Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளின் பின்னர் : விஜய்

‘புலிகளின் பின்னர் புதிய புலம் பெயர் கட்சிகள்’ கட்டுரை முக்கியமான சில விடயங்களை முன்வைத்திருக்கிறது.

ஒன்று, புதிய உலக மாற்றம் – புதிய ஒழுங்கு போன்ற கருத்தாக்கங்கள்.

உலக அரசியலின் யைப்பபுள்ளி அமெரிக்கா மட்டும் என்றிருந்த நிலை மாறி, சீனா, இந்திய, ரஷ்யா போன்ற துருவ வல்லரசுகளின் ஆதிக்கம் உலக விதிகளை முன்னெப்போதும் இல்லாதவாறு மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது என்று முன்வைக்கப்படும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றம் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் புதிய வல்லரசுகளின் எழுச்சி புலிகள் வகைப்பட்ட போராட்டத்தை மட்டுமல்ல மக்கள் சார்புப் போராட்டங்களையும் மிகப்பெரும் மக்கள் அழிவுகளுடாக அழித்து விட முனைவதைக் காண்கின்றோம். இந்த நிலைமை மாற்றத்தினைக் கருத்திலெடுக்காத புலிகள் மக்களைக் கவசமாகக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கிக் கொண்டு அழிக்கப்பட்டதைக் கண்டோம்.

இந்தியாவில் வன்னிப் போரில் மக்கள் அழிவுக்கெதிராக எழுந்த குரல்களை அடக்கவும், திசை திருப்பவும மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கண்டோம். ஐ.நா போன்ற அமைப்புக்கள் தடுமாற்றத்திற்குள்ளாக்கப்பட்டன. விடயங்களைப் பொது அரங்கில் விவாதிக்க முடியாது நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டது. ‘வடமாரட்சி முற்றுகைக்கால’ நிலைமைகள் இப்போதில்லை.

இப்புதிய வல்லரசுகளின் கூட்டு, மேலைத்தேச சக்திகளின் வன்னி மக்கள் அழிவுகள் குறித்த எதிர்ப்பை – போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டு விசாரணைகளை புறந்தள்ளி விடுகின்ற முனைப்புடன் செயற்பட்டு சில வெற்றிகளையும் பெற்றிருப்பதனையும் கண்டோம். இதன் பின்னணியில் சீனாவும், ரஷ்யாவும் அவற்றின் ஆதரவு நாடுகளான கியூபா போன்றனவும் இருந்துள்ளன. இப்புதிய வல்லரசுகள் தங்கள் நாடுகளிலும் மக்களை அழித்தொழித்துப் போராட்டங்களை அடக்கிவிட முனைவதையும் காண்கின்றோம். மேலும் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டாவது, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ‘தோற்றுப் போனமை’ குறித்தும் புலிகள் குறித்த மீள்பார்வை குறித்த கருத்துக்கள்.

புலிகளின் தோல்விக்கு ஆயுதங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் அவர்களின் பாசிசக் கருத்துக்களும் தான் காரணமா? இது முக்கியமான தொரு விடயம். விரிவாக நோக்கப்பட வேண்டிய விடயம்.

முன்றாவது முக்கிய விடயம், ஏற்கனவே முன்வைக்கப்பட்ட (80 களில்) இடதுசாரிக் கருத்துக்களை மையப்படுத்திக் கொண்டு செயற்பட முனைதல் பற்றிய கருத்துக்கள்.

புதிய அரசியல் சூழல் குறித்த மீளாய்வுகள் இன்மை, தற்கால சமூக சூழல் பற்றிய பொருள்முதல் வாத ஆய்வுகள் இன்மை என்ற தவறுகளில் கட்டமைக்கப்பட்ட ‘இலங்கை மார்க்சிய சிந்தனை'(இடதுசாரிகள்)யிலிருந்து நாம் சமூக மாற்றங்களிற்கான போராட்டங்களை, ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களை எவ்வளவு தூரம் எதிர்பார்க்க முடியும். பாராளுமன்ற சந்தர்ப்ப வாதம், தமிழ் மக்களின் இனஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தினை நிராகரித்தமை, மக்களின் சனநாயக மறுப்பக்கெதிரான போராட்டங்களை புறந்தள்ளி விடுகின்றமை எனப் பல தவறுகளை ‘இலங்கை மார்க்சியம்’ கொண்டிருக்கிறது.

‘இடதுசாரி கருத்தியலோடான தேசிய விடுதலை இயங்கங்கள் புலிகளிடமும், இந்திய மேலாதிக்கத்திடமும் தோற்றுப் போனதென்பதும், புலிகளும் மக்களும் சாட்சியமின்றி அழிக்கப்பட்ட தென்பதும் வெறுமனே தனிமனிதத் தவறுகளோ அல்லது தந்திரோபாயத் தவறுகளோ அல்ல’ என்ற வாதம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் நிர்க்கதியாகி பெரும் அழிவுகள், அடக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிற நிலையில் இடதுசாரிகள் இது குறித்து கவனம் செலுத்த முடியாதிருக்கிற நிலைமை அவர்களின் அரசியல் தவறுகளிலிருந்து தோற்றம் பெற்றதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. புலிப்பாசிசம் குறித்த போராட்டமும் இன்றி, அரச ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமும் இன்றி மக்களின்; விடுதலைக்காக ஒரு கட்சியை கட்டடிமையத்துச் செல்ல முடிகிறது என்பது இடதுசாரிகளின் பலமா, பலவீனமா?

மறறொரு வினாவும் முன்வைக்கப்பட வேண்டும். பாடாளிவர்க்கப் பரட்சிக்கு தேசிய விடுதலைப் போராட்டம் இடையூறு விளைவிக்கிறது என இடதுசாரிகள் உண்மையில் கருதியிருந்தால், அப்போராட்டத்தினை பின்தள்ளச் செய்கிற வகையில் தோன்றிய சமாதானப் பேச்சு வார்த்தைகளை – பேச்சு வர்த்ததைள் மூலமான தீர்வுகளை வலியுறுத்திய போராட்டங்கள் ஏன் முன்னெடுக்கவில்லை? இதற்கான அழுத்தங்களை ஏன் இடதுசாரிகள் தீவிரப்படுத்தவில்லை.

இந்திய மாவோயிஸ்ட்டுக்கள், பழங்குடிமக்களின் ஆதரவுத் தளத்திலிருந்து இயங்குவது குறித்து ஒரு குறைபாடாகக் குறிப்பிட முடியாது. ஆனால் மார்க்சிசத்தினால் புரட்சிகர சக்திகாளாகக் கருதப்படாத பழங்குடிமக்களின் ஆதரவுத் தளத்திலிருந்து மாவோயிஸ்ட்டுக்கள் இயங்க முடிகிறது என்பது சிந்தனை மீளாய்வுகள் குறித்த அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும் என்றே கருதுகின்றேன்.

நான்காவது விடயம் எதிர்ப்பியங்கங்களின் இரண்டு கடமைகள் குறித்தவை.

ஒன்று, பிரதான தத்துவார்த்தக் கூறுகளை மீள் மதிப்பீடு செய்தல். மீண்டும் 80களின் நிலைமைகளிலிருந்து – அகரத்திலிருந்து தொடங்க வேண்டும் போலிருக்கிறது.

இரண்டு, இலங்கை அரசிற்கு – அதிகார மையங்களிற்கு- அவற்றின் உப அமைப்புகளிற்கு எதிராக அழுத்தங்களை வழங்குதல்.
இன்று நமது காலத்தில் பிரதானப்பட்டுப் போயிருக்கிற பிரச்சினை வன்னி மக்கள் அழிவுகளும் – வன்னி அகதிகள் மீதான ஒடுக்குமுறைகளும். இம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்பியக்கம் ஒன்றினை புலம்பெயர் நாடுகளில் தோற்றுவித்து செல்வதனூடாகவே, மக்கள் நேச சக்திகளை இனங்காண – அணிதிரளச் செய்ய வாய்ப்பு உண்டாகும். மக்கள் விடுதலைக்கான சிந்தாந்தங்கள் தோன்றவும் வாய்ப்புண்டாகும். நடைமுறையம் சிந்தாந்தமும் ஒன்றிணையும்.

கட்டுரை  குறிப்பிடம் இரு கடமைகளையும் செய்ய சாத்தியம் ஏற்படும்.

இதற்காக மேலைத்தேச போலி சனநாயக வாதம் தருகிற சுதந்திரத்திற்குள் நின்று ஒரு பாரிய மக்கள் எதிர்ப்பியக்கத்தினை தோற்றுவிக்க முடியும். இதுவொன்றே இடதுசாரி கருத்தியலோடான தேசியவாதிகளின் முன்னுள்ள பணி.
இதிலிருந்து தொடங்கிச் செல்ல முடியும்.

புலிகளை அழித்தொழிப்பின் பின்பான சிங்கள பெருந்தேசிய வாதத்தின் மீள் எழுச்சி, ‘ தமிழ் மக்களை ஒரு இனத்துவ தன்மையுடன் வாழ முடியாத நிலைக்கு’ இட்டுச் செல்லும் என்ற கருத்த வலுப்பெற்று வரும் நிலையில் இப்பணியின் அவசியம் அதிகம்.

‘விஜய்-இலங்கை’

Exit mobile version