Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மும்பையில் அரங்கேறிய சதி நாடகத்தின் பின்னணியில்…. : கலையரசன்

இந்தியாவின் 9/11 என்று வர்ணிக்கப்படும் மும்பை தாக்குதல்கள் நாடளாவிய அதிர்வலைகளை தோற்றுவித்த போதும், பல கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் மர்மமாக உள்ளன. இந்தப் பதில்கள் இனிமேலும் கிடைக்காமல் போகலாம். உணர்ச்சிவசப்பட்ட நாட்டுப்பற்று என்னும் பேரலை, எந்த சந்தேகத்தையும் தன்னுள் அடக்கி வைக்கலாம். இந்நேரத்தில், இந்திய அரசு மட்டுமல்ல, யாரும் ஆதாரங்களற்ற கருத்தமைவுகளை முன்வைப்பது சரியல்ல என்பதால், அதிகம் பேசப்படாத பொருள்கள் பற்றி மட்டுமே இங்கே அலசவிருக்கிறேன்.

நவம்பர் 26 ம்  திகதி மும்பை நகருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து பத்துக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதில் 200 பேரளவில் மரணமடைந்துள்ளனர். இவர்களது தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டேல்களில் பலர் பணையக்கைதிகளாக அகப்பட்டனர். உயர்வர்க்கத்தினர் கூடும் இடங்களை மட்டுமே குறிவைத்தமை,  மும்பையின் சர்வதேச வணிகத்தை குழப்புவதை நோக்காக கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக வந்துள்ளனர். ஆகவே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு. அதற்கு பழி தீர்க்க பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். இதுவே இந்திய அரசும், ஊடகங்களும் தெரிவித்த, அந்த மூன்று நாட்களுக்குள் நடந்த சம்பவங்களின் சுருக்கம்.

ஆனால் கள நிலைமை நாம் நினைப்பது போல அவ்வளவு இலகுவானது அல்ல.
 உடனுக்குடன் செய்தி அளிக்கக் கூடிய ஊடக வளர்ச்சி கண்ட இந்தக் காலத்தில், பல முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வருவது கூட தவிர்க்கவியலாது. தீவிரவாதிகள் பணயக்கைதிகளை வைத்திருந்த ஹோட்டேல்களை கைப்பற்றுவதில் பாதுகாப்புப் படையினர் காட்டிய குழப்பகரமான நடவடிக்கை போன்றே, செய்திகளை வழங்குவதிலும் ஒரே குழப்பம். ஊடகங்களை கேட்டால், தாம் அரச அதிகாரிகள் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்கிறோம் என்கின்றனர். அரச மட்ட தகவல்கள் பல உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை. “ஒரு அனாமதேய அதிகாரி இப்படி கூறினார்…” என்ற அளவில் தான் பல செய்திகளின் அடிப்படை அமைந்துள்ளது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ள குளறுபடி பற்றிய உதாரணம் ஒன்று:  “உயிரோடு பிடிபட்ட ஒரேயொரு தீவிரவாதி, தாங்கள் பத்து பேர் வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளான்.” ஆனால் பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, தீவிரவாதிகள் வந்ததாக கருதப்படும் மீன்பிடி வள்ளத்தில், 15 குளிர் மேலங்கிகளும், 15 பாவனைப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மும்பை தாக்குதலை மொத்தம் 15 பேர் நடத்தியிருக்கலாம் என்றும், அரசாங்கம் சொல்வது போல ஒன்பது பேர் கொல்லப்பட்டு, ஒருவர் பிடிபட்டால், மிகுதி ஐந்து பேர் தப்பியோடி இருக்க வேண்டும்.

செய்திகளை வழங்குவதில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டு பொதுவாக இந்தியாவில் மட்டும் தான் எடுபடுகின்றது. சர்வதேச நாடுகளை அதிகளவில் நம்பவைக்க முடியவில்லை. பாகிஸ்தான் அரசும், மக்களும் ஆரம்பத்தில் இருந்தே மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தம்மை இனம் காணாது கண்டித்து வந்தனர். ஆனால் இந்திய அரசின் குற்றச் சாட்டுகள் நேரடியாக பாகிஸ்தான் அரசை நோக்கி வீசப்பட்ட போது, பிரச்சினை வேறு மட்டத்திற்கு தாவியது. கடந்த காலங்களில் இந்தியாவில் எந்த தாக்குதல் நடந்தாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுவது வழமை. அதேபோல பாகிஸ்தானில் எந்த தாக்குதல் நடந்தாலும், இந்தியா மீது குற்றம் சாட்டப்படும்.  பொதுவாக நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை மையமாக கொண்டு இயங்குவதால், சமநிலைப்படுத்தப் பட்ட செய்திகள் வருவதில்லை.

இந்திய-பாகிஸ்தான் பனிப்போருக்கு இரு நாட்டு ஊடகங்களும், கலைஞர்களும் தமது பங்கை வழங்கி வருகின்றனர். இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தானியர்கள் வில்லன்களாக காட்டப்படுவது போல, பாகிஸ்தானிய திரைப்படங்களில் இந்தியர்கள் வில்லன்களாக காட்டப்படுகின்றனர்.    இதனால் இரு நாட்டு மக்களும் எந்த அளவிற்கு தேசியவெறி ஊட்டப்பட்டுள்ளனர் என்பதை நான் இங்கே கூறத்தேவையில்லை. மும்பை தாக்குதல், கடந்த 5 ஆண்டு காலமாக இரு நாடுகளுக்கிடையே நிலவிய சுமுகமான உறவை பாதித்து, மீண்டும் எதிரிகளாக்கியுள்ளது. இங்கே தான் தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கம் குறித்த சந்தேகம் எழுகின்றது. அணுவாயுத வல்லரசுகளான, இந்தியாவையும், பாகிஸ்தானையும் போருக்குள் இழுத்து விட்டு, ஆதாயமடைய நினைத்தவர்களின் செயலா இது?

முதலில் யார் செய்திருக்கலாம்? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். மும்பை தாக்குதலை நடாத்தியவர்கள் “டெக்கான் முஜாகிதீன்”  என்ற பெயரில் உரிமை கோரியுள்ளனர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர் தான் டெக்கான். மும்பையும் அந்தப் பிரதேசத்தினுள் அடங்குகின்றது. மேலும் இந்திய தொலைக்காட்சி சேவை ஒன்றை தொடர்பு கொண்ட தீவிரவாதி கூறிய கருத்துகள் இவை: ” காஷ்மீரில் எத்தனை ஆயிரம் மக்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று உங்களுக்கு தெரியுமா?” பேசியவர் காஷ்மீர் உச்சரிப்புடன் உருது பேசியதால், ஆயுதபாணிகளுக்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. உருது பேசுவோர் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.

அதே நேரம் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும், உயிரோடு பிடிக்கப்பட்ட இருவருமாக, மொத்தம் நான்கு பேர் (பாகிஸ்தானிய)பிரிட்டிஷ் பிரசைகள் என்று அறிவிக்கப்பட்டது.  உடனே பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. பின்னர் இந்திய மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் அந்த தகவல் தவறானது என்று சொல்லி, அப்படியே அமுக்கி விட்டன.
 ஒபரோய் ஹோட்டலில் புகுந்த ஆயுததாரிகள் பிரிட்டிஷ், அமெரிக்க கடவுச் சீட்டு உள்ளவர்களை தேடியதாக பி.பி.சி. நிருபர் திரும்ப திரும்ப கூறினார். அதனை வைத்தே இது அல் கைதாவின் வேலை என்று அடித்துச் சொன்னார்கள். அப்படியா? எமக்குத் தெரிந்து இது தான் முதல் தடவையாக, அல் கைதா தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தாமல், அமெரிக்க பாடசாலைகளில் நடப்பதைப் போல கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். மேலும் ஒருவர் கைது செய்யப்படும் அளவிற்கு, தீவிரவாதிகள் தம்மை தாமே காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த செயல்முறை அல் கைதாவின் வழக்கமான பாணியான “எதிரியிடம் அகப்படாமல் தற்கொலை செய்யும்” கோட்பாட்டுக்கு மாறாக நடந்துள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள்(இந்துக்கள், முஸ்லீம்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு, அகில இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான “சிமி”, அரச எதிர்ப்பு பிரச்சாரத்தை காரணமாக காட்டி தடை செய்யப்பட்டது. அப்போது தலைமறைவான சிமி உறுப்பினர்கள், தீவிரவாத வன்முறையை நாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதத்தின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் சிமி, கடந்த காலத்தில் நடந்த சிறு சிறு குண்டுவெடிப்புகளை நடத்தி இருக்கும் என்றால் நம்பலாம். தற்போது மும்பையில் நடைபெற்ற தாக்குதல், நன்கு திட்டமிட்டு, சிறந்த தயாரிப்புடன், பெருமளவு பணச் செலவில், வேண்டிய அளவு ஆயுதங்களுடன் நடந்துள்ளது. அதனால் இதிலே வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டிருக்கலாம் என பலரும் நம்புகின்றனர்.

இந்திய அரசைப் பொறுத்த வரை இது பாகிஸ்தானை தளமாக கொண்ட “லக்ஸர்-இ-தொய்பா” வின் வேலை. அதற்கு பாகிஸ்தானிய அரசு உடந்தை. வேறு கருத்திற்கு இடமில்லை. சரி, அப்படியே இருந்தாலும், இதிலே பாகிஸ்தான் அரசை சம்பந்தப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் குறைவு. லக்ஸர்-இ-தொய்பா ஒரு காஷ்மீர் சார்ந்த இயக்கம் என்ற போதிலும், ஏற்கனவே அது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.  சில பாகிஸ்தானிய ISI அதிகாரிகளின் ஆதரவுடன், அல் கைதாவும், தாலிபானும் அந்த இயக்கத்துடன் கூட்டு நடவடிக்கையில் இறங்க சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை.   லக்சர்-இ-தொய்பா ஏற்கனவே காஷ்மீர் விடுதலை என்ற கோட்பாட்டை கடந்து, சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் ஐக்கியமானதை, அதன் அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அவ்வாறு ஒரு கூட்டு நடவடிக்கை இந்த மும்பை தாக்குதலை நடத்தி இருந்தால், அதாவது லக்சர்-இ-தொய்பா, தாலிபான், அல் கைதா ஆகியன சம்பந்தப்பட்டிருந்தால், இந்தியாவையும், பாகிஸ்தானையும் போர் முனைப்புக்குள் தள்ளிவிடும் நோக்கம் இருந்திருக்கும். அவர்களது நோக்கம் நிறைவேறும் காலம் கனிந்து வருகின்றது. இந்தியா ஏற்கனவே தேசிய வெறியை தூண்டி விட்டு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என மக்களை அணிதிரட்டி வருகின்றது. இதனால் இந்தியாவுடனான தனது எல்லையை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிய பாகிஸ்தான், அங்கே தனது படைகளை குவித்து வருகின்றது. நிலைமை இன்னும் மோசமாகி போர் தவிர்க்கவியலாது என்று வரும் வேளை, வட-மேற்கு மாகாணங்களில் தாலிபானை எதிர்த்து போராடும் படைகளை விலத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
 ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” இப்போது பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணங்கள் வரை பரவியுள்ளது. பாகிஸ்தானின் இறைமை காரணமாக, அமெரிக்க தலையீட்டை தவிர்ப்பதற்காக ஒரு லட்சம் பாகிஸ்தான் இராணுவம் அந்த மாகாணங்களில் நிலை கொண்டுள்ளது.

அல் கைதா, தாலிபான் இயக்கங்களுக்கு எதிராக கடுமையான போரை நடத்தி வரும் பாகிஸ்தான் இராணுவம், ஒரு வீரர் மிச்சமின்றி வாபஸ் வாங்கப்படும் என்று, பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது. அத்தகைய நிலைமை அல் கைதாவிற்கும், தாலிபானுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மீதான தாலிபான் தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில் போர் மூளுவதை அமெரிக்கா தலையிட்டு தடுக்கப் பார்க்கும். போர் மூண்டால் அமெரிக்கா தனது பக்கம் நிற்க வேண்டுமென்று இந்தியாவும், பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. இதற்கிடையே பாகிஸ்தான் சீனாவின் உதவியையும் கோரியுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத வேறொரு சக்தி நடத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 200 பேரளவில் கொல்லப்பட்ட இந்த தாக்குதலில், ஒரு முக்கியமான நபரும் அடங்குகின்றார். மும்பை மத்திய ரயில் நிலையத்தில் நுழைந்த ஆயுதபாணி “கண்மூடித்தனமாக” சுட்டதில், சாதாரண பொது மக்கள் மட்டும் பலியாகவில்லை.  மும்பை நகரின் “பயங்கரவாத தடுப்பு பிரிவின்” உயர் போலிஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேயும், அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு அந்த அதிகாரியின் நடமாட்டம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததா? அல்லது ஒரு தற்செயல் நிகழ்ச்சியா? ஹேமந்த் கர்கரே இறப்பதற்கு முதல் நாள் தான், தொலைபேசி ஊடாக அவருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அவர் தனது நெருங்கிய நண்பர் இளைப்பாறிய கேணல் ராகுல் கோவர்த்தனை தொடர்பு கொண்டிருக்கிறார். முக்கிய தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். “டைம்ஸ் ஒப் இந்தியா” நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை கூற கோவர்த்தன் மறுத்து விட்டார். ஆகவே ஹேமந்த் கொலை ஒரு தற்செயல் நிகழ்ச்சியா?

யார் இந்த ஹேமந்த்? அவரைக் கொல்வதால் யாருக்கு லாபம் அதிகம்? சில வருடங்களுக்கு முன்னர் மும்பை நகரிலிருந்து சிறு தொலைவில் உள்ள மலேகான் என்ற சிறு நகரில் ஒரு பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பில் சில முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். போலிசும், ஊடகங்களும் வழக்கம் போல இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வேலை என்று சொல்லி விட்டன. ஆனால் ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் துப்புத்துலக்கி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

பி.ஜெ.பி.,பஜ்ரங்தள் போன்ற இந்து மதவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு இளம் பெண் சாமியார், ஒரு பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரி உட்பட பல இந்து பயங்கரவாதிகளின் வேலை இது என்பது தெரிய வந்தது. “இந்து பயங்கரவாதிகள்” கைது செய்யப்பட்ட செய்தி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது.  நேர்மையான அதிகாரியான ஹேமந்தின் விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என ஊகிக்கப்பட்டது. விசாரணையை முடக்கவும், கைதிகளை விடுவிக்கவும் பி.ஜெ.பி. எடுத்த முயற்சிகள் எதுவும் அதிக பலனளிக்கவில்லை.

இதுவரை எந்த தாக்குதல்களும் ஏற்படுத்தாத விளைவுகளை மும்பை தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. என்றுமில்லாதவாறு இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் உட்பட பல பெரிய தலைகள் இராஜினாமா செய்துள்ளன. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தாக்குதலுக்கு ஒரு வெளிநாட்டு சக்தியை(பாகிஸ்தான்) சுட்டிக் காட்டியதன் மூலம், பிரச்சினையின் மூலவேர்கள் உள்நாட்டில் இல்லை என்று சொல்ல வருகின்றது, அல்லது புறக்கணிக்கின்றது. அப்படியானால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க ஆயத்தமாக இருக்கிறதா? அப்படி செய்யாவிட்டால் அல்லது இது போன்று இன்னொரு தாக்குதல் நடக்குமாக இருந்தால், காங்கிரஸ் ஆட்சி நிலைத்து நிற்க முடியாது. விரைவில் வரப்போகும் அடுத்த பொதுத் தேர்தலில் இந்து-தேசியவாத பி.ஜெ.பி. தேர்ந்தெடுக்கப்படலாம். அந்த அரசு பாகிஸ்தானுடன் மட்டுமல்ல சீனாவுடன் கூட போருக்கு செல்ல தயங்காது. எது எப்படி இருப்பினும் எதிர்கால இந்தியா வலது-தீவிரவாத அரசியலை முன்னெடுக்க தயங்காது. இதனை ஒரு அமைதியான சதிப்புரட்சி என்றும் கூறலாம். 

Exit mobile version