Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பறிபோகும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசமும் பிழைப்புவாத தமிழ் அரசியல் தலைமைகளும்! : பி.எஸ்.குமாரன்

பேரின வாதத்தின் இனச் சுத்திகரிப்பு என்பது அந்த இனத்தின் அடையாளங்களை அழிப்பதைப் பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. வரலாற்று உண்மைகள், தடையங்களை அழித்தும் அவற்றைப் பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் இனச்சுத்திகரிப்பின் அடிப்படைகளாக அமைகின்றன. அழிக்கப்படும் வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்தல் என்பது பேரினவாதத்திற்கு எதிரான அரசியலின் முக்கிய கூறாக அமைகிறது.

ஒடுக்கப்படும் இனத்தின் அடையாளங்களை அழித்து அதனை ஒடுக்கும் இனம் பிரதியீடு செய்யும் நிகழ்ச்சிப் போக்கிற்கு எமது கண்முன்னே காணக்கிடைக்கும் உதாரணம் திட்டமிட்டு அழிக்கப்படும் வரலாற்று ஆதாரமான கன்னியா வென்னீரூற்று பிள்ளாயார் கோவிலும் அதன் அருகே நிர்மாணம் பெறும் பௌத்த விகாரையும் இரத்த சாட்சியாய் உறைந்து கிடக்கின்றது..

கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக பேரினவாதிகளின் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் தடுக்கப்பட்ட இப்போது பாழடைந்துவரும் மிக நீண்ட வரலாற்று ஆதாரமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டே வருகிறது. மறுபுறமாக வெந்நீர் ஊற்றுக்களை அண்மித்த மலையடி வாரப்பகுதியில் புதிதாக பௌத்தர்களுக்குரிய வணக்கஸ்தலம் ஒன்று நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தடுக்கப்பட்டிருப்பது பிள்ளையார் கோவில் புனருத்தாரணம் என்பதைவிட, தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று உரிமை மறுதலிப்பு என்பதே சரியானதாகும். இந்துக்கள் இறந்தோரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகளை செய்வதற்குரிய கோவிலாக பலநூறு வருடங்களாக பயன்படுத்தி வரும் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தின் பூர்வீக வரலாற்றை திரிபுபடுத்தி,அதனை வில்கம் விகாரையுடன் தொடர்பு படுத்தி ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் தொடர்ச்சியாகவே பிள்ளையார் கோவில் நோக்கப்பட வேண்டும். (‘வில்கம் விகாரை’ பிரதேசம் மன்னராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும்   காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கதை திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படுகிறது.)

தற்போதைய வெந்நீர் ஊற்று வரலாற்று திரிவுபடுத்தலின் படி கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் பெரிய குளம் வில்கம் விகாரையுடன் தொடர்பான வரலாற்று பின்னனியை கொண்டுள்ளதாக கூறிக்கொண்டு பிள்ளையார் கோவில் இருந்த இடத்துக்கு அருகில் கண்ணிய வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்தி வந்தார்.
தற்போது வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அறியக்கூடியதாக உள்ளது.

பௌத்த விகாரை அமைப்பது தவறான செய்கையோ அல்லது விகாரை அமைக்க கூடாதென்பதோ அல்ல இங்கு பிரச்சினை. இன்னமும் பிள்ளையார் கோவிலை புணர்நிர்மானம் செய்ய அனுமதி மறுப்பதேன்? ஏன்பது தான் பிரச்சினை. இதிலிருந்து விளங்கிக்கொள்ளக்கூடிய தொன்றுதான் கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை முற்றாக மறுதலிக்கும் விதத்திலும் திரிபுபடுத்திய வரலாற்றை நிலைநிறுத்தும் நோக்கிலும் கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவிலை இல்லாமல் செய்துவிடும் முயற்ச்சி மேலோங்கி நிற்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.

இன்று திருக்கோணமலையை மையப்படுத்திய தமிழ் அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் தமிழர் குடியேற்றம் என்ற போர்வையில் இந்து கோவில் நிலங்களையும் பொதுசொத்துக்களை மறைமுகமாக விற்பனை செய்து தமது சொந்த கஜானாக்களை நிரப்புவதில் அக்கறை கொண்டுள்ளார்களே தவிர திருக்கோணமலையில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகளையும் வரலாற்று அடையாளங்களையும் பாதுகாத்து தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் நோக்கிலான எந்த செயல்திட்டங்களையும் முன்னெடுப்பதில் அக்கறை கொள்பவர்களாக இல்லை என்பதே உண்மை. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பேரினவாதம் முன்னெடுத்து வரும் வரலாற்று திரிபுபடுத்தல்களை சட்டபூர்வமாவதை தடுப்பதற்கான முயற்ச்சிகளை இனியாவது காலதாமதமின்றி மேற்க்கொள்ள தவறின் கன்னியா வெந்நீர் ஊற்றுக்களும் அந்த பிரதேசமும் வில்கம் விகாரையின் ஒரு பகுதியாக பிரகடனப்படுத்துவது நிட்சயம் நடந்தேறும்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் பேரினவாதத்தின் செயற்திட்டங்கள் ஆர்ப்பாட்டம எதுவுமின்றி அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதேவேளை தமிழர் தாயகத்தின் வரலாற்று உரிமைகளையும் அவற்றின் அடையாளங்களையும் பாதுகாக்கவேண்டிய கடைப்பாடு உடையவர்களும் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமது பிரதி நிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது கடமை பொறுப்புக்களில் இருந்து விலகி வெகு தூரம் நிற்பதையே கன்னியா வெந்நீர்ஊற்று  விகாரை விவகாரம் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றது.

 கடந்த பாராளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட த.தே.கூட்டமைப்பு தமது 6 வருட பதவிக் காலத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வெந்நீர்ஊற்று விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தைஈர்க்க முயலாமையானது வேதனைக்குரியதும் வெட்கப்படவேண்டியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும். பாராளுமன்றத்தின் மூலம் தமழ் மக்களுக்கு நியாயமான தீர்வுஒன்றினை பெறமுடியாதென்றாலும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான குரல்களும் செல்லாகாசென்பதை இதன் மூலம் முழு உலகுக்கும் வெளிப்படுத்தியிருக்கமுடியும்.

ஆக ஈழத்தமிழரை பொறுத்தவரை உருப்படியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று இல்லாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர் என்பதே உண்மை நிலவரமாகும். இந்த நிலைமை உடனடியாக நிவர்த்திசெய்யப்படவேண்டிய விடயமாகும் இவ் இவிடயத்தில் புலம்பெயர் உறவுகளும்,  உள்நாட்டு புத்திஜீவிகளும் சமூகபற்றாளர்களும் அக்கறையுடன் செயல்படவேண்டிய அவசியத்தை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் – பௌத்த விகாரை விவகாரம் வலியுறுத்தி நிற்கிறது.

Exit mobile version