Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

வவுனியாவில் அமெரிக்க அரச படைகள்

வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி
வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி

2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள் அமெரிக்க அதிபர்களுடன் இலங்கை சென்றார். அதுவும் சுனாமி அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அரசியல் வட்டாரங்களின் கண்களில் சிக்காமல் பவல் இலங்கை சென்றதன் பின்னர் இப்போது கெரி இலங்கை சென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு சுனாமியால் இலங்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்தோனேசியாவே மிகவும் கோரமாகத் தாக்கப்பட்ட நாடாகும். ஜோர்ஜ் புஷ், பில் கிளிங்டன் மற்றும் கொலின் பவல் ஆகியோருக்கு இலங்கையில் திடீர் மனிதாபிமானம் தோன்றியதில் தமது முழு வலுவையும் இலங்கையிலேயே செலுத்த ஆரம்பித்தனர்.

சுனாமி தாக்கிய பின்னர் இலங்கைக்குச் சென்ற முதலாபது இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல்

2004 ஆம் ஆண்டு இலங்கையில் உலாவந்த இக் குழு உலகம் முழுவதும் எத்தனை குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்களையும் முதியோரையும் கொன்று போட்டிருக்கும்? இலங்கைச் சுற்றுப் பயணத்தில் அவர்கள் தெரிந்தெடுத்த ‘ஜனநாயகவாதி ‘ தான் மகிந்த ராஜபக்ச. இந்த மூவரும் இலங்கை சென்ற பின்னர் தான் ராஜபக்ச ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். அப்போது யாரும் தேடுவாரற்று சந்திரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒடுங்கியிருந்த மகிந்த /ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ என்ற தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

அதே காலப்பகுதியில் இலங்கை சென்ற இன்னொரு ‘ஜனநாயகக் காவலன்’ பன் கீ மூன். இவர் இந்தோனேசியாவிற்கு மேலால் பறந்து சென்று இலங்கையில் தரித்த போது தென்கொரியாவின் வெளி நாட்டமைச்சராகவும் அமெரிக்காவின் விசுவாசியாகவும் இருந்தார். இலங்கையின் பல பாகங்களில் சுனாமி தாக்கிய போதும் பன் கீ மூன் ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட்விற்கு மட்டுமே பணம் கொடுக்கிறார்.

ராஜபக்சவின் தேர்தல் செலவிற்குப் பணம் வழங்கிய பன் கீ மூன்

2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இப்பணம் மக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் ஜனாதிபதியாவதற்குப் பயன்பட்டது. 2005/2006 காலப்பகுதிகளில் இத் தகவலை வெளிக்கொண்டுவந்த் ஊடகவியலாளர்களை மகிந்த அரசு ‘போட்டுத் தள்ளிவிட்டது’ . (சண்டே லீடரில் ஆதாரத்துடன் வெளியான இத் தகவல்களை இப்போதும் பார்வையிடலாம்.) பின்னர் அமெரிக்கா மற்றும் இலங்கை அரச ஆதரவுடன் பன் கீ மூன் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் செயலாளராகிறார்.

2009 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை ஒத்துழைப்புடன் இனப்படுகொலை நடைபெறுகிறது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் புலம்பெயர் அரசியல் தலைமைகளும், ஈழத்தின் தமிழ் அரசியல் தலைமைகளும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வந்துவிடுகின்றன. இனப்படுகொலையின் போது போர்க்குற்றங்கள் நடந்ததாகவும் அவற்றிற்கு தண்டனை பெற்றுத்தரப்போவதாகவும் அமெரிக்க அரசும் அதன் நேச நாடுகளும் ஆடிய நாடகத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் உள்வாங்கப்பட்டு அமெரிக்காவின் ஒட்டுக்குழுக்களாக மாறிப்போயின.

போர் வெற்றியில் அளவிற்கு அதிகமாக அதிகாரங்களைக் குவித்த ராஜபக்சவை நீக்கிய அமெரிக்கா, இப்போது தமிழ்த் தலைமைகள் போல தமது பேச்சைக் கேட்கும் இலங்கை அதிகாரவர்க்கத் தலைமையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவிற்கும் இலங்கை அதிகாரவர்க்கத்திற்கும் கிடைத்த இந்த இணைவின் பின்னணியில் தான் ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் அமைந்திருந்தது. 2004 ஆம் ஆண்டு இலங்கையை மையமாகக்கொண்டு ஆரம்பித்த இலங்கையை நோக்கிய அமெரிக்காவின் பயணம் ஜோன் கெரியோடு நிறைவடையப் போவதில்லை. இதன் ஆழம் அதிகமானது.

பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் கார்டியன் இதழ் ஜோன் கெரியின் பயணம் தொடர்பாகத் தனது கட்டுரை ஒன்றில்,

“கிழக்கு ஆசியாவின் உற்பத்தி மையங்களுக்கும் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கொள்வனவுச் சந்தைக்கும் இடையேயான கடல்வழிப் பாதையின் முக்கிய புள்ளியாக இலங்கை அமைந்திருப்பதால், இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்தும் கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. என்று” கூறுகிறது.

கார்டியனின் இக் கூற்றில் ஒரளவு உண்மை தெரிந்தாலும், தெற்காசியாவையும் குறிப்பாக அதன் கடற் பிராந்தியத்தையும் இராணுவ மயமாக்கும் அமெரிக்காவின் வெறித்தனமான திட்டம் இவற்றின் ஆழத்தில் காணப்படுகிறது. கடற்பிராந்தியங்களை மக்கள் அணுகமுடியாத வலையங்களாக மாற்றும் திட்டம் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, மன்னார் கடற்படுகைக்கைகள் மின் உற்பத்தி மற்றும் எரிவாயு அகழ்வு என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் தமது இராணுவ நலன்களை அமெரிக்கா தெளிவாகக் கூறியுள்ளது. இலங்கையில் தமது நலன்களை இராணுவரீதியாகத் நிலை நாட்டுவோம் என இலங்கையில் வாழும் அனைவரையும் அமெரிக்க அரசு மிரடியுள்ளது.

அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை அதிகாரிகள்

ஒரு பக்கத்தில் தமது நலன்களை உறுதிப்படுத்தும் மைத்திரி அரசும் மறுபக்கத்தில் தமது தமிழ்க் கைக்கூலிகளும் இருக்கும் போது அமெரிக்காவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் குரல்கொடுக்க யாரும் இல்லாத நிலை தோன்றியுள்ளது.
இச் சூழலில் தான் அமெரிக்க அரசு இலங்கையிலிருந்து 225 கடல் மைல் தொலைவில் தனது விமானம் தாங்கி இராணுவக் கப்பல் ஒன்றை கடந்த மாத நடுப்பகுதியில் நங்கூரமிட்டது.

அணுசக்தியில் இயங்கும் போர் விமானங்களை ஏற்றிச்செல்லும் இக் கப்பலைப் பார்வையிட என இலங்கை கடற்படையின் முக்கிய அதிகாரிகளை அமெரிக்க அரசு விமானத்தில் அழைத்துச் சென்ற்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்த போதும், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போதும் USS Carl Vinson CVN90 என்ற இக் கப்பலே அனுப்பிவைக்கப்பட்டது. உலக மக்களின் மரண ஓலங்களை இக்கப்பல் பல தடவை கேட்டிருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஜோன் கெரி இலங்கை செல்வதற்கு சற்று முன்னதாக, ஏப்ரல் 19ம் திகதி USS Carl Vinson CVN90 போர் விமானம் தாங்கிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக இலங்கையின் கடற்படைத் தளபதி ஜெயந்த பெரேரா உட்பட பலர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

உலங்கு வானூர்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்க விமானப்படை தமது போர்க்கப்பலை முதலில் சுற்றிக்காட்டியது.

மத்திய கிழக்கில் இராணுவ வினியோகத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியிலேயே இலங்கைக் கடற்படைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கப்பலில் நடைபெற்ற கடற்படைத் தளபதிகளுக்கு இடையேயான சந்திப்பில் இரண்டு பகுதிகளும் கட்டுப்படுத்த வேண்டிய கடற் பிரதேசங்கள்  தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இச்சந்திப்பில் எட்டப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையிலேயே ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் செய்தார். இப்பயணத்தின் பின்னணியிலுள்ள நாசகார நோக்கங்களை மூடி மறைத்த தமிழ் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் அவற்றின் ஊடகங்களும் ஜோன் கெரி இலங்கை சென்று போர்க்குற்ற விசாரணை நடத்தப்போவதாக மக்களை ஏமாற்றின.

இலங்கை-அமெரிக்க கடற்படைத் தளபதிகளுக்கு இடையாயான சந்திப்பின் பின்னர், இலங்கை அரசின் நடவடிக்கைகளத் தாம் ஆதரிப்பதாக அமெரிக்க அரச துறைப் பேச்சாளர் அறிக்கை விடுத்தார். பின்னர் இலங்கை அரசுடன் உறவை வலுப்படுத்தும் நோக்குடன் ஜோன் கெரி இலங்கை செல்வதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.

இலங்கைக்குச் சென்ற ஜோன் கெரி இலங்கையில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகப் பூரித்துப் போனார்.

வவுனியாவில் அமெரிக்க அரச படைகள்

இந்துசமுத்திரப் பிராந்தியத்தை இராணுவ மயமாக்குவதும், வட-கிழக்கில் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிப்பதும், இலங்கையை தெற்காசியாவிற்கான இராணுவ மையமாகப் பயன்படுத்துவதுமே அமெரிக்க அரசின் உடனடி நோக்கம். இலங்கையில் ஏற்கனவே பலாலி, வவுனியா போன்ற பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசிபிக் கட்டளையகத்தின் இராணுவப்பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. ராஜபக்ச அரசும், மைத்திரி அரசும் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

கண்ணிவெடி அகற்றும் பணியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அமெரிக்க கால்பதித்த உலகின் அத்தனை பிரதேசங்களும் இரத்த வெள்ளமாகக் காட்சி தருகிறது. ஜோன் கெரி அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகப் பதவியேற்றதும் மத்திய கிழக்கு நாடுகளில் கவனம் செலுத்திய அளவிற்கு ஆசியாவில் கவனம் செலுத்தவில்லை எனவும் இனிமேல் ஆசியா நாடுகள் மீதான கவனம் முக்கியமானதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

டியாகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத்தளம்

பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிலிருக்கும் டியோகாகார்சியா தீவில் அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தளம் 2016 வரை மட்டுமே செயற்படும். பிரித்தானிய அரசின் குத்தகை 2016 ஆம் ஆண்டுடன் முடிவிற்கு வருகிறது, அதன் பின்னர் இலங்கையை இராணுவத்தளமாக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்பாலும் தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தால், அங்கு பல்வேறு பிரதேசங்களைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து சிவில் நிர்வாகத்தை நடத்திவரும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் ஆயுதப்படையையும் அழித்துவிட முடியவில்லை.

போராட்டம் சரியான திசையில் திட்டமிடப்பட்டால் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தோற்றுவிக்க முடியும். மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கும் ஊடகங்களும் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்களும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்க இராணுவம் நிலைகொண்ட அனைத்து நாடுகளிலும் கலாச்சாரத்தைச் சீர் குலைத்திருக்கிறது. தென்கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் அமெரிக்க இராணுவம் பாலியல் தொழிலை அறிமுகப்படுத்திற்று. போதைப் பொருட்கள் பாவனைக்கு வந்தன. பிரதேசங்கள் சிதைக்கப்பட்டன. ஆக, அழிக்கும் இராணுவத்துடன் ஒட்டிக்கொண்டு மக்களைக் காட்டிக்கொடுக்காமல் அதற்கு எதிரான மக்கள் சார்ந்த புதிய தந்திரோபாயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவறினால் சாம்பல் மேடுகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

மேலதிக ஆதாரங்கள்:

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : அபாய எச்சரிக்கை
பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்

http://www.theguardian.com/world/2015/may/02/john-kerry-praises-sri-lanka-democratic-reforms-pledges-ties-with-us
http://en.wikipedia.org/wiki/Prostitutes_in_South_Korea_for_the_U.S._military

Helping Hambantota investigation


http://www.stripes.com/news/us-military-s-return-to-the-philippines-sparks-economic-hopes-1.298937
http://www.navy.lk/201504241700.html
http://www.csmonitor.com/USA/Foreign-Policy/2013/0220/US-pivot-to-Asia-Is-John-Kerry-retooling-it

Exit mobile version