Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாரிந்தப் “புத்திசீவிகள்”?

இலங்கை அரசு, உலகப் பொதுப் புத்தியில் உருவகப்படுத்தப்பட்ட “சர்வதேசத்தின்” ஆசியுடன் நிகழ்த்தி முடித்த, வரலாறுகாணாத வன்னி நிலத்தின் மனிதப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். “புத்திஜீவிகள்”, “சர்வதேசம்” என்ற அழகிய சொல்லாடல்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க, நடத்தப்பட்ட இனப்படுகொலையில் தொடர்ச்சியாக இனச்சுத்திகரிப்பு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

தாம் வாழ்ந்து களித்த மண்ணிலிருந்து, அப்பாவி மக்கள் அவலக்குரெழுப்ப விரட்டியடிக்கப்படுகின்றனர். சிங்கள பௌத்தக் குடியேற்றவாசிகளும், பல்தேசிய நிறுவனங்களும் அந்த நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. “புத்திஜீவிகளும்”, “சர்வதேசமும்” இன்னும் தன்னார்வ நிறுவனங்களும் தமது நிலங்களிலிருந்து அறுத்தெறியப்படும் மக்கள் கூட்டத்திற்கு எலும்புத் துண்டுகளை வீசியெறிந்து “உதவி” செய்வதாக மார்தட்டிக்கொள்கிறார்கள்.

கொதித்தெழும் மக்கள் கூட்டம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் அவதானமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

தம்மைப் “பன்முகத் தன்மை” கொண்டவர்களாகக் உருவமைத்து வெளிப்படுத்தும் இவர்கள் பிரதான முரண்பாடுகளிலிருந்து, தம்மை விடுவித்துக்கொண்டு குறுகிய முரண்பாடுகளுக்கு அழுத்தம் வழங்குகிறார்கள். ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயான உள்ளக முரண்பாடுகள், சாதியம், பிரதேச முரண்பாடுகள், பாலின முரண்பாடுகள் என்பனவற்றிற்கு போலித்தனமான அழுத்தம் வழங்கி பிரதான மற்றும் அடிப்படை முரண்பாடுகளை நிராகரிக்கின்றனர்.

இது புதிய உலக ஒழுங்கைநிறுவ முயலும் அதிகார வர்க்கத்தின் பொதுவான ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலாகும்.

எங்கெங்கெல்லாம் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றனவோ, எங்கெங்கெல்லாம் மக்கள் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் “புதிஜீவிகளதும்”, “தன்னார்வ நிறுவனங்களதும்”, “சர்வதேசியத்தினதும்” உடனடிப் பிரசன்னத்தைக் காணமுடியும். உலகின் பல்தேச நிறுவனங்களின் பணபலத்தோடு இயங்கும் இவர்களின் கவர்ச்சிகரமான அரசியல் இன்றைய சமூகத்தின் நச்சு வேர்கள்.

இந்தப் பின்னணியிலேயெ 71 “புத்திஜீவிகள்” இணைந்து வெளியிட்டிருக்கும் “தமிழ் சமூகத்திற்கும் அதன் அரசியல் சமூகப் பிரதிநிதிகளுக்குமான வேண்டுகோள்” என்ற அறிக்கையைக் காணமுடியும்.

ஒடுக்கும் பாசிச அரசோடு இசைவாக்கம் அடைந்துகொள்ளக் கோரும் இந்த அறிக்கை, வடக்கிலிருந்து இரவோடிரவாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்றப்படாமை தமிழ்ப்பேசும் மக்களின் தவறு என்று வாதிட முனைகிறது.

வடக்கின் அரச அதிபருக்குக் கூட வெளியிலிருந்து வரும் எவரையும் சந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வட கிழக்குள் ஒவ்வோரு குடியேற்ற வாசியும் துப்பாக்கியின் மிரட்டலுடனேயே துயில் கொள்ளும் அவலத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

இலங்கையில் நடந்துமுடிந்த இன அழிப்புக்கு எதிராக, வட கிழக்கில் முஸ்லீம் தமிழ் மக்களின் நிலத்தையும், கடலையும் கொள்ளையிடும் இலங்கை இராணுவ விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா போன்ற பல்தேசிய கம்பனிகளின் சுரண்டலுக்கு எதிராக,கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களின் விவசாய காணிகள் சிங்கள அரச ஆக்கிரமிப்பாளர்களால் பறிக்கப்படுவதற்கு எதிராக சம்பிரதாயத்திற்காவது ஒரு அறிக்கை எழுத முடியாத இந்த புத்திஜீவிகள் தமிழ் மக்களை முஸ்லீம் மக்களுக்கு எதிராக முன்னிறுத்தி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களே தடை என்கின்றனர்.

தான் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களிடையேயான முரண்பாட்டுகளைத் தூண்ட மகிந்த அரசு முயல்கிறது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் எமது “புத்திஜீவிகளும்” உள்வாங்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் வளர்வதில் எந்தத் தவறும் இல்லை.

சமூகப்பற்றுள்ள எந்த மனிதனுக்கும் முஸ்லீம்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்பதில் எந்த முரண்பாடும் இருக்க முடியாது. ஆனால் மனித விரோதிகளால் கொலைசெய்யப்பட்டு தெருக்களில் வீசியெறியப்படும் பிணங்களை மௌனமாய்க் கடந்துசென்று வடக்கின் இதயத்தில் அமர்ந்துகொண்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படாமைக்குத் வடக்குத் தமிழர்களே காரணம் என்று அறிக்கை விடுவது சந்தேகத்திற்குரியது.

அரசாங்கம், சிங்கள பௌத்தக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் மீள் குடியேற்றத்தை நிராகரிக்கிறது என்ற வெளிப்படையான உண்மையை மறைத்து, தமிழ்ப் பேசும் மக்களைக் குற்றம் சுமத்தும் அருவருக்கும் செயற்பாட்டின் ” புத்திஜீவித்தனத்தை” நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இனச்சுத்திகரிப்பை நிறுத்துமாறு போராடும் மக்களுக்கு ஆதரவு வழங்குவதும், புலிகளால் வெளியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் முஸ்லீம்களை மீள்குடியேற்ற மறுக்கும் இலங்கை அரசை உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், மகிந்த பாசிச அரசிற்கு எதிராகப் போராடும் சிங்கள மக்களை ஊக்கப்படுத்துவதும் இன்றைய எமது கடமையாகும்.

  உலகம் முழுவதும் தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலோடும், மேற்கின் ஜனநாயகச் சொல்லாடலோடும் மக்கள்முன் வருகின்ற மேல்தட்டு புத்திஜீவிகளின் சமரச அரசியல், எதிர்காலத்தை எச்சரிக்கும் அபாய அறிவிப்பாகும்.

தேடகம் – கனடா

அசை – பிரான்ஸ்

இனியொரு..

சமூகப் பாதுகாப்பு இயக்கம் -பிரான்ஸ்

71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

Signatories:

1. Mr. P. Ahilan 2. Dr. Darshan Ambalavanar 3. Ms. Jovita Arulanantham 4. Ms. Kundhavi Balachandran 5. Mr. Sivakolunthu Buvanakumar 6. Dr.GodwinConstantine 7. Dr.KumarDavid 8. Mr. R. Devarajan 9. Ms. Cayathri Divakalala 10. Dr. S. Ganesan 11. Mr. Shaseevan Ganeshananthan 12. Mr. P.B. Gowthaman 13. Dr. Rajan Hoole 14. Ms. Sithiravel Ithaiyarani 15. Mr. T. Antony Jeganathan 16. Ms. Vasuki Jayasankar 17. Dr. T. Jayasingam 18. Mr. D.B.S.Jeyaraj 19. Mr. Theliwattai Joseph 20. Mr. Ahilan Kadirgamar 21. Mr. Silan Kadirgamar 22. Ms. Niyanthini Kadirgamar 23. Ms. Sarvam Kailasapathy 24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai 25. Dr. S.V. Kasynathan 26. Mr. Thirukovil Kaviyuvan 27. Mr. Sathy Kulasingam 28. Mr. Prithiviraj Kulasingham 29. Prof. Vijaya Kumar 30. Ms. Maha Luxmy Kurushanthan 31. Mr. K.C. Logeswaran 32. Mr. S. Manisegaran 33. Mr. Chandrasekaran Manimaran 34. Mr. P. Muthulingam 35. Mr. V. Nandakumar 36. Ms. Malini Paramaguru 37. Ms. Nirmala Rajasingam 38. Ms. Vasuki Rajasingam 39. Mr. Sanjayan Rajasingham 40. Mr. C. Rajeshkumar 41. Ms. A. Renu 42. Ms. Kumudini Samuel 43. Ms. Rani Samuel 44. Dr. Paikiasothy Saravanamuttu 45. Dr. Muthukrishna Sarvananthan 46. Ms. Ambika Satkunanathan 47. Mr. Shyam Selvadurai 48. Rev. Jothini Seenithamby 49. Dr. T. Shanaathanan 50. Ms. M. Mangaleswary Shanker 51. Ms. C. Shanthini 52. Mr. Shobashakthi 53. Mr. P.N. Singham 54. Ms. Vasuki Sivakumar 55. Mr. K.S. Sivakumaran 56. Dr. Sumathy Sivamohan 57. Mr. Subramaniam Sivathasan 58. Mr. Balasingam Skanthakumar 59. Mr. M. Sooriyasekaram 60. Dr. K. Sritharan 61. Rev. M. Jude Sutharshan 62. Mr.H.D. Thampoe 63. Ms. Priya Thangarajah 64. Mr. Kandiah Thanikasalam 65. Mr.R. Thevamaran 66. Prof. S.Thillainathan 67. Dr.Sharika Thiranagama 68. Mr.M.Thiruvarangan 69. Mr.UmaVaratharajan 70. Mr.GodfreyYogarajah 71. Mr.RonnieYogarajah

Exit mobile version