Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

போர்க்குற்ற விசாரணையும் சுய நிர்ணைய உரிமைக்கான போராடமும் எப்படி அழிக்கப்பட்டது? :கோசலன்

தமிழகம் என்றால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வை.கோ சீமான் போன்ற இன்னோரன இனவாதிகளும் மட்டுமே ஈழத் தமிழர்களின் கண் முன்னால் தோன்றுவார்கள். 80 களில் ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு இந்திய அரசும் அதன் உளவுத்துறையான RAW உம் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கிச் சீரழித்த வேளையில் உட் புகுந்த இனவாதிகளுள் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாசும் ஒருவர். ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றொரு முகமும் உண்டு. ஆதிக்க சாதி வெறி என்பது தான் அது.

இளவரசன்

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டமைக்காக இளவரசன் என்ற இளைஞனைக் கொலை செய்து வன்முறையைத் துண்டிவிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக வினவு என்ற இணையச் சஞ்சிகை நடத்திய ஆய்வு ஒன்றின் ஆரம்பப் பகுதிகள் கீழே:கீழ்வருமாறு ஆரம்பிகிறது:

“தர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.

1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன.

இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நாயக்கன் கொட்டாய் பகுதியிலிருக்கும் மூன்று கிராமங்களின் தலித் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தின் திட்டமிடல் தான் முக்கியக் காரணம்.

தர்மபுரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் சாதி மீண்டும் முன்னணிக்கு வந்து விட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமதாசின் முயற்சியால் 42 ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்தன. ‘காதல் நாடகத் திருமணங்களை’ எதிர்ப்பதாகவும், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்” தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினர். தலித் அல்லாதோர் இயக்கம் ஒன்றும் துவங்கப்பட்டது.”

ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தன்னார்வ நிறுவனமே பசுமைத் தாயகம் என்ற அமைப்பு. தன்னார்வ நிறுவனங்கள் தொடர்பான இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் வெளி நாட்டு நிதியில் இயங்கும் அமைப்புக்களில் ஒன்றாக பசுமைத் தாயகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 75901175 என்ற இலக்கத்தின் கீழ் பசுமைத் தாயகம் அன்னிய நிதியில் இயங்கும் நிறுவனமாக இந்திய அரச ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பசுமைத் தாயகம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தன்னார்வ நிறுவன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலக சுகாதார நிறுவனத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மனித நேயமுள்ளவர்களும், ஜனநாயக வாதிகளும், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அஞ்சும் போராட்ட அமைப்புக்களும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து அன்னிய நிதியில் இயங்கும் அமைப்புக்களை அழிக்கும் நிறுவனங்களாகவே காண்கின்றனர். ஈழப் போராட்ட அமைப்புக்களோ இவ்வாறான அமைப்புக்களின் வால்களாக தொங்குகின்றன. இதனால் தான் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய நாடுகளால் தூண்டிவிடப்பட்ட நாசகார நடவடிக்க்கையாக உலக மக்களில் பெரும்பாலனவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்ட போராட்டம் சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற இனவாதிகளதும் சாதி வெறியர்களதும் பிடிக்குள் முடங்கிப்போனது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக மையம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவால் தொடர்க்கி வைக்கப்பட்டது.

சாதி வெறியைத் தூண்டி அழிவை ஏற்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பசுமைத் தாயகம் அமைப்பிற்கும் எந்த அன்னிய சக்திகள் நிதி வழங்கி வருகின்றன என்பது அதன் நடவடிக்கைகள் ஊடாகவே அனுமானிக்க முடியும்.

உலகில் மக்கள் போராடங்களை சிதைத்து அதிகாரவர்க்கத்தின் அரசியலை நிறுவும் நோக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஏகாதிபத்தியக் கூறுகளே தன்னார்வ நிறுவனங்கள். .

அந்தப் பட்டியலில் பசுமைத் தாயகம் முதலாவது இடத்திலுள்ளது. ராமதாசின் மகனும் இந்திய காங்கிரஸ் அரசில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியவருமான அன்புமணி ராமதாஸ் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார். ஈழப் போராட்டத்தை அழித்துச் சிதைத்ததில் அன்னிய நிதியில் இயங்கிய தன்னார்வ நிறுவனங்களுக்கும் பெரிம் பங்குண்டு.

வன்னி இனப்படுகொலை முடிந்த பின்னரான காலப்பகுதி முழுவதும் என்.ஜீ.ஓ களிம் ஆதிக்கத்திற்கான காலப்பகுதியாகும்.

ஐ.நா பார்த்துக்கொண்டிருக்க, அமெரிக்கா சட்டலைட்டில் வேடிக்கை பார்க்க லட்சக் கணக்கில் மக்கள் அழிகப்பட்டு வன்னிப் படுகொலைகள் முடித்துவைக்கப்பட்டன. அதன் பின்னர் போராட்டத்தின் எச்சங்களையும், போராட்ட உணர்வுள்ளவர்களையும் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் போராட்ட சக்திகளை உள்வாங்கி அழிக்க ஆரம்பித்தன.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களைத் தண்டிக்குமாறு எழுந்த மக்கள் போராட்டங்களை காலதாமத்தப்படுத்தி ஆறு வருடங்களை நகர்த்தி இன்று மக்களின் உணர்வுகளைத் திசை திருப்பியுள்ளது.

ஐ.நாவில் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் மக்கள் பற்றுள்ளவர்களை உள்வாங்கி அமெரிக்கா தனது பிடிக்குள் வைத்துக்கொண்டது. புலம்பெயர் அமைப்புக்களையும் அதன் செயற்பாட்டாளர்களில் சிலரையும் அமெரிக்கா தனது நலன்களுக்காகச் செயலாற்ற வைத்தது.

அவர்கள் தமிழ் மக்களை அழிக்கும் அன்னிய ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டனர். இவற்றுள் ஒன்று தான் அமெரிக்க சார்பு அமைப்பான பசுமைத் தாயகம்.

போர்க்குற்ற விசாரணை என்ற பூச்சாண்டியை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. மாற்றப்பட்ட மைத்திரிபாலவின் ஆட்சி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ‘இலங்கை ஜனநாயகத்தை மீட்டுள்ளது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஊழல் ஒழிக்கப்படுகிறது’ என்றெல்லாம் புகழ்பாடியுள்ளார். இவ்வாறான சூழலில் போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு தனது நாட்டின் உள்ளேயே நடத்தினாலே போதுமானது என அமெரிக்கா குறிப்பிடுகிறது.

வடக்கும் கிழக்கும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளமை, திட்டமிட்ட குடியேற்றங்கள் உட்பட சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை, அதற்கான இழந்து போன மக்கள் போன்ற எதைப் பற்றியும் குறிப்பிடாது, இலங்கை அரசு அமெரிக்காவின் நண்பன் என அவர் கூறுகிறார்.

ஆக, போரை நடத்தி மக்களை அழித்துவிட்டு, தமதுக்குச் சார்பான ஆட்சி ஒன்றை அமைத்தாலே அமெரிக்க அரசிற்குப் போதுமானது.

இந்த இலங்கை அரசின் எதிரிகளாகக் கருதப்பட்டவர்களும் அமெரிக்க அடியாட்படைகளே. இரண்டு எதிரிகளையும் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு தேவையான போது அமெரிக்க அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இவ்வாறு பயன்படும் அடிமைகளாக மாறிப்போன புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறியர்களோடும், கொலையாளிகளோடும் திருடர்களோடும் கூட்டுவைத்துக்கொள்கின்றனர்.

கடந்த ஆறு வருடங்களில் ஈழப் போராட்டம் உலக மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்டு இப்போது சேடமிழுத்துக்கொண்டிருக்கிறது.

இன்று வரைக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறி அமைப்பான பசுமைத் தாயகத்தின் துணையுடனேயே ஐ.நாவிற்குச் சென்று வந்திருக்கின்றன என்பது இதற்குச் சிறந்த உதாரணம். உலகம் முழுவதும் ஐ.நாவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனங்களின் பட்டியலில் பசுமைத் தாயகத்தின் பெயர் முதலாமிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் துணையோடு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்க்கும், அமெரிக்க சார்பு அரசிற்கும் எதிராக அமெரிக்க நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனம், அமெரிக்க அடியாள் படைகளான புலம்பெயர் அமைப்பான பீ.ரி.எப் உடன் இணைந்து நடத்தும் நாடகமே போர்க்குற்ற விசாரணை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை?

இனிமேல் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு முழுத் தமிழினமும் அழிக்கப்பட்டாலும், புலம் பெயர்கள் கைதட்டி விசிலடிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. தாம் இழைத்த தவறுகளையும் தமிழ்ப் பேசும் மக்களை ஏகாதிபத்தியங்களின் அடிமைகளாக மாற்றி போராட்டத்தை அழித்துச் சிதைத்தமைக்காகவும் புலம்பெயர் அமைப்புக்கள் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.

ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படையாகச் செயற்பட்டு அழிக்கப்பட்ட போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் புதிய அரசியல் மக்கள் மத்தியில் முன்வைக்கபட வேண்டும்., ஈழப் போராட்டம் காட்டிக்கொடுக்கும் ஏகாதிபத்திய அடியாட்படைகளால் முன்னெடுக்கப்படும் நாசகார நடவடிக்கை அல்ல என உலக மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். தவறினால், புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கை அரசும், அமெரிக்க இந்திய அரசுகளும் கூட்டிணைந்து எஞ்சியிருக்கும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிக்கும்.

http://www.unis.unvienna.org/unis/en/about/about_unis.html

http://www.worldlungfoundation.org/ht/d/ContentDetails/i/6887/pid/7788

http://www.saynotogmos.org/ud2004/umar04a.html

http://sighbaboo.blogspot.co.uk/2014_06_01_archive.html

http://www.vinavu.com/2013/02/06/working-class-oppose-pmk-casteism/

Exit mobile version