Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மார்க்சியம், தேசியம், அடையாளம் : சபா நாவலன்

காலனி ஆஅதிகக்காலகட்டத்திலும் அதற்குப் பிற்பட்டகாலத்திலும் மூன்றாமுலக நாடுகளின் இயல்பான வளர்ச்சிப்போக்கிற்கெதிராக, அன்னாடுகளின் சிந்தனையாளர்களையும் சிந்தனைப் போக்கினைக் கையாள்வதிலும் ஏகாதிபத்திய நாடுகள் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளன. சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனை என்பதைத் தீர்மானிக்கும் புறநிலைச் சக்திகளை மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைக் கையாள்வதனூடாக அதிகார சக்திகள் மாற்றியமைத்துக் கொள்கின்றன. நிரந்தரமற்ற தற்காலிகமான இந்த மாற்றங்கள் அனைத்தும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை நிரந்தரமாக நிறுத்த முடியாதாயினும்,இடதுசாரி சிந்தனையளர்களின் சரியான ஆய்வும் அணுகுமுறையும் அருகிப்போன நிலையில் புதிய திரிபுகளும் சமூகத்தின் இயக்கத்திற்கெதிரான தத்துவங்களும், சமூகத்தை மேலும் மேலும் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன.

பின்னவீனத்துவமும், அடையாள அரசியலும், தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் “லும்பன்களும்” இணைகின்ற ஒருங்கு புள்ளியில் சமூகத்தின் எதிர்ப்பியக்கங்கள் திசை வழி தற்காலிக பின்னடைவைச் எதிர்நோக்குவதை குறைத்து மதிப்பிட முடியாது.

சமூகத்தை வகைப்படுத்தல்

மார்க்சிய ஆய்வு முறை என்பது சமூகக் கட்டமைப்பை அடித்தளம் மேற்கோப்பு என்ற இரண்டு படிமங்களாகப் வேறுபடுத்துகிறது வகுக்கிறது. அடித்தளத்திற்கும் மேற்கோப்பிற்கும் சதா மாறுகின்ற உறவு இருந்துகொண்டே இருக்கிறது என்றும் அது கருதிகிறது.

அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அவற்றிற்கிடையேயான உள்முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அடித்தளம்

முதளாளித்துவ சமூகத்தில் உற்பத்தி உறவு என்பது பிரதானமாக மூலதனத்தை வசமாக்கிவைத்திருக்கும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலானதாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இதே உறவு என்பது நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் பண்ணை அடிமைகளுகும் இடையிலானதாகும். காலனியாதிக்க நாடுகளில் இந்த உற்பத்தி உறவு என்பது மிகவும் சிக்கலான அமைப்பைக்கொண்டிருந்தன. உலகமயமாதலின் பின்னான காலப்பகுதியில் உலக முதலாளிகளும் இந்த உற்பத்தி உறவுகளின் நேரடியான அங்கமாக மறியுள்ளனர்.

மூன்றாமுலக நாடுகளில் இவை வெறுமனே முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான உறவு, அல்லது நிலப்பிரபுக்களுக்கும் பண்ணையடிமைகளுக்கும் இடையிலான உறவு என்ற இலகுவான வரைவிற்கு அப்பால் புதிய வேறுபட்ட உறவுகளை உலக முதலாளித்துவத்தின் இணைவோடு உருவாக்கியுள்ளது என்பது மட்டுமல்லாது, முகாமைத்துவ வர்க்கம் அதன் உற்பத்தித் திறனுள்ள மக்கள் பிரிவு உற்பத்தித் திறனற்ற பிரிவு போன்ற சிக்கலான உற்பத்தி உறவு முறைகள் உருவாகியுள்ளன.

உற்பத்தி சக்திகள் என்பது மனித உழைப்பு ஈறாக பல்வேறு உற்பத்திக் கருவிகளைக் குறிக்கும். காலனியாதிக்கதிற்குட்பட்ட நாடுகளில் தமது அன்னிய மூலதனத்தை இன்னாடுகளில் உட்செலுத்துவத்ற்காக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டுத் தடுத்தன. இதன் விளைவாக உற்பத்தி உறவுகளின் அமைப்பு முறையானது மிகவும் சிககலான அமைபாக மாறியது.

உற்பத்தி உறவுகளையும் உற்பத்தி சக்திகளையும் சார்ந்த சமூகத்தின் பகுதியையே மார்க்சிய ஆய்வுமுறை சமூகத்தின் அடித்தளம் என வரையறுக்கிறது.

மேற்கோப்பு

தவிர, கலை, கலாச்சாரம், தேசியம், சிந்தனை முறை, சட்டம், சமூக ஒழுங்கு, சாதியம், மக்கள் பிரிவுகள் போன்றன சமூகத்தின் மேற்கோப்பு என என வரையறுக்கப்படும்.

ஆக, சமூகத்தின் அடித்தளமும் அதன் இயக்கமும் தான் மேற்கோப்பை நிர்ணயிக்கும். அதேவேளை மேற்கோப்பின் மாற்றங்கள் அடித்தளத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கும் காரணியாக அமைவதில்லை எனினும், அடித்தளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மன்னராட்சிக் காலத்திலிருந்த சட்டங்களும் அதன் அமைப்பு முறைகளும் முழுமையான நிலப்பிரபுத்துவ அடித்தளத்திற்கேற்றவாறு அமைந்தன. முதலாளித்துவ சமூகத்தில் இதே அமைபு முறை முற்றாக மாறிப் போனதுடன் புதிய அமைப்பு முறைகள் உருவாகின.
பெண்கள் மனித இனத்தை உற்பத்தி செய்யும் அடிமை இயந்திரமாக இருந்த நிலை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கணப்பட்டது.

உழைப்புச்சக்தி முதலாளித்துவக் கட்டமைபிற்கு அவசியமான நிலையில், பெண் விடுதலைக்கான கோஷங்கள் முன்வைக்கப்பட்டன. நிலத்தோடும் குடும்பத்தோடும் பிணைகப்பட்டிருந்த பெண் சமூகத்தின் தேசியப்பொருளாதாரத்தில் பங்கேற்க ஆரம்பித்தாள்.
சமூகத்தின் அடிக்கட்டுமானம் மாறிய போது அதற்கேற்ப அதன் மேற்கோப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் ஒரு விளைவுதான் இது.
சமூகதிதின் அடிகட்டுமானத்தில் ஏற்பட்ட வரலாற்றுரீதியான மாற்றத்தின் இந்திய சமூக சூழ்னிலைகளுக்கேற்ற மேற்கோப்பின் உருவாக்கமே வர்ணசத்திர அமைப்பு முறையும் சாதீயமுமாகும்.

கி.மு.700ம் ஆண்டளவில் வேதமரபின் தொடர்ச்சியாக உபநிடதங்கள் தோன்றி வலுப்பெறத் தொடங்கின. பிரமம், ஆத்மா என்பவற்றை முதன்மைப்படுத்தும் உபநிடதங்கள் உடலுக்குள் அதிலிருந்து வேறுபட்ட நிலையில் ஆத்மா இருப்பதாகவும் உலகில் கலந்தும் அதிலிருந்து வேறுபட்டும் பிரமம் என்ற பொருள் உள்ளதென்றும் குறிப்பிடுகின்றன. இவை உணரப்படவேண்டியது என்பதே உபநிடதங்களின் நிலைப்பாடு. இந்த வகையான உணர்வு பரஞானம் என்றும் இதனை எய்துவதற்கு தியானம், அதனூடாக மனப்பக்குவம் போன்ற பயிற்சிகளை முன்வைக்கும் உபநிடதம் வேதங்களின் வளர்ச்சிநிலைத் தொடர்ச்சியாகும்.

உபநிடதக் காலகட்டம் என்பது இந்தியாவில் இரும்பு உபயோகத்துக்கு வந்த காலகட்டமாகும். அக்காலத்திலேயே அடிமைச் சமூக அமைப்பு முறைக்கெதிரான சித்தாந்தங்களும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. நிலத்தோடு மனிதன் பிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தான். பிராமணர்களின் சமூக ஆதிக்கத்தாலும் சித்தாந்தங்களாலும் பலம்பெற்றிருந்த அதிகார வர்க்கம் வேத அமைப்பின் உள்ளும் புறமும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது.

இருக்கு வேத காலத்தின் தொடக்கநிலையில் காணப்பட்ட வேள்வி முறையானது, பின் வந்த வேத காலங்களிலும் பிராமண ஆதிக்கம் எழுந்த சூழலிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எய்தியது.

பெரும் பொருட்செலவில் கால்நடைகளைப் பயன்படுத்தி வேள்விகள் நடத்தப்பட்டன. விவசாயத்திற்காக அதிக அளவில் விலங்குகள் பயன்படுத்தப்படாத இந்தக் காலகட்டத்தில் அடிமைமுறை மேலோங்கியிருந்தது.

சமூக அமைப்பு முறை மாற ஆரம்பித்தபோது விலங்குகளின் தேவை விவசாயத்திற்கு அதிகமானது. இரும்பின் உபயோகம் இதனோடு இணைந்துகொள்ள புதிய உற்பத்தி சக்திகள் உருவாகின.

இந்த வேதவேள்விக் கலாச்சாரத்திற்கு எதிராக வேதத்திற்கு உள்ளிருந்தே எழுந்த முதற் போராட்டத்தின் வெளிப்பாடே உபநிடதச் சிந்தனை என்று கருதப்படுகின்றது. உபநிடதச் சிந்தனை ஞானம், தியானம், முக்தி, ஒடுக்கம் போன்ற சமுதாய நெறிகளை முதன்மைப்படுத்தின.

எதேச்சாதிகாரத்திற்கு எதிராகவும் மனிதர்கள் நேரடியாக அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகவும் உணர்வுகள் எழுந்தநிலையில் இந்தச் சமூகநெறி தேவையானதாக அமைந்தது.

உபநிடதம் உருவாக்கிய முக்திநிலை என்பது அதிகார ஆசைக்கு எதிரான உணர்வை முன்நிலைப்படுத்திற்று. இரும்பு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட ஆரம்ப மாற்றத்திலிருந்து உருவான சமூகப் பகைப்புலமே இந்த சித்தாந்த மாற்றத்தை முன்நிறுத்திற்று.

இந்தக் காலகட்டத்தின்போதே சமணம், பௌத்தம், போன்ற வேத நிலையிலிருந்து வேறுபட்ட தத்துவங்கள் உருவாகின. கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து உருவாகத்தொடங்கிய இந்தச் சமூக அமைப்பிலான மாற்றம் பல ஆண்டுகள் வரையில் தொடர்ந்தன.
கி.மு. 5ம் நூற்றாண்டளவில் உற்பத்தி உறவுகளிடையே உள் முரண்பாடுகள் அதிகரித்தன.

அதிகார சக்திகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மரணமும் பீதியும் வறுமையும் மேலோங்கியிருந்த இந்தக் காலகட்டம் எல்லாச் சமூக மாற்றங்களினதும் ஆரம்ப கட்டத்தினைப் போலவே துன்பியல் நிறைந்திருந்ததாகக் காணப்பட்டது.
இவற்றுக்கெதிரான போராட்டங்களினதும் நிலப்பிரபுத்துவக் காலகட்ட எழுச்சியின் ஆரம்பத்தினதும் நிறுவன மயமாக்கல்தான் உபநிடதத்தின் தோற்றமும், இதே போல புத்தமதத்தின் தோற்றமுமாகும்.

போருக்கு எதிரான புத்தமதம் என்பது சமத்துவத்தையும் சமாதானத்தையும் போதித்தது. தம்மைச் சுற்றியிருந்த சமுதாயத்தில் போரையும் அதனால் ஏற்பட்ட மரணங்களையும் பேரழிவுகளையும் சீரழிவுகளையும் எதிர்த்தவர் புத்தர். ரோகிணி என்ற நதியின் நீருக்காக புத்தரின் உறவு சார்ந்த இனத்தவர் ஆயுதம் தாங்கிப் போராடியதைக் கண்டவர் கௌதம புத்தர்.

கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து 5ம் நூற்றாண்டு வரையில் இந்தியா முழுவதும் தீவிரமான நிலப்பிரபுத்துவ மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக்காலப் பகுதியில்தான் இந்தியா முழுவதும் இருந்த சிறிய இனக்குழுக்களும் அதன் அரசுகளும் மோதிக்கொண்டன. நிலப்போட்டி அதிகரித்துப் பலர் அழிந்துபோயினர். சாம்ராஜ்யங்கள் உருவாகத் தொடங்கின. இதே காலப்பகுதியில் கிரேக்கத்திலும் சிறிய குழுநிலை அரசுகள் அழிந்து சாம்ராஜ்யங்கள் உருவாகின. இந்தியாவைப்போலவே இதனுடன் இணைந்து பல தத்துவங்கள் உருவாகின..
இதனைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதிலும் இருந்த சாம்ராஜ்யங்கள் தெற்குவரை பரந்து விரிந்தன. இந்த சாம்ராஜ்யங்களின் விரிவாக்கம் இனக்குழுக்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று.

இனக்குழுக்கள் சுய அதிகார நிலையை இழந்து பேரரசுகளின் அங்கங்களாக மாற நேர்ந்தது. அதிகார நிலையில் நிகழ்ந்த இந்த மாற்றம் சமுதாயப் பண்பாட்டு நிலையில் மாற்றங்கள் நிகழவும் வழிகோலியது.

சமூகத்தின் மேற்கட்டுமானமாகிய இந்தச் சமூக, பண்பாட்டு நிலை என்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளானது. பேரரசுகளால் வென்றெடுக்கப்பட்ட இனக்குழுப் பிரதேசங்களில் சமய நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் போன்றவை மையப் பேரரசின் பொதுவான நிலைக்கு ஏற்ற இயைபுபெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனூடாக பல புதிய சிந்தனைகளும் தத்துவார்த்த மோதல்களும் உருவாகின.
இந்த நிலையில் பௌத்தம், சமணம், வேதமரபு, ஆரீவகம் போன்ற சிந்தனைகளையும் தத்துவங்களையும் பேணி நின்றோருக்கு அதனைப் பெருந்திரளான மக்களுக்கு ஏற்றதாக ஜனரஞ்சகப்படுத்தவேண்டிய தேவை முன்னெழுந்தது.

அந்தந்த இனக்குழுக்களின் தொழில்முறைகள், பண்பாடு என்பன வர்ணப் பாகுபாட்டுடன் பொருத்தப்பட்டன. சிறிய தெய்வங்கள் வேத மரபின் தெய்வங்களுடனும் வழிபாட்டு முறையுடனும் பிராமண அறிஞர்களால் பொருத்தப்பட்டன. இந்துக் கடவுளான சிவன் சாம்ராஜ்ய ஒருமைப்பாட்டின் குறியீடாக்கப்பட்டார்.

நிலப்பிரபுத்துவ எழுச்சிச் சூழலுக்கேற்ப வேத மரபின் அடிப்படையாகக் கொண்டெழுந்த சமுதாய மாற்றம், பெருந்திரளான மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. உபநிடதக் காலத்தில் கூறப்பட்ட பிரமம் தியானம் என்பனவும் ஆத்மா ஒழுக்கநெறிகள் போன்றவையும் இதிகாச கால தெய்வ நம்பிக்கைக்கேற்ப தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தால் சீரழிந்துபோன உள்நாட்டு சமூகக் கட்டமைப்பை சீர்செய்யவும் மக்கள் மத்தியில் எழுந்த சமூக மாற்றத்தினால் எற்பட்ட சீரழிவையும் குழப்பத்தையும் சீர்செய்யவும் ஆட்சியாளர்கள் மீதான நம்பிக்கையை வலியுறுத்தவும் ஏற்கெனவே உருவாகி வளர்ந்த வர்ணாச்சிரம ஒழுங்கு முறையை கட்டிக்காக்கவும் தெய்வ நம்பிக்கையுடன் கூடியதொரு தத்துவ விளக்கம் தேவைப்பட்டது. இந்தத் தேவையின் பொருட்டே கீதை உருவானது.

இவ்வாறு தான் சாதீயம் இந்திய மண்ணில் உருவானது. வர்ணசத்திர அமைப்பு சமூகதிதில் விதைககப்பட்டது.
தென்னிந்தியாவில் ஏற்பட்ட நிலப்பிரபுத்துவ மறுமலர்ச்சியுhடாக, வட இந்தியாவிலிருந்து தென்னின்னிதியாவிலும் சாதி அமைப்புபு முறை உள்வாங்கப்பட்ட்டது.

தென்னிந்தியாவைப் பொறுத்த் வரை இந்துமதமானது, பௌத்தம் சமணம் போன்ற மதங்களுடன் போட்டி போட வேண்டிய நிலையிலிருந்தாலும், ஒப்பீட்டள்வில் முற்போக்கான சமூக இயக்கத்தை வலியுறுத்திய இவ்வாறான மத்ங்கள் தோல்வியத்தழுவிக்கொண்டன.

நிலப்ப்பிரபுத்துவத்திற்கே உரித்தான பிறப்பு இறப்புச் சடங்குகள், திருமணம், அதற்கான தத்துவம், குடும்ப வாழ்க்கை முறை போன்ற சமூக மேற் கட்டுமானத்திற்குரிய அமைப்புக்களை ஏற்கனவே கொண்டிருந்த வேதக்கலாச்சாரம் வெற்றி பெற, இந்து மதமும் வேதக்கலாச்சாரமும் வர்ணசாத்திரமும் தென்னிந்தியாவையும் ஆட்கொண்டது.

இவ்வாறு சமூக இயக்கத்தின் குறித்த சமூக மாற்றத்தினூடான அடிக்கட்டுமானம் உருவாக்கிய மேற்கோப்பே சாதீய அமைப்பாகும்.

இங்கே இந்த மேற்கோப்பான சாதீய அமைப்பு முறை என்பது அடித்கள மாற்றத்தின் நிழல் மட்டும்தானா? சமூகமாற்றத்தில் இந்த மேற்கோப்பானது எவ்வாறு பங்கு வகிக்கிறது? என்பன போன்ற கேள்விகள் ஏற்கனவே நீண்ட விவாத்த்திற்குட்பட்டதாகும்.
மார்க்ஸ் எங்கல்ஸ் போன்ற சமூக விஞ்ஞானிகள் சமூகமாற்றத்தில் மேற்கோப்பின் பங்கு முக்கியமானது என வலியுறுத்துகின்றனர்.
அடித்தளமே மேற்கோப்பை நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததெனினும் மேற்கோப்பானது அடித்தளத்தைப் பாதிக்கும். இந்தப்ப்பாதிப்பானது சமூக இயக்கத்தின் வேகத்தை நிர்ணயிக்கும் தன்மை கொண்டதாகும்.

நிலப்பிரபுத்துவத்துடன் உருவான மதங்கள், அந்தந்த நிலமைகளிற்கேற்ப சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக எல்லா நாடுகளிலும் உருவாகையிருந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் தேவைக்கேற்ப ஐரோப்பிய சூழலில் உருவானதுதன் கிறீஸ்தவ மதமாகும்.
இந்தியாவைப் போலல்லாமல் மக்கள் குழுககளிடையே தொடர்புகள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமையாலும், மக்கட் பரம்பலின் செறிவுத்தன்மை குறைவாக அமைந்திருந்ததாலும், நிலப்பிரபுத்துவ எழுற்சியால் உருவான மையப் பேரரசின் இயல்புகளிற்கேற்ப மக்களை ஒழுங்குபடுத்துவது அதிகார சக்திகளுக்கு கடினமாக இருக்கவில்லை. தவிர குழுனிலை சமுதாயத்தில் வலுவான வேறுபட்ட வழிபாட்டுமுறைகளும் இருந்திருக்கவில்லை. இதனால் மத்தினூடாக மக்களின் வேலைப்பிரிவினைகளை ஒழுங்குபடுத்திய போதும், இந்தியாவைப்போன்று இறுக்கமான சாதீய அமைப்புமுறையை சமூகத்தை ஒழுங்குபடுத்தும் கருவியாக உட்செலுத்த வேண்டிய தேவை எழவில்லை.

நிலப்பிரபுத்துவத்தின் ஆரம்பத்தில் இவ்வாறான மக்கட் பிரிவுகளின் உருவாக்கம் இருந்த போதிலும் அது சித்தாந்த மயப்படுத்ததப் படவில்லை. அத்ற்கான தேவையும் இருந்திருக்கவில்லை. மறுபுறத்தில் இந்தியாவில் உருவான சமுகத் தத்துவங்களுக்குப்பதிலாக ஐரோப்ப்பாவில் வ்ஞ்ஞானக்கண்டுபிடிப்புக்கள் உருவாகின. இயற்கைக்கெதிரான போராட்டம் வாழ்தலுக்கு அடிபடையான நிலையிலேயே இயற்கை விஞ்ஞானம் மூலாதாரமாகிற்று.

புத்தர் இயங்கியாலை முன்னிறுத்தினார். அஜித கேசகம்பளி என்ற இந்திய தத்துவ ஞானி புத்தர் காலத்திலேயே பொருள்முத்ல் வாதத்தை முன் வைத்தார்.

இந்தப் பின்னணியில் தான் ஒரே அடிக்கட்டுமானத்தைக் கொண்டிருந்த இரு சமூகங்கள் பண்பில் வேறுபட்ட மேற்கட்டுமானங்களைக் கொண்டிருந்தது.

இவ்வாறு பண்பில் வேறுபட்ட மேற்கட்டுமானங்கள் எவ்வாறு சமூகத்தின் இயக்கத்தைத் தொடர்ச்சியாகப் பாதித்தன என்பதே நம்முன்னாலுள்ள சமூக ஒழுங்கமைப்பாகும்.
சமூக மாற்றங்களூடாக உருவாகி வலுப்பெற்ற சாதீயம் என்பது அதிகார வர்க்கத்தின் ஆளுமைக்கும் அத்ற்கேற்ப சமூகத்தை ஒழுங்குபடுத்தவும் ஒத்துழைக்க நிலப்பிரபுத்துவம் மேலும் வலுப்பெற்றது. ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் சமூகத்தின் மேற்கட்டுமானத்தின் சித்தாந்த வலுவின்மையும் இயற்கைக்கெதிரான மனித்ர்களின் போராட்டத்தின் தேவையும் உற்பத்திசக்திகளின் வளர்ச்சியைத்துரிதப் படுத்திற்று.

இதனூடான மூலதன உருவாக்கம் தேசங்களை உருவாக்கியதுடன், முதலாளித்துவப் போருளாதார அமைப்புமுறையானது மக்களிடையே வேறுபாடுகளைக் களைந்து தேசியக்கலாச்சாரத்தை உருவாக்கிற்று.

இந்தியா கிழக்கிந்தியக் கொம்பனிகளால் அடிமைப்படுத்தப் பட்ட பின்னர், வளர்ச்சினிலையிலிருந்த இந்திய உற்பத்தி சக்திகள் தடைப்படுத்தப்பட்டன.

இந்தியா மீதான பிரித்தானிய ஆதிக்கம் மூன்று பிரதான கட்டங்களைக் கொண்டது.

1.கிழக்கிந்தியக் கொம்பனிகளின் காலகட்டம்:

கிழக்கிந்தியக்கொம்பனிகள் பிரித்தானிய அரசின் உதவியுடன் 1757 முதல் இந்தியாவைத்தமது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவர முற்பட்டது. கிழக்கிந்தியக்கொம்பனிகளின் ஒரே நோக்கமாக அமைந்தது, இந்தியா மீதான தனியுரிமையாகும். இத்ற்கான போராட்டத்தில் ஏனைய ஐரோப்பிய மற்றும் ஆங்கிலேயக்கம்பனிகளைத் தனிமைப்படுத்தி வெற்றிகண்டது.

மிகச்சில ஆண்டுகளிலேயே கிழக்கிந்தியக் கொம்பனிகள் பிரித்தானிய அரசிற்குப் பெரும்பணத்தை வரியாக வளங்குமளவிற்கு வளர்ந்தன. 1770 இல் கல்கத்தா பகுதியிலிருந்து மட்டும் பெறப்பட்ட வருமானத்தின் வரியானது பிரித்தானிய மொத்த வருமானத்தின் 2 வீதமாகும்.

இதே வேளை பிரித்தானிய நிர்வாக ஊழியர்களுக்கும், பொலிஸ் ராணுவம் போன்றவற்றிற்கும் செலவிடுவதற்காக இந்திய மக்களிடமிருந்து வரி வசூலித்துக்கொண்டது.

இவ்வாறான வரி வசூலிப்பை ஏற்கனவே நடைமுறையிலிருந்த் நிலப்பிரபுத்துவ அமைப்பினூடாகவே மேற்கொண்டது.

உள்ளூர் நிர்வாகிகள், ஸமீந்தார்கள் சிறுனிலப்பிரபுக்கள் போன்றோருhடாகவே இதனை நிறைவேற்றிய கிழக்கிந்தியக் கொம்பனிகளுக்கு சாதீயமும் நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையும் உறுதுணையாக அமைந்தது.

மிகச்சில மாற்றங்கள் கூட அவர்களது வரி வசூலிப்பை இலகுபடுத்தவே மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் ஏற்கனவே இருந்த கல்விமுறை அழிக்கப்பட்ட்டதுடன் 18ம் நூற்றாண்டின் இறுதிக்காலகட்டத்தில் 2 பாடசாலைகள் மட்டுமே நிறுவப்பட்டன. ஆக சமூகத்தின் மேற்கோப்பில் எந்த மாற்றமும் நிகழாது ஏற்கனவே இருந்த அமைப்புமுறையே பேணப்பட்டது. சாதீய அமைப்பு மேலும் வலுப்பெற்றது.

2. சுதந்திர வர்த்தகக் காலகட்டம்

கிழக்கிந்தியக் கொம்பனிகள் இந்தியாவைத்தமது முழு அதிகாரத்திற்குக் கொண்டுவந்த சற்றுப்பின்னதான காலகட்டத்தில், பிரித்தானியாவில் ஏனைய வர்த்தக ஸ்தாபனங்களும் பலம் பெறத்தொடங்கின. இவை இந்தியாவில் தமது ஆதிக்கத்திற்காகப் போராட ஆரம்பித்தன. இந்த நிலையில் 1813 ம் ஆண்டு இந்தியாவை பிரித்தானிய அரசு தமது அதிகாரத்திற்குக் கீழ் கொண்டுவந்தது. கிழக்கிந்தியக் கொம்பனிகள் உள்ளூர் அதிகாரத்தில் பங்கேற்ற போதிலும் பிரித்தானிய அரசே முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தது.

இதே காலப்பகுதியில் பிரித்தானியாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டு பாரிய மாற்றங்கள் ஏற்பட்டது. பிரித்தானியா உலகின் முதலாவது தொழிற்துறை மற்றும் ஏற்றுமதி நாடாகத்திகழ்ந்தது.

தமது தொழிற்துறை மூலதனத்தைக் காலனி நாடுகளிலும் விரிவாக்கத்திட்டமிட்ட் பிரித்தானியா, இந்தியாவில் தனது நலனுக்கேற்ற கல்வித்திட்டத்தை விரிவாக்க ஆரம்பித்தது. இவ்வாறான சூழல் கிழக்கிந்தியக் கொம்பனிகளிலிருந்து முற்றாக வேறுபட இந்தியாவில் அன்னிய ஆதிக்கத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது.

பிரித்தானிய உற்பத்திப் போருட்களுக்கு மேலதிக சந்தை தேவைப்பட்ட நிலையில் இந்திய உற்பத்திகள் தடுக்கப்பட்டு அன்னியப் பொருட்களால் பிரதியீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் மிகப்பெரும் மூலவளம்; சுரண்டப்பட்டு பிரித்தானியக் கம்பனிகளுக்கு மூலதனமாக்கப்ப்ட்டது.

இந்தியாவிற்குள் முதலிட்ட பிரித்தானிய முதலீட்ட்டளர்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட இந்திய முதலீட்டாளர்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டன.

இதனால் இந்திய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தடுக்கப்பட்ட அதே வேளை அன்னியப் பொருளாதாரத்தின் உள்ளூர் தரகர்களாக நிலப்பிரபுக்கள் உயர்த்தப்பட்டனர். 1 8 3 3 இல் பிரித்தானிய நலனுக்கேற்ப மேலும் விரிவாக்கப்பட்ட கல்வித்திட்டத்தில் நிலப்பிரபுகளின் மேலணிகளும் பிராமணர்களுமே பலனடைந்தனர். இதனூடாக சாதீயமும் நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும் மேலும் பாதுகாக்கப்பட்டது.

சமுதாயத்தின் மேற்கோப்போ அடிக்கட்டுமானமோ எந்த மாற்றத்தையும் அடையவிலலை.

3. மூலதன உருவாக்கத்திற்கான காலகட்டம்

1860 களில் உருவான மூன்றாவது கட்ட மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது உலகப்பொருளாதாரத்தில் ஏற்பட்ட மூன்று முக்கிய மாற்றங்களாகும்.

(அ) உலகின் வேலைத்தளம் என அழைக்கப்பட்ட பிரித்தானியாவின் தொழில் ஆதிக்கம் முடிபுக்கு வர, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி ஆரம்பித்தது. பிரன்ஸ், ரஷ்யா, பெல்ஜியம், அமெரிக்கா பின்னதாக ஜப்பான் போன்ற நாடுகள் சக்த்திமிக்க தொழிற்சாலைகளை ஆரம்பித்தன.

(ஆ) 19 ம் நூற்றாண்டின் கடைசிக் காற்பகுதியில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியின் பாதிபால் புதிய இரும்பாலைகளும் இரும்பின் முக்கியத்துவமும் நாடுகளின் அதிகாரப்போட்டியை அதிகரித்தது. மின்சாரமும் உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்த உருவான மாற்றங்களூடாக ஏகாதிபத்தியங்களுக்கு மூலப்பொருட்களின் தேவை அதிகரித்தது.

(இ) இவ்வாறான தொழிற்புரட்சியுhடான மூலதன உருவாக்கம், மூலதனத்தை சில குறித்த நபர்களதும் வங்கிகளதும் கைகளைல் முடக்கியது. இந்த முடக்கப்பட்ட முதலீட்டுகளுக்கு மறு முதலீட்டுத்தளம் தேவைப்பட்ட நிலையில், இந்தியாபோன்ற நாடுகள் மிகப்பெரும் வளமாக அமைந்தது.

இந்த நிலையில் இந்தியாவின் அன்னிய மூலதனத்தின் முதலீடுகள் அதிகரித்த அதேவேளை அத்ற்குவசதியாக உள்ளூர் வர்த்தகமும் திறந்து விடப்பட்டது.

அன்னிய முதலீட்டுக்குவசதியாக பெரும் சாலைகளும் நகர்ப்புறங்களும் உருவாக உள்ளூர் தேசிய மூலதனமும் வளர ஆரம்பித்தது. மேற்கு நாடுகளைப் போலவே தேசிய மூலதனத்தின் உருவாக்கம், அன்ன்னிய மூலதனத்தோடு போட்டிபோட விளைந்த அதே நேரம் , நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புக்கெதிராகவும் தனது கரங்களை உயர்த்தியது. புதிய கட்டமைப்பு பழைய கட்டமைப்பை தகர்க்கவிளைந்தது.

இந்த சூழ்னிலையில் அன்னிய மூலதன ஆதிக்க சக்திகளுக்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிராக தேசிய மூலதனத்தின் ஆதிக்க சக்திகள் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அன்னிய மூலதன ஆதிக்கசக்தியான ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும் சமரசத்திற்குவர ஆரம்பித்தன. அதாவது நிலப்பிரபுக்கள் ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்துகொண்டு தம்மைப் பாதுகத்துக் கொண்டனர். இந்தியக் கல்விமுறையும் இதற்கோப்ப பிரித்தானியர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. நிலப்பிரபுக்கள் அதிகாரத்தின் முக்கிய கூறுகளாயினர். மறுபடி நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு பாதுகாக்கப்பட தேசிய மூலதன உருவாக்கம் சீரழித்துச் சிதைக்கப் பட்டதுடன் அன்னிய மூலதன வளர்ச்சிக்கு ஏதுவாக மாற்றப்பட்டது.

நிலப்பிரபுக்களின் நலன்கள் ஏகாதிபத்தியத்தின் நலங்அளுடன் ஒத்துப்போன நிலையில், சுதந்திரம் என்ற பெயரில் நிலப்பிரபுக்களின் கைகளில் அதிகாரம் வளங்கப்பட்டது.

ஆக இந்திய சமூகத்தின் உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மாற்றம் குறைனிலை மாற்றமாக நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைகள் ஒருபுறத்தில் பேணப்பட புதிய சிக்கலான சமூக அமைப்பு உருவானது.

இறுதியாக நிலப்பிரபுத்துவ உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் கொண்ட சமூக அடிக்கட்டுமானமானது முழுமையான மாற்றம் பெறாமல் அன்னிய மூலதனத்தோடு சார்ந்த வளர்ச்சி அடையாத சமூக அமைப்புமுறை சாதீயத்தையும் அதனூடான அடிமைத்தனத்தையும் மேலும் வலுப்படுத்திற்று.

இலங்கை அரசியலிலோ இந்திய அரசியலிலோ தேசியவாதச் சிந்தனை ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருப்பதற்கு அதிகார சக்க்தியாக நிலப்பிரபுத்துவம் உருவாக்கப்ப்ட்டதுதான் காரணம்.

இவ்வாறு திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்ட தேசிய மூலதனத்தின் உருவாக்கத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக நிலப்பிரபுத்துவ அதிகார சக்திகள் அன்னிய தேசத்தின் மூலதனத்தோடு சமரசம் செய்து கொண்டனர். இதனால் இந்திய முதலாளித்துவம் அன்னிய முதலாளித்துவத்தின் தரகர்களாக உருவாகியது.
உலகமயமாதலின் பின்னான காலப்பகுதியில் இந்தியத் தரகுகள் உலக முதலாளித்துவத்தின் பங்காளர்களாக உருமாறியது மட்டுமல்ல, இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உலக முதலாளித்துவத்தின் நலன்களுக்கு ஏற்ப உற்பத்தி சக்திகளின் நகர்வில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இந்த மாற்றங்கள் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சியின் போதான மாற்ரங்களாக அல்லாது செயற்கையான சிக்கலான மாற்றங்களாக அமைந்தன. இந்தச் செயற்கையான மாற்றங்களுக்கு ஏற்பதான மேற்கட்டுமானத்தில் திணிக்கப்பட்ட மாற்ரங்கள் தான் கலாச்சார உலகமயமாதலாகத் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டன.

திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட கலாச்சார உலகமயமாதலின் எதிர்வினையாக அடையாளங்களை முன்னிறுத்தும் அரசியல் உருப்பெற்றது.

மக்கள் கூட்டங்களின் அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்படும் போது அதற்கெதிரான அமைப்பும்யமான போராட்டங்களை தன்னகப்படுத்தி சீர்குலைப்பதற்குத் தன்னார்வ நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன.
சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் இயல்பற்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றங்கள் தேசிய அடையாளத்தை மேலும் வலுவாக்குதலோடு மட்டுமன்றி தேசியப்போராட்டங்களின் முற்போக்குத் தன்மையையும் உணர்த்தி நிற்கிறது.

2007 இல் தேசம்நெற் இணையத்திற்காக எழுதப்பட்ட கட்டுரை சில மாற்றங்களோடு தலயங்கத்தின் கீழான முதலாவது பகுதியாக மறுபதிவாகிறது.  .. இன்னும் வரும்..

Exit mobile version