Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது”.

பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் ‐ சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்த தோல்விகளில் வெளிப்பட்டதாகும். முன்னேறிய பிரிவினரான நாம் எம்முன்னே இருந்த கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, போராட்டத்தின் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவது சாத்தியப்பட்டிருக்குமானால், புலிகளுக்கு எதிரான ஒரு பலமான அரசியல் சக்தியாக நாம் நிலை பெற்றிருக்க முடியும். ஆனால் அதற்கான புரிதலும், அதனை அவசியப்படுத்த தேவைப்படும் கடுமையான உழைப்பும், விடாப்பிடியான செயற்பாடும் எம்மிடம் இருக்கவில்லை. இப்படியாக நாம் முன்னேறிய பிரிவினர் இழைத்த பாராதூரமான தவறுகளையும் இணைத்தே இந்தச் சடுதியானதும், முழுமையானதுமான தோல்வியைப் புரிந்து கொள்ள முடியும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டும் தான் எந்த விதமான ஆரோக்கியமான முன்னெடுப்புக்களும் எதிர்காலத்தில் சாத்தியப்படும்.

கடந்த காலத்தில் நடைபெற்ற கட்டற்ற அராஜகவாதங்களுக்கு காரணம் அமைப்பல்ல. மாறாக அமைப்புத்துறையை தன்னியல்பாக முன்னெடுத்ததேயாகும். அமைப்புத்துறையை முற்றாக நிராகரித்தவர்கள் உண்மையில் அதன் அங்கத்தவர்களது சுதந்திரமான நடவடிக்கையை ஊக்குவிக்க முடியவில்லை. மாறாக, அந்தந்த அமைப்புக்களில் இருந்த கற்றறிந்த, பேசும் ஆற்றல் மிக்க சில மத்தியதர வர்க்க புத்திஜீவிகளது கரங்களில் அதிகாரங்களைக் குவிப்பதற்கே வழிவகுத்தது. இது தன்பங்கிற்கு மேட்டுக்குடி அரசியலுக்கே வழிவகுப்பதாக அமைந்தது.

இப்படிக் கூறுவதனால் நாம் ஏற்கனவே இடதுசாரி அமைப்புக்களில் காணப்படும் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தத் தேவையில்லை. புரட்சிர அமைப்புக்கள் அதிகாரமயமாதல் பற்றிய பிரச்சினைகளை இப்போதும் நாம் முகம் கொடுத்து முறியடிக்க வேண்டிய பிரச்சினைகளாகவே கருதுகிறோம். இது உண்மையில் அமைப்புத்துறை பற்றிய பிரச்சினையைக் கோட்பாட்டு மட்டத்தில் அணுகி தீர்வு காண்பதால், பல்வேறு மாற்று அமைப்பு வடிவங்களின் நடைமுறை அனுபவங்களை பொதுமைப்படுத்தி ஆய்வு செய்வதனால் மட்டுமே சாத்தியப்படும். மாறாக, இந்தப் பிரச்சினையை பொதுப்புத்தி மட்டத்தில் அணுகி, அமைப்புத்துறையை அப்படியே நிராகரிப்பதானது ஒடுக்கப்படும் மக்களுக்கு, அவர்கள் கையில் இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனத்தையும் கைவிட்டுவிடுவதைக் குறிக்கும். ஆகவே அமைப்புத்துறை என்பது நிராகரிக்கப்பட வேண்டியதல்ல. மாறாகக் கோட்பாட்டு மட்டத்தில் இன்னும் கறாராகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். இந்த விடயத்தில் எதிர்காலத்தில் வியூகம் தனது கவனத்தைக் குறிக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நேற்று 27.12.2009 ஞாயிற்றுக் கிழமை பிரான்ஸ் “புதிய பயணிகள் ” சார்பில் ஒழுங்கமைக்கப்பட்டு பாரீஸ்சில் நடைபெற்ற “மே 18 இயக்கத்தின்” கோட்பாட்டு இதழான “வியூகம்” வெளியீட்டு நிகழ்வில் அச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார்.

இவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் பல்வேறு அரசியலாளர்கள் குறிப்பாக “ஓசை” மனோ, உதயகுமார் ,நேசன் , சுதாகரன், மகேஸ் தங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன் வைத்தனர். இவ் வியூகம் சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வுக்கு பிரான்ஸ் ” புதிய பயணிகள்” செயற்பாட்டாளர் அசோக் யோகன் தலைமை வகித்தார். இவ் விமர்சன கலந்துரையாடல் பற்றிய முழுமையான பதிவு பின்னர் இனியொருவில் வெளிவரும்.

Exit mobile version