Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்னேஸ்வரனின் கொசுறுகளும் விசிலுகளும் : சோளன்

விக்னேஸ்வரனும் அவரது மாணவன் புவிதரனும்
விக்னேஸ்வரனும் அவரது மாணவன் புவிதரனும்

வடக்கு மாகாணத்திற்கு ‘ஸ்கில் மைக்ரேசன்’ செய்து தன்னையே தமிழினத்தின் காந்தித் தாத்தாவாக மாற்றிக்கொண்ட சீ.வீ.விக்கினேசுவரன் அவர்களின் கோடானு கோடி மணவர்களுள் சுமந்திரன் துரோகியாகிய வரலாறு யாவும் கற்பனையல்ல. ஐயாவின் கோடி மாணாக்கர்களுள் பகலில் விளக்குப் பிடித்துத் தேடியதில் அகப்பட்ட கொசுறு தான் புவிதரன் என்ற பென்னாம் பெரிய வக்கீல்! அந்த வக்கீலின் தலைமையில் தான் தமிழ் மக்கள் பேரவை பெருமையுடன் வழங்கி லட்சோப லட்சம் மக்கள் மத்தியில் ஆழ ஊடுருவி நடத்தும் இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அமெரிக்க மற்றும் இந்திய உதவியில் அறிமுகம் செய்யப்பட்ட காளான் வளர்ப்புத் திட்டத்தின் கொழும்புத் தோட்டத்தில் முளைத்த காளான்களின் ஒன்று துரோகியாக மற்றது தியாகியாகி திட்டம் தயாரித்து வெளுத்து வாங்கியிருக்கிறது.

இப்ப வடக்கில் மட்டும் நிலைகொண்டிருக்கும் விக்னேஸ்வரனின் தற்கலிகத் தாகமான தமிழீழம் சமஷ்டியில் அடங்கி ஆசுவசப்படுத்திக்கொண்டபோது வெளியானதே தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம்.

அந்தத் தீர்வுத்திட்டத்தை மக்கள் வரிக்கு வரி வாசித்து சட்டப் பிரச்சனைகளை எல்லாம் சல்லடை போட்டு அலசும் நிகழ்ச்சி எல்லாம் நடந்துக்கொண்டிருப்பதாக உத்தியோகப் பற்றற்ற தகவல் சோளனுக்குக் கிடைத்ததில் அவன் புல்லரித்துப் போனான்.

பிரச்சனை அதுவல்ல! ஐயா விக்னேஸ்வரனே இந்த ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ தீர்வுத்திட்டத்தை வாசிக்கவில்லை என்பது தான். அதை சோளன் சொல்லவில்லை ஆனானப்ப்பட்ட விக்னேஸ்வரன் அய்யாவே தனது உரையில் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். வீரசிங்கம் மண்டபத்தில் ஐயா பூவும் பூமாலையுமாக நடத்திய கூட்டத்தில் பேச்சோடு பேச்சாகச் சொன்ன இந்தத் தகவலை யாரும் கண்டுகொள்ளவில்லை. பூமாலையில் இருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து தமிழ் மக்களின் காதில் வைத்திருக்கிறார் ஐயா!

ஐயா வைத்த பூவும் பென்னாம் பெரிய நெத்திப் பொட்டுமாக விரல் சூப்பிக்கொண்டு தமிழ் மக்கள் நிக்கிறார்கள். அதுவும் ஐயாவுக்கு அதில என்ன எழுதியிருக்கெண்டு சரியாத் தெரியாததற்குக் காரணம் வேற சொல்லி வைத்திருக்கிறார். “சும்மா” நேரமில்லாமல் வாசிக்கேல்லையாம்!

சோளனின் அழுக்குத் தமிழ் சும்மா இப்படித்தான் இருக்கும். ஆனா, ஐயாவின் அடுக்குத் தமிழில் இப்படிச் சொல்லுகிறார்

“வேலைப்பழுக்கள் காரணமாக என்னால் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் எனது மாணவர் திரு.புவிதரன் தலைமையில் இக்குழு தனது கடமைகளைச் செய்தமை மனமகிழ்வை அளிக்கின்றது. “

சுய நிர்ணைய உரிமை உரம் போட்டு விளைந்த சமஷ்டி விக்னேஸ்வரனின் அங்கீகாரத்திற்கு வரவில்லை ஆனால் வந்திருக்கிறது.

தீர்வுத் திட்டத்தை மக்கள் மத்தியில் விட்டு சிலாவி ஒரு ஆய்வு செய்து பின்னர் மைத்திரியின் பார்வைக்கு சும்மா கொடுப்பார்களாம். காதில மட்டுமல்ல உடம்பெல்லாம் பூ வைக்கிறாங்கள் ஐயா!

அடப்பாவிகளா, “மாபெரும் தலைவர்” ஐயாவுக்கே வாசிக்க நேரமில்லாட்டி மக்கள் எப்படி சப்பாணி கட்டி இருந்துகொண்டு வாசிப்பார்கள்?

ஆனல் பழுக்காத அரசியல் வாதி விக்னேஸ்வரன் ஐயா உன்னாண விண்ணன் தான்!

சமஷ்டித் திட்டத்திற்கு தற்செயலாக எதிர்ப்பு கிளம்பினால், ஐயோ வேலைப்பழுவால தான் வாசிக்கேல்ல என ஒரு குட்டி பல்டி அடித்தாலே போதும், புலம்பெயர் விசிலுகள் அய்யோ அய்யா பாவம் என்று அவரை கழுவிச் சுத்தப்படுத்திவிடுவார்கள்.

அரசியலுக்கு வரேக்க ஐயா சுமந்திரனை அன்பொழுக மாணவன் என்று அழைத்தது சும்மா சுழல் சுழலாக ஞாபகத்திற்கு வருகுது.

இப்ப, புவிதரன் மாணவன் ஆகியிருக்கிறார். அப்படி புலம்பெயர் விசிலுகளால ஐயாவைக் காப்பாற்ற முடியாமல் போனால், ஐயா சுமந்திரனைப் போல புவிதரனையும் துரோகி ஆக்கி தன்னையும் தனது ஆத்மீக சிந்தனைகளையும் காப்பாற்றி வாழ்வாங்கு வாழ்வார்.

வயசுக்கு மரியாதை வேண்டாமே என உந்த குறுக்கால போற விசுலுகள் சோளனைப் பொரிச்சு எடுப்பாங்கள். ஆனால், கண்டியளே, மக்களின்ற உயிருக்கும் உரிமைக்கும் மரியாதை வேணும் என்று நினைக்கிறது சும்மா இல்லை.

Exit mobile version