Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார் ? : சபா நாவலன்

ஒரு ஆண்டு பல நீண்ட ஆண்டுகள் போல சோகத்தையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து இரத்தம் படிந்த ஆண்டாகக் கடந்து போய்விட்டத்து. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராஜபக்ச குடும்ப அரசு சில நாட்களுக்குள் கொன்று போட்டுவிட்டு உலகமக்களை நோக்கி நாம் தான் கொன்று போட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி திமிரோடு சொன்ன நாட்களின் பின்னர் ஒரு ஆண்டு ஒவ்வொரு நாளும் கணங்களாகக் கடந்து போய்விட்டது. ஒபாமா தேசத்தின் சற்றலைட்கள் பார்த்துக்கொண்டிருக்க, கருணாநிதியின் கொல்லைப் புறத்தில் தமிழர்கள் குடியிருப்புக்கள் மீது அதிபாரக் குண்டுகளும் இரசாயனக் குண்டுகளும் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து போய்விட்டது. முதியவர்களின் ஈனக் குரல்கள், குழந்தைகளின் அவலக் குரல்கள், அப்பாவிகளின் கூக்குரல்கள் எல்லாம் மரணத்துள் முற்றாக அமிழ்த்தப்பட்ட நாள் மே 18ம் திகதி.

மனிதப் பிணங்களின் மேல் நடந்துவந்த எஞ்சிய அப்பாவித் தமிழர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தது ராஜபக்ச குடும்ப அரசு. குண்டு வீசி, இரசாயனத் திராவகங்களால் எரித்துக் கொன்று போட்டவர்கள் போக முகாம்களிலிருந்து சந்தேகத்தின் பேரில் அரச துணைக் குழுக்களின் துணையோடு கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்கள் பல ஆயிரங்கள். 40 ஆயிரம் பேர் ஊனமுற்றவர்கள் என ஐ.நா அறிக்கை கூறுகிறது. ஒரு ஊனமுற்ற சமுதாயத்தை உருவாக்கி உலாவவிட்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்திருப்பது ஒரு மாபெரும் வல்லரசல்ல. அமரிக்காவில் கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கோதாபாய ராஜபக்சவின் தலைமையில் இலங்கை என்ற குட்டித்தீவு தான் இதையெல்லாம் நடத்தி முடித்திருக்கிறது.

மனிதர்கள் சாரி சாரியாக கொல்லப்பட்ட போது உலகம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு, மே பதின்நான்கில்,இந்தியா,ஜப்பான்,சீனா,துருக்கி,வியட்னாம்,லிபியா,ஈரான் போன்ற நாடுகள் மனிதப் படுகொலைகள் குறித்து ஐ.நாவில் பேசுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் சபை எதிர்ப்புகளோடு நிறைவுறுகிறது. மக்கள் கேடயமாகப் பயன்படுத்துவதை பாதுகாப்புச் சபை கண்டித்துவிட்டு மௌனமாகிறது. பதினைந்தாம் திகதி கற்பனை செய்து பார்க்கமுடியாத மனிதப் பேரவலம் நடக்கவிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கிறது.

தமிழர்களைக் காப்பாறுவேன் என கருணாநிதி,ஜெயலலிதா , நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்றோர் வேறுபட்ட தளங்களில், வேறுபட்ட வடிவங்களில் தமது நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மே 16 இல் வன்னிப் பாதுகாப்பு வலையம் முற்றாகச் சுற்றி வளைக்கப்படுகிறது. அதே நாளில் தமிழகத்தில் கருணாநிதியும், இந்தியாவில் காங்கிரசும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

வன்னியிலிருந்து இருபத்தையாயிரம் மக்களைக் காப்பாற்ற சர்வதேசத்திடம் கோரியும் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என சோகமாய் கூறும் விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குரலின் ஒலிவடிவம் தமிழ் இணையங்கள் எங்கும் ஒலிக்கிறது. குமரன் பத்மநாதன் ஊடாகவே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

மே 17 இல் துப்பாக்கிப் பயன்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக புலிகள் அறிவிக்கின்றனர். ரஷ்யா மேலதிக இராணுவத்தளபாடங்களை இலங்கைக்கு வழங்குகிறது. பௌத்த கொடியுடனும்,இலங்கை தேசியக் கொடியுடனும் ஜோர்தானிலிருந்து இலங்கை விமான நிலையத்தில் ராஜபக்ச வந்திறங்குகிறார்.

மே 18 அதிகாலை மக்களையும் தம்மையும் பாதுகாக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் மரண ஓலம் கேட்பதாக செய்திகள் வெளியாகின்றன.

மே 18ம் திகதி மாலை இறுதிக் கட்டப் போரில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார். தமிழ் நாட்டிலோ புலம் பெயர் நாடுகளிலோ வாழ்ந்த தமிழர்கள் இந்தச் செய்தி பொய்யாக இருக்கக் கூடாதோ எனப் “பிரார்த்திக்கின்றனர்”. கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கின்றார் என பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்குகிறார்.

பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான குழப்பமான கருத்துகளை இலங்கை அரசு அவ்வப்போது வெளியிடுகிறது. பிரபாகரன் நலமோடிருக்கிறார் என்கிறார் பழ.நெடுமாறன். புலி ஆதரவுத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் பிரபாகரன் வாழ்வதாக ஒரே குரலில் ஒலிக்கின்றனர்.

பிரபாகரன் இருக்கின்றாரா இல்லலையா என்பதற்கு அப்பால் முப்பதாண்டுகள் இழப்பும், தியாகங்களும், அர்ப்பணங்களும்,இரத்தமும்,வியர்வையும், எரிந்து கொண்டிருந்த உணர்வுகளும் கூட புலிகளிடமிருந்து சிறீலங்கா பேரினவாத அரசின் கரங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதான உணர்வுதான் தமிழ்ப் பேசும் மக்களைத் தைத்தது. சிறை முகாம்களில் வதைக்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களில் கூக்குரல்கள் மனிதாபிமானிகளின் உணர்வுகளை எரித்துக்கொண்டிருந்தது.

புலிகள் நம்பியிருந்த அனைத்து சந்தர்ப்பவாதிகளும் பிரபாகரன் இருக்கிறார் என அடம்பிடித்துக்கொண்டிருந்தனர். பிரபாகரன் இறந்தால் இரத்த தமிழ் நாட்டில் ஆறு ஓடும் என்றவர் வை.கோபாலசாமி. அவருக்கு இரத்த ஆற்றை ஓட்டிக்காட்ட வேண்டிய தேவை அற்றுப் போயிருந்தது; ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை பிரபாகரன் உயிரோடு வாழ்வதாகவே பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். முத்துக்குமார் இறப்பு எழுச்சியாக மாறிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்ட வை.கோ பிரபாகரன் இறந்துபோகாமல் இருப்பதிலும் அவதானமாக இருந்தார்.

ஆக,”பிரபாகரன் வாழ்கிறார்” என்பது பலருக்கு அதிலும் ஈழப் போராட்டம் மறுபடி ஒரு எழுச்சியாக உருவாகக் கூடாது என்று எண்ணியவர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்திருந்தது.

தமிழ்ப் பேசும் மக்களின் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தை முற்றாக நிர்மூலமாக்க “பிரபாகரன் வாழ்கிறார்” என்ற சுலோகம் இலங்கை இந்திய அரசுகளுக்கு பல வகையில் பயன்பட்டது.

1. தமிழ் நாட்டில் உருவாகக் கூடிய எழுச்சியை பிரபாகரன் வாழ்தல் தொடர்பான நம்பிகையை வழங்கி நிர்மூலமாக்கல்.

2. புலிகளில் எஞ்சியிருக்கக் கூடிய போராளிகளை பிரபாகரனின் வருகைக்காக் காத்திருக்கச் செய்தலூடாக பலவீனமாக்குதல்.

3. புலம் பெயர் நாடுகளில் எழக் கூடிய எதிர்ப்புப் போராட்டங்களைப் பிரபாகரன் இருப்பைக் முன்வைத்துப் பலவீனமாக்குதல்.

4. இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையைப் பிரபாகரன் வாழ்தல் குறித்த விவாதங்களூடாகத் திசை திருப்புதல்.

இந்த எல்லா நோக்கங்களுமே இலங்கை இந்திய ஆளும்வர்க்கங்களுக்கும் அவற்றின் தொங்கு தசைகளுக்கும் தற்காலிக வெற்றியைப் பெற்றுக்கொடுத்தன.

உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ்ப் பேசும்மக்கள் மத்தியில் ஒரு புரட்சிக்காரனாக என்பதற்கு அப்பால் சூரியத் தேவனாகவும் கடவுளாகவும் கூடக் கருதப்பட்ட பிரபாகரனின் உயிர் பறிக்கப்பட்டால் தமிழர்கள் வாழ் நிலங்களில் நெருப்பெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்ற அரசியல் வியாபாரிகள் பிரபாகரன் வாழந்போது பல தடவைகள் இது குறித்துக் கூறியிருந்தார்கள்.

மே 18ம் திகத்திக்கு முன்னர் பிரபாகரனது படங்களைத் தாங்கியபடி ஐரோப்பியத் தெருக்களில் தமிழ் இளைஞர்கள் கொட்டும் மழையில் நடத்திய எதிர்ப்பு உர்வலங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள்  மே 18 இன் பின்னர் நின்று போய்விட்டன.பிரபாகரன் பதாகைகளோடு இரண்டு இலட்டசம் தமிழர்கள் ஐரோப்பியத் தெருக்களில் நடத்திய போராட்டங்கள் நிறுத்தப்பட்டு பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட பின்னர் இருபது பேர் கூட அஞ்சலி செலுத்தக் காணப்படவில்லை.

முத்துக்குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்ட போது பத்தாயிரம் தமிழர்கள் உணர்ச்சிகரமாய் நடத்திய போராட்டங்கள் எல்லாம் வலுவிழந்து பிரபாகரன் அழிந்து போனபோது மயான அமைதியாகக் காணப்பட்டன. போராடங்களை ஐரோப்பாவில் ஒழுங்கு செய்தவர்கள் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார் என்றனர். வை.கோ, திருமாவளவன்,நெடுமாறன் என்று அனைத்து அரசியல் வியாபாரிகளும் ஒரே பல்லவியத் தான் பாடினார்கள். இலங்கை இந்திய அரசுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. எதிர்பார்க்கப் பட்ட வன்முறைகளும் போராட்டங்களும் பிரபாகரன் வருவார் என்று கூறி மிகவும் தந்திரமாக நிறுத்தப்பட இலங்கை அரசு எதிர்ப்புகளின்றி மூன்றுலட்சம் தமிழர்களைச் சிறைப்பிடித்து, தனது இனவழிப்பைத் தொடர்ந்தது.

இன்னொரு புறத்தில் புலிகளின் பிஸ்டல் குழுவும், தற்கொலைப் படைப்பிரிவின் ஒரு பகுதியும் வன்னியிலிருந்து வெளியேறியிருந்ததாக இனவழிப்பு நடந்து கொண்டிருந்த வேளைகளில் கோதாபாயவும் உதய நாணயக்காரவும் பல தடவைகள் கூறியிருந்தனர்.கிழக்கின் காடுகளில் கூட ஒரு குறித்த தொகைப் புலிகள் நிலை கொண்டிருந்தனர். இவர்கள் பிரபாகரனை எதிர்பார்த்துக் காத்திருந்தானர். இந்த இடைவெளியில் இலங்கை அரசு இவர்களின் வலைப்பின்ன்லை சித்தைத்து, பலரை உள்வாங்கியும் அழித்தும் எதிர்ப்பை நிர்மூலமாக்கிவிட்டது.

அழிவிற்கான காரணங்கள், புதிய உலக நிலை, போராட்டத்தின் தவறுகள் என்று பல வாதப் பிரதிவாதங்களூடான புதிய சக்திகளை உருவாக்கத்தை பிரபாகரன் விவாதங்களூடாகத் தடைசெய்து ஈழ மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்தது. இனப்படுகொலையின் இரத்த வாடை வீசிக்கொண்டிருந்த அதேவேளை பிரபாகனையே பயன்படுத்தி அதனை நிகழ்த்தியவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர்.

தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முனைந்த ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பிரபாகரனின் இருப்பு விருப்புடையதாய் அமைய அதே விடயத்தை ஆளும்வர்க்கங்கள் தமது நலனுக்காகத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டன.

புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் புலிகளின் பரந்துபட்ட வியாபார மூலதனத்தின் பினாமிகளாகச் செயற்பட்ட பலருக்கும் இந்த இருப்புக்குறித்த பிரச்சாரம் வாய்ப்பானதாக அமைய இன்றுவரைக்கும் பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர். நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டத் தீர்மானம் என மக்களின் உணர்வுகளை வியாபாரமாக்கக் கற்றுக்கொண்ட புதியவர்கள் பிரபாகரனை அனாதையாகவே நந்திக்கடலோரத்தில் விட்டுவிடுவார்கள்.

தமது வாழ்நாளில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவோ, விமர்சிக்கவோ இவர்கள் முன்வரமாட்டார்கள். பிரபாகரன் இறந்து போன பின்னர்கூட உலகம் இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகக் கொந்தளிக்காமல் தடுதவர்கள் இவர்கள்.

உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் ஒன்று மட்டும் நிதானமாய் வாழ்கிறது. நாங்கள் இப்போது சிறுபான்மையல்ல பெரும்பான்மை என்ற உணர்வு. உலகின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஒரு பகுதி நாங்கள். சிறுபான்மை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான பலம் மிக்க பெரும்பான்மை. நாற்பத்தி இரண்டு வீதமான உலக மக்கள் வறுமைக்கோட்டுற்குக் கீழ் வாழ்கிறார்கள். தமது இந்த நிலைக்குக் காரணமானவர்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மையோடு இணைந்து கொள்ளவும் அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் புதிய போராட்டத்தை உலகிற்கு உதாரணமாக நிகழ்த்தவும் எமக்கு முப்பது வருட போராட்ட அனுபவம் உண்டு. கொலைகள்,சித்திவதைகள்,காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள் என்று அனைத்தையும் கடந்துவந்தவர்கள் நாங்கள். இப்போது அமரிக்கா யார்பக்கம், ஐரோப்பா எங்கே, ஐ.னா வின் துரோகம்,இந்தியாவின் கொலைகார முகம் என்று அனைத்தையும் அனுபங்களூடாகவே அறிந்துகொண்டவர்கள். இவை அனைத்துக்கும் எதிரான பெரும்பாமையோடு எம்மை இணைத்துக்கொள்வதிலிருந்தே போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியும்

Exit mobile version