Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த பார்வையில் புலம்பெயர் தமிழர்களும் சுனாமியும் : தேவகி

2004 ஆம் ஆண்டில் இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவான செலவீனத்தை ஆழிப்பேரலைகளினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் கொண்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரை நோர்வேயிலிருந்து வாரம் ஒருமுறை வெளிவரும் ’காலை இதழ்’ ( Morgen Bladet) எனும் பத்திரிகையின் வெளிவந்த மூலக்கட்டுரையின் உள்ளடக்கத்தை பிரதானமாகப் பிரதிபலிக்கிறது.

இலங்கையில் ஆழிப்பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உலக நாடுகள் பல்வேறு வழிகளில் தமது பங்களிப்பை வழங்கியிருந்தன. இக்கட்டுரை நோர்வே தொடர்பான நிலைமைகளை மட்டுமே விளக்குகிறது. உதவிகளை வழங்கிய ஏனைய பிறநாடுகள் தொடர்பாக அந்தந்த நாடுகளைச் சார்ந்த ஊழல் தொடர்பான விழிப்புணர்வு கொண்டோர் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரை மொழியாக்கம் செய்யப்படுகிறது.

அண்மையில் காலைஇதழ் பத்திரிகைச் செய்தியாளர்கள் கிழக்கிலங்கையான திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளுக்கு சென்று வந்திருந்தனர். அங்கு வசிக்கும் மக்களுடனான இச்செய்தியாளர்களின் உரையாடல்கள் இவ்வாறு பதிவுகளாகியுள்ளன.
2004.12.26 ஆம் திகதி இலங்கையை தாக்கிய சுனாமியிற்கு பின் அவசரகாலநிலைமகளுக்கான உதவிக்கென எட்டு பில்லியன் நோர்வேயிய குரோணர்கள் வழங்கப்பட்டிருந்தன.

350 சர்வதேச அமைப்புக்கள் அவசரகால உதவிச்சேவையில் ஈடுபட்டிருந்தன.

நோர்வே சுமார் 288. 2 மில்லியன் குரோணர்களை மூன்று வருடங்களுக்கு வழங்கி வந்திருந்தது.

உதவித் தொகையை கணிப்பிட்டு பார்க்கும் போது சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சுமார் 40ஆயிரம் குரோணர்களாகப் பங்கிட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இப்புள்ளிவிபரங்களை நாம் நோர்வேயிற்கான வெளிவிவாகார அமைச்சு, நோராட் மற்றும் Tusnami Evaluation Coalition இல் காணலாம்.

குடும்பத்தினரின் குடிசைக்கு வெளியே கடற்கரை மணலில் ஒரு பிளாஸ்ரிக் கதிரையில் மீனவர் பீரிஸ் அமர்ந்திருக்கிறார். கடலையும், படகுகளையும், குடிசையின் சுவருக்கு அருகே இருக்கும் பற்றிக் கொள்ளக் கூடிய முனைப் பகுதியொன்றைக் காண்பிக்கிறார். இரு பிள்ளைகளையும் இறுக்கிப் பிடித்தபடி தனது மனைவி அந்தப் பேரலைகளினால் அலைக்கழிக்கப்பட்டதை நினைவு கூருகிறார். வாழ்வாதாரத்தை வழங்கி வந்த கடலானது 26.12.2004 அன்று பலரின் உயிரை காவு கொண்டது, இது கிழக்கில் திருகோணமலையில் இருக்கும் கிராமம் ஒன்றின் நிலைமை.

ஆழிப்பேரலை இலங்கையில் 35000 பேர்களின் உயிர்களைப் பலிகொண்டது. அரைமில்லியன் மக்கள் தமது வீடுவாசல்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர். கிழக்குப் பிராந்தியம் மிகவும் பாதிப்புகளை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும், இதில் குறிப்பாக மீன்பிடித்தொழில் ஈடுபடும் மக்கள் மிகுந்த பாதிப்புளை எதிர் நோக்கியிருந்தனர்.

உதவி நிறுவனங்கள் படையெடுத்தன, இதைப் போல நிதிஉதவியும் வாரி வழங்கப்பட்டது. தற்போது பீரிஸ் மீண்டும் கடற்கரைக்குத் திரும்பியுள்ளார். குடும்பத்தினரின் எளிமையான குடிசை மீள அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு புதிய வீடும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடு கடற்கரையிலிருந்து சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது, சுனாமிக்குப் பின் வெறுமையாக கிடந்த கடற்கரையோரத்தை உல்லாசப் பிரயாணத்துறையை வளப்படுத்துவதற்கு உகந்த பகுதியாக அரசு மதிப்பிட்டது. கடற்கரையிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தை சேதப்பாதுகாப்பு வலையமாகப் பிரகடனப்படுத்தியது. இப்பகுதியில் வீடுகளை கட்டுவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது, இதனால் கரையோரப் பகுதிகளில் வசித்த மக்களுக்கு கிராமத்தின் கடலை அண்டியிராத பகுதிகளில் காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் அமைக்கப்பட்டன. வீடுகளை அமைப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேசிய அமைப்புக்கள் உதவிகளை வழங்கின.

பெரும்பாலான மீனவர்களுக்கு காணிகளும் வீடுகளும் வழங்கபட்டாலும் காலையில் ஐந்து மணிக்கு முன்பே தொழிலை ஆரம்பிக்கும் மீனவர்களுக்கு தமது புதிய வதிவிடங்களிலிருந்து தொழிலுக்குச் செல்ல போக்குவரத்துக்கான வசதிகள் எதுவும் இல்லாத பட்சத்தில் இங்கிருந்து தொழிலுக்குச் செல்வது நடைமுறையில் சாத்தியமில்லாது போனமையால் பீரிஸ் குடும்பத்தினர் கடற்கரையோரம் இருக்கும் குடிசையிலும் கிராமத்திலிருக்கும் வீட்டிக்குமாக மாறி மாறி அலைய வேண்டியிருக்கிறது, புதிதாகக் கட்டப்பட்ட வீடு தரமானதாக இல்லாவிட்டாலும் கூட பீரிஸைப் பொறுத்தவரையில் இந்த வீடு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஒருஸ்திரமான வாழிடத்தையும், காணி, வீடுள்ளவர்கள் என்ற ஒரு வித அந்தஸ்தை முதல் தடவையாக வழங்குவதாக அந்த சிறிய மீனவ சமூகத்தின் தலைவரான அவர் கருதுகிறார்.

பல வீடுகள் திரையரங்கை அலங்கரிக்கும் சித்திரங்கள் போல கட்டப்பட்டவை. சில உதவி அமைப்புகள் சிறந்த வீடுகளை கட்டின ஆனால் குடிநீர், மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளை செய்து முடிக்குமுன் விலகிக் கொண்டன.

சில அமைப்புக்கள் கண்ணாடிஇழைகளால் தயாரிக்கப்பட்ட படகுகளை மீனவர்களுக்கு வழங்கின. ஆனால் தயாரிக்கும் பணியை உள்ளூர் கம்பனிகளுக்கு வழங்கிய போது தனியே உற்பத்திக்கு முன்னான மாதிரியின் அமைப்பை மட்டும் பரிசோதனைக்குட்டபடுத்தியிருந்தன, தயாரிப்பில் ஏற்பட்ட மோசடிகளின் விளைவாக படகுகள் தரம் குறைந்தனவாக, பாவனைக்கு உகந்ததாக அமையவில்லை. மீனவர்கள் அல்லாதோருக்கும் படகுகள் வழங்கப்படிருந்ததாகவும் அவர்கள் அவற்றை வேறு நபர்களுக்கு விற்றுள்ளதாகவும் பீரிஸ் தெரிவிக்கிறார். உதவி நடவடிக்கைகள் கணிசமானளவு ஊழல் மோசடிகளை உள்ளடக்கியிருந்ததாக, பாரபட்சமான முறையிலும் நடந்து கொண்டதாகவும் இவர் கூறுகிறார்.

சில அதிர்ஷ்டசாலிகள் தளபாடங்களைக் கொண்ட வீடுகளைப் பெற்றுள்ளனர், ஒரு சிலருக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். இதனால் மக்களிடையே பொறாமையும் சந்தேகமும் ஏற்படத் தொடங்கியது. இருந்தாலும் நாம் இருந்த நிலைமையும், மிகவும் சேதங்களையும் கஸ்டங்களையும் அநுபவித்த கால கட்டத்தில் உதவிகளை வழங்கிய, மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பீரிஸ் இங்கு குறிப்பிடும் விடயங்களை சுனாமிக்கான சர்வதேச அவசர உதவிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு ஒன்றும் சுட்டிக் காட்டுகிறது, சுனாமி மதிப்பீட்டிற்கான கூட்டமைப்பானது. Tsunami Evaluation Coalition (TEC) ஐநா விற்காகவும் நோராட்டிற்குமாக பணிபுரிந்தன. இவ்வமைப்பானது பேரழிவு தொடர்பான எதிர்விளைவுகள் பற்றி மதிப்பீட மதிப்பீட்டு நிபுணர்களா வெளியாட்களை நியமித்திருந்தது. இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசரகால உதவியானது தேவைமதிப்பீட்டைக் கருத்திற் கொண்டு வழங்கப்படவில்லை என்றும் உதவிகள் அதிக தேவைப்பட்டவர்களுக்கு மிகக் குறைந்த உதவியே வழங்கப்பட்டிருந்ததாக 2006 இல் TEC மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சேறும் சதுப்பும் நிலமும் கொண்ட மாக்கோவில்( திருகோணமலை )13 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஒன்று. பஷீர் குடும்பத்தினர், இவர்கள் கடற்கரையோரத்தில் வாடகைக்கு குடியிருந்த வீட்டை பேரலைகள் அடித்துச் சென்றுவிட்டன. இவர்களுக்கு எதுவித உதவிகளும் வழங்கப்பட்டவில்லை, இதையிட்டு இவர்கள் ஏமாற்றமும் மனவேதனையும் கொண்டுள்ளனர். தற்போது வசிக்கும் நிலப்பரப்பு இரவலாக பெறப்பட்டதுடன் அங்கிருக்கும் குடிசையும் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இதில் குடிநீர், மின்சாரம் மலசல கூட வசதிகள் எதுவுமே இல்லை.

எங்கள் வீட்டின் உரிமையாளர் புதிய வீட்டிற்கு நிதிஉதவி பெறுவதற்காக தனது சொந்த வீட்டை உடைத்துவிட்டார். அவர் தனது மகன்மார் தனித்தனி வீடுகளில் வசித்ததாக கூறி ஏமாற்றி மேலதிகமாக இரு புதிய வீடுகளைப் பெற்றுள்ளார். எங்களுக்கு புதிய வீடு எதுவும் வழங்கப்படவில்லை.

குடும்பத்தினர் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உறுதிசெய்வதற்கான ஆவணங்கள் எதுவும் இவர்களிடம் இருக்கவில்லை எனக் கூறப்பட்டதாம், இவ்வாறான ஆவணங்களை குடிமக்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பு உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு லஞ்சம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்வாறு லஞ்சம் கொடுப்பதற்கான வசதி தனக்கு இல்லை என வேதனைப்பட்டுக் கொள்கிறார் பஷீர்.

இவருடைய 21 வயதான மூத்தமகள் தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுகிறார். எங்களுக்கு யாருமே உதவவில்லை, எங்களுக்கு ஏன் எதுவுமே வழங்கப்படவில்லை என அங்கலாய்க்கின்றனர்.

ஓய்வு பெற்ற மீனவரான பிரான்சிஸ் மரக்காயர் தனக்கு ஒரு வீடு வழங்கப்பட்டதாகவும் நன்றிகளையும் தெரிவிக்கிறார். மிக குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே தனக்கு கிடைத்ததைப் போல உதவி கிடைத்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். இவரைப் பொறுத்த வரையில் தன்னால் அமைக்க முடியாத வீடொன்றை பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது, தானும் தனது மனைவியும் மகனும் வசிக்கும் அந்த சிறிய வீட்டைப் பெருமையுடன் காட்டுகிறார். இதில் மிகவும் திருப்திகரமானவை குளியலறையும் சிறுதுண்டு நிலமும் எனக் கூறுகிறார் மரக்காயர். சுனாமிக்குப்பின் பின் மீன்பிடிக்கும் தொழிலை இவர் கைவிட்டு விட்டார். இதனால் இவரைப் பொறுத்தவரையில் வீடு கடற்கரையிலிருந்து அதிக தூரத்தில் இருப்பது நல்லது என இவர் கருதுகிறார்.

ஆரம்பத்தில் இப்பகுதியில் 100 வீடுகள் அமைக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, இறுதியில் 18 வீடுகள் அமைக்கப்பட்டன, ஆனால் இந்த வீடுகள் யாரும் வசிக்காமல் வெறுமையாகவே காணப்பட்டன. கூரை, கோப்பிசம் என வீட்டிலிருந்த பொருட்களை களவாடத் தொடங்கினர். முடிவாக யார் இந்த வீடுகளுக்குள் குடிபுகுவது என்பது தொடர்பாக சீட்டிழுப்பு நடத்தப்பட்டது.
வசிக்கும் வீட்டின் தரம் மிகச் சிறந்தது என்று கூறமுடியாது, கட்டிட வேலைகள் ஒழுங்கான முறையில் செய்யப்படவில்லை, ஆனால் தனது பொருளாதாரநிலைமைக்கு இது சிறந்தது எனவே கூறலாம் எனவும் சிறந்த மலசல கூடம் ஒன்று அமைக்க வேண்டும் என்பதும் எனது கனவு என்கிறார் இந்த வயதானவர்.

திருகோணமலையில் இருக்கும் Grace Centre எனும் சிறார் மற்றும் முதியோர் நிலையத்தின் தலைவரான ஹிராம் லாபோறி சுனாமிக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகள் பலவற்றிற்ககான இணைப்பாளராக பணியாற்றியிருந்தார். மீள்கட்டுமானப்பணிகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், திட்டமிடல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைக் கொண்டதாகவும் காணப்பட்டதாகவும், பணிகள் உரிய தரத்துடன் மேற்கொள்ளப்படுகின்றனவா என சோதித்து கட்டுபாடுகளை விதிக்கும் பொறுப்பை அரசாங்கம் சரிவரச் செய்யவில்லை எனவும், பலர் உதவி செய்ய முன்வந்தனர், ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது தொடர்பான விபரங்களை பட்டியலிடுவது மிகக் கடினமான வேலையாக அமைந்தது எனத் தெரிவிக்கிறார். இயற்கைஅனர்ந்த நிவாரணங்களைப் பெறுவதற்காகவே சிலர் சுனாமிக்குப் பின் கரையோரப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என இவர் மேலும் தெரிவித்தார்.

பல அமைப்புக்களிடம் அதிகளவு பணமும் குறுகிய கால அவகாசமும் காணப்பட்டது போல தென்பட்டது. உள்ளூர் பகுதிகளில் வசித்த மக்களின் உண்மையான தேவைகள் எவை என்பது தொடர்பாக யாருமே கண்டு கொள்ள முயற்சிக்கவில்லை. சிலருக்கு பல வெவ்வேறு நிறுவனங்களின் உதவிகள் கிடைத்தன, சிலர் கவனிக்கப்படவேயில்லை.சுமார் 5000 பேர்கள் வீடில்லாத நிலைமையில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஹிராம் லாபோறி கூறுகிறார்.

சுனாமியின் விளைவாகப் பலர் நன்மைகள் பலவற்றைப் பெற்றுள்ளனர் ஆனால் உதவிகள் தேவைப்பட்டவர்கள் எல்லோருக்கும் உதவி கிடைக்கவில்லை. சுனாமியின் பின் ஊழல் விடயங்கள் மிகவும் பாரிய பிரச்சனையாக இருந்ததை பருத்திதுறைஅபிவிருத்திக்கான ஆய்வகத்தின் பொருளாதார அபிவிருத்தியாளர் முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் உறுதி செய்கிறார்.

சுனாமிக்குப் பின் மிக அதிகளவு பணம் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தமை பலருக்கும் நன்கு தெரிந்தே இருந்தது. கொடையாளிகள் மிகவும் தாரள மனத்துடன் வாரி வழங்கியிருந்தனர். சர்வதே அமைப்புக்களுக்கு நிதியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய தேவையும் காணப்பட்டது போல தென்பட்டது. அத்துடன் இவர்கள் முடிவுகளையும் மாற்றங்களையும் குறுகிய காலப்பகுதியில் எதிர்பார்த்தார்கள்,

2005 இல் முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் யுனிசெவ் இன் சார்பில் அவசரகாலபணிகள் தொடர்பான மதிப்பீட்டினைச் செய்திருந்தார். நிதி எவ்வாறான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதை பரிசோதிப்பது சாத்தியமானதாக இருக்கவில்லை என்பதோடு நிதிஉதவிகள் எங்கே சென்று மறைந்தன என்பது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. வட கிழக்கு கரையோரப்பகுதிகளில் ஊழல் சகல கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவி ஸ்தாபனமயப் படுத்தப்பட்டதாகி விட்டதாகவும் காணப்பட்டது. இதில் அரசாங்கமும் மற்றும் தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் மட்டும் ஊழல் மயப்பட்டதாக இல்லாமல் உள்ளூர் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களும் கூட ஊழல் மயப்படுத்தப்பட்டனவாகவே இருந்ததாக தெரிவிக்கிறார் முத்துகிருஷ்ணன் சர்வானந்தன்.

வெளிவிவகாரஅமைச்சு மற்றும் நோராடின் கருத்துபடி 288.2 மில்லியன் குரோணர்களை சுனாமி தாக்கியதிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நோர்வே வழங்கியிருந்தது. நோர்வேயிய மற்றும் இலங்கை சார் உதவி நிறுவனங்கள் மூலமும் உதவிகள் வழங்கப்பட்டன. இவை தவிர தனிநபர்களினால் சுயாதீன இயங்கும் அமைப்புக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்ஈழவிடுதலைப் புலிகளின் உதவி அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகம் (TRO) விற்கு 5.2 மில்லியன் குரோணர்கள் நோர்வேயிலிருந்து மட்டும் வழங்கப்பட்டிருந்தது. சுனாமி இலங்கையைத் தாக்கிய போது தமிழ்ஈழவிடுதலைப் புலிகள் வட கிழக்கிற்கான சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், ஆழிப்பேரலை தமிழ்ஈழவிடுதைலப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பிரதேசங்களையும் பாதித்திருந்தது.

மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட வடகிழக்குகரையோரப்பகுதிகளுக்கான திட்டமிடல் மற்றும் நிர்வாகப்பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் மிகவும் கஷ்டங்களை ஏற்படுத்தினர், தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் சுனாமி நிலைமையை தமது நிலையை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்தினர் எனவும் இவர் கூறுகிறார். ரிஆர்ஓ விற்கு வழங்கப்பட்ட நிதியின் ஒரு சிறு பகுதி மட்டுமே அவசரகால உதவிக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு தம்முடன் இணைந்து உள்ளூரில் பணிபுரியும் நிறுவனங்களை கண்டறிந்து இவர்கள் மூலம் அப்பகுதிக்கு அவசியமான உதவிகளை வழங்குவது தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களில் சிரமம் மிக்க காரியமாக இருந்தது. அத்துடன் நீண்டகாலமாக தொடர்ந்த யுத்த நடவடிக்கைகளினால் துறைசார் நிபுணத்துவத்திற்கான தட்டுப்பாடுகள், துறைசார் கல்வி கற்ற தொழிலாளர்கள் மட்டும் கட்டுமாணப்பணிகளுக்கான மூலப்பொருட்களும் மிக மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்பட்டன.

Tsunami Evaluation Coalition தனது மதிப்பீட்டில் உதவி நிறுவனங்கள் பணத்தைப் பயன்படுத்தும் போது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது என முடிவுக்கு வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கிடையான வேறுபாடுகள் உதவி அமைப்புக்களின் பிரசன்னத்தினால் மேலும் வலுப்பட்டதாக தோன்றுகிறது. வெளிநாட்டு உதவி நிறுவனங்களில் பணியாளர்களுக்கு கலாச்சார யாதார்த்த நிலைமைகள் மற்றும் அதன் இயங்கியல், அத்துடன் அங்கு தொடர்ந்து கொண்டிருந்த முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை புரிந்து கொள்ளும் அறிவு தொடர்பான குறைபாடுகளைக் கொண்டிருந்தனர் எனவும் TEC மேலும் சுட்டிக்காட்டுகிறது, பெருமளவான உதவிக்கான தேவைகள் முரண்பாடுகளினைக் கொண்ட பிரதேசமான வடகிழக்கு மாகாண பிராந்தியத்திற்குள் அமைந்திருந்தன. சுனாமிக்குப் பின்னான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமாணப்பணிகளுடன் ஒப்பிடும் போது அவசரகால உதவிப் பணிகள் உண்மையிலே வெற்றிகரமாக அமைந்திருந்தன ஆனாலும் மிக அதிகமான நிறுவனங்களும் மிக அதிகளவு நிதியும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு TEC வந்துள்ளது.

கிழக்குப் பிராந்தியத்தின் பிரதான நகரமான மட்டக்களப்பும் சுனாமியினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகும். பேனர்த்தத்தின் மெளமான சாட்சியாக கடற்கரையருகே தனித்து நிற்கிறது உடைக்கப்பட்ட குடிசையொன்று. பல கிராமங்களை கடல் உள்வாங்கிய பகுதிகளில் வசித்த மக்கள் பல கிலோமீற்றர்கள் கிராமத்தின் உட்பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர். ஓடாவி குட்பிரட் யோன்சன் தமது புதிதாக அமைக்கப்பட்ட குடியிருப்பைச் செய்தியாளர்களுக்குச் சுற்றிக் காட்டுகிறார். நிரை நிரையாக அமைக்கப்பட்ட ஒரேமாதிரியான சிறுசிறு வீடுகள், சிறிய வீட்டுத் தோட்டங்கள் வீடுகளைக் கொண்டதாக அழகாக காணப்படுகின்றன. ஜோன்சனின் வீட்டை சுனாமி அள்ளிச் சென்று விட்டது மட்டுமல்லாது அவருடைய 29 உறவினர்களையும் அது எடுத்துச் சென்றுவிட்டது, இவருடைய வீடு கடற்கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்திருந்தது. தான் புதியதொரு குடிமனைக்காக மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுனாமி தாக்கிய காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஏற்கனவே சர்வதேச நிறுவனங்கள் பல அங்கு நிலை கொண்டிருந்தன. இதில் பணிபுரிந்தவர்கள் உள்ளூர் நிலைமைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் உதவிகளை வழங்கும் அறிவினையும் மற்றும் தகைமைகளையும் கொண்டிருந்தனர். சுனாமிக்கிராமங்கள் என அழைக்கப்படும் பல கிராமங்கள் இங்கு காணப்படுகின்றன, இவைகள் நன்கு இயங்குவன போல தென்படுகிறது. வடகிழக்கு கரையோரப்பிரதேசத்தின் பல இடங்களை விட ஒப்பீட்டு ரீதியில் மட்டக்களப்பில் அவசரகால உதவிகள் மிகவும் பயனுள்ள முறையில் செவ்வனே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
தான் முன்பு வசித்த வீட்டை விட சிறியதாக இருக்கும் தற்போது வசிக்கும் வீடு, அத்துடன் கூரையும் ஒழுகுகிறது, ஆனால் அயலவர்களும் தற்போதைய இடமும் தனக்குப் பிடித்துள்ளதாகவும் கடல் அடித்துக் கொண்டு போய்விடும் என்ற பயமின்றி வசிக்கலாம் எனவும் யோன்சன் தெரிவிக்கிறார்.

நோர்வே கொடையாளி போல அள்ளிக் கொடுத்த பணமானது தனியே அரசிற்குச் சொந்தமானதல்லவே, இங்கு வசிக்கும் சகல மக்களும் ( உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள்) செலுத்திய வரிப்பணத்தின் ஒரு பகுதியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வெளிநாட்டிலிருந்து கொண்டு இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி பற்றி வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் ஏன் கவலைப்பட வேண்டும், கணக்கு கேட்க வேண்டும் என பலர் அங்கலாய்த்துக் கொள்ளலாம், இங்கிருக்கும் நாங்கள் எங்கள் உழைப்பை விற்பதோடு, இலங்கை நாட்டிற்கு பெருமையையும், (சிறுமையையும் கூட ) வழங்குபவர்களாக இருக்கிறோம், நோர்வேயில் உயர்கல்வியில் இலங்கையர் உயர்ந்த இடத்தை வகிக்கின்றனர், இந்தப் புள்ளிவிபரங்களில் இலங்கையின் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையின மக்களும் அடங்குகின்றனர், தமிழ் பேசத் தெரியாத (ராஜபக்சவின் கருத்துப்படி ) இலங்கைத் தமிழர்கள்தான் உலக வரைப்படத்தில் இலங்கையின் இருப்பிடத்தை உலகத்திற்கு தெரியப்படுத்தியவர் என்ற உண்மையையும் இதை செவ்வனே செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் என்பதையும் ராஜபக்ச புரிந்து கொள்ள வேண்டும், நாம் இலங்கைக்கு எமது குடும்பங்களுக்குஅனுப்பி வைக்கும் பணத்தின் அந்நியசெலவாணிகள் இலங்கை அரசுக்கு மிகுந்த இலாபத்தை வழங்குகின்றன என்பதோடு இலங்கையில் நிகழ்பவை தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமையை புலம்பெயர்ந்த மக்களும் சர்வதேச சமூகமும் கொண்டுள்ளன என்பதையும் ராஜபக்ச அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

Exit mobile version