Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈழப் போராட்டத்தை அகற்றிய தன்னார்வ நிறுவனத்தின் நேபாள சதி முயற்சி

ஈழப் போராட்டத்தை வெற்றுக்கோசங்கள் ஊடாக அழித்த தாசீசியஸ் அவர்களுடன் பேர்கோப் பவுண்டேஷனின் இயக்குனர் ரொபேர்ட் நோர்பேர்ட்ஸ்
ஈழப் போராட்டத்தை வெற்றுக்கோசங்கள் ஊடாக அழித்த தாசீசியஸ் அவர்களுடன் பேர்கோப் பவுண்டேஷனின் இயக்குனர் ரொபேர்ட் நோர்பேர்ட்ஸ்

பேர்கோப் பவுண்டேசன்-Berghof Foundation – என்ற அமைப்பு ஏனைய தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ஈழப் போராட்டத்தை தமிழ் ஒற்றர்களூடாக அழித்த வரலாறு இப்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. தவறுகள் நிறுவனமயமாகியிருந்த தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தை அழிப்பதும் அதன் பின்னர் அது தவறுகளைக் கற்றுக்கொண்டு மீண்டெழாதவாறு சதி செய்வதும் பேர்கோப் பவுண்டேஷனுக்கு ஏகாதிபத்தியங்களால் வழங்கப்பட்டிருந்த பணி.

இலகுவாக விலைக்கு வாங்கப்படக்கூடிய நிலையிலிருந்த புலம்பெயர் தமிழர்கள் ஊடாக பெரும் அழிவை நிறைவேற்றிய இச் சதித்திட்டத்தைப் போன்றே நேபாளத்திலும் பேர்கோப் பவுண்டேஷன் தனது சதி முயற்சிகளில் ஈடுபட்டது.

13 வருடங்கள் நடைபெற்ற நேபாளத்தின் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் மன்னராட்சியைத் அகற்றி முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவியது. அதன் பின்னர் மன்னராட்சியின் எச்ச சொச்சங்களை அழித்து சோசலிசப் புரட்ச்சிக்கான தயாரிப்புக்களில் போராட்டத்தைத் தலைமை தாங்கிய நேபாளத்தின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டது. அவ்வேளையில் தலையிட்ட ஏகாதிபத்தியத் தன்னார்வ நிறுவனங்கள் நேபாளம் முழுவதும் புற்று நோய் போல அரித்துச் சென்றன.

இன்று நேபாளம் முழுவதிலும் 45 ஆயிரம் தன்னார்வ நிறுவனங்கள் செயற்படுகின்றன.

அவற்றுள் சமாதனத்தை ஏற்படித்துவது என்ற பெயரில் பேர்கொப் பவுண்டேஷன் ஆய்வுகளை நடத்தி அழிப்பை இலகுபடுத்தியது. இன்று முழுப் போராட்டமும் சிதைக்கப்பட்டுவிட்ட போதிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிளவடைந்த குழுக்கள் நாடு முழுவதும் போராடிவருகின்றன.

பேர்கோப் பவுண்டேஷன் தனது உள்ளூர் ஒட்டுக்குழுக்களுக்கு ஊடாக நடத்திய ஆய்வுகளில் ஒன்று:

Study prepared for the Berghof Foundation for Peace Support

இவ்வேளையில் இனியொருவில் நேபாளப் புரட்சியின் பின்னடவு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு வெளியான ஆய்வை மீள் பதிவு செய்கிறோம்:

நேபாளப் புரட்சியின் பின்னடைவிலிருந்து படிப்பினைகள் : சபா நாவலன்

2006 ஆண்டு நடைபெற்ற நேபாளத்தின் ஆயுதம் தாங்கிய மக்கள் எழுச்சி

உலகை ஆக்கிரமிக்கும் பல்தேசிய நிறுவனங்களின் கண்களை உறுத்தும் இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில் நேபாளம் கோடிட்டுக்காட்டத்தக்கது. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அதன் அடிமை நாடாக நடத்தப்பட்ட நேபாளத்தில் கிராமப்புற வறிய கூலி விவசாயிகள் இந்த நூற்றாண்டின் நவீன அடிமைகளுக்கு உதாரணம். பல கிராமங்களில் அரச நிர்வாகம் இருந்ததில்லை. மருத்துவ வசதிகளை அந்த மக்கள் கண்டறிந்திருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கடந்த நுற்றாண்டின் கோரம் எந்த மாற்றங்களும் இன்றி காணப்பட்டது.

இந்தியவின் காலனி நாடு போன்றே மிக நீண்டகாலமாக அடிமைத்தனதுள் மூழ்கியிருந்தது நேபாளம். இந்தியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரசியல் மாவோயிஸ்டுக்களுக்கு முன்னதாக யாரும் முன்வைத்ததில்லை.

இந்த நிலையில் மாவோயிசக் கட்சியான ஒன்றிணைந்த கம்யூனிசக் கட்சியின் தலைமையில் மக்கள் அணிதிரண்டார்கள். கிராமங்கள் விடுதலை செய்யப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக பல கிராமங்கள் மாவோயிஸ்டுக்களின் முழுமையான ஆளுமைக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் யுத்தத்திற்கு மக்கள் பயிற்றப்பட்டனர். கூலி விவசாயிகள், தொழிலாளர் அமைப்புக்களூடக மக்கள் அணிதிரட்டப்பட்டனர். பின்னதாக மாணவர் அமைப்புக்களும் பலம் பெற்றன.

நேபாளத்தின் மக்கள் விடுதலை இராணுவம்

ஆரம்பத்தில் ரோயல் நேபாளி இராணுவம் எனப்பட்ட மன்னரின் இராணுவத்திற்கும் பொலீஸ் படைகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளைப் பயன்படுத்திய மாவோயிஸ்டுக்கள் நேர்த்தியான இராணுவத் தந்திரோபாயம் ஒன்றை வகுத்துக்கொண்டனர்.

அதே போல மன்னருக்கும் முதலாளித்துவ பாராளுமன்ற வாதக் கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்ட மாவோயிஸ்டுக்கள் நகர்புறங்களிலும், மத்தியதர வர்க்கத்தின் கீழணிகள் மத்தியிலும் தமது புரட்சிகர வேலைகளை முன்னெடுத்தனர். ஏறத்தள 75 மாவட்டங்கள் மாவோயிஸ்டுக்களின் நிர்வாகத்திற்கு முழுமையாகவோ பகுதியாகவோ உட்பட்ட பிரதேசமாக மாற்றமடைந்திருந்தன.

மாவோயிஸ்டுக்கள் நேபாளத்தில் உறுதியான மக்கள் அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கியிருந்த நிலையில் புரட்சியின் முதலாவது கட்டமான மன்னராட்சியை வீழ்த்தும் போராட்டத்தை தலைமை தாங்கினர். அவர்களுடையை தலைமையில் மன்னராட்சிக்கு எதிரான ஏனைய முதலாளித்துவக் கட்சிகளும் இணைந்து கொண்டன. மன்னராட்சிவீழ்த்தப்பட்டதும், அரசியல் நிர்ணய சபை ஒன்றை உருவாக்குவதற்கான தேர்தலை நடத்துமாறு மாவோயிஸ்டுக்களோடு ஏனைய கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வந்தன.

அந்த நிலையில் நேபாள முதலாளித்துவ ஜனநாயக தேசிய அரசு ஒன்றை நிறுவுவதற்காக மாவோயிஸ்டுக்கள் தலைமை தாங்க முன்வந்தனர். அதே வேளை ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி -மாவோயிஸ்டுக்கள் – புரட்சிக்கான இடைக்கட்டமே அது என அறிவித்திருந்தது.

ஜூன் மாதம் 2006 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்டுக்கள் 12 அம்ச இணக்கத் திட்டம் ஒன்றை ஏனைய ஏழு கட்சிகளுடன் உருவாக்கிக் கொள்கின்றனர்.

21 ஆம் திகதி நவம்பர் மாதம் 2006 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட சமாதான ஒப்பந்தம் ஒன்று மாவோயிஸ்டுக்களுக்கும் நேபாள அரசுக்கும் இடையே கைச்சாத்தாகிறது. பெருந்திரளான மக்கள் எழுச்சியுடன் கட்மன்டூவில் மன்னரின் அரண்மனையைச் சுற்றி வளைத்திருந்த மாவோயிஸ்டுக்கள் முழுமையாகத் அரசைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக இவ்வாறான சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் பின்புலம் இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது.

நேபாளப் புரட்சியின் மிகப்பெரிய தவறு இந்த நவம்பர் ஒப்பந்தம் என்பதைப் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஒப்பந்ததின் சீரழிந்த, ஆபத்தான பகுதி என்பது அமரிக்காவின் அடியாளான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை ஒப்பந்தத்தைக் கண்காணிக்குமாறு கோருவது என்பதாகும். ஒப்பந்தம் கைச்சாத்தான மறுகணமே ஐக்கிய நாடுகள் நிறுவனம் தலையிடுமாறு கோரப்பட்டது.

பிரசந்தா

2006 இன் இறுதியில் பிரசந்தா மற்றும் பாபுராம் பட்டாராய் போன்றவர்களின் நேர்காணல்களும் அவர்கள் குறித்த மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சிகளும் மேற்கின் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேபாளத்தில் தனது பணியை ஆரம்பித்த வேளையில் அதன் உண்மையான பணி என்ன என்பது குறித்து மிகத் தெளிவான தகவல்கள் வெளியாகின்றன.

மாவோயிஸ்டுக்களின் மக்கள் விடுதலை இராணுவ போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதைக் கண்காணித்து உறுதிப்படுத்துவதே ஐக்கிய நாடுகளின் சிறப்பு குழுவான United Nations Mission in Nepal (UNMIN) இற்கு வழங்கப்பட்ட பணியாகவிருந்தது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை நேபாளப் புரட்சியின் இடைக்கட்டத்தில் நுளைத்துக்கொண்டமை இரண்டாவது மிகப்பெரிய தவறாகக் கருதப்படுகிறது.

இதற்கு மாவோயிஸ்டுக்கள் ஏன் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பது இன்னமும் விடைபகரப்படாத கேள்வியாகும்.

நேபாள மன்னாராட்சியையும் நிலப்பிரபுதுவத்தையும் தகர்க்கும் புரட்சியின் முதலாவது பகுதி திட்டமிட்டவாறே சரியான திசையில் நிறைவேற்றப்பட்ட போதும் அதன் தொடர்ச்சியை ஏகாதிபத்திய நிறுவனங்கள் கையகப்படுத்தும் நிகழ்ச்சிப் போக்கு ஐ.நா வின் தலையீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.

மாவோயிசக் கட்சியின் உள்ளேயே முற்போக்கிற்கும் பிற்போகிற்கும், சரிக்கும் தவறுக்கும், உண்மைக்கும் பொய்க்கும் இடையேயான போராட்டம் ஜனநாயகப் புரட்சியின் வெற்றியின் போதே ஆரம்பமாகிவிட்டது என பல மாவோயிஸ்டுக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

மன்னராட்சியை முழுமையாகக் கையகப்படுத்தாமையும் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதித்ததும் தவறான முடிவுகள் என இன்று சிறுபான்மையாக இருக்கும் புரட்சிகரப் பிரிவினர் கூறுகின்றனர்.

அப்போது இது குறித்து குறிப்பிட்ட பிரசந்தா ஆயுதங்களைக் களைவது என்பது புரட்சியின் சரணடைவகக் கருதமுடியாது. ஜனநாயகப் புரட்சி என்பது முழுமையான விடுதலை அல்ல என்ற மழுப்பலான ஆனால் தற்காலிகமாகப் புரட்சிகர சக்திகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான அறிக்கைகளையும் நேர்காணல்களையும் வழங்கினார். அப்போது இது புரட்சிக்கான பிரசந்தாவின் பாதை என்று மாவோயிஸ்டுக்கள் கவர்ச்சிகரமான வார்த்தைகளால் அறிவித்தனர்.

மாவோயிஸ்டுக்களுக்கும் பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான இணக்கப்பாட்டை தொடர்ச்சியாக ஏற்படுத்துவதற்கும் பின்னதாக மக்கள் விடுதலை இராணுவத்தை நிராயுத பாணிகளாக்குவதற்கும் முற்றாக அழிப்பதற்கும் UNMIN முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

தேர்தலைத் தொடர்ந்து ஐந்து மாவோயிஸ்ட் அமைச்சர்களையும் ஒரு உதவி அமைச்சரையும் கொண்ட அரசு ஒன்று ஏப்பிரல் 2007 இல் அமைக்கப்படுகிறது. அதே வேளை மாவோயிஸ்ட் தலைமை ஐக்கிய நாடுகள் முன்வைத்த DDR திட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

(Disarmament, Demobilization, Reintegration-DDR)ஆயுத ஒழிப்பு, படை கலைப்பு, மறு ஒருங்கிணைப்பு என்ற ஐக்கிய நாடுகளின் நயவஞ்ச்கத் தனமான திட்டத்தை மாவோயிஸ்டுக்களின் தலைமை ஏற்றுக்கொள்கிறது.

அதற்குப் பதிலாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் மாவோயிஸ்டுக்களுக்கு உதவுவதாக ஒத்துக்கொள்கிறது. குறிப்பாக கிராமங்களை ‘அபிவிருத்தி’ செய்வதற்கும், சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலில் பங்காற்றவும், மன்னர் சாம்ராஜ்யத்தை முழுமையாக ஒழிக்கவும் மாவோயிஸ்டுக்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் ஒத்துழைப்பதாகத் தெரிவிக்கிறது. நோர்வே, பிரான்ஸ்,அமரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய நாடுகளோடு இணைந்து நேபாளத்தை ‘முன்னேற்ற’ அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொண்டனர்.

மாவோயிஸ்டுக்களுடனான அபிவிருத்தி குறித்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின் அடிப்படையில் கிராமங்களை நோக்கி தன்னார்வ நிறுவனங்கள்( NGOs) படையெடுக்கின்றன. 2008ம் ஆண்டளவில் இந்தப் படையெடுப்பு உச்சத்தை அடைந்தது.

மாவோயிஸ்டுக்கள் கிராமங்களை விடுதலை செய்த வேளையில் அங்கே கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், நிர்வாக அமைப்புக்கள் போன்றவற்றை ஏற்படுத்தியிருந்தனர். இவற்றை ஒவ்வொன்றாக தன்னார்வ நிறுவனங்கள் கைப்பற்ற ஆரம்பிக்கின்றன.

Nirdhan Utthan Bank Limited என்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணக் கொடுப்பனவோடு ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனம் தனது சீரழிவித் திட்டங்களை கிராமப் புறங்களில் ஆரம்பிக்கிறது. பங்களாதேஷ் என்ற நாட்டை ‘தன்னார்வ நிறுவனங்களால் தத்தெடுக்கப்பட்ட நாடு ‘ (NGO franchised country) என்று கூறுமளவிற்கு மாற்றிய கிரமீன் வங்கியை முன்னுதாரணமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியின் முக்கிய உறுப்பினரான மீனா ஆச்சார்ய வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் நேபாள மக்களை மீட்டெடுக்க கிரமீன் வங்கியை முன்னுதாரணமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே தமது வங்கி என ‘பெருமைப்படுக்கொள்கிறார்’.

நேபாளத்தில் ‘அபிவிருத்தி வேலைகளுக்காக’ பணக் கொடுப்பனவாளர்கள் இன்னும் பணத்தை வழங்கத் தயாராக உள்ளனர் என்கிறார் கலாநிதி மீனா ஆச்சார்யா . தன்னார்வ நிறுவனங்களுக்கான உலகின் பெரிய பணக் கொடுப்பனவாளர்களாக அமரிக்காவின் ரொக்க பில்லர் குடும்பத்தினர் கருதப்படுகின்றனர். அமரிக்காவின் மிகப்பெரும் சுரண்டல் குடும்பமான இவர்கள் ஹிட்லருக்குப் பண உதவிகள் வழங்கியதிலிருந்து போர்களுக்கும் அழிவுகளுக்கும் பொறுப்பானவர்கள் என்பது வரை உலகறிந்த தகவல்கள்.

Nirdhan Utthan Bank Limited அடிப்படை என்பதே ‘கந்து வட்டிக் கோட்பாடாகும்’. அதனை அவர்கள் அழகான வார்த்தைகளில் சிறிய பொருளாதார உதவிகள் -Micro finance- என்று அழைத்துக் கொள்வார்கள். உலகின் தொழில் நுட்பக் கொள்ளைக்காரன் என்று அழைக்கப்படும் பில் கேட்ஸ் இதனை ஆக்க முதலாளித்துவம் -Creative capitalism- என்று அழைத்துப் பெருமைப்படுக்கொள்கிறார்.

Centre for Micro-Finance in Nepal (CMF) என்ற நிறுவனமும் இவ்வாறன கிராமப் பொருளாதாரத்தையும் மக்களையும்ஏகாதிபத்திய நிறுவன அமைப்பிற்குள் உள்வாங்குவதில் பிரதான பங்கு வகித்தது.

Trickle Up Program USA -COPPADES – மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி உதவியோடு இயங்கும் நிறுவனமான Working for uplifting the socio-economic conditions of the rural poor and discriminated groups- என்ற தன்னார்வ அமைப்பு மாவோயிஸ்டுக்கள் விடுதலை செய்த கிராமங்களைக் குறிவைத்து இயங்கியது. அங்கு வறுமையை ஒழிப்பது என்ற தலையங்கத்தில் புரட்சியை ஒழிக்கும் அனைத்து வேலைகளையும் ஆரம்பித்தது.

Educate the Children என்ற அமைப்பு கிராமப் புறங்களில் கல்வியைக் கையகபடுத்த ஆரம்பித்தது. ஏகாதிபத்திய பல்தேசிய நிறுவனங்களின் நிதியில் இயங்கும் இந்த அமைப்புக்கள் புரட்சிக்குப் பதிலாகப் போராடிய மக்களுக்குப் பிச்சை போட்டன.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைத் தொடர்ந்து இத் தன்னார்வ நிறுவனங்கள் இரண்டு முதன்மையான திட்டங்களை முன்வைத்து இயங்கின.

1. மாவோயிஸ்டுக்கள் மத்தியிலிருந்த படித்த மத்தியதரவர்க்க முன்னிலைப் போராளிகளை கவர்ச்சிகரமான ஊதியத்தோடும், மக்களுக்கு உதவுதல் என்ற முழக்கங்களோடும் தமது ஊழியர்களாக இணைத்துக்கொள்ளல்..

2. கிராமங்களில் மக்கள் அமைப்புக்களை கையகப்படுத்தியோ அல்லது சீர்குலைத்தோ அழித்தல்.

இதனால் முதலாவதாக புதிய வாழ்க்கையைப் பெற்றுக்கொண்ட, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தவல்ல சந்தர்ப்பவாதக் கும்பல் ஒன்று மாவோயிஸ்டுக்கள் மத்தியிலிருந்து உருவானது. இரண்டாவதாக புரட்சியின் ஆதார சக்திகளாகத் திகழ்ந்த மக்கள் திரள் அமைப்புக்கள் அழிக்கப்பட்டன. மூன்றாவதாக புரட்சிகர நிர்வாக அமைப்புக்கள் முதலாளித்துவ அமைப்புக்களாக மாறின.

போராளியாகவிருந்த பிரசண்டாவின் பில்லியன்கள் பெறுமதியான புதிய வீடு

கட்சி பெரும்பான்மையான, ஒடுக்கப்பட்ட – உழைக்கும் மக்களின் மக்களின் தொடர்சியான கண்காணிப்பில் இருக்கும் வரையில் மட்டுமே அது புரட்சிகரக் கட்சியாக மக்கள் நலன் சார்ந்தாக இருக்க முடியும். நேபாளத்தில் மக்கள் திரள் அமைப்புக்கள் சீர்குலைக்கப்பட்ட நிகழ்ச்சிப் போக்கானது அங்கு சந்தர்ப்பவாதத் தலைமை ஒன்று உருவாவதை இலகுபடுத்தியது.

ஒரு புறத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் மக்கள் விடுதலை இராணுவத்தை அழிக்க மறுபுறத்தில் விடுதலை செய்யப்பட்ட நிலங்கள் மீண்டும் தன்னார்வ நிறுவனங்கள் ஏற்படுத்திய சூழல் வழியாக மீண்டும் நிலப்பிரபுக்களதும் பல்தேசிய நிறுவனங்களதும் கைகளிள் விழுந்தது.

மக்கள் அமைப்புக்கள் சீர்குலைக்கப்பட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதே புரட்சியின் பிரதானபின்னடைவாகும்.

மக்கள் திரள் அமைப்புக்களின் ஆதரவோடு பலமுற்றிருந்த மாவோயிஸ்டுக்களின் முற்போக்குப் பிரிவு பலவீனமடைய ஆரம்பித்தது. சந்தர்ப்ப வாதிகளும், சமரச வாதிகளும் பலமுற்றனர். ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் முன்னோக்கிச் சென்ற புரட்சி மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது.

பலமடைந்துள்ள சந்தர்ப்பவாதக் குழுக்களுக்கு பிரசந்தா மற்றும் பாபுராம் பட்டாராய் ஆகியோர் தலமை தாங்குகின்றனர். கிரண் தலைமையிலான புரட்சிகரப் பிரிவு பலவீனமான ஆனால் உறுதியான அரசியலைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

ஸ்டாலின் மற்றும் மாவோவின் மறைவிற்குப் பின்னர் உலக கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதம் மற்றும் சமரசவதப் போக்குகள் முன்னிலைக்கு வந்தன. திரிபுவாத அரசியல் வழிமுறையை முறியடித்து நேபாளத்தின் சமூகப் பொருளாதாரப் புறச் சூழலிற்கு ஏற்றவாறு உழைக்கும் மக்களின் தலைமையிலான போராட்டத்தை முன்னெடுத்த மாவோயிஸ்டுக்களின் பின்னடைவு ஏகாதிபத்தியங்களால் திட்டமிடப்பட்டது.

கடந்த அரை நூற்றாண்டுகளாக வர்க்க அடிப்படையிலான புரட்சிகர மக்கள் அமைப்புக்களைச் சீர்குலைப்பதற்கு அடையாள அரசியல் என்ற பின்நவீனத்துவம் கண்டுபிடித்த அரசியல் கோட்பாட்டை ஏகாதிபத்தியங்கள் முன்வைத்தன. அடையாள அரசியல் என்பது பின்னதாக சிவில் சமூகங்கள் ஊடாக பரவலாக்கப்படுகிறது. தலித் அமைப்புக்கள், அரசியலற்ற ஏனைய கருத்தியல்கள் ஊடாக சிவில் சமூகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சிவில் சமூகங்கள் மைக்ரோ எக்கனமி திட்டங்கள் ஊடாக தங்கியிருக்கும் நிலையில் மாற்றப்படுகின்றன.

இதனூடாக மக்கள் திரள் அமைப்புக்களை அழிப்பதும் மக்கள் மத்தியினான புரட்சிகர உணர்வுகளைச் சீர்குலைப்பதும், சந்தர்ப்பவாத சமரசவாத சக்திகளின் உள்ளீட்டிற்கு வழிதிறந்துவிடுதலும் உலகம் முழுவதும் திட்டமிட்டு நிறைவேற்றப்படுகின்றது.

நேபாள எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு அனைத்து வாசற்கதவுகளையும் திறந்துவிட்ட அரசு சாரா நிறுவனங்கள் என்ற ஏகாதிபத்திய நிறுவனங்களான தன்னார்வ நிறுவனங்கள்  இன்றைய உலகின் சாபக்கேடு.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈழத்தின் ஒவ்வோர் சந்திலும் ஒவ்வோரு தன்னார்வ நிறுவனங்களின் சுவடுகளைக் காணலாம். புலம் பெயர் நாடுகளிலிருந்து ‘மாவோஸ்டுக்கள்’ எனக் கேலிக்கூத்தாடும் கும்பல்களிலிருந்து வன்னி மக்களுக்குச் சோறு போடுகிறோம் என்று விளம்பரம் போடுகின்றவர்கள் வரை பலர் தன்னார்வ நிறுவனங்களின் வலைப்பின்னல்களில் அங்கம் வகிக்கின்றனர்.  ஆங்காங்கு முளைவிடும் சாதிச் சங்கங்களிலிருந்து ‘ஜனநாயகத்தை மீட்கும்’ பேர்வளிகள் வரை பலர் என்.ஜீ.ஓ பணத்தை சுவைப்பவர்கள்.

நேபாளத்தில் பாபுரம் பட்டாராய் மற்றும் பிரசந்தா போன்றவர்களின் துரோகத் தலைமையை பலம்பெறச் செய்ததும் ஏகாதிபத்தியங்களின் இந்தத் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியே.

மீண்டும் கிராமங்களை ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து விடுதலை செய்வதும், பிரசந்தா குழுவினரிடமிடுந்து மக்களை விடுதலை செய்வதும், இந்திய-அமரிக்க கூட்டுச் சதிக்கு எதிராகப் போராடுவதும் இவர்கள் முன்னால் உள்ள உடனடிப் பணியாகும். இது முன்னரை விடக் கடினமானதும் கரடுமுரடானதுமான பாதைகளைக் கொண்டது.

தொடர்புடைய பதிவுகள்:
தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்!
சிவில் சமூகமும்; என்.ஜி.ஓ சமூகமும் :திருமுகன்
பின் – புலி அரசியல் – NGO களின் பொற்காலம்
நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை! : மு பாலன்
இலங்கை இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் அமரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம்!
நேபாளத்தின் புதிய மாற்றங்களும் ஈழப் போராட்டத்தின் தொடர்பும்..
புலிகளின் தோல்விக்கான அடிப்படைகள் என்ன? : நேபாள மாவோயிஸ்டுகளுடன் உரையாடல்(2)
The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest By Saba Navalan

புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் 

Exit mobile version