
வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட வேண்டும். அதற்குத் தயாராகாத மக்கள் பண்பாட்டுத்தளத்தில் சாமி ,கோயில் ,பூஜை என்று தீர்த்துக்கொள்ள முயலும் பழக்கம் அபினியைப்போல மயக்கிக்கொண்டிருக்கும் நம் சமூகத்தில் இதுபோன்ற சாமியார்கள் வருவதும் சமயங்களில் பிடிபடுவதும் சகஜம்.
எனக்கு அக்காட்சியை பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது.பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே.சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.
அவன் பிரம்மச்சர்யத்தை ஊருக்கு உபதேசம் செய்பவனாக இருந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இப்படி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறான் என்பதற்காக அவனைக் குற்றம் சாட்டலாம்.அது சரி.கோடிக்கணக்கான சொத்துக்கு தலைவனாக இருப்பதில் இதுவரை எந்த விதிமீறலும் இல்லாமலா இருந்திருக்கும்? அதைப்பற்றியெல்லாம் தோண்டி எடுத்து வெளியே போட்டு அவனைக்கிழிக்கலாம். இவனை மட்டுமல்ல இவனைப்போல ஊரை ஏமாற்றும் அத்தனை சாமியார்களின் சொத்துக்குவிப்புகளும் கிழிக்கப்பட வேண்டும்.அத்தனையும் ஏமாந்த எளிய மக்கள் கொடுத்த சொத்து.ஆட்சியில் இருப்பவர்களே சாமியார்களிடம் மோதிரம் வாங்கிக்கொண்டு திரியும்போது அவர்களின் பொருளாதாரக்குற்றங்களை யார் கேள்வி கேட்பார்கள்?
அதிலும் இந்த நித்யாப் பையன் அமெரிக்கா இஐரோப்பாவெல்லாம் போய் கார்ப்பொரேட் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன அழுத்தங்களை சரி செய்ய தியான வகுப்புகள் நடத்துகிறவன்.பன்னாட்டுக் கம்பெனிகளோடு தொடர்புடையவன்.தமிழகப் போலீஸ் போய் அவனைக்கைது செய்தாலும் சுலபமாக வெளியே வந்து விடுவான்.
பாலியல் குற்றம் இல்லாமலே ஏராளமான பிற குற்றங்கள் புரியாமல் சட்டத்தை ஏமாற்றாமல் எந்தச்சாமியாரும் கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்க்க முடியுமா? சாயிபாபா ,அமிர்தானந்தா தொடங்கி எத்தனையோ ஆனந்தாக்களும் கிறித்துவ சாமியார்களும் இந்தத் திசையில் விசாரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டுப் பிடிபட வேண்டியவர்களாவர்.
மக்களை மயக்குவதற்கும் மனித மனங்களை கார்ப்பொரேட்டுகளின் சரக்குகளுக்கேற்ப தகவமைப்பதற்கும்தான் நவீன அபினிகளாக நாங்கள் வந்து விட்டோமே நீ என்ன எனக்குப் போட்டியாக என்று சன் டிவிக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுத் தாளித்து விட்டார்கள்.
ஒரு விரிவான பகுத்தறிவுப் பண்பாட்டு இயக்கத்தை ( முன்னெப்போதையும் விட இப்போது வலுவாக) நடத்த வேண்டிய காலமாக இன்றைய காலம் இருக்கிறது.