Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசியப்பிரச்சனையில் லெனின் பங்களிப்பு-எமது எதிர்காலத்திற்கான திறவுகோல் :சபா நாவலன்

leninandstalin1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மறைந்த லெனின் உலகத்தில் முதல் முதலில் பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சியை – தொழிலாள வர்க்கப் புரட்சியைத் தலைமை தாங்கியவர்களுள் ஒருவர்- மட்டுமன்றி, உலகம் குறித்த கார்ல் மார்க்சின் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தியவர். உலக மக்ககளின் விடுதலைக்கு லெனின் வழங்கிய தத்துவார்த்த பங்களிப்பின் தொடர்ச்சி இன்றைய உலகச் சூழல் மீண்டும் கோரி நிற்கின்றது.

சிங்களவர்கள் என்றால் அவர்கள் பிறப்பிலேயே எதிரிகள், சாதி என்பது மனிதனின் பிறப்புரிமை போன்ற மிகவும் பழமைவாத பிற்போக்குக் கருத்தியலுக்கு எதிராக சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகுதல் எவ்வாறு என்பதை முதலில் தெளிவான கோட்பாடாக முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ்.

இன்றைய சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் அது நாளை எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் ஒவ்வோரு சமூகத்தின் குறித்த நிலைகளையும் முன்வைத்து ஆராய்வது எவ்வாறு என்பதை அவர் கற்றுத்தந்தார். இன்றோ உலகத்தின் பெரும்பான்மை பழமைவாத கருத்துக்களைப் பற்றிக்கொண்டுள்ளது.

சமூகத்தை ஆட்சிசெய்கின்ற அதிகாரவர்க்கமும் அதற்கு தத்துவார்த்த பலத்தை வழங்கும் கல்வியாளர்களும் உலகத்தை இயக்கத்தை ஆராய்வதற்கும் நாளைய உலகம் எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் புரிந்துகொள்ள மார்க்சியதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

அமரிக்க மத்திய உளவு நிறுவனமான CIA அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்று 2025 இல் உலகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை ஆராய்கிறது. மார்க்சிய தத்துவத்தைப் பிரயோகித்த அவர்கள் நாளைய உலகம் எவ்வாறு அமைந்திருக்கும் என ஆராய்கிறார்கள். அங்கு உற்பத்தி உறவுகளின் நிலை எப்படியிருக்கும் எனக் கூறுகிறார்கள்.

அடிப்படையில் மார்கிசியம் என்பது உலகத்தைப் இன்றைய நிலையைப் புரிந்துகொள்வதற்கும் நாளை அது எவ்வாறு மாற்றமடையும் என்பதை அறிவதற்கும் வகை செய்வது மட்டுமல்ல மாற்றத்திற்கான தடைகளையும் அதனை புரட்சியின் ஊடாக எவ்வாறு வெற்றிகொள்வது என்பதையும் கூறுகின்றது.

சமூக மாற்றம் தவிர்க்க முடியாததும், இயல்பானதுமாகும். ஒவ்வோரு தடவையும் சமூகம் மாற்றமடையும் போதும், பழமைவாத சக்திகள் தமது அதிகாரத்தை மீளமைக்க முயல்வது இயல்பு. சமூகத்தின் இயல்பான மாற்றத்தை அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருபோரும், பழமைவாதிகளும் தடைசெய்ய முற்படுகின்ற போது அந்தத் தடைக்கு எதிராகப் போராடுகின்ற நிலைக்கு மக்கள் வந்து சேர்கிறார்கள். சமூகத்தின் இயல்பான வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த அவர்களை அமைப்பாக்குவதற்கு புரட்சிகரக் கட்சியும், அவர்கள் மத்தியிலான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வெகுஜன அமைப்புக்களும் அவசியம் என்பதை மார்க்சியம் முன்வைக்கிறது.

கார்ல் மார்க்ஸ் தனது வாழ் நாள் முழுவதும் தத்துவார்த்த உழைப்புக்கு மத்தியில் புரட்சிகரக்கட்சிகளைத் தோற்றுவிக்க முயன்றார். அந்தப் பணி ரஷ்யாவில் புரட்சியாளர்களின் தலைமையில் முதலில் வெற்றிபெற்றது. ரஷ்யாவின் சூழலுக்கு ஒப்ப தத்துவார்த்த அடிப்படையை வழங்கிய பலருள் லெனின் பிரதானமானவர்.

லெனினின் பங்களிப்பு இன்று வரைக்கும் பல அரசியல் சிக்கல்களுக்கு விடை தருகிறது.

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் முன்வைத்த கோட்பாட்டு வகையிலான முடிவுகள், உலகத்தில் முதல் தடவையாக தேசிய இனங்கள் குறித்துப் பேசியது. சோவியத் ரஷ்யாவில் தேசிய இனங்களுக்கு பிரிந்துசெல்லும் உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே சோசலிசப் புரட்சி வெற்றி பெறுவதற்கான முன் நிபந்தட்னை என்றார். கார்ல்மார்க்ஸ் முயன்றதை லெனின் தேசியப் பிரச்சனையிலும் முன்னெடுத்தார். ரஷ்யாவில் சமூக ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொள்வதற்கான முன்நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். அத் தேசிய இனங்களை பாட்டாளிவர்க்கக் கட்சியில் கீழ் ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான தத்துவத்தை முன்வைத்தார்.

இன்று தேசிய இனப்பிரச்சனை என்பது இலங்கையில் மட்டுமல்ல, மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும், சீனாவிலும், இந்தியத் துணைக்கண்டத்திலும் பல திரிபுகளுக்கு உட்பட்டுத்தப்படுகின்றது.

ஏகாதிபத்தியமும் அதன் உப நிதி நிறுவனங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைச் சீர்குலைக்கின்றன.

இன்று முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற இடதுசாரிக் கருத்துக்களைப் பொறுக்கிக்கொண்ட இனவாதிகள் கூறுவது போன்றே ரோசா லக்சம்பேர்க், புக்காரின், பிளக்கானோவ் போன்றோர் லெனினின் கருத்துக்களுக்கு எதிராக கிளர்ந்தனர். பெரும்பான்மைத் தேசிய இனத்தின் தொழிலாளர்களை சுயநிர்ணைய உரிமைக்கான முழக்கம் அன்னியப்படுத்தும் என்றனர்.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி சோசலிசப் புரட்சியைச் சிதைக்கும் என்றனர். இதற்கெல்லாம் எதிரக லெனினும் அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும் நடத்திய கோட்பாட்டு யுத்தங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த உறிதியான முடிவிற்கு வருவதற்கு உதவியது.

இலங்கையில் இனவாதம் அழிந்து போவதற்குரிய முன்நிபந்தனை அங்கு சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை உணர்ந்துகொள்வதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமல்ல தேசிய விடுதலைப் போராட்டத்தை தொழிலாள விவசாயிகள் அணி முன்னெடுப்பதே ஆகும்.

வன்னி அழிப்புக்களின் பின்னர் ராஜபக்ச பாசிச ஒடுக்குமுறையை சிங்கள உழைக்கும் மக்கள் உணர ஆரம்பித்தனர்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி.

இலங்கை அரசிற்கும் அதன் பின்பலமாகத் தொழிற்படும் அமரிக்க இந்திய சீன அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவப்படுத்தப்படுகிறதோ அதே அளவு முன்னுரிமை திரிபுவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்று கலர் கலராக பெருத்த பணச் செலவில் அல்ல, எங்காவது மூலை ஆர்ப்பாட்டமில்லாமல் சிறிய குழு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினாலே தமிழ் இனவாதம் சரிய ஆரம்பிக்கும்.

இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது

இனவாதிகள் தொடர்ச்சியாக தமது சாம்ராஜியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை அடையாளத்திற்கான போராட்டமாக மாற்றுவதற்கும் ஜெவீபி போன்ற இனவாதிகள் துணைசென்றனர். சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல் எழுவதை இடது சாரி ‘சொல்லாடல்களைப்’ பொறுக்கி வைத்திருந்த ஜே.வி.பி என்ற இனவாதக் கட்சியும், இன்று அதன் பிரதியெடுத்த அரசியலை முன்வைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும் திட்டமிட்டு தடைசெய்கின்றன. இந்த இருகட்சிகளும் சுய நிர்ணய உரிமையை மட்டுமல்ல அதிகாரப் பரவலாக்கலைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு இடைவெளிகளுக்குள் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களில் பின்னடைவை ஏற்படுத்திய ஜேவிபி . கிளர்ச்சிகளின் முன்மாதிரி அபாய அறிவிப்பு.

இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் தலைமகள் முன்னெடுத்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அவற்றிற்கு குறைந்தபட்ச தேசியத்தன்மை அதன் உண்மையான உள்ளர்த்தில் இருந்திருக்கவில்லை.

பிந்தங்கிய நிலப்பிரபுத்துவ சமூகம் ஒன்றில் மக்கள் தமது அடையாளத்தை கிராமங்களை மையப்படுத்தியும், தொழிலை மையப்படுத்தியும், மதங்களை முன்னிறுத்தியும் உருவமைத்துக்கொள்வார்கள். இவை அனைத்தையும் தகர்த்து தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின.

தேசிய அரசுகள் தேசியப் பொருளாதாரத்தை, நிலப்பிரபுத்துவ மற்றும் அன்னிய மூலதன ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்தன. தேசிய முதலாளிகளின் தேவைக்காக அவர்களின் ஆதிக்கத்தில் தேசிய அரசுகளும், தேசிய உணர்வும் உருவானது. சிறிய அடையாளங்களின் தொகுப்பாக தேசிய அடையாளம் உருவானது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் ஏகபோக அரசுகளாக மாற்றமடைந்த போது நிலப்பிரபுத்துவ காலத்தில் காணப்பட்ட குறுகிய அடையாளங்களை மீளமைத்து முதலாளித்துவ உருவாக்கத்தின் கோரத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய நீட்ஷே போன்றவர்களிடமிருந்து கடன்வாங்கிய கருத்துக்களின் அடிப்படையில் பின்னவினத்துவம் போன்ற சமூகவிரோதக் கோட்பாடுகள் தோன்றின.

அதே வேளை ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், உலகம் முழுவதிலும் தேசிய முதலாளிகள் அன்னிய மூலதனத் தரகர்களால் விழுங்கப்பட்டு தேசியம் என்பதும் சந்தைப் போட்டி என்பதும் மத்தியதரவர்க்கத்தின் மேல் அணிகளிடையே மட்டுமே காணப்பட்டது. இதனால் தேசிய இனங்களிடையே முரண்பாடுகள் தோன்றின. இந்த முரண்பாடுகளை ஆழப்படுத்தி பயன்படுத்திக்கொண்டவர்கள் அன்னிய மூலதனத்தின் தரகர்களும் ஏகபோகங்களுமே.

ஒரு புறத்தில் பெருந்தேசிய ஒடுக்கு முறையும் அழிப்பும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட மறுபுறத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டங்க ள் அன்னிய சக்திகளால் கையகப்படுத்தப்பட்டன.

மத்தியதரவர்க்க அணிகளால் தலைமை தாக்ங்கப்பட்ட போராட்டங்களை அன்னிய சக்திகள் தமது தேவைக்கு ஏற்ப பயன்படுதின தேவை முடிந்த வேளைகளில் அழித்தன.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசியப் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும். அன்னிய மூலதனத்தையும் ஏகாதிபத்க்தியங்களையும் எதிரியாக எதிர்கொள்ளும். அன்னிய தரகுகள் இதனைத் தலமைதாங்க முடியாது. தமக்கு எதிரான போராட்டத்தைத் தாமே எப்படித் தலைமை தாங்குவது? ஆக, இலங்கைச் சூழலில் சமூகத்தின் கீழணியிலுள்ள உழைக்கும் மக்களே போராட்டத்தைத் தலைமை தாங்கியிருக்க முடியும். இதனை அறிந்துவைத்திருந்த இந்தியாவும் அமரிக்கா போன்ற ஏனைய நாடுகளும், தமது தரகுகளின் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டத்தை மாற்றியமைத்து லட்சக்கணக்கான மக்களோடு அதனை அழித்துச் சாம்பலாக்கினர்.

இதனால் தேசிய விடுதலைப் போராட்டம் அன்னிய சக்திகளின் ஆதரவோடு இனக்குழு அடையாளப்போராட்டமாக மாறியது. தேசிய இனத்தின் பண்புகளான சுய பொருளாதாரம், அன்னிய மூலதனத்திற்கு எதிரான நிலை என்பவற்றைக் கொண்டிருக்கவில்லை. இனக்குழு அடையாளத்திற்கான பிந்தங்கிய போராட்டம் அந்த இனக்குழு சார்ந்த தமிழ் நாட்டின் ஒரு பகுதியினரையும் கவர்ந்தது. அவர்களின் தலைமையும் அன்னியத் தரகுகளே. போராட்டத்தின் முழு வடிவமுமே தமிழ் இனக்குழுவின் இனவாதப் போராட்டமாகியது. இந்த இனவாதம்

பேரினவாதத்தைப் பலப்படுத்தியது. சிங்களமக்கள் மத்தியில் இனவாத வேர்களுக்கு தீனிபோட்டது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்தின் ஐந்தாம்படையின் போராட்டமானது.

லெனின் கூறுவது போல தேசிய முதலாளிகள் உள்ளூர்ச் சந்ததையைக் கயகப்படுத்துவார்கள், அரசியல் ரீதியாக அதனைச் தேச மக்களை இணைத்துக்கொள்வார்கள். அதுதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடிப்படை… இதற்கெல்லாம் எதிர்த்திசையில் பயணித்த தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டு அன்னியர்களை அண்ணார்ந்து பார்த்துகொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

உலகில் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் குறைந்தபட்ச ஒன்றிணைவாவது இதுவரை ஏற்படவில்லை. இன்னும் எதிர்காலம் இருள் சூழந்ததாகவே உள்ளது.  தேசிய விடுதலை இயக்கங்கள் ஊடாகவும், தமிழர் கட்சிகள் ஊடாகவும் விதைக்கப்பட்ட அதே பிந்தங்கிய சிந்தனை இன்னமும் கோலோச்சுகிறது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒன்பது வருடங்களின் பின்பும் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகரவில்லை.

லெனின் மறைந்த ஜனவரியில் அவர் முன்வைத்த விடுதலைக்கான கோட்பாடுகளின் அடிப்படைகளையாவது புரிந்துகொள்ள முற்படுவோம்.

Exit mobile version