Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனின் பெயரால்………: சபா நாவலன்

அமரிக்கா இலங்கைக்கு வழங்கிய அழுத்ததில் ராஜபக்ச அரச அதிகாரம் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது போன்ற அப்பட்டமான அரசியல் முட்டாள்தனம் முள்ளிவாய்க்காலின் அழிவுகளுக்கே காரணமாகியிருந்தது. உலகில் அதிகாரத்தை கையகப்படுத்தியிருக்கும் ஒரு சிறுபான்மையினர் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மறுபடி மறுபடி மக்களுக்குக் கற்பிக்கும் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஒவ்வொரு முனையிலிருந்தும் மக்கள் விரோத அரசியலுக்குள் தம்மைப் புதைத்துக்கொண்டுள்ளனர்.

அழிக்கப்படுகின்ற ஒவ்வொரு மனிதனின் மரணத்தின் பின்னாலும் ஏறக்குறைய ஒரே அரசியல் அதிகாரமே செயற்படுகிறது என்பதை இவர்கள் சொல்லத் தயாரில்லை.

வன்னிப் படுகொலைகளின் பின்னால் இந்திய அரச அதிகாரமும், மேற்கும் அதன் ஒடுக்குமுறைக் கூறுகளான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் மனித உரிமை அமைப்புக்களும் செயற்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிந்தும் அயோக்கியத் தனமாக மக்களை ஏமாற்றும் “புலிகளின் – பின்னான” பச்சோந்தி ஊடகங்களும் அதன் அடியாட்களும் தொடரும் இனச்சுதிகரிப்பிற்கும் ராஜபக்ச பாசிசத்திற்கும் துணைபோகின்றவர்களே.
ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களின் ஒவ்வொரு திரும்பல் புள்ளியிலும் இந்திய அரசின் அழிப்பு அரசியலைக் கண்டுகொள்லலாம். தனது பிராந்திய நலனுக்காகவும் இன்று பல்தேசிய முதலாளிகளின் தனிப்பட்ட நலனுக்காகவும் இலங்கையில் திட்டமிட்ட அழிப்பை நடத்திக்கொண்டிருப்பது ராஜபக்ச பாசிசம் மட்டுமல்ல. அதனை இயக்கும் சக்தியான இந்திய பார்பானீய அரச அதிகாரமும் கூடத்தான்.

அமரிக்காவும் அதன் நேச அணிகளான ஐரோப்பிய ஏகபோகங்களும் மீள முடியாத பொருளாதரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கின்றன. தாம் பிரதிநிதித்துவ செய்யும் பல் தேசியப் பண முதலைகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காகன அரசியலிலிருந்தே பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாத அழிவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றது. உலகின் பிச்சைக்கார நாடுகளைக் கூட ஒட்டாண்டி ஆக்கும் நோக்கோடு போரைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கின்றன. சாரி சாரியாக மக்களைக் கொன்று குவித்துவிட்டு ஜனநாயகத்தை நிலை நாட்டுகிறோம் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள்.
உலகம் முழுவது போர் மேகங்களைக் கடவிழ்த்து விட்டிருக்கும் மனித விரோதிகளான இந்த அரசுகளை ஐரோப்பிய மக்கள் இனம் காண ஆரம்பித்துள்ளனர்.
குறைந்தபட்ச ஜனநாயக விழுமியங்களைக் கூட கொண்டிராத இந்திய அரசும் அதன் அடியாட்களும் தமது பல்தேசிய வியாபாரிகளின் நலனுக்காக அமரிக்காவினதும் ஐரோப்பிவினதும் அடிமையாக சேவகம் செய்யத் தயார் நிலையில் உள்ளனர். அடிமைத் தனதிலிருந்து அவ்வப்போது தமது வியாபார நலன்களுக்காக சீனா போன்ற மாபியா அரசுகளோடும் இந்திய பல்தேசிய அரசு உடன்பட்டுக்கொள்கிறது.

மேற்கிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஊசலாடும் நிலையை உருவாக்கிக்கொள்வதனூடான இடைவெளியில் தனது மூலதனத்தின் சுயாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள முற்படுகின்றது.

இலங்கையில் மேற்குடனான புதிய போட்டியை இந்திய சீன அரசுகள் உருவாக்கியுள்ளன. இந்தப் போட்டியாளர்களின் அனைவருமே பேரினவாதத்திற்கு ஆதரவானவர்கள் தான். இந்தியாவிற்கு எதிராக சீனாவையும், சீனாவிற்கு எதிராக இந்தியாவையும், மேற்கையும் கையாள்கிறோம் என்று தமிழ் ராஜதந்திர ஜாம்பவான்கள் காட்டும் படத்தை வெளியிலிருந்து அவதானிக்கும் யாரும் 30 வருடப் போராட்டம் இவ்வளவு முட்டாள்களை உருவாக்கியுள்ளதா என்று வியந்து போவார்கள்.

இவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல, அருவருக்கத்தக்க கோழைத்தனமானவர்களும் கூட. அதற்கு எல்லை கிடையாது. ராஜபக்சவின் பாசிச இராணுவ சாம்ராஜ்யத்திற்குள் இருந்து மக்கள் போராடும் போது கூட இவர்கள் அன்னியர்கள் நம்பச் சொல்லி அழைப்புவிடுக்கிறார்கள். இரவல் படையில் புரட்சிசெய்யலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். “படித்துக்கிழித்த” யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் பள்ளிக்கூடத்தையே அறிந்திராத இந்தியப் பழங்குடி மக்கள் இந்திய இராணுவத்தை நெருங்க விடாமல் நடத்தும் போராட்டத்தை புத்தகங்களில் அறிந்திருக்க மாட்டார்கள் என்பது உண்மை தான்.

“தேசியத் தலைவர் பிரபாகரனின்” பெயராலும், தம்ழ்த் தேசியத்தின் பெயராலும் இந்தியாவினதும் மேற்கினதும் அடிமைகளாகி மக்களை அழிக்கிறோம் என்பதே இவர்கள் கற்பிக்கும் தேசியம்.

Exit mobile version