Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னிப்பேரவலமும் மலேசிய தமிழ் சமூகத்தின் மனநிலையும் : அ.பிரகாஷ்

கடந்த சில வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் நான் வேலை பார்க்கும் இடத்திற்கருகில் உள்ள தமிழரின் தனியார் மருந்தகத்திற்கு சென்றிருந்தேன். வியாதி தொடர்பான வழமையான விசாரிப்புகள், பரிசோதனைகள் எல்லாம் முடிந்தவுடன் மருத்துவர் என்னிடம் நீங்கள் ஊர்க்காரரோ என வினவினார். மலேசியாவில் பணிபுரியும் தமிழ்பேசும் ஓர் அந்நிய தொழிலாளரை சந்திக்குமிடத்தில், ஒரு மலேசியத்தமிழர் வழமையான உரையாடல்களின் ஆரம்பத்தில் கேட்கும் ஒரு கேள்வி இது.

அவர்களின் அர்த்தத்தில் ஊர் என்றால் இந்தியா, தமிழ்நாடு. ஏனெனில் மலேசியாவில் வதியும் பெரும்பான்மை தமிழரின் பூர்விகம் இந்தியா. அதே சமயம் அந்நிய தொழிலாளராக இங்கு பெரும்பான்மை இந்தியர்களில் கணிசமானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஆகையால் இருவரும் சந்திக்குமிடத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வி எழுவது இயல்பானதே.

அதனால் மருத்துவர் என்னிடமும் அதே கேள்வியை கேட்டார். இல்லை நான் இலங்கையிலிருந்து வந்திருக்கிறேன் என பதில் கூறவும் சில வினாடிகள் தாமதத்தின் பின்னர் அப்படியானால் நீங்கள் மலேசியா வருவதற்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தானே புறப்படவேண்டும் என திரும்ப வினவினார். அப்பொழுது தான் எனக்கு ஒரு விடயம் புரிந்தது. மருத்துவர் இலங்கை என்பதை இந்தியாவிற்குள் இருக்கும் ஓர் இடத்தின் பெயர் ஆக மட்டுமே அறிந்திருக்கிறார். அப்படி ஒரு தேசம் இருப்பதை அறிந்திருக்கவில்லை. இது கொஞ்சம் வேடிக்கையானதாக நம்ப முடியாததாகவும் இருக்கலாம்.

அவர் அப்படி கேட்டபோது எனக்கு அது சற்று வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்தது. சில இடங்களில் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என வினவப்பட்ட போது ஸ்ரீலங்கா என பதில் அளித்தால் அப்படி ஓர் நாடு இருக்கா எனபது போல் அவர்கள் எம்மை பார்த்தது எமக்கு புதினமாக இருந்தது.

இது ஓர் உதாரணம் மட்டுமே.அதன் பிறகு அவ்வப்போது நான் சந்திக்கும் மலேசிய தமிழர்களிடையே என்னை ஓர் இலங்கை தமிழனாக அறிமுகம் செய்கையில் அவர்கள் கேட்கும் இன்னோர் கேள்வியும் உண்டு. அது இவ்வாறு ” இலங்கை எனும் ஊரில் தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் இடையில் சண்டை நடக்குதாம்.சிங்களவர்கள் இவ்வளவு அநியாயம் செய்கிறான். ஏன் இந்திய அரசு தலையிட்டு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.?, இலங்கை இந்தியாவிற்குள் தானே இருக்குது.” போன்ற அப்பாவித்தனமான கேள்விகள்.

ஏன் இவர்களிடம் இருந்து இப்படியான கேள்விகள் வருகின்றன? இலங்கை பிரச்னையை பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லையா? என ஆராய கிளம்பிய போது சிலவிடயங்கள் தெளிவாகியது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இலங்கையில் தமிழர் பிரச்சனை என்பது மலேசிய தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியிலும், அவர்கள் மட்டுமே அவ்வப்போது பிரஸ்தாபித்துகொண்டும் இருக்கும் ஒரு விடயமாக இருந்தது.. அவர்கள் அதைப்பற்றி பேசும்போது மட்டுமே அவை செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தன.

தமிழ் பத்திரிகைகளில் இலங்கை தமிழர் அவலங்கள் தமிழ் பத்திரிகைகளில் செய்திகளாக வந்து கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய தோற்றுவாய் பற்றிய விரிவான விளக்கங்கள் பரவலாக இல்லாதிருந்தது. இதிலும் இன்னோர் வேடிக்கை என்னவெனில் நவீன இலத்திரனியல் ஊடகங்களை கையாளும் சக்தி உள்ள வசதி படைத்தவர்களே மேற்குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பியது தான்.

ஆனால் இதற்கு நேர் எதிர்மாறான பிரிவினரும் இருந்தனர். அவர்கள் பிரபாகரன் படத்தை சட்டைப்பையில் வைத்திருக்கும் அளவிற்கும் தமிழீழ தேசம் பற்றி பேசும் அளவிற்கும் ஈழப்போராட்டம் பற்றி அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கீழ்மட்ட உழைக்கும் வர்க்கத்தினர்.

பணி நிமித்தம் வாடகை வண்டியில் செல்கையில் மலாய் இனத்தவரான ஓட்டுனர், இலங்கை அரசியல் நிலவரம் பற்றி தானும் அறிந்து கொண்டவற்றை விபரித்து. அது பற்றி எம்மிடம் கலந்துரையாடும் அளவில் கூட மலேசிய தமிழ் சமூகத்தில் இலங்கை நிலவரம் பற்றிய தெளிவற்ற சூழலே இருந்தது. பெரும்பாலானோருக்கு இலங்கையில் தமிழர்களுக்காக ஒரு போராட்டம் நடக்கிறது என்பதற்கு அப்பால் போராட்டத்தின் மூலம் என்ன? ஏன் போராடுகிறார்கள்? இதில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் என்ன?, இந்தியாவின் பங்கு என்ன என்பதை பற்றிய தெளிவு என்பது இல்லாமலே இருந்தது.

அதற்கு காரணமாக அப்போதைய ஈழ செய்திகள் தொடர்பான இங்குள்ள ஊடக புறச்சூழல் அல்லது ஊடக வெறுமை எனக்கூறலாம். இலங்கையில் தமிழர்கள் மீது விமானத்தாக்குதலோ, படுகொலைகளோ இடம்பெறும் பட்சத்தில் இந்தோனேசியாவில் அல்லது சுமாத்ராவில் இடம்பெறும் சிறு சிறு நில அதிர்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தரப்படும் முக்கியத்துவத்திலும் குறைந்த அளவே இங்குள்ள அரச மலேசிய ஊடகங்களில் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

அதுவும் இலங்கை அரசின் செய்திகளை மேற்கோள் காட்டியே வெளிவந்து கொண்டிருந்தன. மலேசிய அரசை பொறுத்தவரைக்கும் இலங்கை அதன் நட்புநாடு. ஆனாலும் நம்மவர்கள் அங்கு பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதன் வேதனை வெளிப்பாட்டை ஆங்காங்கே கண்டனக்குரல்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டு தான் இருந்தனர்.

பின்னர் ஒரு நாள் பத்துமலை திருத்தலத்தில் வெடித்த இன்றாப் உரிமைக்குரல் முழக்கமும் பேரணியும் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி போட்டுவிட்டன.

தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்த மலேசிய தமிழ் சமூகம் அன்றிலிருந்து தமிழ்ச்சமூகம் தொடர்பான உள்ளூர் செய்திகள் மட்டுமல்ல உலக செய்திகளையும் கவனிக்க ஆரம்பித்தனர். அதற்கு துணை சேர்த்து பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இலங்கைக்கெதிராகவும் கண்டனக்குரல்களும் ஆர்ப்பாட்டங்களும். தீவிரம் பெற ஆரம்பித்தன.

ஏன் இந்தியா தமிழர் பிரச்சனையில் இன்னும் தலையிடவில்லை என அன்று கேட்டவர்கள், இன்று இந்தியாவினதும் தமிழகத்தினதும் அரசியல் சித்து வேலைகளை புரிந்து கொண்டு அதை கடுமையாக விமர்சனம் செய்யும் அளவிற்கு ஈழத்தமிழர் பிரச்னையை பற்றி தெளிவான விழிப்புணர்வை பெற்றிருந்தனர்.

ஈழத்தில் போர் தீவிரம் அடைந்த வேளைகளில் இடம்பெற்ற முத்துக்குமாரின் தியாக வேள்வித்தீயின் சுவாலை இங்கும் வேகமாக வீச ஆரம்பித்தது. விளைவு வேலைவாய்ப்பு பெற்று மலேசியா வந்த ராஜா எனும் இலங்கை வாலிபரின் தீக்குளிப்பு. இச்சம்பவமும் மலேசிய தமிழ் சமூகத்திடம் கனதியான அதிர்வலைகளை தோற்றுவித்தது.

இதே போன்றதொரு சம்பவம் ஜொஹோர் கோத்தாதிங்கி எனும் நகரில் இடம்பெற்றபோதும் அது பின்னர் தற்கொலை என மூடிமறைக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர் மலேசியா வாழ் தமிழ் இளைஞர். ஈழத்தமிழர் பிரச்சனை ஆரம்பித்த காலத்திலும் சரி, இன்றும் சரி ஈழத்தமிழர் செய்திகளை மலேசிய வாழ் தமிழ் சமூகத்திடம் கொண்டு சென்ற மூன்று தமிழ் பத்திரிகைகளின் பணியை கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.

உள்ளூரில் கட்சி சார்ந்தவை, சாராதவை என அரசியல் ரீதியில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டிருந்தாலும் ஈழப்பிரச்சனை தொடர்பில் இவர்கள் ஓரணியிலேயே திரண்டிருந்தனர். இங்குள்ளவர்களை பொருத்தவரைக்கும் புலிகள் வேறு தமிழ்மக்கள் வேறல்லர்.

நிச்சயம் புலிகள் தமிழீழம் அமைப்பார்கள் என்றே இவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான அடிப்படை காரணம் புலிகளின் போரியல் சாதனைகள் இவர்களை பெருமளவில் ஈர்த்திருந்தது மட்டுமல்ல “உலகில் தமிழன் இல்லாத நாடில்லை ஆனால் தமிழனுக்கு என ஓர் நாடில்லை” எனும் கருத்தியலும் கூடத்தான்.

கடந்த வருடம் இடம்பெற்ற போரவலத்தில் இருந்து தமிழ் மக்களும் புலிகளும் மீண்டு விடுவார்கள் என்றே நம்பியிருந்தவர்களுக்கு, இறுதியில் இடம்பெற்ற எதிர்பாராத மனிதப்பேரவலமும் முடிவும் இங்கும் கடுமையான தாக்கங்களை உண்டு பண்ணியிருந்தது.

அதை இன்றும் நான் சந்திப்பவர்களும், என்னை சந்திப்பவர்களும் கேட்கும் கேள்விகள், ஏன் இப்படியானது? நாங்களும் கூடத்தானே அவர்களை நம்பினோம்? உண்மையில் அவர்கள் எங்கு போனார்கள்? இனி தமிழர்களுக்கு முள்வேலிகள் தான் நிரந்தரமா? விடைகாண முடியாத கேள்விகள் ஏமாற்றங்களினதும் ஒரு சமூகத்தின் துயர முடிவு ஏற்படுத்திய தாக்கங்களின் வெளிப்பாடுகளாக வந்து கொண்டிருக்கின்றன..

Exit mobile version