Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்!

kovanprotestகலை என்பது பிழைப்பிற்கானது அல்ல! மக்களுக்கானது! நமது காலத்தில் கோவன் என்ற கலைஞன் அதனை எமது கண்முன்னே நிறுவியுள்ளார். தமிழ் நாடு மானில அரசால் கைதுசெய்யப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவன் என்ற கலைஞன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.

தொண்ணுறுகளில் ரஜீவ் கொலையின் பின் ஜெயலலிதா அரசால் ஈழத் தமிழர்களும், ஈழ ஆதரவாளர்களும் தேடித்தேடிக் கைது செய்யப்பட்ட போது, கோவனின் உணர்ச்சிப் பாடல்கள் தமிழகத்தில் ஈழ மக்களின் குரலாக ஒலித்தது. வன்னியில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கோவன் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழகம் எங்கும் போராட்டங்களை நடத்திற்று.

இன்று குக்கிராமங்களிலும், தெரு முனைகளிலும் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள் தமிழர்களை மெல்லக் கொல்லுவதற்கு எதிராக கோவனின் குரல் ஓங்கி ஒலித்தது.
அதனைச் சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு கோவனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.

நாளைய சந்ததியின் வாழும் முன்னுதாரணமான கோவன் என்ற புரட்சிகரக் கலைஞனின் குரலை மௌனிப்பதற்காக அவரைச சட்டவிரோதமாக தமிழக அரசு சிறையிலடைத்துள்ளது.

இன்றும் ஒடுக்குமுறையின் கோரக் கரங்களுக்குள் வாழும் ஈழத் தமிழர்களின் புலம்பெயர் அங்கங்களான நாம், எமக்காகக் குரல்கொடுத்த அந்த அரிய கலைஞனின் விடுதலைக்காகக் குரல்கொடுக்கத் தவறினால் வரலாறு எம்மீது பழி சொல்லும்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் மேற்கையும் நம்பி தோற்றுப் போனது போதும்!. கோவன் போன்ற மனிதநேயம் மிக்க போராளிகளுக்காகக் குரல்கொடுப்போம்!! உலகின் பெரும்பான்மையான பலம் மிக்க ஒடுக்கப்படும் மக்களோடு தோழோடு தோழ் சேர்க்க கோவனை விடுதலை செய்யக் கோரும் போராடத்தில் இணைந்து கொள்வோம்.!!!

நாளை நாம் அழிக்கப்பட்டால் எமக்காகக் குரல்கொடுக்க கோவன்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள். அவர்களைப் பாதுகாப்பது எமடு கடமை.

இந்திய போலி ஜனநாயகத்தின் மானில ஏவலாளியான ஜெயலலிதா அரசின் படைகள் கோவனைக் கைதுசெய்ததைக் கண்டிப்போம்.

இந்திய ஜனநாயகத்தின் கோர முகத்தை உலக மக்களுக்கு அம்பலப்படுத்துவோம்.

கோவனை விடுதலை செய்யக் கோரி இந்தியத் தூதரகத்தின் முன்னால் எதிர்வரும் திங்கள் 09/10/2015 நடைபெறும் போராட்டத்தில் இணைந்துகொள்வோம்.

-பறை விடுதலைக்கான குரல்
காலைம்: 09/11/2015 மாலை 4 மணி
இடம்: லண்டன் இந்தியத் தூதரகம்
India House, Aldwych, London WC2B 4NA.
Underground: Covent Garden or Holborn

Exit mobile version