Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

IPKFகாலனியத்திற்குப் பிந்திய இலங்கையின் வரலாறு முழுவதும் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அதன் ஒவ்வொர் அங்கத்திலும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்களிப்பைக் காணமுடியும். உரிமைப்போரில் கொலையுண்டு போன ஒவ்வொரு மனிதனின் அழிவிலும் இந்திய அரசின் மேலாதிக்கத்தைக் கண்டுகொள்ள முடியும். ஈழப்போராட்டக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி அவர்களை மோதவிட்டு மரணித்துப் போனவர்களின் பிணங்களின் மீது தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொண்டது இந்திய அரசு. சமாதானப் படை என்ற சதிகாரப் படைகளை அனுப்பிவைத்து ஆயிரமாயிரமாய் மக்களைக் கொன்று குவித்தது. போராட்டத்தை வன்னிப் புதைகுழிகள் வரைய்க்கும் நகர்த்திவந்து அப்பாவி மனிதர்களோடு ஈழப்போராட்டத்தின் நியாயத்தையும் புதைத்து விட்டதும் இந்திய அரசே.

இந்தியாவின் கொல்லைப்புறங்களில் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு நாடுகளிலும் இந்திய அரசின் முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். நேபாளம், மியான்மார், பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டன் என்று ஒவ்வொரு நாடுகளதும் அரசியல் புதைகுழிகலும் இந்திய அரசின் கொலைவெறியைக் காணலாம்.

இன்றைய உலகில் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை ஒடுக்கும் நாடுகள் என்று பட்டியல் போட்டால் இஸ்ரேல், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பானியா என்று நீளும் பட்டியலில் இந்திய, இலங்கை அரசுகளின் இராணுவ ஒடுக்குமுறைஐ முதலிடத்தில் வைத்துக்கொள்ளலாம்.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பேரினவாத அரசு நிகழ்த்துகின்ற அதே இனச்சுத்திகரிப்பையே இந்திய அரசு காஷ்மீர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. நாகாலந்தில் நாளந்தம் சுயநிணய உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் கொல்லப்படுவது போன்றே ஈழத்திலும் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

பழங்குடி மக்களின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக தண்டக்காரண்யா வனப் பகுதிகளிலெல்லாம் மக்கள் அகதிகளாக விரட்டியடிக்கப்படுகின்றனர். எதிர்த்துக்கேட்போர் கொலைசெய்யப்பட்டு கணக்கில் காட்டப்படாமல் தெருக்களில் வீசியெறியப்படுகின்றனர். வடக்கிலும் கிழக்கிலும் இலங்கை அரசால் நிலங்கள்பறித்தெடுக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்படுவது போன்றே இந்தியாவிலும் நடைபெறுகின்றது.

சுய நிர்ணய உரிமை என்றாலே கொன்றுபோடும் இந்திய அரசு, உரிமைப் போராட்டம் என்றாலே பிணமாக்கும் இனக்கொலை அரசு, இலங்கையிலும் தனது எல்லைக்குள்ளும் போர்க்குற்றம் நிகழ்த்தும் மனிதகுல விரோத அரசு டெல்லியில் ‘ஈழத்தமிழர் மீது அக்கறை’ கொண்டு மாநாடு நடத்துகிறார்கள்.

இன்றைய இந்தியாவின் மாநாட்டை அன்று ஹிடலர் என்ற சர்வாதிகாரி அறிந்திருந்தால் யூத இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு யூதர்களின் நல்வாழ்விற்காக மாநாடு கூடியிருப்பார். சாரி சாரியாக இஸ்லாமியர்களைக் கொன்றுவிட்டு இஸ்லாமின் வளர்ச்சிக்காக இஸ்ரேல் மாநாடு கூட்டியிருக்கும்.

இந்த மாநாட்டை ஒழுங்கு செய்தவர்கள் இந்திய ‘சமாதானப்படை’ யின் துணை இராணுவக் குழுவாகச் செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். மாநாட்டைப் பிரச்சாரப்படுத்த தமிழ் நாட்டின் காங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் செய்தார். ஈழத்து என்.ஜீ.ஆர் என்று டக்களசுக்குப் புகழாராம் சூட்டிய அதே நாச்சியப்பன் ஐயா தான் அவர். இந்திய இராணுவம் இலங்கையில் சமாதானம் நிலைனாட்டியது என்று வாய் கூசாமல் தொலைக்காட்சிகளில் சொல்லும் நாச்சியப்பனின் இயக்கும் தன்னார்வ நிறுவனம் அழைபு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

14.15.16 ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புலம் பெயர்ந்து வாழ்கின்ற அறிவு சீவிக்கும் கனவான்கள் கூட்டம் ஒன்று விமானத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டது. இலங்கை இனப்படுகொலை அரசோடு பேசச் சென்ற புலம் பெயர் கும்பல்கள் முன்வைத்த அதே நியாயங்களோடு தான் இந்தக் கனவான்களும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள். ராஜபக்ச அரசோடு கைகோர்த்துக் கொண்டவர்கள் ‘இலங்கை சென்று ராஜபக்சவிற்கு எதிராகவே பேசப்போகிறோம்’ என்று மக்களின் கண்களில் மண்ணைத் தூவியதைப் போன்றே இவர்களும் இந்திய அரசுக்கு எதிராகப் பேசப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மண்ணைத் தூவினார்கள் என்றால் இவர்கள் மிளாகாய்ப் பொடியையே தூவியிருக்கிறார்கள்.

இவர்களுக்கு கஷ்மீரிகளின் வலி சுகமானதாகத் தெரிகிறது. நாகாலாந்து மக்களின் அழிவு இன்பகரமானது. அழிக்கப்படும் பழங்குடி மக்கள் வெறும் விலங்குகள். இவர்கள் அழிக்கப்படும் மக்களின் அவலத்தை ஆளும் வர்க்கத்திற்கு அடகுவைக்கும் இந்தப் பிழைப்பு வாதிகள் தாம் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.

கடந்து போன அறுபது வருட காலத்தில் சிறுகச் சிறுக ஆளும் வர்க்கத்திற்கு அடகுவைக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அதன் முகவர்களான பிழைப்புவாதக் கனவான்களின் கைகளில் சிக்குண்டுள்ளது.
இந்திய உளவுப்படை, தமிழகத்தின் சந்தர்ப்பவாத இனவாதிகள், சினிமாக் கூத்தாடிகள் போன்ற அனைத்து

அயோக்கியர்களும் பிழைப்பு நடத்துவதற்கு ஈழத் தமிழர்களின் அவலம் பிரதான நுளைவாசலாகிவிட்டது.

டெல்லியில் இந்திய அரசு போட்ட இரத்தச்சோற்றைத் தின்பதற்காக புலம்பெயர் நாடுகளிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சென்ற பிழைப்புவாதக் கனவான்கள்;

-காஷ்மீரிகளிடம் சொல்கிறார்கள் நாங்கள் உங்கள் எதிரிகள் என்று.

– சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்கள் கூட்டங்களிடம் ஈழத் தமிழர்கள் உங்கள் எதிரிகள் என்ற விம்பத்தைக்கொடுக்கிறார்கள்.

– நிலங்கள் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்களிடம் ஈழத் தமிழர்களைத் ‘துரோகிகளாக’ உருவகப்படுத்துகிறார்கள்.

– இந்தியா எங்கும் போராடும் மக்களை துர விலகிப் போகச் சொல்கிறார்கள்.

– தெற்காசியாவில் இந்தியா அழித்துப்போட்ட மனிதர்களின் பிணங்களின் மீது நடந்து வந்தே உங்கள் எதிரிகளோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.

– இந்தியா இலங்கையில் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிக்கிறார்கள்.

– இந்தியாவின் போர்க்குற்றங்களை நியாயம் என்கிறார்கள்.

இந்தியாவில் பள்ளிக்குப் போகாத பழங்குடி மக்களிடம் தேங்கிக்கிடக்கும் வீரமும் துணிவும் இந்தப் பிழைப்புவாதக் கோழைகளிடம் எப்படிக் காணமுடியும்?

இவர்கள் தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும் போது ஆள்பிடிப்பதற்கென்றே காத்திருக்கும் நாசகார சக்திகள் இவர்களை அரவணைத்துக்கொள்வார்கள்.

இந்திய அரசின் முகவர்களாக யார் முதலில் சேர்ந்துகொள்வது யாருக்கு முக்கியத்துவம் வழங்குவது என்ற முரண்பாட்டில் பலர் டெல்லிக்குச் செல்லவில்லை. இந்திய அரசுடனோ அன்றி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களோடோ கொள்கையளவில் முரண்படாத பலர் அதிகாரப் போட்டி காரணமாகவே இந்தியாவிற்குச் செல்லவில்லை.

உலகின் ஒவ்வொரு மூலையிலும் முளைத்திருக்கும் பிழைப்புவாதக் கனவான்கள் ஈழப் போராட்டத்தை இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்கிறார்கள். மக்கள் மீது நம்பிக்கையற்ற அவமானகரமான இந்தக் கோழைகள் அதிகாரவர்க்க அடியாட்களாக மாறுவதே உரிமை பெற்றுக்கொள்வதற்கான ஒரெ திசையென்று அழிவுக்கு வித்திட்ட அனைத்து வழிகளோடும் மக்கள் முன் வருகிறார்கள். இவர்கள் அரசியல் நீக்கம் செயப்படும் போது மட்டுமே சுய நிர்ணய உரிமைக்கான மக்களின் போராட்டம் தனது ஆரம்பத்தை அடையமுடியும்.

Exit mobile version