Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய ரூபா நோட்டுக்கள் தடையின் பின்னணியில் நடத்தப்படும் வரலாறு காணாத பணக்கொள்ளை!

1000rsn500rsஇந்தியாவில் அப்பாவி உழைக்கும் மக்களை தெருத்தெருவாக அவலத்துள் அமிழ்த்தியிருக்கும் நரேந்திர மோடியின் பணக்கொள்ளைதான் 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்களின் தடை விவகாரம். நவம்பர் மாதம் 8ம் திகதியிலிருந்து இந்த முடிவு அமுலுக்கு வருமென அதே நாளில் மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார். அதற்கு அடிப்படைக் காரணமாக கருப்புப் பணத்தை ஒளிப்பதே என வேறு கூறிவைத்தார். கருப்புப் பணம் என்ற பெயரில் அழைக்கப்படும் அரசாங்கக் கணிப்புக்களில் சேர்க்கப்படாத திருட்டு வழிகளில் சேர்க்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தைக் குறிப்பிடுவது வழமை.அடிப்படையில் இந்தியாவின் தரகு முதளித்துவ அதிகாரவர்க்கத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பங்காளிகளான வங்கிகளைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கையே இது என்பதை மக்கள் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே நோட்டுக்களை வங்கிகள் உள்வாங்கிக் கொள்வதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுவிட்டது.

பல் தேசியப் பெரு வணிக நிறுவனங்களைக் காப்பாறும் நோக்கத்துடன் நடத்தப்படும் இவ்வாறான நிதிக்கொள்ளை ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளால் அரசுகளின் ஒத்துழைப்புடன் 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. கருப்புப்பணம் சட்டபூர்வனதாக்கப்பட்டுள்ள இந்தியாவில் இன்று நடத்தப்படும் கொள்ளை மிகவும் தந்திரமாகத் திட்டமிடப்பட்ட செயற்பாடு.

இதற்கான இரண்டு பிரதான காரணங்கள்:

1. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கருப்புப் பணப் பரிமாற்றத்தை மூடி மறைப்பது.

2. வங்கிகளின் நிதிச் சரிவை ஈடு செய்வது.

இந்த இரண்டு பிரதான செயற்பாடுகளுமே இந்தியாவின் மூலை முடுக்குகளை எல்லாம் சூறையாடும் ஏகாதிபத்திய பங்காளிகளான முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் வாழ்க்கை பணயமாக வைக்கப்பட்டது மட்டுமன்றி அவர்களுக்குத் தவறான தலைகீழான தகவல்கள் வழங்கப்பட்டு ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் கொள்ள மூடி மறைக்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள இந்தியக் கருப்புப்பணம்:

அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், பெரு வணிக முதலைகள் என கணக்கில் காட்டப்படாத பெருந்தொகைப் பணம் இந்தியாவிலேயே மிக அதிகமாகக் கொள்ளையிடப்படுகின்றது. இப் பணத்தில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுமே இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இவ்வாறான கணக்கில் காட்டப்படாத பணத்தை உள்வாங்கிக் கொள்வதற்கென உலகின் சில நாடுகளின் சட்டதிட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. சிஷெல்ஸ், மொரிஷியஸ், கேமன் ஐயல்ண்ட், பிரிடிஷ் வேர்ஜின் ஐயலண்ட், அன்டிகா, கம்பியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் திருட்டுப்பணத்தைச் பாதுகாக்கும் நாடுகளில் பிரதானமானவை.

உதராணமாக மொரிஷியஸ் நாட்டில் GBC II என்ற தரப்படுத்தலின் கீழ் அந்த நாட்டில் வசிப்பவரோ அன்றி அதற்கு வெளியில் வசிப்பவரோ ஒரு நிறுவனத்தை உருவாக்கிக்கொள்ளலாம், அப்படி உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு உள் நாட்டில் வியாபார நடவடிக்களில் ஈடுபட உரிமை கிடையாது, அவை நாட்டில் எல்லைக்கு அப்பால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

GBC II தர நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் அரசு வழங்கியுள்ள சலுகைகள்:

1. நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் பங்களார்களின் விபரங்கள் 100 வீதம் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்

2. வெளி நாடுகளில் வசிக்கும், மொரீஷியஸ் நாட்டுடன் தொடர்பற்றவர்களே இந்த நிறுனத்தின் 100 வீதப் பங்குகளையும் வைத்துக்கொள்ள முடியும்

3. நிறுவனங்கள் முதலீடுகளுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

4. வரவு செலவு தொடர்பாக மொரிஷியஸ் அரசிற்கு அறிவிக்கத் தேவையில்லை.

இவை தவிர பல்வேறு சலுகைகள் GBC II தர அடிப்படையில் உருவாக்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் கொள்ளையிடப்படும் கருப்புப் பணத்தில் கணிசமான தொகை மொரீஷியஸ் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. தவிர மொரிஷியசைப் போன்று உலம் முழுவதுமுள்ள offshore நிறுவனங்களில் இந்தியக் கருப்புப்பணம் முதலீடு செய்யபடுகின்றது.
இந்திய – மொரீஷியஸ் உடன்படிக்கை

1982 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் மொரீஷியஸ் இற்கும் இடையே கைச்சாத்தான ஒப்பந்த அடிப்படையில் மொரீஷியசில் வசிக்கும் அல்லது அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வியாபார நிறுவனம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அரச கட்டுப்பாடின்றி நிதியை அனுப்பிவைக்கலாம்.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வரைக்கும் மொரிஷியசிலிருந்து இந்தியாவிற்கு வரும் நிதி மூலதனத்திற்கு முழுமையான வரிவிலக்கும், அதன் பின்னர் 50 வீத வரிவிலக்கும் வழங்கப்பட்டு, 2019 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து முழுமையான வரியும் அறவிடப்படும் என 2016 ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் திருதப்படுகிறது. மோடி அரசின் கீழ் திருட்டுப் பணத்தைச் சட்டரீதியானதாக்கும் இந்த நடவடிக்கையின் ஐந்து மாதங்களின் பின்னரே உள் நாட்டில் 1000 மற்றும் 500 ரூபா நோட்டுக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமே Securities and Exchange Board of India (SEBI) அன்னிய முதலீடுகள் தொடர்பான கட்டுப்படுகளை விதிக்கிறது. மொரிஷியசிலிருந்தும் வேறு வரி விலக்களிக்கப்பட்ட offshore கணக்குகளிலிருந்தும் முதலிடப்படும் பணத்திற்கு பங்கேற்பு தாழ்கள் (Participatory Notes commonly known as P-Notes or PNs) என்ற பொறிமுறை பயன்படுத்தப்படுகின்றது. இந்த முறையின் ஊடாக முதலிடப்படும் பணத்திற்கு Securities and Exchange Board of India (SEBI)எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை.

இந்தியாவிலுள்ள பங்குச் சந்தைத் தரகர் ஒருவர் SEBI இல் தன்னைப் பதிவு செய்து கொண்ட பின்னர், தனது அன்னிய முதலீட்டாளரைத் தொடர்புகொண்டு அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பங்கு சந்தையில் முதலீடுசெய்வ்வார். முதலீட்டின் நிலை தொடர்பாக ஒவ்வொரு காலாண்டிற்கும் SEBI இற்குத் தகவல்களை மட்டும் வழங்கினாலே போதுமானது.

இந்தியாவில் முதலிடப்படும் நிதி மூலதனத்தின் 45 வீதமான பகுதி 787 சதுர மைல்கள் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ள மொரீஷியஸ் நாட்டிலிருந்து உட் செலுத்தப்படுகிறது என்றால், அதன் பின்னணியில் கருப்புப் பணமே செயற்படுகிறது என்பதைத் தவிர வேறு பின்புலம் இருக்கமுடியாது.

இதன் மறுபக்கத்தில் மொரீஷிசியசில் உருவாக்கப்பட்ட GBC II நிறுவனங்களில் 80 வீதமானவை இந்தியர்களையே இயக்குனர்களாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொள்ளையிடப்படும் மக்கள் பணத்தை மொரிஷியசிற்கு அனுப்பிவைத்து அங்கிருந்து ‘கருப்பு அற்ற’ பணமாக இந்தியாவிற்குக் கொண்டுசெல்லும் பொறிமுறையை இந்திய அரசே உருவாக்கியுள்ளது. இந்திய அரசே கருப்புப் பணத்தைச் சட்டரீதியாக மாற்றியுள்ளது.

மோடி அரசு அரச அதிகாரத்தைக் கையகப்படுத்தியதன் பின்னர் அன்னிய நேரடி முதலீடுகளுக்கான(FDI) விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டன. இதனால் மொசீஷியஸ் போன்ற நாடுகள் ஊடான சுற்றுப் பணம் மீண்டும் இந்தியாவில் முதலிடுவதற்கான வழிகள் மேலும் இலகுபடுத்தப்பட்டன.

கசிவடைந்த ஆதாரங்கள்:

தவிர, 2015 ஆம் ஆண்டில் பிரஞ்சுப் பத்திரிகையான லூ மொந் நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 1195 இந்தியர்கள் HSBC வங்கியின் ஜெனீவா கிளையில் வைப்புச் செய்துள்ள கருப்புப்பணத்தின் தொகை வெளியானது. 3.8 பில்லியன் டொலர்களை இந்தியர்கள் HSBC வங்கியின் ஜெனீவாக் கிளையில் வைப்புச் செய்திருந்தனர்.

2011 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் இந்தியாவின் சட்டவிரோதப் பணப்பதுக்கலின் தொகை வெளியானது. இத் தொகை 2.1 பில்லியன் எனக் கூறப்ப்பட்ட போதும், இந்திய மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் ஏ.பி.சிங், வெளிநாடுகளிலுள்ள இந்தியக் கருப்புப்பணம் 500 பில்லியன் டொலர்கள் எனவும் அதன் பெரும்பகுதி சுவிஸ் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு பனாமா லீஸ்க் ஆவணங்களின் அடிப்படையில் இந்தியாவின் 500 பண முதலைகள் நாட்டிற்கு வெளியிலுள்ள நிறுவனங்களில் கருப்புப்பணத்தை முதலீடுகளாக வைப்புச் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

Global Financial Integrity என்ற நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு அறிக்கையின் அடிப்படையில் இந்திய பணக்கொள்ளையர்கள் 644 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளிலுள்ள வங்கிகளுக்கும், நிறுவனங்களுகும் தமது கருப்புப்பணத்தை மாற்றியுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் அருண் குமார் இன் கணிப்புக்களின் அடிப்படையில் குறைந்தது 2 ரில்லியன் டொலர்கள் கருப்புப்பணம் வெளி நாடுகளை நோக்கி ஏற்கனவே நகர்த்தப்பட்டுவிட்டது என்கிறார்.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் ஆக்கிரமித்ததற்கான காரணங்களில் அங்குள்ள 3 ரில்லியன் டொலர்கள் பெறுமானமுள்ள கனிமங்களைக் கொள்ளையிடுவதும் பிரதானமானது என பேராசிரியர் சொம்ஸ்கி குறிப்பிடுகிறார்.

இந்திய உழைக்கும் மக்களின் சொத்தான 2 ரில்லியன் டொலர்களை அரச ஆதரவுடன் அன்னிய நாடுகளில் பதுக்கியதை மறைப்பதற்காகவே நோட்டுக்களைச் செல்லுபடியற்றதாக அரசு அறிவித்தது என்ற கருத்தைப் பலர் முன்வைக்கின்றனர். இதன் பின்னணியில் கருப்புப் பணம் தவிர்ந்த மற்றொரு காரணமும் உண்டு.

வங்கிக்கொள்ளை

முதலில் 1000 ரூபா மற்றும் 500 ரூபா நோட்டுக்களுக்கும் கருப்புப்பணத்திற்கும் குறைந்தபட்சத் தொடர்புமற்ற நிலையில், அவற்றைச் செல்லுபடியற்றதாக்கியதன் மற்றொரு நோக்கம் வங்கிகள் நடத்தும் பணக்கொள்ளையைத் தீவிரப்படுத்துவதே.

2016 ஆம் ஆண்டின் நடுப்பட்குதியில் இந்திய வங்கிகள் நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்தன. 2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடிக் காலகட்டத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் சரிவிற்கு ஒப்பான இந்திய வங்கிகளின் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்திய அரச நிர்வாகம் தள்ளப்பட்டது. ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளின் பொருளாதார நெருக்கடியின் பின்னர் அரசுகளே தமது திறைசேரியிலிருந்து மக்களின் வங்கிப்பணத்தை வங்கிகளுக்கு வழங்கின.

இந்தியாவில் அதே வகையான நெருக்கடி இந்த ஆண்டில் உச்சத்தை அடைய ஆரம்பித்தது. 25 இந்திய அரச வங்கிகளில் 17 வங்கிகள் 59 வீதத்திலிருந்து 93 வீதம் வரையான இழப்பை அறிவித்தன. இதற்கான காரணம் வங்கிக் கடன்களே எனினும், அக் கடன்கள் இந்தியாவின் கருப்புப்பணக் கொள்ளையுடன் தொடர்புடைய பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இக்கடன்கள் அரச ஆதரவுடன் தள்ளுபடி செய்யப்பட்டன. கடன்களைப் பெற்றுக்கொண்டு வங்கிகளின் தள்ளுபடியையும் பெற்றுக்கொண்ட பண முதலைகளின் பெயர்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் தெளிவாக இன்னும் வெளியிடப்படவில்லை. வங்கிகளின் இழப்பிற்கு இக் கடன்களே பிரதான காரணமாயின.

இந்த இழப்பீட்டை ஈடுசெய்வதற்கு அப்பாவி மக்களின் பணத்தை அபகரிக்கும் செயற்பாடே நோட்டுக்களைச் செல்லுபடியாக்கிய செயற்பாடாகும். 4000 ரூபா பணம் வரை வங்கிகளில் காசாக மாற்றிக்கொள்ள முடியும் எனினும் அதற்கு மேலதிகமான தொகை அனைத்தும் வங்கிகளில் வைப்பிலிட வேண்டும் என்பதே மோடியின் திடீர் அறிவிப்பு. இந்தியா முழுவதையும் சில நாட்கள் அவலத்தில் அமிழ்த்திய மோடியின் நடவடிக்கையின் பின்புலத்தில் இந்த வங்கிக்கொள்ளையே பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வகையான கொள்ளையையும், கருப்புப்பணப் பதுக்கலையும் தேசப்பற்று என அழைத்துக்கொள்ளும் முட்டாள்முட்டாள்தனம் இதுவரை உலகின் எந்தப் பகுதியிலும் இவ்வளவு வெளிபடையாக நடைபெற்றதில்லை.

Exit mobile version