Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினம் – அழிவின் வரம்பிற்குள்! : சபா நாவலன்

சரியான திசை நோக்கித் திட்டமிடப்படாத நியாயமான போராட்டம் ஆயிரக் கணக்கான உணர்வுமிக்க போராளிகளை மண்ணோடு மண்ணாக்கியிருக்கிறது; ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கர வாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்; ஊனமுற்ற, அங்கவீனர்களின் சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; சிறைவைக்கப்பட்ட மக்கள் போக அனைத்துத் தமிழ் பேசும் சிறுபான்மையினரும் இலங்கை எங்கும் ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சரத் பொன்சேகா என்ற போர்க்குற்றவாளியை அரசியல் சின்னமாக முன்னிறுத்தி தமிழ்ப் பேசும் மக்கள் குறித்துப் பேச முனைகின்ற ஜே.வி.பி யும் , 50 ஆயிரம் மக்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றொழித்த மகிந்த ராஜபக்ச அரசும் இன்னும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் குறித்துப் கொண்டிருக்க உலகமெல்லாம் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் புலிகளின் புலம்பெயர் தலைமை எந்தத் தார்மீகப் பொறுப்பும், குற்றவுணர்வும் இல்லாதது போல் கம்பீரமாய் மேடை போட்டுப் பாட்டுப்பாடி இன்னொரு தீபாவழி போல்,27ம் திகதி நவம்பர்  அன்று  மாவீரர் தினம் கொண்டாட அததனை ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறது.

இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள், அதன் புலம் பெயர் அங்கங்கள், அவற்றின் சித்தந்தக் கூறுகள், அரச சார் தன்னார்வ நிறுவனங்கள், இந்திய மேலாத்திக்க அடக்குமுறை அனைத்துமே இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.

புலிகளின் தோல்வியிலிருந்தும், போராட்டங்களின் தோல்வியிலிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட ஆயிரமாயிரம் தமிழ்பேசும் மக்கள் இலங்கையிலும் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் அதிகார வர்க்கத்தின் அரசியல் நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் இடையேயான வேறுபாட்டை இனம் காண ஆரம்பித்துள்ளார்கள்.
ஈழப் போராட்டத்தின் தோல்வி என்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளின் புதிய நிலைகளிற்கும் உரைகல்.

ஆயினும், பெருந்தேசிய ஒடுக்குமுறாக்கெதிரான தமிழ் பேசும் மக்களின் 60 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்ட போராட்டம் புலம்ம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை இன்னும் புலிகளின் சிந்தனை முறையின் வரம்புகளுக்குள் தான் தேங்கியிருக்கின்றது என்பதை மாவீரர்தின ஏற்பாடுகளும் அதன் உணர்ச்சி அரசியலும் வெளிப்படுத்துகின்றன. அதிர்ச்சியளிக்கும் பெரும் பணச்செலவும், பணச் சேகரிப்பும், உணர்ச்சி அரசியலும் புலிகளின் புலம் பெயர் ஆதரவுத் தலைமை இன்னமும் மக்களின் உணர்வுகளை தமது சுயலாப நோக்கங்களிற்காகப் பயன்படுத்துகின்ற அவல நிலையே காணப்படுவதை உணர்த்தி நிற்கிறது.

ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களின் பக்கத்திலும், ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டங்களின் சார்பிலும் தான் அதிக வலிமையும் பலமும் அமைந்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, மொத்த உலகத்திலும் அவர்கள் தான் பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மைக்கு எதிரான சிறுபான்மை ஒடுக்கும் அரச பயங்கரவாதம் ஒவ்வொரு நிமிடமும் அடக்குமுறைக்கான வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது.

புலிகள் என்ற எல்லைகளைக் கடந்து மரணித்துப்போன அனைத்து மக்களதும் போராளிகளதும் எழுச்சி நாளாக ஒரு நாள் பிரகடனப்ப்படுத்தப்பட வேண்டும். அந்த நாளில் பாலஸ்தீன மக்கள் அழிக்கப்படும் போது தெருவிற்கு வந்து போராடிய ஐரோப்பிய மக்களும், உலகெங்கும் பரந்து வாழும் மனிதாபிமானிகளும் எங்களோடு கைகோர்த்துக் கொள்வர். அந்த நாளில், ஒடுக்கப்பட்ட தேசிய இனமான எமது போராட்டம் உலகத்திற்கு உணர்வுபூர்வமாக அறிவிக்கப்படும்.

Exit mobile version