Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானியா தமிழ் மக்கள் மீது நடத்திய யுத்தம்:மில்லரின் வரலாற்று ஆவணம்

phil_miller
பில் மில்லர்

பிரித்தானியாவில் ஆய்வாளராகத் தொழில்புரியும் பில் மில்லர் என்ற இளைஞர் ஈழப் பிரச்சனை தொடர்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்கள் மத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணம் ‘தமிழ் மக்கள் மீதான பிரித்தானியாவின் அருவருப்பான போர் 1979 – 2009 ‘ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத அதிர்ச்சியான தகவல்கள் அடங்கிய ஆவணம், தமிழ் மக்கள் மீது பேரினவாத அரசு போர் நடத்துவதற்கு பிரித்தானியா எவ்வாறு பின்புலத்தில் செயற்பட்டது என்பதை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.

ஏகாதிபத்தியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயற்படும்? வறிய நாடுகளையும் மக்களையும், போராட்டங்களையும் அழிப்பதில் எவ்வாறு பிரதான பாத்திரம் வகிக்கும் என்றெல்லாம் அரசியல் இயக்கங்கள் கணித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப மக்களைத் அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்தும். பில் மில்லரின் இந்த அறிக்கை போன்றன அவ்வாறான போராட்டங்களுக்கான ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைமைகள் மக்கள் சார்ந்து தோன்றுவதற்கான மைற்கற்கள்.

தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட பின்னர், ஏகாதிபத்தியங்களின் ஐந்தம்படை உளவாளிகள் போராட்டத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் கையகப்படுத்திக்கொண்டனர். சூறையாடப்படும் வாழ்வும், வாழ் நிலங்களும் பாதுகாக்கப்பட இயலாமல் ஒவ்வொரு மூலையிலும் ஏகாதிபத்தியங்களின் அடியாட்கள் நிறுத்திவைக்கப்படுள்ளனர். மீண்டும் அழிக்கப்படக்கூடிய அழுத்தக் குழுக்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக கடந்துபோன அனைத்தையும் நியாயம் எனக் கூறும் இந்த அடியாட்படைகள், அழிவுகளின் உந்துசக்திகள்.

கடந்த 30 வருடங்களின் தவறுகளைக் கற்றுக்கொள்வதற்கான நுளைவாசல்களின் ஒன்றாக இந்த ஆவணம் அமையுமானால் அது தனது வரலாற்றுக்கடமையை ஆற்றியதாக அமையும். தவிர ஈழப் போராட்டத்துடன் தொடர்பற்ற திரு.மில்லரின் அறிக்கையை மீண்டும் தவறுகளை நியாயப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்துவோர் அழிவுகளின் எச்சங்களில் பிழைப்புநடத்தும் மக்கள் விரோதிகள். மில்லரின் உழைப்பை விற்கத் துணியும் சீர்குலைவு வாதிகள்.

1980 களிலிருந்து ஏகாதிபத்திய நாடுகள் எவ்வாறு தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைக் கையாண்டன என்பது போன்ற தகவல்களும், அழிக்கப்படக் கூடிய நிலையில் போராட்ட அமைப்புக்கள் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டன என்ற தகவல்களும் தொடர்ச்சியான ஆய்வுகளின் ஊடாக வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

உண்மைகளை மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் ஒளிவு மறைவின்றி உரைப்பதற்கான ஆவணங்களும் தரவுகளும் விலை மதிப்பற்றவை. அதுவும் பிரித்தானிய ஏகாதிபத்திம் போன்ற உலகின் வலு மிக்க நாடுகளில் ஒன்றின் அழுக்குகளுக்குள் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவந்த பிலிப் மில்லரின் உழைப்பு அவரது சமூக உணர்வைக் குறித்துக்காட்டுகிறது.

பிரீமன் நகரிலுள்ள சர்வதேச மனித உரிமைக் கழகத்தினால் வெளியிட்ப்பட்டுள்ல இந்த அறிக்கை நீண்ட்நாள் உழைப்பின் பலன். இலங்கையில் தேசிய இன முரண்பாட்டைத் தோற்றுவித்து கூர்மைப்படுத்தி  இரத்தக் களரிரியைத் தோற்றுவித்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் 70 களின் முற்பட்ட காலப்பகுதி வரை பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஏகாதிபத்திய நாடுகள்,  ஜனநாயகம் இன்னும் உயிர்வாழ்கிறது என்று வெளியுலகிற்குக் காட்டுவதற்காக சில சட்டங்களை இயற்றுவதுண்டு. அந்தவகையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு பெற்ற தகவல்களையும், ஏற்கனவே ஆங்காங்கு சிதறிக்கிடந்த தகவல்களையும் ஒருங்கு சேர்த்து இணைத்து ஆவணாமாக்கியுள்ளார் திரு.மில்லர்.

2009 ஆம் இனப்படுகொலைக் காலத்தில் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளத் தடையாகவிருந்த பிரதான நாடு பிரித்தானியா என்ற தகவலை ஆதாரபூர்வமாக முன்வைக்கும் மில்லர், இலங்கை அரசிற்கு பிரித்தானியாவின் ஆலோசனை மற்றும் இராணுவ உதவிகளை மறுப்பதற்கு இடமின்றி முன்வைக்கிறார்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற டேவிட் கமரன் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்கிறார். பிரித்தானியா தமிழர்களுக்கு உதவுகிறது என புலம்பெயர் அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் வியாபார ஊடகங்கள் என்ற அனைத்தும் ஒரே குரலில் கூச்சலிட்டன. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட பிரித்தானியா பிரதான பாத்திரம் வகித்தமை மையமாகவைத்து ஏகாதிபத்திய சார்பு தமிழ்த் தலைமைகள் பிரித்தானியாவைப் புனிதப்படுத்தி தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்தன.

மில்லர் தனது ஆவணத்தின் ஆரம்பத்தில் பின்வரும் கேள்விகளுடன் தனது விசாரிப்பை ஆரம்பிக்கிறார். இவை அனைத்தும் நடத்தப்படுவதால், நடப்பிலுள்ள பிரித்தானிய அரச நிர்வாகம் சிறந்ததா? என்று வினவும் மில்லர் பதிலைக் கூறுகிறார், பிரித்தானிய அரசின் அதிகாரி இலங்கையில் தங்கியிருக்கிறார். அவரின் பணி போர்க்குற்றங்களை விசாரிப்பதல்ல. இலங்கைப் போலிஸ் படையின் தேசிய கற்கை நிலையத்தைத் திட்டதை வரைந்துகொடுப்பது என்கிறார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு பிரித்தானிய அவசர அவசரமாக தனது சட்டவல்லுனர்களை அனுப்பிற்று. அவர்கள் ஐரோப்பா முழுவதும் புலிகள் மீதான பயங்கரவாதத் தடை நீடிக்க வேண்டும் என வாதிட்டனர்.

இத் தகவலைக் கூறும் மில்லர், புலிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டவுடன் பிரித்தானிய முள்ளிவாய்க்கால் வரை அவர்களை நகர்த்திச்சென்று மக்களுடன் சேர்த்து அழிப்பதற்கு எவ்வாறு உதவியது என்பதையும் ஆதரங்களுடன் நிறுவுகிறார்.

பிரித்தானிய உட்பட ஏனைய நாடுகளைச் ‘சர்வதேசம்’ என்று அழைத்து அவர்கள் வந்து காப்பாற்றுவார்கள் என நம்பிக்கை வழங்கி இனப்படுகொலைக்குத் துணைபோன புலம்பெயர் தலைமைகள் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.

இந்த ஆவணத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி கிளாஸ்கோவில் நடைபெறுகிறது. அதன் விபரங்கள் கீழே:

Report Launch: Britain’s Dirty War on the Tamil People, 1979-2009
Phil Miller
Tuesday, 22 July 2014 from 18:30 to 21:00 (BST)
Glasgow, United Kingdom

-இனியொரு…

ஆவணத்தை தரவிறக்கம் செய்ய….

britains_dirty_war

தொடர்பானவை:

யாழ்ப்பாணத்தில் மக்களை மிரட்டிய டேவிட் கமரன் : சுதர்சன்

டேவிட் கமரனோடு இலங்கை சென்ற பெருநிறுவனங்களின் பட்டியல்

‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு…

Exit mobile version