Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலி பினாமிகளும் கையாலாக நாங்களும்!! : பாண்டியன் தம்பிராஜா

அண்மையில் நண்பர்களுடன் விவாதித்த விடயங்களை எழுதும் போது நெதர்லாந்தில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள்; கைதான செய்தி வந்தடைந்தது. இந்த செய்தியுடன் தொடர்புபட்ட விடயங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மேற்கைரோப்பிய நாடுகளில் தமிழ்மக்கள் சம்மந்தப்பட்ட பொது நிறுவனங்களான தமிழ் பாடசாலைகள் கோவில்கள் அகதி நிறுவனங்கள் அகதிகளுக்கான வீடமைப்பு நிறுவனங்கள் போன்றவை புலிகளுக்கு பணம் காய்க்கும் மரங்களாகவும் பிரச்சாரத்திற்கு பயன்படும் இடங்களாகவும் உள்ளது. இவை எவ்வாறு அவர்களின் கைகளுக்கு சென்றது? இதை நாம் எவ்வாறு அனுமத்pத்தோம்.? நாம் சரியாக வியூகம் அமைக்கவில்லையா? அல்லது பேசுவதிலும் எழுதுவதிலும் மாத்திரம் காலத்தை கடத்தி விட்டோமா?

நாங்கள் புலிப்பினாமிகள் நடத்தும் பாடசாலைக்கு எமது பிள்ளைகளை அனுப்புவதில்லை. ஏனெனில் எமக்கு புலித் தமிழ் பிடிக்காது. (கணிசமான அளவு புலி எதிர்ப்பாளர்கள் ஆங்கிலத்திலேயே சிந்திப்பவர்கள். எனவே அவர்கள் தமிழைப் பற்றி பொருட்படுத்துவதில்லை.) கோவில்களுக்கு நாம் போவதில்லை. ஏனெனில் கடவுள் மீது நம்பிக்கையில்லை. ஏதாவது திருமணத்திற்காக சென்றாலும் வெளியில் இருந்து அரசியல் பேசுவதில் எமது கவனம் இருக்குமே அன்றி கோவில்களில் என்ன நடக்கிறது? நிர்வாக சபை யார்? அதற்கு ஏன் அடிபடுகிறார்கள் என சிந்திப்பது இல்லை. லண்டனில் 80 களின் இறுதிப்பகுதிகளில் புலிகள் தமிழ் அகதிகள் நடவடிக்கை குழுவில் இருந்த மாற்று அரசியல் கருத்து உடையோரை வெளியேற்றி அதனை கைப்பற்றியதை பலர் அறிந்திருக்க கூடும்.

அந்த நாட்களில் புலிகளின் அராஜகங்களிற்கு முகம் கொடுக்க முடியாது போனது என காரணம் கற்பித்தாலும் புலம் பெயர் தமிழர்கள் கண்மூடித்தனமான ஆதரவை புலிகளுக்கு வழங்கியமையாலும் எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதன் மறுபக்கத்தில் புலி எதிர்ப்பு என்பதற்கும் தீர்மானகரமான அரசியல் இருந்திருக்கவில்லை. அதன் உச்சபட்ச வர்க்க இணைவு என்பது பாசிச இலங்கை அரசோடு கைகோர்க்கும் அளவிற்குச் சென்றிருக்கிறது. புலம் பெயர் மக்கள் அல்லது போராட்ட அரசியல் தளத்தில் நேரடியான பங்களிப்பு இல்லாதிருந்த பொது மக்களுக்கு ஒரு இலகுவான சமன்பாடு இருந்தது. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது அனைத்து ஒடுக்கு முறைகளையும் ஏவிவிட்டுள்ளது. அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள் புலிகள். ஆக புலிகளுக்கு எதிரானவர்கள் அரச ஆதரவாளர்கள். இது தான் அந்த எளிய சமன்பாடு. இதற்கு மேல் இந்தக் கருத்து சரியானதா தவறானதா, போராட்டம் வெற்றியை நோக்கி நகர்த்தப்ப்டுகிறதா, அதன் விளைவு என்ன, தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் ஒன்று முன்வைக்கப்படுகிறதா என்றெல்லாம், யாரும் சிந்திததில்லை. வெற்று உணர்ச்சிகளுக்கு உட்பட்ட சார்பு நிலை தான் அரசியலானது.
இந்தச் சமன்பாட்டை உறுதிப்படுத்திய ஒரு பகுதிப் புலியெதிர்ப்புக் குழுவினர் அரசோடும் அதன் தொங்குதசைகளான துணைக் குழுக்களோடும் கைகோர்த்துக் கொண்டனர். இதற்கெதிரான போராட்டம் புலிகளிடமிருந்து போராடுவதற்கான ஜனநாயகம் கோரியவர்களாலேயெ புலியெதிர்ப்பு குழுக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.
இதற்கு வெளியிலிருந்த சாதாரண மக்கள் இவைபற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. இலகுவான சமன்பாட்டில் மூழ்கிப் போயிருந்தனர்.
ஆனால் இன்று நிலமைகளில் சற்று மாற்றம்; ஏற்பட்டுள்ளது. புலிகளின் ஆதரவாளர்களில் பத்து வீதத்திற்கும் குறைவானவர்களே இந்த பினாமிளாவார். மேலும் சிறிய பகுதியினர் படித்து விட்டு நல்ல பதவிகளில் இருந்து கொண்டு சமூக அந்தஸ்திற்காக புலிகளை ஆதரிக்கின்றனர். சாதாரண கூலி வேலைகளில் இருக்கும் இவர்கள் தமது தகுதிக்கு மீறி வழங்கிய உதவிகளை இன்று புலிப்பினாமிகளே அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.
புலிகள் கைகோர்த்திருந்த ஆதரவு சக்திகளே அவர்களையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்திருக்கிறது. மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அண்மையில் தமிழ் திரைப்பட நடிகையை ஒரு புலிப்பினாமி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே ஒரு கோடி இந்திய ரூபாயில் BMW காரை பரிசளித்துள்ளார். இப்பணம் எமது மக்களின் பணம். பேக்கரிகளிலும் உணவு விடுதிகளிலும் திறந்த சந்தைகளில் மூட்டை தூக்கியும் தமிழ் கடைகளிலும் சுப்பமாக்கெற்றுகளிலும் நாய்படாத பாடு பட்டு உழைத்த பணம். இந்த நபர் மாத்திரமல்ல பல புலி பினாமிகள் தமிழ் மக்களின் பணத்தை தென்னிந்திய திரைப்பட நடிகைகளிடம் தொலைக்கிறார்கள். (எமது பெண்ணியவாதிகள் உண்மையை உடைத்தற்ககாக மன்னித்து விடுங்கள்) புலி ஆதரவாளருடன் பேசும் போது இந்த விடயம் பேச்சில் வந்தது. ‘சிங்களவர் அடித்தால் கோபம் வருகிறது. லாட்ஜ் இல் இருந்து பிடித்துப் போய் பணம் பறித்தால் (90 களில்) கோபம் வருகிறது ஆனால் உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய புலிப் பினாமிகளிடத்தில் ஏன் உங்களுக்கு கோபம் வருவதில்லை என கேட்ட போதுஅவர் ஏற்றுக் கொண்டார்.

; புலிகளுக்கு தொடர்ந்து; பணம் கொடுத்து வந்த நெதர்லாந்தில் இருக்கும் எனது நெருங்கிய உறவினர் புலிகள் இரண்டரை வருடங்களின் பின் தருவதாக கூறி பற்றுச் சீட்டு கொடுத்து வாங்கிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். (;முன்பு தொடர்ச்சியாக கொடுத்த பணத்தை அல்ல. திருப்பித் தருவதாக சொன்னபணத்தையே )மேலும் பணம் கொடுத்த போதே இப்பணத்தை எவ்வாறு தருவீர்கள் என கேட்ட போது அதற்கு அவர்கள் தாங்கள் அப்பணத்தை எதிலோ முதலீடு செய்வதாகவும் அதன் வருமானத்தில் இருந்து குலுக்கல் முறையில் பகுதி பகுதியாக திருப்பித் தருவதாக கூறியிருந்தனர். அவர் புலி நிதியாளரிடம் எனக்கு தெரியும் நீர் அந்தப் பணத்தை எடுத்திருக்க மாட்டீர் எனவும் அந்த பணத்தை எங்கு அனுப்பினீர் எனவும் கேட்டுள்ளார். புpன்பு பணம் போன இடம் அறியமுடியாது என்ற நிலையில் புலிகள் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர் என கடிதம் தருமாறு கோரினார். அதற்கும் புலிகள் மறுத்தபோது பணத்தை தருமாறு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இச்சமயத்தில் காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல நிதிசேகரிப்பாளர்களின் கைது நடந்தது. புலிகள் எனது உறவினரையும் அவரது நண்பரையும் துரோகிகள் என அழைத்தபோது ‘இப்போது துரோகிகள் அதிகரித்து விட்டார்கள.;; நீங்கள்(புலிகள்) சிறிய பகுதியாகி விட்டீர்கள’; என அவர்களுக்கு பதிலளித்துள்ளார். அத்துடன் இவ் வழக்கு வெற்றி பெறுவதை புலிகளிடம் பணம் கொடுத்த ஏராளமானோர் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கைதானவர்களில் பலர் குடும்பம் குழந்தைகள் என உள்ளவர்கள் எனவும் சிலர் எவ்வித சுயநலமும் இன்றி வேலை செய்தவர்கள் எனவும் கூறப்பட்டாலும் நெதர்லாந்தில் சிறைச்சாலைகள் ஓரளவு வசதியானது. அவர்களின் குடும்பங்களை நெதர்லாந்து அரசு ஒரு குறைவும் இன்றி கவனித்துக் கொள்ளும் என்பதையும் இலங்கையில் ஆயிரக்கணக்கான மனித நேயம் மிக்க போராளிகள் கொல்லப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே நண்பர்களே தொடர்ந்தும் புலி பினாமிகள் எம்மக்களை குறி வைத்து பணம் சேர்ப்பதை தடுக்க நீங்கள் உங்கள் உறவுகளை தெளிவுபடுத்துங்கள். புலி பினாமிகளை தூக்கி எறியச் சொல்லுங்கள்.

Exit mobile version