Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.பி.சி தமிழ், வெளிவராத உண்மைகளும் உறைந்து போன ஊடகங்களும்

தமிழ்த் தேசியத்தின் பெயராலும், இனப்படுகொலையின் பெயராலும் லைக்கா நிறுவனம் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. வெறும் இலாப வெறி மட்டுமே அந்த நிறுவனத்தின் குறிக்கோள். லைக்கா நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் இலங்கை இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்சவின் கொல்லைபுறம் வரைக்கும் நீட்சியடைந்த போதே இனியொரு விசாரணை ஆரம்பமானது.
இன்று அதே கொல்லைப்புறத்தில் தேசியத்தின் பெயராலும், மக்கள் சேவையின் பெயராலும் லெபாரா நிறுவனம் தனது இலாப வேட்கைகைக்காகக் கூடுகட்டிக்கொண்ட போது அதன் மறுபக்கத்தில் ஐ.பி.சி (IBC) தொலைக்காட்சியின் கோர முகமும் வெளித்தெரிய ஆரம்பித்தது.

லெபாரா(LEBERA) நிறுவனத்தின் விற்பனை தொடர்பான தகவல்கள் பிரதானப்படுத்தப்பட வேண்டிய தகவலாக இல்லை என்றாலும், அந்த வியாபார யுக்திகளைக் கடந்து செல்லமுடியாத அளவிற்கு லெபாரா நிறுவனம் தனது பிரச்சாரத்தைப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் ஈழத்திலும் முடுக்கி விட்டிருந்தது.

ஆக, லெபாரா விற்பனை செய்யப்பட்ட ‘விடுகதையிலிருந்தே’ இக் குறிப்பின் முதலாம் பாகத்தை ஆரம்பிக்க வேண்டிய துயரம் தவிர்க்கமுடியாதது. புலம்பெயர் நாடுகளில் லெபாரா தொலைபேசி நிறுவனம் மில்லியன் கணக்கில் வியாபாரம் செய்யதது. புலம்பெயர்ந்து வாழும் வெளி நாட்டவர்கள் தமது நாடுகளுக்கு அழைப்பு ஏற்படுத்திக்கொள்ள மலிவான விலையில் கைத் தொலைபேசி அட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த லெபாரா நிறுவனம் அதன் முன்னோடியான லைக்காவிற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் லெபாரா நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிற்கு 300 மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின என்பதை விட பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதே உண்மை.

அது விற்பனை செய்யப்பட்டது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பல்மேரியம் (Palmarium) என்ற முதலீட்டு நிறுவனத்திற்கே என்பதும், ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் முடிச்சவிழ்க்கப்பட்ட விடுகதை. ஈழத் தமிழர்களுக்கு ஊடகங்கள் என்று எதுவும் இல்லை. சமூக வலைத் தளங்களில் தமது நண்பர் வட்டத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் குறுந்தகவல்களை எழுதுவதையே ஊடகப் புரட்சி என்று நம்பும் அவல நிலையில் இவ்வாறன தகவல்களை ஐ.பி.சி போன்ற பல் தேசிய கோப்ரட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. லெபாரா நிறுவனத்தீன் உரிமையாளரால் ஆரம்பிக்கப்பட்ட இன்றும் அதனோடு தொடர்புடைய பண மூலதனத்திலேயே இயங்கும் ஐ.பிசி இடம் உண்மைகள் உறைந்து போயுள்ளன.

இன்று சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை கிடையாது. ஸ்மார்ட் போன் இல் கிடைக்கும் செயலிகளைப் பயன்படுத்தியே உலகம் முழுவதையும் இணைந்துக்கொள்கிறார்கள் அதன் பயனர்கள். ஆக, புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலிருந்து தோன்றிய லைக்கா லெபாரா போன்ற நிறுவனங்கள் வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துஇந்த நிலையில் லெபாரா நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் பல மில்லியன்கள் இழப்பில் அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

அப்போது தான், பல்மேரியம் என்ற ஏற்னவே இயங்கிக்கொண்டிருந்த முதலீட்டு நிறுவனத்திற்கு புதிய உரிமையாளர்கள் இருவர் வருகின்றனர். முன்னை நாள் அமெரிக்கப் பிரசையான சூசானி ஆர்சேர்(Suzanei Archer) மற்றும் ரபேல் ஔரெபெச் (Raphael Auerbach) ஆகிய இருவரும் லெபாரா விற்பனை செய்யப்படுவதற்கு சற்று முன்னான காலப்பகுதிய் பல்மேரியத்தை உரிமையாக்கிக் கொள்கின்றனர்.

பின்னதாக, இலாபத்தில் இயங்கமுடியாத வியாபாரச் சூழலிலிருந்த லெபாராவை வாங்குவதாக முடிவெடுத்து அதற்குரிய பணமான 420 மில்லியன் யூரோக்களை தேடுவதற்கான முயற்சியில் பல்மேரியம் ஈடுபடுகிறது. முதலில் பல்மேரியம் லொபாராவை வாங்குவதற்கான பணத்தில் ஆரம்பச் சொத்தான 85 மில்லியனை லெபாராவே வழங்கக எஞ்சிய பணத்தை வங்கிகளின் அல்லது முதலீட்டு நிறுவனங்களின் பண முறிகளாகவும் திரட்டப்படுகிறது. லெபாரா இலாபத்தில் இயங்கும் நிறுவனமாகக் காட்டப்படுகிறது.

லக்சம் பேர்க்கில் பதிவு செய்ய்யபட்ட எல்.பி.ஆர். இன்வெஸ்ட்மென்ட்(LBR investments) என்ற நிறுவனம் இதனிடையே தோன்றுகிறது. இதன் உரிமையாளர்கள் லெபாராவின் உரிமையாளர்களே. இதைவிட எல்.பி.ஆர். மீடியா(LBR media) என்ற நிறுவனம் தோன்றுகிறது. ஐ.பி.சி தொலைக்காட்சி, பல்மேரியம், எல்.பிஆர். இன்வெஸ்ட்மன்ட் என்ற சிக்கலான வலைப்பின்னல், செல்வம்(CELVAM) என்ற மற்றொரு நிறுவனத்தின் தொடர்பு எல்லாம் நன்கு கச்சிதமாகத் திட்டமிடப்பட்டவை எனினும், “வாங்கியவரும் விற்றவரும் ஒரே ஆள் தான்” என்று பைனான்சியல் ரைம்ஸ் சொல்கிறது.

இவ்வாறான சிக்கலான பின்புலத்திலிருந்தே ஐ.பி.சி தொலைக்காட்சி உதிக்கிறது. அதன் பிறப்பு மர்மங்கள் நிறைந்தது. தமது நிதி மோசடிகளை மறைப்பதற்கு லெபாரா இலங்கை அரசிற்கும் அதனை இயக்கும் ஏகபோக அரசுகளுக்கும் சேவைசெய்ய ஒப்புக்கொண்டதன் வெளிப்பாடே ஐபிசி தொலைக்காட்சியின் தோற்றம் என்ற சந்தேகங்களின் முன்னதாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரே ஐந்து நட்சத்திர விடுதியான ஜெட்விங் வந்து போகிறது.
இலங்கையின் இன்றைய சனாதிபதி மைத்திரிபால சிரிசேன (குறிப்பு:தமிழ்த் தேசியவாதி அல்ல)வால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டேலின் அதிகபடியான பங்குகள் லெபாராவினுடையது. ஹெர்பேர்ட் கூரே என்ற சிங்கள வர்த்தகர் ஜெட்விங்(Jetwink) இன் ஏனைய ஹொட்டேல் களின் பிரதான உரிமையாளர். மகிந்த மற்றும் பசில் ராஜபக்சக்களுக்கு நெருக்கமான கூரே, லெபாரா உரிமையாளர்களுடன் ஏற்பட்ட நெருக்கமான வியாபார ஒப்பந்தத்தில் உருவானது தான் ஜெட்விங் இன் யாழ்ப்பாணக் கிளை.

ஜெட்விங் ஹொட்டேல் திறப்புவிழா 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேளையில் லெபாராவின் உரிமையாளர்களில் ஒருவரான லியோன் மைத்திரிபால சிரிசேன, மிலிந்த மொரகொட சகிதம் கல்ந்துகொண்டார்.

ஜெட்விங் ஹொட்டேல் அமைந்துள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே ‘தமிழ்த் தேசியம் வளர்க்கும்’ ஐபிசி இன் நிகழ்ச்சிக் கலையகமும் அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வானொலியாக 2000ம் ஆண்டு ஆரம்பங்கள் வரை இயங்கிவந்த ஐபிசி, 2015 ஆம் ஆண்டில் லெபாரா நிறுவனத்தின் முதலீட்டில் வாங்கப்பட்டது. ஐபிசி இல் தொடர்ந்து பணியாற்றிய பரா பிரபா என்ற ஊடகவியலாளர் இடைத் தரகராகச் செயற்பட ஐபிசி லெபாரா உரிமையாளர்களில் ஒருவரான பாஸ்கரனின் முதலீட்டில் உருவானாலும் அதன் சட்டரீதியான உரித்து நிராஜ் பேர்னாட் டேவிட் என்பவரின் பெயரிலேயே பதிவாகியிருக்கிறது.

இத்த நிறுவனத்தின் பின்னணியில் உள்ள முதலீட்டு நிறுவனமே லெபாரா உரிமையாளரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஐபிசி தொலைக்காட்சி நிறுவனம் தோன்றிய போது, “தமிழர்களுக்கான ஒரே தொலைக்காட்சி”, தமிழ்த் தேசியம் என்றெல்லாம் புகழ் பாடப்பட்டது.

இனிமேல் பல்மேரியம். எல்.பி.ஆர். பைனான்ஸ், லெபாரா, ஐ.பி.சி லெபாரா மீடியா, செல்வம்,இலங்கை அரசு போன்ற விரிவான தகவல்கள் ஊடாக இக் கட்டுரை பயணிக்கும்.

இன்னும் வரும்…

Exit mobile version