Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டொனால்ட் ரம்ப் என்ற காட்டுமிராண்டி உலக ‘ஜனநாயகத்தின்’ தலைவர், அடுத்தது என்ன?

play_kisscamடொனால்ட் ரம்ப் என்ற ஈவிரக்கமற்ற வியாபாரியை அமெரிக்க அதிகாரவர்க்கம் தனது நிர்வாகியாகத் தெரிவு செய்துள்ளது. ரம்ப் ஜனாதிபதியானதும் அமெரிக்கா எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதுவரைக்கும் தன்னை உயரிய ஜனநாயக நாடாகப் பிரச்சாரம் செய்துவந்த அமெரிக்காவில் கடைந்தெடுத்த காட்டுமிராண்டி ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலக முதலாளித்துவத்தின் தலைமை நாடான அமெரிக்காவின் இருதயத்தின் மீது உட்கார்ந்துகொண்டு இந்திய இந்து பாசிஸ்டுகள் உட்பட பல்வேறு கோமாளிகளை ரம்ப் தனது காலடிக்குக் கீழ் கொண்டுவந்துள்ளார்.

நிறவாதி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர், பெண்களை அவமதிப்பவர், அநாகரீகமானவர் என்று அனைத்துத் தரப்பிலும் தனது முத்திரையைப் பதித்துள்ள ரம்ப், தனது சொந்த மகள் குறித்தே பாலியல் கருத்துக்களை வெளியிட்டவர். ஐநூறிற்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள ரம்ப் அதிகமாக விரும்பும் இரண்டு வியாபாரங்கள் சூதாட்டமும், பெண்களை வைத்து நடத்தும் அழகுப் போட்டிகளும். அழகுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களைப் பாலியல் கட்டாயத்திற்கு உட்படுத்தும் ரம்ப் அப் பெண்கள் தொடர்பாக அருவருப்பான கருத்துக்களைத் ஊடகங்களிலேயே தெரிவித்துள்ளார்.
பெண்கள் அனைவரும் விபச்சாரிகள், அருவருப்பான மிருகங்கள், நாய்களுக்கும் பன்றிகளுக்கும் ஒப்பானவர்கள் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வளவு அரசியல் ‘தகைமைகளும்’ கொண்ட ரம்ப் அமெரிக்காவில் காலகாலமாக இருந்துவந்த அமைப்பை மாற்றி புதிதாக ஒன்றை நடைமுறைப்படுத்தப்போவதாகப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவில் ஒரு இஸ்லாமியர் கூட இனிமேல் காலடி எடுத்து வைக்க முடியாது என்றார். மெக்சிக்கர்கள், கறுப்பர்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

இதுவரை சல்லிக்காசு கூட வரிகட்டாத ரம்பிற்கு 3500 வழக்குகள் உள்ளன. ஆயினும் பல்தேசிய வியாபார நிறுவனங்களக் கட்டுப்படுத்தப் போவதாக மக்களை ஏமாற்றினார். மாற்று ஒன்றை எதிர்பார்த்த மக்கள் ரம்பை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். முதலாளித்துவ ஜனநாயகம் ரம்ப் போன்ற காட்டுமிராண்டிகளைக் கூடத் தெரிவு செய்வதற்கான பொறிமுறையையே கொண்டுள்ளது. அந்த ஜனநாயகத்தின் நேரடி உற்பத்தியான ரம்பின் தெரிவால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

ரம்ப் என்பவர் அமெரிக்கப் பெரும் முதலாளிகளின் கைப்பொம்மையே தவிர வேறல்ல.

அமெரிக்க முதலாளிகளின் கட்டளைப்படி தனது இயக்கத்தை ரம்ப் ஆரம்பிப்பார். வேண்டுமானால் சந்தி சிரிக்கும் அமெரிக்காவின் போர் உக்திகளை ரம்ப் வேறு வகையாக மாற்றிக்கொள்ள அமெரிக்க முதலாளித்துவம் ஆசி வழங்கும். போர்களும் அழிவுகளும் தொடரும். ஆக்கிரமிப்பும் சுரண்டலும் வழமை போல நிகழும். ரம்பை அரியாசனத்தில் வைத்துக்கொண்டு அமெரிக்க முதலாளித்துவம் தனது ஆலோசகர்கள் ஊடாக ஆட்சி நடத்தும்.

குறைந்தபட்ச அரசியல் அறிவுமற்ற ரம்ப் போன்ற கோமாளிகள் ஆட்சிக்கு வருவது இது முதல் தடவையல்ல. உலம் முழுவதையும் இன்று அரித்துக்கொண்டிருக்கும் நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்ளையை அறிமுகப்படுத்திய வேளையில் அரசியல் கோமாளியான ரொனால்ட் ரீகன் ஆட்சியிலிருந்தார். அதே போன்று இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பூச்சாண்டியைக் கிளப்பிவிட்டு உலகை இராணுவமயமாக்கிய போது ஜோர்ஜ் புஷ் ஜூனியர் என்ற கோமாளியை அமெரிக்க முதலாளித்துவம் ஆட்சியிலமர்த்தியது. பாகிஸ்தான் என்ற ஆசிய நாட்டிற்குப் பயணம் செய்த புஷ் அந்த நாடு ‘அரேபிய’ நாடுகளில் நவீனமானது எனக் குறிப்பிடும் அளவிற்கு அவரது அரசியல் ஞானம் இருந்தது.

ஆக, ரம்ப் முதல் கோமாளி அல்ல. அமெரிக்க அதிகாரவர்க்கம் கையாளத்தக்க காட்டுமிராண்டித்தனமான முட்டாள்.

அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்ட உலகமயமாதலும் நவதாராள வாதமுமும் உலகம் முழுவதும் நுகர்வுக் கலாச்சாரத்தை உருவாக்கியது. அதுவே அன்னிய மோகமாக புதிய வளரும் சமூகத்தைச் சிதைத்துச் சீரழித்தது. இன்றும் அதன் விளைவுகளை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

ரம்ப் என்ற தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் உலகின் பலம் பொருந்திய தலைவராகலாம் என்ற பொதுப் புத்தி நாளைய வளரும் சந்ததியிடம் தோன்றும். உலகம் முழுவதும் நேர்மையற்ற ரம்பின் குழந்தைகள் உருவாகுவார்கள்.

நாம் எமது அரசியல் தவறுகளை நேர்மையாக விமர்சிப்பதற்குப் பதிலாக சுய இலாப நோக்கில் குழுவாதிகளாகவும் கோஷ்டி வாதிகளாகவும் வாழ்வதைக் கண்ட சந்ததி ஆவா குழுவை மட்டுமல்ல, சுரேஷ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன் போன்ற அதிகாரவர்க்க அடிவருடிகளைக் கூடத் தேசியவாதிகளாக்கியுள்ளது. நாளைய சந்ததி நேர்மையற்ற முன்னோர்களைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது.

மரணித்தவர்களின் பெயரால் பணக் கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு அதன் ஒரு சிறிய பகுதியை மக்களுக்குப் பிச்சை போட்டால் தியாகம் என்று ஏற்றுக்கொள்ளும் அருவருப்பான அரசியல் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதுவே சமூகத்தில் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்பங்களை வியாபார மனோபாவம் கொண்ட அலகுகளாக மாற்றியுள்ளது.
மறுபக்கத்தில், தமது வாழ்வாதர நலன்களுக்காக மகிந்தவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள் மக்களின் இளம் சந்ததி ஒன்று கொலைகளை அங்கீகரித்தே வாழ ஆரம்பித்துள்ளது. ஆக, தமிழ் சிங்கள வியாபாரிகளின் கொள்ளைக்கு நமது கடந்தகாலம் வித்திட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் இரத்தக் கண்ணீர் போன்று தோற்றமளிக்கும் ஒரு சிறிய நாட்டிலேயே இப்படி என்றால், ரம்ப் என்ற காட்டுமிராண்டி இளைய சந்ததியின் முன்னுதாரணமாகும் போது நாளைய உலகம் இருண்டதாகவே காணப்படும். பெண் ஒடுக்குமுறையும், வியாபாரக் கொள்ளையும், வன்முறையும், வெறுப்புணர்வும் சமூகத்தில் நியாயமானவையாகக் கருதப்படும் காலம் தோன்றும். அமெரிக்காவின் உள்ளேயே சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் கேட்பாரின்றி அதிகரிக்கும்.அதனைக்கூட ஆசியாவின் கொல்லைப் புறத்திலிருந்து நியாயப்படுத்தும் சந்ததி தோன்றும்.

இவ்வாறான அரசியல் சூழலில் மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரம்ப் என்பவர் சேடமிழுக்கும் முதலாளித்துவத்தின் இறுதிக்கட்ட உற்பத்தி என்பதை மக்களுக்கு முன் கூறவேண்டும். எமது சூழலில் ரம்பைப் பிடித்து தமிழீழம் பெறுவோம் என புதிய பிழைப்புவாதக் கூட்டம் ஒன்று புறப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை. எமது தேசிய வியாபாரிகள் அனைவரையும் சேர்த்தாலும் ரம்ப் எட்டமுடியாத அளவிற்கு வெறுக்கத்தக்க மிருகமாகவே திகழ்கிறார். ரம்ப் மட்டுமல்ல எமது அழுக்குகளையும் மீறி சமூகத்தில் மக்களுக்கானவர்கள் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை புதிய சந்ததிக்குத் தோன்ற வேண்டும்.

Exit mobile version