Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாபர் மசூதி – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில்… : சபா நாவலன்

தொண்ணூறுகளின் பின்னான இந்தியா பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. இந்தியாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் மத்திய இந்தியாவில் மக்களின் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசு திணறிப் போயிருக்கிறது. காஷ்மீர், நாகாலாந்து என்று இந்திய அரசின் கொல்லைப் புறங்களில்லெல்லாம் மக்கள் தெருவிற்கு வந்து போராடுகிறார்கள். இந்தியா எங்கும் பரந்து வாழும் இஸ்லாமியர்கள் தாம் நேசித்த இந்தியப் பற்றை கேள்விகேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் கையாள இந்திய அதிகார வர்க்கத்திற் பலமான தத்துவார்த்த ஆயுதம் தேவைப்பட்டது. உணர்ச்சிபூர்வமான அவர்களின் முதலாவது ஆயுதம் என்பது இஸ்லாமிய எதிர்ப்பு என்பதாகும்.

90 களில் பிரான்சில் பிரயோகிக்கப்பட்ட இதே இஸ்லாமிய எதிர்ப்பு ஆயுதம் அல்ஜீரியாவில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தது. பிரஞ்சு மக்கள் மத்தியில் இஸ்லாமியர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கியது. 9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பின்னதாக ஐரோப்பா எங்கும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு வாதம் இன்னும் தீவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனநாயகத்தின் உலகளாவிய பொது எதிரியாக இஸ்லாம் உருவகப்படுத்தப்பட்டது. அமரிக்காவும் அதன் நேச அணிகளும் உலகின் ஒரு குறித்த மதத்தினர் மீதான தாக்குதலை நிறுவனமயப்படுத்தப்பட வகையில் கட்டவிழ்த்தனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற குறித்த பிரிவு என்பதே அந்த மதத்தில் – இந்து மதத்தைப் போலவும், கிறீஸ்தவ மதத்தைப் போலவும்- நிறுவன மயமாக இல்லாதிருந்த போதும், மேற்கு அதனைத் திட்டமிட்டு உருவாக்கியது. பல சந்தர்ப்பங்களில் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்தது.

சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அமரிக்க அணி தனது பாதுகாப்புப் பொறிமுறைய வளர்த்துக்கொள்வதற்கு ஒரு பொது எதிரியை உருவாக்கினர். அந்த எதிரி இஸ்லாமாக உருவானது எனினும் காலவோட்டத்தில் இஸ்லாம் என்பது மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளத்தைச் சுரண்டுவதற்கும் உதவிபுரிந்தது.

இஸ்லாமிய எதிர்ப்பு, பாக்கிஸ்தானிய எதிர்ப்பு என்பன இந்திய தேசத்தை ஒட்டிவைத்திருப்பதற்கான கருவியாகளாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது நிறுவனமயமான நிலையைத் தொண்ணூறுகளின் பின்னரே பெற்றுக்கொள்ள ஆரம்பித்தது.
இந்து பாசிசம் இஸ்லாமிய அடிப்படை வாதம் உருவாகும் சூழலைத் தோற்றுவித்தது.

பலவீனமான எதிர்கொள்ளத்தக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகப்பெரும் எதிரியாகத் திட்டமிட்டு உருவகப்படுத்தப்பட்டது.
இந்திய அதிகார வர்க்கத்தின் ஊடகங்கள், இஸ்லாம் என்பது நாட்டின் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனையாக உருவகப்படுத்தின. இதனூடாக இந்தியாவின் நிறுவனமயமான பாசிசம், பொது எதிரியை உருவகப்படுத்திக்கொண்டது.

இனிவரும் காலங்களில், கஷ்மீரில் இந்திய இராணுவத்தின் படுகொலைகள், இலங்கையில் இந்திய ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை, மத்திய இந்தியாவில் அழிக்கபடும் மக்கள் இவை அனைத்திற்கும் மேலாக பட்டினியால் செத்துப் போகும் மக்கள் கூட்டம் என்பன இஸ்லாமிய எதிரியால் மறைக்கப்பட்டு விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு உருவமைக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு வாதமும் அதன் கர்த்தாவான இந்து பாசிசமும் சமூக ஒழுங்கில் நிறுவன மயமாக்கப்பட்டுள்ளது என்பதை விபரிக்கும் வெளிப்படையான சம்பவம் தான் பாபர் மசூதி குறித்த நீதிமன்றத் தீர்ப்பு.

இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் நம்புகின்ற ஒரே காரணத்திற்காக அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதன் பின்னணி இந்து வெறியும் இந்து பாசிசமும் இல்லாமல் இந்தியா இன்னும் நிலைத்திருக்க முடியாது என்பதாலாகும். வெறும் இதிகாசக் கட்டுக்கதைகளை வைத்துக்கொண்டு அது இந்துக்களின் இடம்தான் என்று சர்மா என்ற நீதிபதி தீர்ப்புச் சொன்னபோது மனிதகுலம் வெட்கித் தலைகுனிந்தது.

இலங்கை இதிகாசக் கதைகளை முன்வைத்து அந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குத் தான் சொந்தமானது என்று போர்க்குர எழுப்பியதன் பின்புலம் இன்று இந்திய நிலைமைகளுக்கும் பொருந்திப் போகிறது.

இவ்வாறு நிறுவனமயப்பட்ட இந்து பாசிசத்தையும் இஸ்லாமிய எதிர்ப்பையும் கட்டமைபதன் பின்னான நிகழ்சி நிரல்கள் அபாயகரமானவை.

1. இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாவதற்கான சூழலை உருவாக்குதல்.
2. இஸ்லாமிய அடிப்படை வாதமே பொது எதிரியாக உருவமைத்தல்.
3. விரக்தியடந்து அரசிற்கு எதிராகப் போராடும் மக்கள் பகுதியினரை இஸ்லாமியப் பூச்சாண்டி காட்டி திசைதிருப்பல்.
4. இதனூடாக தேசிய விடுதலைப் போராட்டங்கள், மாவோயிஸ்டுக்களின் போராட்டங்கள் ஆகியவற்றை பலவீனமடையச் செய்து இறுதியில் அழித்தல்.
5. இந்தியாவைச் சுரண்டல் சந்தைக்குரிய பிரதேசமாக உருவாக்கல்.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இந்திய தேசத்திற்காகவும் அர்ப்பணிப்புத்துப் போராடிய இஸ்லாமியர்களை இந்தியப் பிரஜைகள் அல்ல எனப் பிரகடம் செய்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய நாடான இந்தியாவில் இந்து பாசிசம் தான் வாழ முடியும் என சட்டபூர்வமாக நிரூபித்திருக்கிறது நீதிமன்றம்.

நரேந்திரமோடியினதும் ஆர்.எஸ்.எஸ் மஞ்சள் பயங்கரவாதிகளதும் குரலை நீதிமன்றம் சட்டபூர்வமாகவும் நிறுவன மயமாகவும் உருவகப்படுத்தி ஒலித்திருக்கிறது.

இந்திய அரசின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்திருக்கும் இந்து பாசிசத்தினது சூழ்ச்சிக்கு எதிராக இந்திய முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் போராடுவர்கள். இஸ்லாமியர்களைப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளாத இந்தியா சிதறிப்போகும் என்பதை அவர்கள் உலகிற்கு உணர்த்துவார்கள். இன்று உற்சாககளிப்பில் ஆழிக் கூத்தாடும் இந்து வெறியர்கள் இந்தியாவின் பிரஜைகள் அல்ல என்று உணரவைப்பார்கள்.இஸ்லாமிய எதிர்ப்புவாதம் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துலக மக்களுக்கும் எதிரானது என்பதை இந்திய மக்கள் உணருவார்கள்.

Exit mobile version