Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் வாக்களிப்பின் மூலம் வழங்கியுள்ள அரசியல் செய்தி : விஜய்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஒருவகையில்; பரந்து பட்ட மக்களுடைய கருத்தக்களை தெளிவாக தெரியப்படுத்தியதற்கான வலுவான சந்தர்ப்பங்களை காணமுடியமலே இருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.  பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன், “நாம் நினைக்கிற அளவிற்கு தேர்தல் முடிவுகள் எளிமையானவை அல்ல. அவற்றில் சில சிக்கலான பரிமானங்கள் இருக்கின்றன” என நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தல்கள் குறித்து தெரிவித்திருக்கிற கருத்தினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. “இலங்கை சனநாயகப் பாரம்பரியங்களின்” படிநடைபெறுகின்ற தேர்தல்கள் குறித்து “உள்ளிருந்தே” பலத்த விமர்சனங்கள்தோன்றியிமிருக்கிறது. இருந்து போதும் தற்போதைக்கு தேர்தல் முடிவுகளையேமக்களின் அரசியல் அபிலாசைகளை அறிந்து கொள்வதற்கான ஒரு கருவியாகப்
பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா,இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கும் எமது மக்கள் மீண்டுமொரு அங்கீகாரத்தையே உள்ளுராட்சித் தேர்தல்கள் வாயிலாக அளித்துள்ளனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என
தெரிவித்திருக்கிறார்.

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரானபேராசிரியர் சிற்றம்பலம், வெறும் அபிவிருத்தி என்ற விடயத்துடன் தமிழ் மக்கள் தமது உரிமைகளை இழக்கமாட்டார்கள் என்ற செய்தியை அரசாங்கத்திற்குவெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் மக்கள் வடக்கு,கிழக்கு இணைந்த தாயகம் என்பதில் பற்றுடனேயே இருக்கின்றனர் என்பதை தேர்தல்கள் வாயிலாகப்புலப்படுத்தியுளள்னர் எனத் தெரிவித்திருக்கிறார். இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் தெளிவான விளக்கமொன்றினை முன்வைத்திருக்கிறார். வடமாகாணத்தில் 10 சபைகளில் ஏழு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினால் வெற்றி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கியமானதொரு செய்தி தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது கட்டுரையாசிரியிரின் அபிப்பிராயமாகும். கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் முகம் ஆகும்.

பொருளாதார அபிவிருத்தி, நிவாரணம் போன்றவற்றை வழங்க முடியாத ஒருகட்சி ஆகும். இத்தகைய பின்னணியில் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதன் மூலம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் பிரச்சினைகள் இன்றும் கூட முக்கியமானவை என்பது அழுத்திக்கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் தென்னிலங்கையில் பரவிவந்த ஒரு அபிப்பிராயம் என்னவெனில்சாதாரண தமிழ் பொதுமகன் (அல்லது மகள்) அரசியல் உரிமை பற்றி அக்கறைப்படவில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம் பொருளாதார அபிவிருத்தி, நிவாரணம் போன்றவை மட்டுமே ஆகும் என்பதாகும். இது தென்னிலங்கையின் அரசியல் விருப்பத்திற்கு உகந்ததாக இருந்தமையினால் வேகமாகப் பரவிவரும் ஒரு கருத்தாகவும் காணப்பட்டது. இப்பொழுது இது உண்மையானதல்ல. தமிழ் மக்களுக்கு இன்றும்கூட அரசியற் பிரச்சினைகள் முக்கியமானவையே என்பது அழுத்திக்
கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர், வடக்கு, கிழக்கு மக்கள் என்றுமே தமது அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல் சலுகைகள் மற்றும் அபிவிருத்தி என்பவை தேவையாயினும் அரசியற் தீர்வே முன்னுரிமைக்குரியது என்பதை தெட்டத்தெளிவாக தமிழ் மக்கள் விலியுறுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிற அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம், வடக்குக் கிழக்கில் போர் அழிவிற்குப் பின்னும்மக்கள் தமிழ்த் தேசியத்துடன் உறுதியாக நிற்கும் கட்டுறுதியான சமூகம் என இத்தேர்தல் மூலமும் நிரூபித்துள்ளனர். கிழக்கு மக்கள் பல்வேறு
கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தாம் தமிழ்த் தேசியத்துடனேயே உள்ளனரென்பதை நிரூபித்துள்ளனர். எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், தமிழ் மக்கள் தென்னிலங்கை, இந்தியா, மேற்குலகிற்கு தமிழ் மக்களின் அடையாளம் சுயநிர்ணயம் மற்றும் தேசியம் என்பவற்றை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கருத்துக்களை யாரும் மறுதலிக்க முடியாது. மக்களின் வாக்களிப்பினைஆழமான முறையில் ஆராய்ந்தால் சில ஏற்றங்களும்-இறக்கங்களும் இருப்பதனை அவதானிக்கு முடிகிறபோதும் பொது முடிவினில் மாற்றங்களை அவை ஏற்படுத்தா. இதற்கப்பால் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றியனாது “அமைச்சர்களும் அரசின் முகவர்களும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர் குழாமும் அதிகாரங்களையும் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தியும் ஆங்காங்கு
முகாமிட்டு ஆயுத முனையில் எமது வேட்பாளர்களையும் மக்களையும் அச்சுறுத்தியும் வாக்குகளை அபகரிக்க முயற்சித்த பொழுதும் தமிழ் மக்கள் பெருமளவில் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து மக்களின் வெற்றியை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்” என மாவை சேனாதிராஜா
குறிப்பிட்டிருப்பது இந்த தேர்தல் வெற்றியின் முக்கியத்தவத்தினை எடுத்தக்காட்டியிருக்கிறது. அரசாங்கத்தின் அதிகாரம், ஆயுத பலம்என்பவற்றினை எதிர்கொண்ட சிவில் சமூகத்தினரின் வெற்றி இது.

ஆயினும் இத்தேர்தல் வெற்றி குறித்து மற்றொரு பரிமானமும் இருக்கிறது.கூட்டமைப்பினர் முக்கியமாக தமிழரசுக் கட்சியினர் “கொள்கை இலட்சியங்கள் மீது நம்பிக்கை கொண்டே மக்கள் இத்தேர்தலிலும் வாக்களித்தார்கள்” எனக் குறிப்பிட முனைவது குறித்து பலத்த விமர்சனமுண்டு.
இது குறித்து விளக்கியிருக்கிற பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன், இதனை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரண்டுள்ளனர் என்று நோக்குவது சற்று முதிர்ச்சியின்மையே ஆகும். உண்மையில்(தென்னிலங்கையைப் போல)தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றுத் தெரிவு காணப்படவில்லை. தமக்குவாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பு என்பதை சரியாகப் புரிந்து கொண்டு  செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறில்லாதபோது மாற்றுத் தெரிவுகள் ஏற்படுவதற்hகன சாத்தியம் முழுமையாக இல்லாதிருக்கின்றது என்று கூறமுடியாதுஎனக்குறிப்பிட்டிருக்கிறார். யோதிலிங்கம், மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஏற்று வாக்களித்தவர்கள் அல்லர். எனினும் தமிழ்த் தேசியத்தின் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளதால் அதன் பலவீனங்களை சகித்துக் கொண்டே வாக்களித்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருப்பதுவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதற்கப்பால் மேலும் சில விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி, நிவாரணம் போன்றவற்றில் கூட தென்னிலங்கை சிங்கள அரசாங்கமும்; அரசாங்கத்தின் கூட்டாளிகளும் நியாயமானதொரு முறையில் நடந்து கொள்ளவில்லை என்பதே போரின் பின்னரான
காலத்தின் அனுபவமாகப் பெறப்பட்டுள்ளது.

அவ்வாறெனின் நிவாரணங்களை விட “கூட்டமைப்பின் அரசியலுக்கு” மக்கள்ஆதரவிளத்துள்ளார்களா? என்ற வினாவும் தோன்றுகிறது.மேலும் தமிழ் மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கிய வகையில் இனவாத நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்பட்டும் வந்தது. இதனால் ஏற்பட்ட தமிழ் மக்களின் சிங்கள இனவாத ஓடுக்குமுறைக்கு எதிரான போக்கே கூட்டமைப்பினை இத் தேர்தலில் ஆதிரத்து நிற்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது எனக்கருதுவதில் தவறெதுவும் இல்லை. இந்த சிங்கள இனவாதஓடுக்குமுறைக்கு எதிரான போக்கே புலிகளின் அடிப்படை அரசியல் பலமாகவும்இருந்தது. ஆக மீண்டும் தமிழ் மக்களை, அரசியல் மயப்படுத்தாத, போராடத்தூண்டாத. அணிதிரண்டு பலம் பெறச் செய்யாத ஒரு அரசியல் நிலையிலிருந்து பெறப்பட்ட வெற்றியாகும். அறுபதாண்டுகளின் பின்னரும் தொடர்கிற ஒரு நிலை.

 

தேர்தல் வாக்களிப்பை, கூட்டமைப்பின் தமிழ்த் தேசியவாதத்திற்கு கிடைத்தவெற்றியாக கொள்வதுடன் இத்தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கியுள்ள முக்கிய செய்தியானது சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரானதாகப் புரிந்து கொள்ளப்படுவதுடன், அரசாங்கப் பலத்தினை எதிர்த்து நின்ற மக்கள் பெற்ற வெற்றியாகவும் புரிந்து கொள்ளப்படவும் வேண்டும்.

மேலாக, மக்கள் ஒடுக்குமுறையாளர்களுடன் எந்த நிலைமைகளின் கீழும் சமரசம் செய்து தமது  உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முயல்வதில்லை என்ற வரலாற்று உண்மை இங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் வழங்கி வருகிற ஆதரவினால் மட்டும் அரசியல் வெற்றி கிடைப்பதில்லை. அதனை சரியான திசையில் வழிநடத்திச் செல்கிற “அரசியலும்” தேவை.
கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை அவர்களின் அரசியல் குறித்து “இதுகாலவரையான நமது அரசியல் அனுபவங்களின் அறிவிற்கு ஒவ்வாத அரசியல் வழி நடப்பவர்கள்” என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனங்கள் குறித்து அவர்கள் கவனம் செலுத்துவது தவிர்க்கப்பட முடியாது. அத்தோடு “மாற்றுத் தெரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் முழுமையாக இல்லாதிருக்கின்றது என்று கூறமுடியாது” என்பது குறித்து முற்போக்குவாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

Exit mobile version