Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போராட்டத்தை அழித்துச் சுத்திகரிக்கத் துணைபோனது யார்? : ரஞ்சித்

isisciaஇன்று உலகம் முழுவதிலும் அடையாளக் குழுக்கள் மேற்கின் ஏகபோக அரசுகளால் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் உளவு நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு அவற்றின் உளவு நிறுவனங்களால் அழிவுகளை ஏற்படுத்தப் பயன்படுகிறது. தேவையேற்படும் போது தாக்குதல்களை நடத்தவும், ஆயுதமேந்தவும், மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அழிக்கவும் இக் குழுக்கள் பயன்படுகின்றன.

மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சிக்கலான வடிவங்களில் திட்டமிடப்பட்டு வழி நடத்தப்படும் இக் குழுகள் உலகம் முழுவதும் அழிவுகளை ஏற்படுத்தவும் மக்கள் மத்தியில் மோதல்களையும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

சில வேளைகளை வெறும் எழுச்சிக் குழுக்களாகச் செயற்படும் இவ்வமைப்புக்கள் தேவையேற்படும் நேரங்களில் ஆயுதக் குழுக்களை உருவாக்கவும் பயன்படுகின்றன.

துருக்கியில் ஆரம்பிக்கப்பட்ட ‘அரபுப் புரட்சி’ என்றழைக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு எழுச்சிகள் விரிவாக்கப்பட்டு லிபியா வரை சென்றடைந்தது. அங்கு அமெரிக்க அரசாலும் அதன் துணை நாடுகளாலும் பயிற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதிக் குழுக்கள் கடாபியை அகற்றிவிட்டு அந்த நாட்டை இன்று கொலைக் களமாக மாற்றியுள்ளன.

அதே குழுக்கள் விரிவாக்கப்பட்டு இன்று சிரியா முதல் ஈராக் வரை இஸ்லாமிய அரசு என்ற தலையங்கத்தில் அப்பாவி மக்களை அழித்து வருகின்றன.

1970 வரை பின்னோக்கிச் செல்லும் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் அமெரிக்க அரசின் இரத்தக் கறைபடிந்த வரலாறு முஜாகிதீன் இஸ்லாமிய அடிப்படை வாதிகளைத் தோற்றுவிப்பதிலிருந்த ஆரம்பமாகிறது.

ஆயுதக் குழுக்களை ஆரம்பித்து அவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொளும் தந்திரோபாயத்தை இந்திய அரசு பயன்படுத்தியது எமது முற்றத்தில் நடந்த வரலாறு. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள், ஈரோஸ் போன்ற இயக்கங்களுக்கும், பின்னர் ஈ,என்,டி.எல்.எப் என்ற இயக்கத்திற்கும் இந்திய அரசு இராணுவப் பயிற்சிகளை வழங்கி இயக்கங்களுக்கு இடையே மோதல்களைத் தோற்றுவித்தன.

இந்தப் பின் புலத்திலிருந்தே இன்றைய புலம்பெயர் அரசியல் சூழலை அணுகலாம்.

பத்து நாட்களின் முன்னர் இலங்கை அரசு புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடையை நீக்கியிருந்தது.

உலகத் தமிழர் பேரவை(GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஆகியன தடை நீக்கப்பட்ட அமைப்புக்களில் பிரதானமானவை.

இலங்கை அரசு வன்னி இனப்படுகொலையை நிகழ்த்திய வேளையில் பிரித்தானியாவில் லட்சக் கணக்கில் புலம்பெயர் தமிழர்களைத் திரட்டி புலிக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது பிரித்தானியத் தமிழர் பேரவையே.

அதன் அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நடத்தும் பொறுப்பை BTF குத்தகைக்கு எடுத்துக்கொண்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் புலிக் கொடியைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2014 ஆம் ஆண்டில் நினைவு நாளை நடத்திய போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் (TCC) சேர்ந்த அடியாள் படையினர் புலிக் கொடி ஏற்ற வேண்டும் என்று குழப்பம் விளைவித்தனர்.

ஜீகாதிகள் போன்று ஆக்ரோசமாக கூச்சலிட்ட இளைஞர் குழு பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்களுடன் மோதலை ஆரம்பித்தனர். இளைஞர் குழுவைத் தூண்டியவர்கள் பின்னணியில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நீண்ட வரலாறு உண்டு. வைகுந்தவாசன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அந்த அமைப்பு, 1980 களின் இறுதிக் காலங்கலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பாக மாற்றம் பெற்றது.

1989 ஆம் ஆண்டு புலிகளால் ஆரம்பிக்கப்பட மாவீரர் தின நிகழ்வுகளைப் புலம்பெயர் நாடுகளில் நடத்தும் பொறுப்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

புலிகளின் இறுதிக் காலப்பகுதிகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியாவில் திரட்டப்பட்ட பெர்ந்தொகையான பணத்தின் ‘பாதுகாவலர்களாக’ விளங்கினர்

90 களின் ஆரமப்பப் பகுதிகளிலிருந்து சாந்தன் என்பவரது பொறுப்பிலிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு 1995 ஆம் ஆண்டில் பிரித்தானியப் புலனாய்வுப் பிரிவிற்கு தமிழர்கள் மத்தியிலிருந்து ஆட் சேர்த்தன.

சாந்தன்

அக்காலப் பகுதியில் உறுப்பினர்களாகவிருந்த பலருக்குத் தெரிந்திருக்கும். அந்த ஆள் திரட்டல் நடவடிக்கைக்காக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் லண்டன் அலுவலகத்தில் பல்வேறு சந்திப்புக்களை புலனாய்வுத் துறையுடன் சாந்தன் குழுவினர் நடத்தினர்.
2014 ஆம் ஆண்டில் ஆங்கில இளைஞரான பில் மில்லர் என்பவர் ஈழப் போராட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டார். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரித்தானிய அரசு எவ்வாறு இலங்கை அரசின் இனப்படுகொலையில் நேரடியாகப் பங்கு வகித்தது என்பதே அந்த ஆவணத்தின் உள்ளடக்கமாகும்.

22.07.2014 அன்று ஆவணத்தின் வெளியீடு கிளாஸ்கோவில் நடைபெற்றது. வெளியிட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கமல்

அங்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) பொறுப்பாளர் கமல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். நிகழ்வு ஆரம்பமாகி கால் மணி நேரத்தின் பின்னர், கமல் வெளியே சென்று இரண்டு புலனாய்வுத் துறை பிரதானிகளை அழைத்துவந்தார். சிவில் உடையில் வந்திருந்த அவர்கள் இருவரும் கமலின் அழைப்பின் பேரிலேயே அங்கு வந்ததாகக் குறிப்பிட்டனர்.

பதிவு செய்தவர்களை அடையாளப்படுத்திய பின்னர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட பிரித்தானிய அரசிற்கு எதிரான முக்கிய நிகழ்வு ஒன்றில் புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரிகளை அழைத்துவந்து கலந்துகொண்டவர்களை அடையாளப்படுத்திய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இன்று ஈழப் போராட்டத்தின் புலம் பெயர் குரல்!

இவர்களைக் கொள்கை, அரசியல் திட்டம் என்பன தொடர்பாகக் கேள்வியெழுப்பினால் பிரபாகரனின் கொள்கை புலிகளின் அரசியல் திட்டம் எனப் பதிலளித்துத் தப்பிக்கொள்வார்கள். எதிர்த்துக் கேள்விகேட்டால், ‘தாயகம், தேசியம், தலைவர்’ என ஜீகாதிகள் போல உணர்ச்சிவசப்பட்டு முழக்கமிடுவார்கள்.

அல்கயிதா ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புக்களை நம்பி அவர்கள் வழி செல்லும் இஸ்லாமிய இளைஞர்களைப் போல இக் குழுவினால் ஏமாற்றப்படும் உணர்ச்சிப் பிழம்புகள் ஆயிரக்கணக்கானவர்கள்.

அமெரிக்கக் கப்பல் ஆயுதங்களோடு வருகிறது என்றெல்லாம் கூறி புலிகளைத் துடைத்தெறிவதற்குத் துணை சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த அமைப்பைச் சார்ந்தவர்களே.

பெரும்பாலான புலம்பெயர் வர்த்தக ஊடகங்கள், அடிப்படைவாத ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் இந்த அமைப்பின் ஊது குழல்கள் போன்றே செயற்பட்டனர்.

பிரபாகரனைக் கடவுளாக்கி எவ்வாறு அழித்தார்களோ அதே போல அவரை அப்பழுக்கற்ற சூரிய தேவனாக்கி தமது வியாபாரத்திற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
ஊடகங்கள் முதல் சந்தர்ப்பவாதக் கோட்பாட்டாளர்கள் வரை இதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.

அதுவே புலம்பெயர் இளம் சந்ததியின் பொதுப் புத்தியாக்கிய இக் குழு, ஜீகாதிகள் போல தவறுகளை விமர்சிப்பதும், புதிய போராட்ட வழிமுறைகள் தொடர்பாகச் சிந்திப்பதும். ‘துரோகத்தனம்’ என்ற கருத்தை ஏற்படுத்திற்று.

இவர்களை இயக்கும் புலனாய்வுத் துறைகள் ஒடுக்குமுறைக்கு எதிரான புதிய போராட்டம் ஒன்று மேலெழுவதைத் தடுக்க இக்குழுக்களைப் பயன்படுத்திக்கொண்டன. உயிருடனிருக்கும் தலைவர் வந்து பார்த்துக்கொள்வார் என மக்களுக்கு நம்பிக்கைகொடுத்து கடந்த ஆறுவருடங்களைக் கடத்தி வன்னிக்குப் பின்னான அழிவுகள் இவர்கள் ஊடாகவே ஏற்படுத்தப்பட்டது.

இறுதிக் காலங்களில் புலிகளின் பணத்தைச் சூறையாடிய இக் குழுவின் பிரதனிகள், தலைவர் வரும்போது பணத்தை ஒப்படைப்போம் என அதனைச் சொந்தமாக்கிக் கொண்டனர்.

இலங்கை அரசு எந்த அச்சமுமின்றி பிரித்தானியத் தமிழர் பேரவையைத் தடை நீக்கியமைக்கு முக்கிய காரணம் அந்த அமைப்பைத் தம்மால் கையாளலாம் என்பதே. அதே வேளை பிரித்தானியப் புலனாய்வுத் துறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைக் கையாளும் என்ற நம்பிக்கை இலங்கை அரசிற்கு இருந்திருக்கும்.

மறு புறத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற அடிப்படைவாதக் குழுக்களைப் பயன்படுத்த பிரித்தானிய உளவுத்துறையே அனுபவங்களைக் கொண்டது. பல தசாப்தங்களாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கையாளும் அதே முறைமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் பயன்படுத்தபடுவதே இதற்குச் சிறந்த உதாரணம்.

இவர்களின் பிடியிலிருக்கும் சொத்துக்களும், பணமும் பிரித்தானிய அரசின் நிறுவனங்களுக்குத் தெரியாதவை அல்ல.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் அகதிகள் தொடர்பாக தமிழ் சட்ட வல்லுனர்களை அழைத்துப் பேசிய உள்துறை அலுவலகம், புலிகளோடு அடையாளப்படுத்தப்பட்டவர்களைத் திருப்பி அனுப்ப மாட்டோம் எனக் கூறியிருந்தது. அதனால் புலிகளோடு அடையாளப்படுத்தப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போராட்டங்களில் கலந்துகொண்டு புகைப்படங்களை எடுக்குமாறு அகதிகளின் சட்ட ஆலோசகர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அகதி விணப்பம் செய்த பயனாளிகளின் ஆதரவைப் பெற்றது. இதன் மறுபுறத்தில் புலிகளோடு அடையாளப்படுத்தப்பட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என உள்துறை அலுவலகம் விண்ணப்பங்களை நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TCC ஐப் பலப்படுத்த பிரித்தானிய உளவுத்துறையின் திட்டங்களில் ஒன்றே இது.

ஆக, தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசை இயக்கும் ஐரோப்பியப் புலனாய்வு நிறுவனங்களாலும், தடை நீக்கப்பட்ட அமைப்புக்கள் இலங்கை அரசால் நேரடியாகவும் கையாளப்படுகின்றன.
ஒருங்கிணைப்புக் குழு போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் பின்னால் தெளிவன அரசியல் திட்டத்தை உளவுத்துறைகள் முன்வைத்துள்ளன. தற்செயலாகப் போராட்டம் என்ற ஒன்று தோன்றுமானால் அது அடிப்படைவாத அழிவுக் குழுக்களின் பிடியிலேயே விழும் நிலையை உருவாக்கியுள்ளன. மற்றொரு முள்ளிவாய்க்காலை முன்னைய அனுபங்களிலிருந்து இக் குழுக்கள் இலகுவாகத் தயார் செய்துவிடும்.

இக் குழுக்கள், அவை பயன்படுத்தும் வெற்றுக் கோசங்கள், அர்த்தமிழந்த அடையாளங்கள் போன்றன எதிர்கொள்ளப்படும் வரை போராட்டம் என்பது பல வருடங்கள் பிந்தள்ளப்படும் அந்த வருடங்கள் அனைத்தும் அழிவுக்கான வலுவிழக்கும் காலப்பகுதிகளாகவே நகர்ந்து செல்லும்.

மேலும் தொடரும்..

தொடர்புடைய பதிவுகள்:

சின்னங்களை முன்னிறுத்தி நடைபெறும் புரட்சி வியாபாரம் – THE REVOLUTION BUSINESS
ஒட்போர் (OTPOR) புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்
மாவீரர் தினக் கணக்கு விபரம், நினைவு கூரலுக்கான விலை, அவலத்தில் போராளிகள்
பிரித்தானிய உளவுப்படையின் அடியாட்களாக மாறிப்போன TCC- இன்னொரு முள்ளிவாய்க்கால் தயாராகிறது:ரஞ்சித்

 

Exit mobile version