Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜெயலலிதாவின் வெற்றியின் பின்னான அரசியல் – ஒரு எச்சரிக்கை : கேசவன்

தமிழகத்தில் ஜெயலலிதாவே எதிர்பார்த்திராத வெற்றியும் கருணாநிதி எதிர்பார்த்திராத தோல்வியும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் கிடைத்துள்ளன. சீர்த்திருத்தம், திராவிடம், தலித்தியம் என்ற குறுகிய எல்லைக்குள் இயங்கிய தி.மு.க காப்ரட் பன்னாட்டு வியாபார நிறுவனமாக மாற்றமடைந்து அதற்கே உரிய இயல்புகளை எட்டியதன் விளைவாக மக்கள் மத்தியில் வரலாறுகாணாத தோல்வியைச் சந்த்துள்ளது.

உலக மயமாதலின் அத்தனை அடக்குமுறைகளையும் உள்வாங்கிக்கொண்ட தி.மு.க மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையை முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது. அடிப்படைப் பொருட்களின் விலையேற்றம், மின்வெட்டு என்று உலக மயப் பொருளாதாரத்திற்கு உவப்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தது. தி.மு,க வின் தோல்விக்கு முதன்மைக்காரணங்களில் ஒன்றாக இதனை கணிப்பிடலாம்.

பெரு நிறுவன ஆட்சிகளின் இயல்பான அரசைக் கையகப்படுத்தும் (State capture) நடவடிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகள் மிகப்பெரும் சீரழிவை ஏற்படுத்தியிருந்தது. கருணாநிதி குடும்ப வியாபாரங்களின் ஏகபோகம், மேல் மத்தியதர வர்க்கத்தின் மத்தியில் கூட வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. சினிமாத்துறையில் அவர்களின் அராஜகம் அத்துறையின் ஆளுமையால் பாதிப்படைந்திருக்கும் தமிழக மக்களின் ஒரு பகுதியினரை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. அலைக்கற்றை ஊழல் ஏற்படுத்திய அதிர்வலைகளை தமிழகத்தின் மத்தியதர வர்க்கத்தினைரை கருணாநிதி குழுமத்திலிருந்து அன்னியப்படுத்தியது.

மொத்தத்தில் குடும்ப சர்வாதிகாரம் சமூக மயமாக்கப்படதன் விளைக உருவான எதிர்ப்பு இரண்டாவது முதன்மைக் காரணியாகக் கணிப்பிடப்படலாம்.

மூன்றாவதாக ஈழத் தமிழர் பிரச்சனையில், படித்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் மத்தியில் தமிழின வாதியாகத் தனது விம்பத்தை உருவாக்கியிருந்த கருணாநிதி மீதான வெறுப்பைத் தோற்றுவித்திருந்தது. மிகக் குறிப்பாக வன்னிப் படுகொலைகளுக்குக் கருணாநிதி வழங்கிய மறைமுக ஆதரவு, அதன் போது நடத்தப்பட்ட அரசியல் நாடகங்கள் என்று ஒரு குறித்த செயற்திறன் மிக்க இளையோர் அணியை கருணாநிதி எதிர்ப்பளார்களாக மாற்றியிருந்தது. கருணாநிதி குடுபத்திற்கு எதிரான சமூகப் பொதுப்புத்தியை உருவாக்கியதில் இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மூன்று முதன்மையான காரணிகளும் ஏற்படுத்திய வெறுப்புணர்வு ஜெயலலிதாவிற்கு வாக்குகளாக மாற்றமடைந்திருக்கிறது. கருணாநிதியோடு கைகோர்த்துக்கொண்ட அத்தனை கட்சிகளும் படுதோல்வியடைந்திருக்கின்றன. கருணாநிதி குடும்பத்தின் சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்காவது அமைதியாக ஓய்வெடுத்துவிட்டு அறிக்கை வெளியிடும் ஜெயலலிதாவை நம்பி யாரும் வாக்களிவில்லை. மாறாக கருணாநிதியை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் வெற்றியைத் தொடர்ந்து தமிழின வாதிகளதும், குறுந்தேசியப் பிதாமகன்களதும் மூளை வேலை செய்த வேகத்தில் அறிக்கைகளும் ஆய்வுகளும் வெள்ளம் போல் வெளிவருகின்றன. ஒபாமாவை, ஹில்லாரி கிளிங்டனை, ரொப்ர்ட் பிளாக்கை எல்லாம் தமது அதீத மூளையைப் பாவித்துப் பயன்படுத்த எண்ணும் இவர்கள் ஜெயலலிதாவை விட்டுவைப்பார்களா? அவரை எப்படிப் பயன்படுத்தலாம் என ரூம் போட்டு விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எல்லாவற்றையும் முள்ளிவாய்க்கால் வரை பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மக்களைப் பலிகொடுத்துப் பரீட்சித்துப்பார்த்த இவர்கள் மக்கள் சக்தியை மட்டும் “பயன்படுத்த” கனவில் கூட எண்ணியதில்லை. ஒபாமாவிலிருந்து, கருணாநிதி ஈறாக ஜெயலலிதா வரை மக்கள் விரோதிகளையே பயன்படுத்த எண்ணுபவர்கள் இவர்கள்.

இதுவரை இவர்கள் பயன்படுத்தியவர்கள், காய் நகர்த்தியவர்கள் என்று எல்லோருமே காலை வாரிவிட்டாலும் இன்னும் “வாங்க பயன்படுத்துவோம்” என்று ஒற்றைக்காலில் நிற்பவர்கள், ஜெயலலிதாவின் பக்கம் தமிழ்க் காற்றைத் திருப்பிவிட்டிருக்கிறார்கள்.

ரஜீவ் காந்தி கொலை நடந்தபின்னர் அதனைச் சாக்காக வைத்து இந்தியாவிலிருந்த ஈழத்தமிழ் அகதிகளை துரத்தித் துரத்தித் துரத்தி வேட்டையாடியவர் ஜெயலாலிதா. ஈழ ஆதரவாளர்களை வைத்து சிறைகளை நிரப்பியவர். விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும் ஈழப் போராட்டத்தைப் பயங்கர வாதப்போராட்டமாகவும் சித்தரித்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் எந்த வாக்கு பொறுக்கும் அரசியல்வாதியும் இதுவரைக்கும் ஜெயலலிதா ஜெயராம் அளவிற்கு ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதில்லை.

மிக அண்மைக்காலம் வரைக்கும் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவராகத் தன்னை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டவர். இவரின் ஆலோசகர்களும், பின்னணியுமான “சோ”, சுப்பிரமணிய சுவாமி போன்ற பிராமண ஆதிக்க வாதிகளும் ஈழப்போராட்டத்தை கிஞ்சித்தும் ஆதரிக்காத பாதகர்கள்.
கருணாநிதிக்காவது தன்னை தமிழத் தலைவனாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அரசியல் தேவை இருந்தது. அதற்காக பல நாடகங்களை நடத்தியுள்ளார். ஜெயலலிதாவிற்கோ அப்படி எந்தத் தேவையும் கிடையாது. மாறாக தனது பிராமண வர்க்க நலன்களின் அடிப்படையில் ஈழப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டிய தேவையே அதிகமாகக் காணப்படுகிறது.

சமூக விரோதக் கும்பலான கருணாநிதி திரைமறைவில் மேற்கொண்ட அதே ஒடுக்குமுறைகளை ஜெயலலிதா வெளிப்படையாகச் மேற்கொள்வார்.

எது எவ்வாறாயினும் மத்தியில் இப்போது ஜெயலலிதா எதிர்க்கட்சி தான். கருணாநிதி கட்சி காங்கிரசோடு ஆட்சி செய்கிறது. ஆக, மத்தியை மிரட்டும் துருப்புச் சீட்டாக ஈழப் பிரச்சனை, மீனவர் பிரச்சனை போன்றவற்றை ஜெயலலிதா “பயன்படுத்திக்” கொள்வார். புலம்பெயர் நாடுகடந்த வகையறாக்களும், இனவாதிகளும் ஜெயலலிதாவின் இந்த நோக்கத்திற்குப் பயன்பட்டுப் போவார்கள்.

சீமான் போன்ற இன வாதிகள் பிரபாகரனுக்குப் பக்கத்தில் கைகட்டி நின்ற அதே பக்குவத்தோடு ஜெயலலிதாவின் பக்கத்தில் கைக்கட்டி, வேண்டுமானால் வாயையும் பொத்திக்கொண்டு நின்றாலும் வியப்படைவதற்கில்லை.

ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட போது இன்று தமிழ்த் தேசியம் பேசுகின்ற அத்தனை வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகளும் தம்மை தாமே இடைகால அரசியல் தற்கொலை செய்துகொண்டு முடங்கிப் போய்விட்டார்கள், இடது சாரிகளின் தரப்பிலிருந்து மட்டும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல் ஒலித்தது. தமிழ் இனவாதம் பேசும் பலர் ஜெயலலிதா அரசிற்கு அவர்களைக் காட்டிக்கொடுக்கும் அளவிற்கு அருவருப்பான அநீதியிழைத்திருக்கிறார்கள்.

மத்தியில் எதிர்க்கட்சியாகச் செயற்படும் இடைக்காலத்தில் மத்திய அரசை மிரட்டுவதற்கான வலுவான துருப்புச் சீட்டாக ஈழப் பிரச்சனையைப் பயன்படுத்தும் ஜெயலலிதா தமிழின வாதிகளைப் பயன்படுத்தி இடதுசாரிகளை ஒடுக்கும் அபாயகரமான பயங்கரவாதத்தையும் மேற்கொள்ளக் கூடும். இதற்கு புலம் பெயர் குறுந்தேசியவாதிகளும் துணைபோவதற்கான சூழலும் காணப்படுகிறது.

இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தக்கூடிய அபாயம் எதிர்கொள்ளப்பட வேண்டும். சமூகப்பற்றுள்ள அனைவரும் இதன் பின்புலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

1. ஈழப் பிரச்சனை ஜெயலலிதா அரசிற்கு மத்திய அரசை மிரட்டுவதற்கான கருவியாக மட்டும் பயன்படும்.

2. தமிழ் இனவாதிகளும், குறுந்தேசிய வாதிகளும் அதனை தமது அரசியல் வியாபாரத்திற்காகவும் அறியாமையின் காரணமாகவும் உள்வாங்கிக்கொள்வார்கள்.

3. தமது உண்மையான நண்பர்களிடமிருந்தும் ஒடுக்க்கப்பட்ட போராடும் பகுதியினரிடமிருந்தும் தமிழ்த் தேசிய இனவாதிகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்வார்கள்.

4. இறுதியில் ஜெயலலிதா காங்கிரசோடு கூட்டுச்சேர்ந்துகொள்வார்.

5. தமிழ் இனவாதிகள் ஈழத்தமிழர்களுக்கு தாம் பெற்றுக்கொடுத்த அரசியல் தோல்வி தொடர்பான எந்தக் குற்ற உணர்வுமின்றி இன்னொரு அரசியல் வாதியைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

6. மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பிரித்தானிய தமிழர் பேரவையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடுகடந்த தமிழீழம், உலகத் தமிழர் பேரவை எனப்  பல தமிழ் இனவாத அமைப்புக்கள் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றன. இன்னொரு ஆபத்திற்கான அபாயச் சமிக்ஞை இது.

எதிர்காலத்தில் இனப்படுகொலைக்குத் துணை சென்றவர்கள், கொலைகளைத் தலைமைதாங்கிய இராணுவ அதிகாரிகள், காட்டிக்கொடுத்தவர்கள், போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று தீர்ப்புவழங்கியவர்கள், ஏன் கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமே ஆட்சிக்கு வெற்றுத் தீர்மானம் ஒன்றின் ஊடாக ஆட்சிக்கு தமிழர்களின் தலைவராகிவிடலாம். ஜெயலலிதாவின் வெற்றி புலம்பெயர் மற்றும் புலத்திலிருக்கும் தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போடுகின்றது. இவர்கள் பிழைப்பு நடத்த வழியேற்படுத்திக்கொடுக்கிறது. மற்றப்படி ஜெயலலிதா யார், அவர் முன்பு எப்படியிருந்தார், அவரின் பின்னாலுள்ள நோக்கங்கள் என்ன, எப்படியெல்லாம் மக்களைச் சூறையாடுவார் என்பவையெல்லாம் தமிழ்த் தேசியக் கொள்ளைக்காரர்களுக்கு தேவையற்ற அரசியல், இன்று கொள்ளையடிப்பதற்கு அவரின் வெற்றி உறுதுணையாக விளங்குகிறது. அவ்வளவுதான்.

ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தமது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை வெற்றிகொள்வதென்பது  அதிகாரங்களோடு இணைந்தல்ல, மாறாக இந்திய ஒடுக்கப்பட்ட மக்களோடு பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்குவதனூடாகவே அதனை அடைய முடியும். திரும்பத் திரும்ப தோற்றுப்போன வழிகளில் அழிவுகளுக்கு வித்திடும் அதிகார அரசியலை ஒன்றிணைந்து நிராகரிப்பது அழிவுகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறையாகும்.

Exit mobile version