Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சூரியனை எரிக்கப்போன நாளில்… : எழிலன் தமிழ்

நாங்கள் சூரியனை எரிக்கப்போன நாட்களில் எனக்கு ஒரு சிங்கள தோழனின் அறிமுகம் கிடைத்தது. சிங்கள தேசத்தில் அவனுக்கு தேசத்துரோக பட்டம் சூட்டப்பட்டிருந்தமையும் அவனது மனைவி தமிழ் காரணமும் அவன்பால் என்னை ஈர்த்தன.

2001 ஏப்ரல்; மாதத்தின் நடுப்பகுதியொன்றில் இப்படியான ஆச்சாரியமான சம்பவம் நடைபெற்றது. அன்று ஒரு மதிய நேரம் நாங்கள் சிலர் தங்கியிருந்த வீட்டுக்கு சைக்கிளை வேகமாக மிதித்தபடி இளையநம்பி அவசரமாக வந்திறங்கினான்.

இதற்கு முன்னர், 2001 ஆரம்ப மாதங்களின் யாழ்ப்பாண நிலைமைகளை சற்று சொல்ல வேண்டியிருக்கிறது. ஈழப்போரில் நோர்வேயின் தலையீடுகளால் புலிகள் 2000 டிசம்பர் நத்தார் தினத்தை தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறான சூழ்நிலை காணப்பட்டது. வலிந்த மோதல்களை இருதரப்பும் தவிர்த்து வந்தன. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பொங்கு தமிழ் போன்ற இன எழுச்சி நிகழ்சிகளை நடத்தி யாழ்ப்பாணத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பியிருந்தனர்.

இந்த நாட்களில் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளராக இளையநம்பி என்ற இளைஞன் செயப்பட்டு வந்தான்.

‘டேய் தம்பியள்! எங்கட அண்ணையை அரை நிர்வாணமாக படம் வரைந்து ஈ.பி.டீ.பி ஒரு பத்திரிகை வெளியிட்டிருக்கு.. கம்பஸ் பெடியள் எல்லாம் அதை எரிக்க போய் கொண்டிருக்கிறாங்கள்.. எங்கேயெல்லாம் அந்த புத்தகம் விற்கிறாங்களோ அங்கை எல்லாம் போய் பறித்து கொழுத்துங்கள்’ என கூறினான்.

நாங்கள் அனைவரும் உணர்ச்சி வசப்பட்டோம். எங்கள் தலைவர் பிரபாகரனை அரைநிர்வாணமாக வரைந்து அவமானப்படுத்திய பத்திரிகை எந்த இடத்திலும் விற்கபடகூடாது என்று முடிவு செய்துகொண்டு யாழ்நகரை நோக்கி புறப்பட்டோம்.

நாங்கள் பரமேஸ்வரா சந்தியை கடக்கும்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆவேசமாக ‘அமுது’ என்ற அந்த பத்திரிகையை எரித்து கொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணம் எங்கும் இராணுவம் காவலுக்கு நின்றபோதும் பல கடைகளில் அந்த பத்திரிகையை பறித்து எடுத்தோம். வர்தககர்களும் அச்சத்துடன் நாம் இனி அந்த பத்திரிகையை விற்கபோவதில்லை என கூறியமை எமக்கு மகிழ்சியை கொடுத்தது.

அந்த பத்திரிகையில் தலைவரை எப்படி வரைந்தார்கள் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ஏனெனில் நிர்வாணம் என்பது அவமானமா? என சிந்திக்க முடியாத அந்த நாட்களில் முழு பத்திகையையும் நாங்கள் எரித்துவிட்டோம்.

அன்றுவரை அமுது என்ற பத்திரிகை வெளிவரும் விடையம் எனக்கு தெரியாது. எனக்கு மட்டுமல்ல பல மக்களுக்கும்தான். நாங்கள் எரித்தது தொடர்பாக அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்ற ஆர்வத்தில் அடுத்த பதிவை நான் வாங்கிப்படித்தேன். ‘சூரியனை எரிக்கபோய் கைகளை சுட்டுக்கொண்டவர்கள்’

என்ற தலைப்பில் எரித்தவர்கள் தொடர்ப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது.

அவர்களுடைய அடுத்த பதிப்புகள் பன்மடங்கு அதிகமாக விற்கபட்டது இப்படித்தான். அவர்களுக்கு நாங்கள் இலவசமாக விளம்பரம் தேடிக்கொடுத்து விட்டோம்.

அமுதின் அடுத்த சில பதிப்புகளினூடகாகதான் இந்த ‘உதுவன்கந்த சரதியல்;;;’ என்ற இளைஞன் எனக்கு அறிமுகமானான். ‘வரலாறு செய்த குற்றம்’ என்ற தலைப்பில் அவன் தொர்பான தொடர் கட்டுரை வெளிவந்திருந்தது.

150 வருடங்களின் முன்னர் இவன் வாழ்ந்த நாட்களில்தான் பிரித்தானியா இலங்கையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிலுள் கொண்டு வந்திருந்தது. சிங்கள தாழ்ந்த குடியில் பிறந்த சரதியில் ஏழைமக்களுக்காக புரட்சி செய்து ஏழைப்பங்காளனாக விளங்கினான், படை திரட்டி பிரித்தானிய அரச வர்த்தகத்தை சீர்குலைத்து பிரித்தானிய அரசுக்கே சவால் விட்டான். அவர்களின் பிரித்தாளும் தந்திரம் இவனிடம் பலிக்கவில்லை. ஒரு தமிழ் பெண்ணை மணம் முடித்த இவனுடன் மரக்கார் என்ற ஒரு இஸ்லாமியன் தோழனாக உடனிருந்து போராடினான்.
இந்த செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தன. இவன் கொல்லபட்டு 150 வருடம் முடிந்த நிலையிலும், இலங்கை பிரித்தானியவிலிருந்து விடுதலைபெற்று 60 வருடங்கள் ஆகிய நிலையிலும் இவனின் மீது விதிக்கபட்டிருந்த தேசதுரோக குற்றச்சாட்டு நீங்கபடவில்லை.

கடந்தவாரம் தமிழ் இணையத்தளம் ஒன்று மைத்திரி அரசு, சரதியல் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டை விலக்கிகொண்டுள்ளதாக ஒரு வரியில் செய்தி வெளியிட்டிருந்தது. சரதியலும் அவன் இஸ்லாமிய தோழன் மரிகாரும் 1864 இல் தூக்கில் போடமுன்னர் அரைநிர்வாணமாக்கபட்டு எடுக்கபட்ட அரிய புகைப்படத்தை அந்த இணையத்தில் தற்செயலாக பார்த்த ஒரு தமிழ் நண்பர,; ஆ! யார் இவன்? ஊரில் ஆடு கோழி திருடுபவன் போல! என தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.

ஆள்பவனுக்கு வேண்டுமானால் மானத்தை காக்க ஆடை அலங்காரங்கள் தேவைப்படலாம். ஆனால் மக்களுக்காக புரட்சி செய்பவனுக்கு புரட்சிதான் அவனது ஆடை என்பதை விளக்க முடியாமல் திகைத்து நின்றேன்.

(உதுவன் கந்த சரதியல் தொடர்பான எனது பதிவு. இவை கற்பனையில்லை. உண்மையில் நடந்தவையே! -எழிலன் தமிழ்)

Exit mobile version