்டிகள் உடலிலுள்ள உயிருள்ள செல்களை கொன்றுவிடும். எனவே நிட்ரோஐன் (Nitrogen) வாயுக்களை கணனி கட்டுப்பாட்டுடன் (computer control by nitrogen)வைத்து பின்பு நிட்ரோஐன் (nitrogen)திரவத்தின் உதவியுடன் உடலின் செல்களை காலவரையன்றி சேமித்துவைக்கமுடியும். இவ்வாறு இங்கு (Michigan Cryonics Institute) சேமித்து வைக்கப்படும் 143வது நபர் இச் சிறுமியாகும். இச் செயல்முறைக்கு 37000 பவுண்ஸ் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தங்களது உடல்களையும் எதிர்காலத்தில் சேமித்து வைக்குமாறு Seth Mcfaiane(Family guy creator), Larry King9talkhow host), Birtney Spears(singer) போன்ற பிரபலங்களும் முன்பதிவு செய்துவைத்துள்ளனர். பேராசிரியர் வாரி புல்லர் ( Barry Fuller, a professor in surgical science and low temperature medicine, at University College London) இந்த கடுங்குளிரூட்டல் முறை மூலமான மருத்துவமுறையானது அண்மைய எதிர்காலத்தில் பயன்தரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மூளையின் எண்ணங்கள், நினைவுகளினை பராமரித்தல்:

அறிவியல் துறையில் ஏற்பட்ட மற்றொரு வளர்ச்சியாக மனித மூளையில் சேமிக்கப்பட்டுள்ள எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் என்பவற்றினை ஒரு சிறப்புக் கணனியுடன் இணைப்பதன் மூலம் அவற்றினை மனிதனின் இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் இன்னொரு செயற்திட்டமாகும். எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைத்திறன் போன்றன மனித மூளையில் நியூரோன்களின் இணைப்பின் (connections between neurons) மூலமே செயற்படுகின்றன. இதனை கணனிமயப்படுத்தி இறப்பிற்கு பின்னரும் செயற்படவைக்கும் முறையாகும். இங்கு இந்த கணனிமயப்படுத்தப்பட்ட செயற்கை மூளையானது மனித இயற்கையான மூளையின் மிகவும் சிக்கலான செயற்பாட்டுக்கு ஈடாகுமா என்பதில் விஞ்ஞானிகளிற்குள் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதும் அடிப்படையில் மூளையின் செயற்பாட்டில் எல்லோருமே ஒன்றுபடுகிறார்கள்.

கேள்விக்குள்ளாகும் மதநம்பிக்கைகள்:

மேற்குறித்த இரு அறிவியற் கண்டுபிடிப்புக்களும் சகல மதங்களினதும் உடல், ஆன்மா, மறுமை , சொர்க்கம், நரகம் , ஆவி போன்ற பல கருத்துகளிற்கு மரண அடி கொடுத்துள்ளன. எனவே இத்தகைய கண்டுபிடிப்புக்கள் மதப்பிழைப்புவாதிகளின் வயிற்றில் புளியினை க் கரைக்கப்போவது நிச்சயம். அதாவது நவீன அறிவியல் வளர்ச்சியில் ஒரு மனிதனின் இறப்பினை எளிமையாக விளங்கிக்கொள்வதற்கு நாம் அது ஒரு கணனி காலப்போக்கில் தனது செயற்பாட்டினை நிறுத்திக்கொள்வதுடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளலாம்.

இங்கு கணனியிலிருந்து இறுதியில் எதுவுமே வெளிச்செல்வதில்லை, அதுபோன்றே மனிதனின் உடலிருந்தும் ஆன்மாவோ, ஆவியோ எதுவுமே வெளியேறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு ஆன்மா, ஆவி என்று எதுவுமேயில்லை. ஏற்கனவே டார்வினின் பரிணாமக்கோட்பாட்டினாலும்.(இப்போது பரிணாம நிகழ்வு என்றே குறிப்பிடுகிறார்கள் –Fact not a theory) பெருவெடிப்பு நிகழ்வினாலும் ( Big bang)கடவுளின் படைத்தல் தொழில் அடிவாங்கியிருந்தது. அடுத்த தொழிலான காத்தலிற்கு மதவாதிகளே இப்போது கடவுளை நம்பாமல் சிவசேனா, ஐ.எஸ் (IS) ,பொதுபலசேனா போன்ற அமைப்புக்களை உருவாக்கி கடவுள்களையே அவர்கள்தான் பாதுகாக்கிறார்கள். இங்கு மேற்கூறிய அறிவியலின் புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் கடவுளின் எஞ்சியிருந்த அழித்தல் தொழிலும் பறிபோய் கடவுள் செயலற்றவராக்கப்பட்டுள்ளார்.

உடல்-உள காலவரையற்ற அறிவியல் வாழ்வின் சாத்தியம்:

மேற்குறித்த அறிவியல் கண்டுபிடிப்பாகவிருக்கப்போகும் எல்லையற்ற வாழ்வு நிச்சயமாக நிகழுமா என்பது பற்றி விஞ்ஞானிகளிடமே முற்றுமுழுதான உடன்பாடில்லை என்பது உண்மையே. இதனை இரு கோணங்களில் பார்க்கலாம். முதலாவது கோணத்தில் சில நூற்றாண்டுகளிற்கு முன்பு சாதாரண மாரடைப்புக்கே மருத்துவம் இல்லாத காலத்தில் இன்று சாத்தியமாகும் இருதய மாற்றுச்சிகிச்சையினை கற்பனையே பண்ணிருக்கவே முடியாது. அதேபோல இன்று கற்பனை போலத்தோன்றும், ஆனால் அறிவியல் அடிப்படைகளைக்கொண்டுள்ள செயற்திட்டங்கள் ஒரு சில நூறு வருடங்களில் சாத்தியமாகலாம்.. மற்றைய கோணம் எல்லையற்ற வாழ்வு என்றுமே சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்டே சில விஞ்ஞானிகளும், சில நிறுவனங்களும் நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்காக இவற்றின் மீதான நம்பிக்கையினை அதிகப்படுத்திக் காட்டுகிறார்கள் என்பதாகும். இவ்விரு கோணங்களில் எது உண்மை என்பதனைக் காலம் தீர்மானிக்கும். இவற்றில் எது உண்மையானாலும் இரண்டு உண்மைகளை மறுக்கமுடியாது.

1. இக் கண்டுபிடிப்புக்கள் மூலம் மருத்துவத்துறை முன்னேற்றமடைந்து மனித வாழ்வு தரத்திலும், காலத்திலும் அதிகரிக்கும்.

2. இவ்வடிப்படைகள் மூலம் மதம், கடவுள் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் தகர்த்து எறியப்படும்.

முடிவு:

மதரீதியான மறுவாழ்வு, ஆன்மா என்பனவெல்லாம் கற்பனைகள் என்பதனை அறிவியல் தெளிவுபடுத்தியுள்ளது. அறிவியல்ரீதியான எல்லையற்ற வாழ்வு என்பதில் சில அடிப்படைகள் கண்டுகொள்ளப்பட்டுள்ளபோதும் இன்னும் பல வினாக்கள் தொக்கிநிற்கின்றன. ஆனால் ஒரு மனிதன் தனது வாழ்வினை சக மனிதர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதன் மூலம் எல்லையற்ற வாழ்வினை வாழலாம். அவ்வாறு வாழ்ந்துவரும் ஒரு மனிதனின் பிறந்த ஆண்டின் இருநூறாவது ஆண்டினையே அடுத்தாண்டு கொண்டாடவுள்ளோம். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.

Exit mobile version