பேரினவாத இலங்கை அரசு தன் தனது குடும்ப சர்வாதிகார ஆட்சிமுறையை 18&வது சட்டத்திருத்தம் மூலம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில். இலங்கையைச் சூழ நிலவும் அபாகரமான அரசியல் நிலைகள் இனக்கொலை அரசான இலங்கையை தாங்கிப்பிடிப்பதாக இருக்கிறது. அரசியல், சிவில் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களின் முடமாக்கப்பட்ட நிலை அரசியல் புரோக்களுக்கும், அரசு உளவாளிகளுக்கும் ஏதுவான உகந்த நிலையை உருவாக்கி இருக்கும் நிலையில் இலங்கைக்குள் மாட்டிக் கொண்ட மக்கள் மறுவாழ்வு, புனர்வாழ்வு என்னும் பெயரிலான சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கில் வெளியேறிய மக்களோ தஞ்சமடையும் ஒரு நாட்டின் நிழலுக்காக எவ்வித உத்திராவாதங்களுமற்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்குள் இனி தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற ஒரு இனமாக வாழ முடியாது என்பதை இலங்கைச் சூழல் மீண்டும் மீண்டும் நமக்கு உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கைக்குள் மாட்டுப்பட்ட மக்களை வைத்து வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கும் தன்னார்வக்குழுக்களைப் போல வெளியேறிச் செல்லும் மக்களை வைத்தும் ஒரு கூட்டம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் தொடங்கிய காலம் தொட்டு ஈழத் தமிழர்கள் புகலிடம் கோரி உலகங்கும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது போர் முடிவடைந்துள்ள நிலையிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் புகலிடம் தரும் நாடுகளை நோக்கி பயணம் செல்வது குறைந்தபாடில்லை. இன்றைய தேதியில் இப்படி இடம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 15 லட்சம். இவர்களில் சரிபாதி பேர் குடியுரிமை பெற்றாலும் வந்து சேர்கிறவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகரித்துச் செல்கிறது. போர் முடிவடைந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தஞ்சம் கோரிச் சென்றிருக்கிறார்கள். இப்படிச் செல்கிறவர்கள் செல்லும் திசை ஒன்றாக இருந்தாலும் செல்லும் வழியிலேயே பல நாட்டு அரசுகளாலும் கைது செய்யப்படுகிறார்கள். நடுக்கடலில் தனிக்கப்பலில் சிக்கிக் கொண்ட இந்த மக்கள் கரையேறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டம் அக்கறைப்பற்றிலிருந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் 18&ஆம் தியதி நள்ளிரவு சுமார் 75 பேர் ஒரு சிறிய படகொன்றில் கிளம்பினோம். அகதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுள் ஏதோ ஒரு நாட்டில் இறக்கி விடுவதாகச் சொல்லி எங்களை கப்பலேற்றினார்கள். இதற்குக் கட்டணமாக ஒவ்வொருவரிடமும் சுமார் ஆறாயிரம் அமெரிக்க டாலர்கள் வரைப் பெற்றுக் கொண்டு கப்பலில் ஏற்றினார்கள். படகுப்பயணம் துவங்கிய இரண்டு நாள் கழித்து எங்களை இன்னொரு கப்பலில் ஏற்றி விட்டு விட்டு வந்தவர் வழியிலேயே சென்று விட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து நடுக்கடலில் கப்பல் அப்படியே நின்றது. அந்தக் கப்பலை ஓட்டி வந்தவரைக் காணவில்லை அவர் எங்களை அப்படியே விட்டு விட்டு மீன் பிடிப் படகொன்றில் தப்பிச் சென்று விட சிகப்பு விளக்கை எரிய விட்டோம். எங்களை மலேஷியப் போலீசார் சுற்றி வளைத்தனர். நாங்கள் அவர்களிடம் அகதி அந்தஸ்து கொடுக்கும் நாடொன்றை நோக்கித்தான் செல்கிறோமே தவிற உங்கள் நாட்டிற்கு நாங்கள் வரவில்லை. ஆகவே எங்களை உரிய முறையில் அகதி அந்தஸ்து தரும் மூன்றாவது நாடொன்றிடம் ஒப்படையுங்கள். அல்லது மலேஷியக் குடியுரிமைக் கொடுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டு எங்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது. நம்பிக்கையளிக்கும் உறுதி மொழிகள் தரும் வரை நாங்கள் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்றோம். இப்போது நாங்கள் கப்பலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு கோலாலம்பூர் விமான நிலையம் அருகே கைவிலங்கிட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் ’’ சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மலேஷியப் போலீசிடம் சிக்கிய ஈழ அகதி தன் பயணக் கதையைச் சொல்கிறார் இப்படி. நான்கு மாதங்களுக்குப் பின்னர் மலேஷிய ஈழத் தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டு விட்டாலும்.அவர்கள் விரும்பிய படி புகலிடத்திற்காக அவர்கள் ஏதோ நாட்டிடம் கெஞ்சிக் கதறி குடியுரிமை பெற வேண்டிய நிலை.
அக்டோபர் மாதத்தில் ஓஷியானிக் என்னும் கப்பலில் 78 அகதிகள் ஆஸ்திரேலியாவை நோக்கி தஞ்சம் கோரும் பயணம் கிளம்பினார்கள். ஆழ்கடலில் வைத்து அக்கப்பலையும் அகதிகளையும் வழிமறித்த ஆஸ்திரேலியக் கடற்படையினர் அதை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்காமல் இந்தோனேஷியக் கடற்படையினரிடம் ஒப்படைக்க பல மாத இழுபறிக்குப் பின்னர் அகதிகளுக்கான ஐநா அலுவலகத்தின் தலையீட்டின் பேரில் நார்வே, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் இந்த 78 பேருக்கும் குடியுறிமை கொடுக்க முன்வந்துள்ளன. ஏனைய நாடுகளை விட அகதிகளை ஏற்றுக் கொண்டு கௌரவமாக நடத்திய நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த 2009 மே மாதம் தொடங்கி 2010 மே மாதம் வரை சுமார் மூவாயிரம் பேர் புகலிடம் கேட்டு ஆஸ்திரேலியா செல்ல அதை மிகப்பெரிய இடைஞ்சலாக நினைத்த ஆஸ்திரேலியா தனது குடிவரவு விதிகளைக் கடுமையாக்கி அகதி அந்தஸ்து விதிகளையும் கடுமையாக்கியது. வந்தவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்காமல் கிறிஸ்மஸ் தீவுகளுக்குக் கொண்டு சென்று முகாம்களில் அடைத்து வைத்தது. அகதிகள் தொடர்பான ஆஸ்திரேலியாவின் இந்த திடீர் முடிவு தஞ்சமடைய அலைந்த ஈழ அகதிகளின் பயணத்தின் பாதியில் இடியென இறங்க அவர்கள் போக்கிடம் தெரியாமல் தவித்தனர். ஆஸ்திரேலியா சென்றால் ஒரு வேளை நாம் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவோம் என்று அஞ்சியவர்கள் பயண திருட்டு பயண முகவர்களை நம்பி கப்பலேறி மலேஷியாவில், இந்தோனேஷியா , இந்தியாவின் கேரளா, தூத்துக்குடி, கன்னியாகுமரி என்று போலீசிடம் சிக்குகிறார்கள்.
வலி நிறைந்த இந்தப் பயணத்தில் சென்று கனடாவில் ஒதுங்கியுள்ள கப்பல்தான் எ.வி. சன் என்னும் கப்பல். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று 490 பேர் கப்பலில் புகலிடம் கோரி கனடாவில் கரை ஒதுங்கியிருக்கிறார்கள். 40 டாலர் முதல் 50,000 டாலர் வரை வசூலித்து தாய்லாந்தில் இருந்து இக்கப்பல் புறப்பட்டதாகவும் புகலிடக் கோரிக்கை தொடர்பாக ஆஸ்திரேலியா மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டதால் மூன்று மாதம் பயணித்து கனடாவை நோக்கி வந்ததாகவும் கூறுகிறார்கள் கனடா அதிகாரிகள். ஆபத்தான கடல் பகுதியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமற்ற நிலையில் வரும் வழியிலேயே ஒருவர் இறந்து போக அவரை கடலிலேயே அடக்கம் செய்து விட்டு வந்து சேர்ந்தவர்களை இப்போது கனேடிய குடிவரவுத்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு குடியுறிமை கொடுக்கக் கூடாது என்பது இலங்கை அரசின் கோரிக்கை. ஈழ அகதிகள் பெயரில் புலிகள் தான் இவ்வாறான பயணங்களை மேற்கொள்கிறார்கள். அகதிகள் விஷயத்தில் ஆஸ்திரேலியா கடைபிடித்த அதே சட்ட விதிமுறைகளைக் கடைபிடியுங்கள் என்று அட்வைஸ் செய்கிறது பேரினவாத இலங்கை அரசு. மாதக் கணக்காக கடலில் பயணம் செய்து கனடாவிற்கு வந்துள்ள ஈழத் தமிழ் அகதிகளொ இப்படி கண்ணீரோடு கதறுகிறார்கள்.நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்.நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, நாம் கனேடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம்.சிறிலங்காவில் போர் முடிவடைந்து விட்டது. ஆனால் அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை.என்பதோடு எங்களின் நிலம் எதுவுமே எங்களிடம் இல்லை. அங்கே நாங்கள் தமிழர்களாக வாழ முடியாது. முட்கம்பி வேலிகளுக்குள் தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது. ஆகவே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்கிறார்கள் கப்பல் அகதிகள்.கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் தமிழகத்திலும்,கேரளத்திலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கரையோரப் பகுதிகளில் எவ்வித முறையான வழிக்காட்டலும் இன்றி புகலிடம் தரும் நாடொன்றை நோக்கிப் பயணம் செல்ல காத்திருந்து போலீசிடம் சிக்குகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமமான சின்ன முட்டம், கேரளத்தின் துறைமுக நகரான கொச்சி, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து பாதுகாப்பற்ற படகுப் பயணத்தை மேற்கொள்ள வந்து போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஈழ அகதிகள் திறந்த வெளி கழிப்பிடங்களிலேயே வாழும் நிலையில் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு நாட்டில் எப்படி குடியேற இவர்கள் விரும்புவார்கள். தவிறவும் இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. இன்றைய தேதியில் இந்தியா போருக்குப் பின்னர் புகலிடம் கோரும் ஈழ மக்களுக்கு இந்தியா பாதுகாப்பான தேசமாகவும் இல்லை. ஆக மொத்தம் அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.சிறகு விரித்து
விதையொன்று அலையும்
முளைக்க ஒரு பிடி மண்தேடி.என்கிற கவிஞர் இன்குலாபின் கவிதை வரிகளின் வேதனை முப்பதாண்டுகளைக் கடந்தும் ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைதான்.
‘‘
“
2009
