Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊழல் பெருச்சாளிகள் ஊழலுக்கு எதிரான கேலிக்கூத்து : மருத்துவ கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

சில தினங்களுக்கு முன்னர் வட  மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சி தேர்தலில் ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்தார். அதே போல அண்மையில் தமிழ் தேசியப் பேரவையும் ஊழலற்ற  தமிழ் தலைவர்களை நாடுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. தென் பகுதியில் தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களும் அமைப்புகளும் இயங்கி பல ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து ஊழல் செய்த மத்திய அமைச்சரைக் கூட மாற்றிய நிலையில் வட பகுதியில் உண்மையில் ஊழலுக்கு எதிரான போராட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காகவே இந்தக் கட்டுரை வரையப்பட்டு இருக்கிறது.

வட மாகாண சபை பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலும் ஏனைய தரப்பினராலும்  சுமத்தப்பட்டு இருந்தது . கால தாமதம் ஆனாலும் முதலமைச்சர் தனது சொந்த அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனமான குழு ஒன்றை அமைத்தபோது நல்லாட்சிக்கான முன்னுதாரணமாக நாட்டிலுள்ள அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்டது. குற்றம் நிருபிக்கப்பட்ட  இரு அமைச்சர்களை பதவி நீக்கி ஏனைய இரு அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சூளுரைத்த போது அவரை  நீதி தேவதையின் மறு வடிவமாக மக்கள் பார்த்தார்கள். குறிப்பாக இந்தக் கால கட்டத்தில் இளைய தலைமுறையினரால்  ஊழலுக்கு எதிராக போராடக் கூடிய   ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக  முதலமைச்சரை கருதியதினால்  தமிழரசுக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத தீர்மானத்துக்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் துணிந்தனர். ஆனால் தமிழரசுக் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தனது முன்னைய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்த முதலமைச்சர் விசாரணையின் பின்னர் அமைச்சர்களை மாற்றினால் அவர்கள் குற்றம் செய்ததாக அர்த்தப்படாது என்று தெரிவித்த போது பதவிக்காக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு சராசரி அரசியல்வாதியாக இனம்காட்டி நல்லாட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த  நம்பிக்கையை தகர்த்து சுக்குநூறாக்கினார். ஊழல் நிருபிக்கப்பட்ட அமைச்சர்கள் இருவர் மீதும் பதவி நீக்கத்தை தவிர வேறு எந்த நடவடிக்கை எடுக்காததும் ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சடுதியாக கைவிட்டதும் குறைந்த பட்சம் முதலமைச்சர் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவிடம் ஊழல் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து விரயமாக்கப்பட்ட பொதுமக்களின் வரிப்பணத்தை மீளப்பெற்று மக்களின் அபிவிருத்தியை மேம்படுத்த  உறுதியான நடவடிக்கை எடுப்பார் என்று எண்ணியிருந்தவர்களை  பலத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் முதலமைச்சரை பகிரங்கமாக அமைச்சர்களின் ஊழலை வெளிப்படுத்தினால் முதலமைச்சரின் ஊழல்களை வெளிப்படுத்துவேன் என்று மிரட்டியதில்   உண்மை இருக்கலாம் என்று பலரும் எண்ணத் தலைப்பட்டனர். அதற்கு வலு சேர்ப்பது போல முதலமைச்சரின் பிந்திய நடவடிக்கைகள் அமைந்து இருக்கின்றன.

உதாரணமாக சுண்ணாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த   பிரச்சினையில், நீர்வழங்கல் மாகாணசபையின்  அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்றும் வடமாகாண முன்னாள்  விவசாய அமைச்சர் திரு ஜங்கரநேசன் தனக்கு சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்படாதும், நிர்வாக ரீதியாக தொடர்பு அற்ற இவ்விடயத்தில் தலையிட்டு தன்னிச்சையாக 1.9 மில்லியன் செலவழித்து ஒரு குழுவை அமைத்து பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை அக்குழுவின் மூலம் பெற்று அந்நிறுவனத்தை பாராட்டும் வகையிலேயே செயற்பட்டிருக்கிறார் என விசாரணைக்குழு தெளிவாக தெரிவித்திருக்கிறது, அமைச்சரின் மீதான குற்றச்சாட்டுகள்  நிருபிக்கப்பட்டு அவர் மாற்றப்பட்ட நிலையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை பாதிக்கும் இந்தப்  பாரதூரமான பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு முன்னர் வெளியிடப்பட்ட போலி நிபுணர் குழு அறிக்கையை மீளப் பெற்று இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசாங்கமே நீரில் கழிவு எண்ணெய் கலந்து இருப்பதை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில் முதலமைச்சர் நேர்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் தீர்வையும் வழங்குமாறு மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை நீதிமன்றங்களிலும் ஏனைய உத்தியோகபூர்வ விடயங்களிலும் சுண்ணாகம் நீரில் கழிவு எண்ணெய் கலக்கவில்லை என்பதே வட மாகாண சபையின் நிலைப்பாடாக இருக்கிறது. சட்டத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட நீதிபதியாக இருந்த முதலமைச்சர் மாகாண சபையின் அதிகார வரம்பை அறியாமலா  விவசாய அமைச்சரை நீர் வழங்கல் பிரச்சினையில் குழு அமைக்க அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது. இதைவிட இன்றுவரை அந்த அறிக்கையை மீளப்பெறாமல் இருப்பது திரு ஐங்கரநேசன் தனது சாட்சியத்தின் போது முதலமைச்சரின் சம்மதத்துடனேயே இந்த விடயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததை நிரூபிக்கும்  விதமாக இருப்பதுடன் முதலமைச்சரும் இந்த விடயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் சார்பாக செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.  ஊழலினால் ஏற்பட்ட பாதிப்புகளை உரிய முறையில்  நிவிர்த்திக்க தவறியுள்ள முதலமைச்சர் முன்னர்  ஊழல் விசாரணையை ஆரம்பித்தது அமைச்சர்களை காவு கொடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தனது நற்பெயரையும் விம்பத்தையும்  காப்பற்றுவதற்கு மேற்கொண்ட ஒரு முயற்சியே  என்பது தற்போது வெளிப்பட்டுவிட்டது  . இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உதட்டளவில் ஊழலுக்கு எதிராக பாவனை செய்து மீண்டும் தனது விம்பத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் பிரயத்தனம் செய்கிறார். பதவிக் கதிரைகளுக்காக குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு தன்னை நியமிக்காது என்ற யதார்த்தத்தை முதலமைச்சர் உணர்ந்து கடைசிவரை ஊழலுக்கு எதிராக நேர்மையாக போராடி இருந்தால் பதவி விலகி செல்லும்போது தமிழர் வரலாறில் ஒரு மதிப்புக்குரிய தலைவராக நிரந்தர இடத்தை பிடித்திருப்பார்.

அடுத்ததாக தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் தமிழ் மக்கள் பேரவையை எடுத்துக் கொள்வோம். இவர்கள் வடமாகாண சபை மற்றும் நாட்டில் ஊழல் பல இடம் பெற்றபோது கண்டும் காணாதது போல இருந்ததும் சுண்ணாகம் பிரச்சினை உட்பட தமிழர்களை  பாதிக்கும் பல போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டபோது அவற்றில் கலந்து கொள்ளாது வாளா இருந்ததும் குறைந்தபட்சம் ஆதரவு தெரிவிக்க கூட முன்வரவில்லை என்பதும்  அனைவரும் அறிந்ததே. முன்னைநாள் போராளிக் குழுக்களின்  கிரிமினல்களை  இணைத்தலைவர்களாகவும் முக்கிய உறுப்பினர்களாகவும் பேரவை இணைத்துக் கொண்டுள்ள  நிலையில் பேரவையின் ஊழலுக்கு எதிரான கோரிக்கை உள்ளக விமர்சனத்துக்கு உட்படாத அமைப்பாக தன்னை இனம் காட்டியுள்ளதுடன் “ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே ” என்ற பழமொழியை நினைவு படுத்தியுள்ளது. சிலதினங்களுக்கு முன்னர் முன்னைநாள் போராளிக்குழு ஓன்று இன்னமும் யாழ்ப்பாணத்தில் அடாத்தாக பொதுமக்களின் வீடுகளை பிடித்து  வைத்து இருப்பதும் ஆயுதங்களுடன் இரகசியமாக   மக்களை அச்சுறுத்துவதும்  அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டியது இந்த கிரிமினல் குழுக்களிடம் இருந்து என்பதை பேரவை உணர்ந்து கொள்ளவேண்டும். முதலில் இந்த ஆயுதக் குழுக்களை கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்தி செய்த தவறுகளுக்கும் அராஜகச் செயல்களுக்கும் மக்களிடம் மன்னிப்புக் கோரவும் அதே வேளையில் செய்த பாவங்களுக்காக பின்வரும் வழிகளில் பிராயச்சித்தமும் செய்ய பேரவை வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

1. கடந்த காலத்தில் இந்தக் குழுக்கள்  படுகொலை செய்த முக்கியமாக ஆயுதம் ஏந்தாத பொதுமக்களின் உறவினரிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும்.

2. பயமுறுத்தி மற்றும் படுகொலை செய்து சம்பாதித்த சொத்துக்களை மீளவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அல்லது அவர்களின் உரித்துக் காரர்களிடம் கையளிக்க வேண்டும். தொடர்ந்தும் பொதுமக்களின் வீடுகளை அடாத்தாக பிடித்து வைத்திருப்பது இரகசியமாக ஆயுதங்களுடன் பயமுறுத்துவது போன்ற செயல்கள் இவர்கள்  இன்னமும் சட்டவிரோத செயல்களை நிறுத்தி ஜனநாயக வழியில் வர விரும்பவில்லை என்றே பொருள் படும் நிலையில் பேரவையில் இருந்து இவர்களை வெளியேற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3. வரதராஜபெருமாள் போலல்லாது இந்தியாவிடம் பல உதவிகளை பெற்றுக் கொண்டு இந்திய நலன் காக்கும் 5 ம் படையாக செயல்படாமல் ஈழத்து தமிழ் மக்களின் நலன் காப்பதற்காக நேர்மையாக இதயசுத்தியுடன் இனியாவது செயற்படுவோம் என்ற உறுதிமொழியை அளிக்கவேண்டும். ஈழ மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக கடந்த காலத்தில் இந்தியாவிடம் பெற்றுக் கொண்ட உதவிகளை பகிரங்கப் படுத்த வேண்டும்.

4. கடந்த காலத்தை போலல்லாவது பொதுமக்களின் சொத்து மற்றும் வரிப்பணத்தில் ஊழல், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் நிதிமோசடியில் ஈடுபடமாட்டோம் என்று உறுதி அளிக்கவேண்டும்.

5. தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் வேட்பாளர் இலங்கையிலும் புலத்திலும் தனது பெயரிலும் பினாமிகளின் பெயரிலும் இருக்கும் சொத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்துவது அவர்கள் ஊழல் மற்றும் நிதிமோசடியில் ஈடுபடமாட்டார்கள் என்னும் நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட வேண்டுகோள்களை பேரவை வெளிப்படையாக முன்வைத்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்கும் தமிழ்ப்  பிரதேசங்களில் உண்மையான சனநாயகம், அராஜகம் மற்றும் ஊழலற்ற நல்லாட்சியை வழங்க முன்வருமா? தமிழர் நலன்களை பாதுகாக்க வேண்டுமாயின் முதலில் இலங்கையில் நலிந்துவரும் தமிழர் குடித்தொகையை அதிகரிப்பதற்குரிய செயல்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பேரவை செயல்பட்டிருக்கவேண்டும். இன்றுவரை அதைப்பற்றி எந்தவித கரிசனையும் இல்லாமல் தமிழ்  மக்களின் குடித்தொகைப் பலமே  தமிழருக்கு உரிமைகளை பெற்றுத்தரும் என்ற அடிப்படை உண்மையையும் உணராமல் அரசியல் யாப்பில் எவ்வாறு மாற்றங்களை செய்யவேண்டும் என்று விவாதிப்பது எந்தப் பயனையும் தமிழருக்கு ஏற்படுத்தாது.

Exit mobile version