Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் வியாபார ஊடகங்கள் புறக்கணிக்கும் புதிய அரசியல் மாற்றம் : கோசலன்

முப்பது வருடம் வெற்றிகளையும் தோல்விகளையும் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்த ஒரு தேசிய இனத்தின் எச்ச சொச்சங்கள் என்றால் எத்தனை அறிவு பூர்வமான விவாதங்கள் ஆக்கபூர்வமான நகர்வுகளைக் கண்டிருக்க முடியும்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சமூகம் இருளுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் இலகுவில் உணர்ந்து கொள்வார்கள்.

முள்ளிவாய்க்காள் இழப்புக்கள் வரைக்கும் இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் அறுவடை செய்திருக்கிறோம். அத்தனை நண்பர்களையும் எதிரிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தனை எதிரிகளையும் நண்பர்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

மூன்று கால் நூற்றாண்டுகளாக ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் நியாயமான போராட்டம் தடையங்கள் கூட இல்லாம் துடைத்தெறியப்பட்டதற்கு பின்னணியில் இயங்கிய அதே வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் எந்தத் தயக்கமுமின்றி மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறார்கள். தம்மைத் திருத்திக் கொண்டல்ல. அதே சாகடிக்கப்பட்ட வழிமுறைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமந்துகொண்டு மக்களை நோக்கி வருகிறார்கள்.

இராணுவ வெற்றிகளை உதாரணம் காட்டியே நிலை கொண்ட போராட்ட வரலாறு பல கசப்பான அனுபவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வெற்றிகளை சுட்டிக்காட்டியே தம்மைச் சுற்றி கதாநாயகர்கள் போன்ற விம்பத்தை உருவாக்கிக் கொண்ட அதே முகங்கள் இன்று அரசியல் வெற்றி பெறுவதாக மக்களை மாயைக்குள் வைத்திருக்க முற்படுகிறது.

அமரிக்கா இலங்கை அரசை துவம்சம் செய்கிறது; பிரித்தானியா ராஜபக்சவை அழித்துவிடப் போகிறது; “சரவதேசம்” ஈழம் பெற்றுக் கொடுக்கப் போகிறது; ரொபேர்ட் பிளேக் ராஜபக்சவைக் கடிந்து பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்; ஐ.நா இலங்கையை மனித் உரிமையால் சுற்றி வழைத்திருக்கிறது… இவையெல்லாம் முள்ளி வாய்க்கால் அழிவின் பின்னர் தமிழ் ஊடகங்களில் நாளாந்தம் வெளியாகின்ற “உற்சாகமூட்டும்” செய்தித் துளிகள்.

குறிப்பாகப் புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற உணர்வு பூர்வமான தமிழ்ச் சமூகத்தை “கொதி நிலை -உத்வேகத்தில்” பேணிக் கொள்வதற்காக இவ்வாறான செய்திகள் கருத்துக்களாக வெளியாகின்றன.

மறுபுறத்தில் ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களை போராடாமல் தடுப்பதற்காக இதே செய்திகள் பரப்பப்படுகின்றன.

இரண்டு பிரதான சாதனைகள ஊடகங்கள் செய்து முடிக்கின்றன:

1. ஈழத்தில் மக்களைப் போராடாமல் தடுப்பது.

2. போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்துவதற்கான அத்தனை வழிகளையும் தவறான நம்பிக்கைகளை வழங்கி மூடுவது.

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட வேளையில் அமரிக்கா படையோடு வருகிறது என்று நம்பிக்கை வழங்கப்பட்டது. அமரிக்க அதிகாரிகள் கொல்லப்படுவதை செய்மதியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

லட்சக் கணக்கில் முகாம்களில் மக்கள் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டபோது, மனித உரிமை கோரி ஐ.நா ராஜபக்ச வீட்டு வாசலுக்கே வந்துவிட்டதாக நம்ம்பிக்கையூட்டப்பட்டது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பன் கீ மூன் முகாம்கள் உலகத் தரத்தில் இருப்பதாக அறிக்கை விடுத்தார்.

அமரிக்க பாக்கிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து ஒபாமாவைக் கொலைசெய்து விட்டு திரும்பிய மறு நாளே ரோபர்ட் பிளேக் இலங்கை சென்றார். ராஜபக்ச குடும்பத்தைக் கையோடு கூட்டிவந்து கூண்டில் அடைத்து விடுவார்கள் என்ற எல்லைக்கு நம்பிக்கை தரப்பட்டது. இலங்கையின் இதயத்தில் கால்வைத்துக் கொண்டே பிரபாகரனும் ஒபாமாவும் ஒரே வகையானவர்கள் என்று ராஜபக்ச அரசாங்கத்தைப் பாராட்டிவிட்டு வந்திருக்கிறார்.

கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச அமரிக்க சென்ற போது அங்கே பிடித்து அடைக்கப்போகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டப்பட்டது. இறுதியில் ராஜபக்ச பரிவாரங்களோடு நியூயோர்க் தெருக்களில் வலம்வந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சைனையைப் பேசி வானத்தைப் பிளக்கிறார்கள் என்று நம்பிக்கை தரப்பட்டது. இன்று பிரித்தானிய தூதுவர் புலிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர், இனச் சுத்திகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த சிங்கள மயமாக்கல், பாலியல் வல்லுறவுகள் என்று அத்தனை வழிகளிலும் இலங்கையில் மனித அவலத்தைத் திட்டமிட்டு ராஜபக்ச அரசு அரங்கேற்றுகிறது.

ஆனால் ராஜபக்ச சாம்ராஜ்யத்தின் சுவரிலிருந்து சாந்து கூடக் கொட்டவில்லை. மேலும் மேலும் தன்னைப் பலமாக்கிக் கொள்ளும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள் ஏதும் எழுந்து விடாமல் புலம் பெயர் தலைகளும் அவற்றிற்கு அரோகராப் போடும் ஊடகங்களும் பாதுகாத்துக் கொள்கின்றன.

அமரிக்காவும் ஐரோப்பாவும் இந்தியாவும் இதுவரைக்கும் ராஜபக்ச அரசிற்கு நேரடியாக எந்தத் தொல்லையும் தரவில்லை. மாறாக, பக்கபலமாகவே செயற்படுகின்றன. இந்த அரசுகள் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்கின்ற அரசியல் வியாபாரிகளின் கபட நாடகமும், அவர்களைப் பின் தொடரும் பாமரத் தனமும் தமிழ்ப் பேசும் மக்களின் “சாபக் கேடு”.

மக்கள் மத்தியில் இவ்வாறான நச்சுக் கருத்துக்களை விதைக்கும் தமிழ் ஊடகங்கள் வெளியிடுகின்ற செய்தியில் மறந்தும் அமரிக்கா போன்ற அதிகார வல்லரசுகளுக்கு எதிரான செய்திகளைக் காணக் கிடைப்பதில்லை.

லிபியாவைக் கொள்ளயிடுவதற்காக தலையீடு செய்த நேட்டோ, கடாபி மீது முன்வைத்த குற்றச் சாட்டுக்கள் பொய்யானவை என ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இன்று உலக அரசியலின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் இது குறித்த பல விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழ் ஊடகங்களுக்கு இதெல்லாம் பாரமான செய்திகள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜே.வி.பியில் முக்கிய பிரிவொன்று பிளவுற்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயனிர்ணய உரிமைக்காக சிங்கள மக்களும் கூடப் போராட வேண்டும் என வெளிப்படையாகக் கூறுகிறது. இச்செய்தி கிசுகிசு செய்திபோல எங்கோ மூலையில் முகிழ்த்து மடிந்துவிட்டது.

உலக அதிகாரங்களின் வெற்றுக் கண்டனங்களை இலகுவில் புறக்கணித்துவிடும் ராஜபக்ச பாசிசம், தெற்கிலிருந்து எழும் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறது. அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பிற்கு உட்படும் போது அது பலவீனமடைகிறது.

அரபு நாடுகளின் அண்மைய எழுச்சிகளிலிருந்து வரலாறு முழுவதும் எமக்குக் கற்றுத்தரும் பாடம் கூட இதுதான். ஜே.வி.பியிலிருந்து முளைவிடும் முற்போக்கு அணி, ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் என அறிந்திருந்தும் நமீதாவிற்கும் விளம்பரங்களுக்கும் வழங்கும் முக்கியத்துவத்தைக் கூட தமிழ் ஊடகங்கள் இதற்கு வழங்கவில்லை.

ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கும் அரசியல் வியாபாரிகளின் தடைகளைக் கடந்து புதிய ஜனநாயக முற்போக்கு அணி இலங்கையில் உருவாவது அவசியமானது அவசரமானதும் தேவையாகும்.

Exit mobile version