Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய இராணுவ உளவுத்துறை பொறுப்பதிகாரியின் கைகளில் இலங்கை அரசியல் யாப்பு!

ipkf
ipkf

ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கான அடிப்படைகளை எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உருவாக்கியது இந்திய அதிகாரவர்க்கம். ஒரு வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த விடுதலை இயக்கங்களிடையே ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்கள், தத்துவார்த்த மோதல்கள் இடம்பெற்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் வடக்கிலும் கிழக்கிலும் புரட்சிக்கான புதிய நம்பிக்கைகள் தோன்றியிருந்தன.

யாழ்ப்பாணப் புத்தகக் கடைகளில் புரட்சி தொடர்பான நூல்களுக்குத் தட்டுப்பாடு நிலவிய அக் காலம் புரட்சியின் பொற்காலம் எனலாம். ஈழப் போராட்டத்தை அழிப்பதற்குத் தீர்மானித்த இந்திய அதிகாரவர்க்கமும் அதன் உளவுப்படையான “ரோ”வும் படிப்படியாக வளர்ந்த விடுதலை இயக்கங்களை உள்வாங்கிக்கொண்டன. தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு இயக்கங்களுக்கு இந்திய உளவுத்துறை இராணுவப் பயிற்சியை அறிவித்தது. இயல்பாக வளர்ந்த இயக்கங்களை இராணுவக் குழுக்களாக மாற்றிய இந்திய அரசு இயக்கங்கள் இடையேயான திட்டமிட்ட மோதலை உருவாக்கி ஆயிரக்கணக்கான போராளிகளை அழிக்கக் காரணமாயிற்று.

திடீர் இராணுவ வளர்ச்சியால் வீங்கிப் பெருத்த இயக்கங்கள் அதிகார அமைப்புக்களாக மாறின. மக்களை விட ஆயுதங்கள் அதிக பலம் கொண்டதாக மாற்றமடைந்தன.

மு.திருநாவுக்கரசு

அவ்வேளையில் இந்திய அதிகாரவர்க்கத்தின் தலையீடு தொடர்பாகக் கட்டுரைகளை எழுதிய மிகச் சிலருள் மு.திருநாவுக்கரசும் ஒருவர். யாழ்.பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றிய திருநாவுக்கரசு, 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் இலங்கையில் தலையிடுவதற்கு முன்பாக, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். தீவிர இந்திய எதிர்ப்புப் பேசிய அந்த நூல், இந்தியா தொடர்பாக முன்னணி சக்திகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக் காரணமாயிற்று.

இலங்கையில் மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நடைபெறும் எந்த உரிமைக்கான போராட்டமும் இந்தியாவையும் எதிர்த்துத் தான் நடைபெற முடியும் என்ற அரசியல் பிரக்ஞயை ஏற்படுத்த அந்த நூல் காரணமாயிற்று.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் ‘இந்திய அமைதி காக்கும் படை(IPKF)’ என்ற பெயரில் இலங்கையில் தலையிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த மக்களின் கொல்லைப் புறங்களில் கூட இந்திய இராணுவம் குடிக்கொள்ள ஆரம்பித்தது. இலங்கை பெருந்தேசிய வெறிகொண்ட இராணுவம் கூட நிகழ்த்தியிராத போர்க்குற்றங்களையும், மனிதப் படுகொலைகளையும் இந்திய இராணுவம் நடத்த ஆரம்பித்தது. தெருக்களில் மக்கள் மனிதப் பிணங்களைக் கடந்து செல்லும் அவலத்தை கிழக்கும் வடக்கும் முதல் தடவையாகச் சந்தித்தது.

சந்திகளில், சாலைத் திருப்பங்களிலெல்லாம் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பெயரில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர். திருநாவுக்கரசு உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊர்வலம் ஒன்றை இடை மறித்த இந்திய இராணுவம் நிராயுதபாணிகளான மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் மேற்கொண்டதில் சத்தியேந்திரா, ஜெகநாதன் என்ற இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களைக் கலாச்சாரம் மூடி மறைத்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களில் எஞ்சியிருந்த உதிரிகள் இந்திய இராணுவத்தின் துணைப்படையாக இணைந்து இரத்தக் காட்டேரிகளாக உலாவந்தனர். இக் குழுவைத் தலைமை தாங்கியவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன் முக்கியமானவர். சந்தேகத்திற்குரியவர்களை கூரான ஆயுதங்களால் துளைத்துக் கொலை செய்வதில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது குழுவும் கைதேர்ந்தவர்களாக இருந்ததால் அக் குழு  ‘மண்டையன் குழு’ என அழைக்கப்பட்டது.

கேணல் ஹரிகரன்

அக் காலப்குதியில் ‘இந்திய அமைதிகாக்கும் படை’ இன் புலனாய்வுத் துறையின் ஆலோசனையின் அடிப்படையிலேஎயே ‘மண்டையன் குழுவும்’ ஏனைய துணைக்குழுக்களும் இயங்கின. புலனாய்வுத் துறை பல்வேறு கொலைகளின் பின்னணியில் செயற்பட்டது. பலாலி, மருதனாமடம், அசோகா விடுதி போன்றவற்றை மையமாகக் கொண்டு இயங்கிய இப் புலனாய்வுத் துறையை வழி நடத்திய இந்திய இராணுவ அதிகாரியின் பெயர் கேணல் ஹரிகரன். இந்திய இராணுவம் என்ற கொலைப்படையின் ஆதாரமாகவிருந்த கேணல் ஹரிகரனும் அவரது புலனாய்வுப் பிரிவும் சுரேஷ் பிரமச்சந்திரனும் தண்டனைக்குரிய போர்க் குற்றவாளிகள்.

இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

– மு.திருநாவுக்கரசு இந்தியாவை தமிழர்களின் நண்பன் என்று பேசுகிறார்,
– மு.திருநாவுக்கரசு வெளியிடும் யாப்பு என்ற நூலின் சிறப்புப் பிரதியைக் கேணல் ஹரிகரன் பெற்றுக்கொள்கிறார்.
– ராஜபக்ச கோலோச்சிய காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனோடு இலங்கையில் சுற்றுலாச் சென்ற மாகா தமிழ்ப் பிரபாகரன் சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.
– சிறீராமஜெயம் போன்று பிரபாகரனின் பெயரையும், புலிகளின் பெயரையும் சதா உச்சரிக்கும் அகரமுதல்வன் என்பவர் நன்றியுரை வழங்குகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான மு.திருநாவுக்கரசு இந்தியப் புலனாய்வுத் துறையின் செல்லப்பிள்ளையாக மாறிவிட, சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுக தமிழ் என்ற நிகழ்வை நடத்துவதில் மும்மரமாக ஈடுபடுள்ள தேசியவாதியாகிவிட்டார். எழுக தமிழ் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குப் பொறுக்குவதற்கான ஆயுதம் என்பது மட்டுமல்ல, இந்தியா மீண்டும் தனது தலையீட்டை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறதா என்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தும் நிகழ்வு.

காட்சிகள் இவ்வாறு தலை கீழாக மாற்றமடைய அவற்றைப் பார்த்து இரசித்துகொண்டு இன்னும் போர்க்குற்ற விசாரணை செய்வதற்கு அமெரிக்காவைப் பிடித்துவருவோம் என தொடை தட்டிக்கொண்டு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் உலா வருகின்றனர். மு.திருநாவுக்கரசின் நூல் பிரித்தானியாவிலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதற்கெல்லாம் கூட அவர்கள் மூச்சுக்கூட விடவில்லை.

திருநாவுக்கரசைப் பொறுத்தவரை வயிற்றுப் பிழைப்பு முக்கியமானது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அவர் மற்றொரு வியாபாரக் கருவி. கேணல் ஹரிகரன் தனது தொழிலை இன்னும் தொடர்கிறார். தான் கொலைசெய்த மக்களிடமே கேவலம் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்குக் கேட்பதற்காக எழுக தமிழ் நடத்தும் தீவிர தேசியவாதியாகிவிட்டார் சுரேஷ்!
பாவம் மக்கள்!

Exit mobile version