Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பார்வதியம்மாள், சிவத்தம்பி, கருணாநிதி- முதுமையின் இயலாமையும் முதுமைகளின் வக்கிர மனங்களும் : மதி

கருணாநிதி தள்ளுவண்டியில் தான் அலைகிறார் ஆனால் பதவி பித்து தலைக்கேறி ஆடுகிற ஆட்டத்தில் முதிய வயதில் தனது வயதை ஒத்தவர்களின் பிரச்சனைகளை அவர் கண் கொண்டு பார்க்கத் தவறுகிறார்.. இப்போதும் பாராட்டு விழாக்கள், விருதுகள், குத்துப்பாட்டை ரசித்தம் என தினம் தோறும் பல மணிநேரம் ஒரு மாநில முதல்வர் செலவு செய்கிற நிகழ்வுகள் இவைதான்.

இந்தக் குத்துப்பாட்டு நிகழ்வுகளின் அடுத்த பாகம்தான் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டு. அதாவது உலகின் மூத்த மொழியாம்? தமிழுக்கு கோவையில் மாநாடு. தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விக்கு எதிராக மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மெட்ரிக் பள்ளிகளுக்கு இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பொறுந்தாது என தமிழக அரசு முடிவெடுக்க இருப்பதாக செய்தி. இதுதான் கருணாநிதியின் மொழிப்பற்று. கருணாநிதி சொன்னால் தமிழ் செம்மொழி, கோவிலில் தமிழ் வேண்டும் என்று யாராவது கோரினால் அது வன்முறை.. என் ஆட்சியை கலைக்கப்பார்க்கிறார்கள் என்று கதறுகிறார் இந்த கல்லக்குடி நாயகர்.

போர் நிறுத்தம் கேட்ட தமிழக உணார்வாளர்களை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளிய கருணாநிதி. மக்களின் ஆதரவோடு மக்களுக்கு எதிரான பாசிசத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். ஊடகங்களின் மௌனம், சகல தொழில்களிலும் தனது குடும்பத்தினரின் ஆக்டோபஸ் கரங்கள் என தமிழகமே ஆபத்தான சூழலுக்குள் தள்ளப்படும் நிலையில் இன்றைய தேதியில் கருணாநிதிக்கு காட்டப்பட வேண்டியது எதிர்ப்பு மட்டுமே ஆமாம் ஊடகங்கள் கருணாநிதியின் மிகப்பெரிய ஜால்ராவாக மாறி விட்ட நிலையில் இணையங்களாவது கருணாநிதியின் மக்கள் விரோத ஆட்சியை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் செயல்பட வேண்டும்.

பார்வதியம்மாளுக்கு காட்ட வேண்டிய மனித நேய உதவியில் கருணாநிதி நடந்து கொண்ட விதம் என்பது ஒரு பார்வதியம்மாளுக்கு நடந்த விஷயம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுமே வெட்கித் தலைகுனியும் படியான நிகழ்வுதான் இது தனக்குப் பிடித்த ஜால்ராக்களை மட்டுமே வைத்து பாராட்டு விழா பாணியில் கோவையில் நடத்த இருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு சிவத்தம்பி வருவது அவ்வளவு உகந்ததல்ல செம்மொழி மாநாட்டைத் தவிர்த்து அவர் வெளி நிகழ்வுகளில் கந்து கொண்டால் அவருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. சொரணையற்ற சிவத்தம்பி அப்படி வந்து கருப்புக் கொடி யாராவது காட்டினால் அவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்பதும் இங்கே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

உலகெங்கிலும் தமிழ் மக்கள் தோற்றுப் போனதான உணர்வில் தவிக்கும் போது, தங்களின் கையாலாகாதத் தனத்தால்தான் போர் நிறுத்தம் கேட்ட தங்களை நொறுக்கினார் என்று தமிழ் மக்கள் ஆற்றாமையால் துடிக்கும் போது சிவத்தம்பி மட்டும் பொறுப்பற்ற முறையில் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது மக்கள் உணர்வை புண்படுத்துவது போலாகும். இதை அவராக புரிந்து கொண்டால் நல்லது யாராவது புரிய வைத்தால் அது அவருக்குத்தான் இழுக்கே தவிற புரிய வைத்தவர்களுக்கு இழுக்கல்ல மாறாக புரிய வைத்தவர்கள் தற்காலத்தில் அரசியல் ரீதியாக தங்களின் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்தையும் அரசியலாக்கு போராடு

கருணாநிதியின் ஆதரவாளர்கள், கூட்டணித்தலைவர்கள், அல்லக்கைகள் அனைவரும் சொல்வது ஒன்றே ஒன்றுதான் தமிழர்களுக்குள் ஒற்றுமையில்லை, எல்லாவற்றையும் அரசியல் ஆக்குகிறார்கள் என்பதுதான். கனரக ஆயுதங்களால் புலிகளும் பொது மக்களும் கொன்றொழிக்கப்பட்ட போது ஈழத்தில் போரே நடைபெற வில்லை என்று சொன்னதும். மே மாதம் துயரமான 18, 19, 20 தேதிகளை ஒட்டி துன்பமான நாட்களில் டில்லியில் போய் தனது குடும்பத்தினர்களுக்கு பதவி வேண்டி கருணாநிதி நடத்திய பேரங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும்?

கருணாநிதி தலைமையில் ஒற்றுமையாய் இருப்பதும் சாத்தியமா? இந்த ஒற்றுமை என்பது சாம்பல் மேட்டில் நின்று கொண்டு தனக்கு வாழ்த்துப்பா பாட அனைவரையும் அரைகூவி அழைப்பதும். விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட் இந்திய தேசிய அரசியலுக்கு அடிவருடி வேலை பார்க்க தமிழர்களை அணி திரட்டுவதுமில்லாமல் வேறென்ன? ஆகவே இந்த ஒற்றுமை அவசியம் இல்லை. குட்டிமணியை இலங்கை அரசிடம் பிடித்துக் கொடுத்த கருணாநிதியின் இந்த ஒற்றுமை நாடகம் இப்போது சந்தி சிரித்துக் கொண்டிருப்பது யதார்த்தமான ஒன்றுதான். எல்லாவற்றையும் மறந்து விட்டு இப்போது கருணாநிதி நம்மை ஒன்றுபடக் கோரும் போது. தமிழர்கள் இழந்து விட்ட ஒவ்வொன்றையும் கருணாநிதி முன்னால் வைக்க வேண்டும். நீங்கள் வேறாகவும், நாங்கள் வேறாகவும் இருக்கும் போது இந்த ஒற்றுமைதான் எதற்கு.

பார்வதியம்மாள் ஒரு வேளை நாளையே சூழல் காரணமாக தமிழகம் திரும்பி வந்தாலும் சரி கருணாநிதியின் சின்னப்புத்தியை நாம் மன்னிக்காமல் அரசியலாக்கி போராட வேண்டும். சிவத்தம்பி செம்மொழி மாநாட்டிற்குச் செல்வது என்பது ஈழத் தமிழன் ஒவ்வொருவருக்கும் நேரும் அவமானம். கருணாநிதியின் வாழையிலையில் கை நனைக்கும் சிவத்தம்பிக்கு எதிர் கால வரலாற்றில் எஞ்சியிருப்பது என்ன?.

இந்நிலையில்தான் கருணாநியின் தமிழ் அரிப்புக்காக பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி கோவையில் நடத்தப்படும் செம்மொழி மாநாட்டிற்கு தமிழறிஞர் சிவத்தம்பி வருகிறார் என்கிற செய்தி அசிங்கமான ஒரு சரணடைவாக இருக்கிறது. தமிழர்களில் பல லட்சம் பேர் யுத்தத்திற்கு பலியாகியிருக்கும் நிலையில் கருணாநிதியிடம் சில சலுகைகளைப் பெற்றுக் கொண்டு செம்மொழி மாநாட்டிற்கு சிவத்தம்பி செல்வது என்பது தமிழன் எல்லாம் செத்தாலும் பரவாயில்லை தமிழ் மொழி வாழட்டும் எனப்து போல இருக்கிறது. முதிய நிலையில் தனது கோரிக்கைகளை நிராகரித்த கருணாநிதியையும் அவரது நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியையும் நிராகரித்த பார்வதியம்மாளின் நடவடிக்கையோடு சிவத்தம்பியின் வருகையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த கல்வி மான்களின் சூதும் வாதும் மௌனமும் எவ்வளவு வன்மமான ஒன்றாய் இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Exit mobile version