Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீபா – இந்தியா நிகழ்த்திய இனப்படுகொலையின் இரண்டாம் பாகம் : சபா நாவலன்

தென்னாசியாவின் துருவ வல்லரசான இந்தியவும் அதன் அடிமையான இலங்கையும் இணைந்து வன்னியில் நிகழ்த்திய மனிதப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் டெல்லியில் கைகோர்த்துக்கொண்டார்கள். எந்தவொரு இலங்கைத் தலைவருக்கும் வழங்கப்படாத வரலாறுகாணாத வரவேற்பு ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டது. சாரி சாரியாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்துவிட்டு அதை வெற்றியென கொண்டாடும் இலங்கை இந்திய அரச அரச பயங்கரவாதங்கள் சமூகத்தின் கீழ்நிலையிலுள்ள மக்கள் கூட்டத்திற்கு தமது உடன்படிக்கை ஊடாக எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியா சீனா போன்ற புதிய ஆசிய வல்லரசுகள் இலங்கை அரசுடன் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலையின் இரத்ததம் உறைந்து போய்விட முன்னமே இந்தியப் பெருமுதளாளிகளின் முதலீட்டுக்கான ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இன்றைய புதிய உலக ஒழுங்கின் அதிகார மையங்களில் மிகவும் அபாயகரமான நாடு இந்தியா. இலங்கை இனப்படுகொலையில் இந்திய அதிகாரவர்க்கம் தன்னை வெளிப்படையாக அடையாளப் படுத்திக்கொண்டது.

இதன் பின்னணியில் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மூன்று முதன்மையான நோக்கங்கள் இருந்தன.

  1. வணிக விரிவாக்கம்
  2.  எதிப்பியக்கங்களை அழித்தல்
  3. இந்திய ஜனநாயகப் பின்னணியில் முதலீட்டிற்கு உகந்த பிரதேசங்களை உருவாக்குதல்.

இந்த மூன்று நோக்கங்களும் இலங்கை இந்தியாவிற்கு இடையேயான ஒப்பந்தங்களின் சாராம்சமாகவும் அமைந்திருந்தன.

வணிக விரிவாக்கம்

இலங்கையிலிருந்து உள்வாங்கிக் கொண்ட அனுபவங்களிலிருந்து இந்திய வறிய மக்கள் மீது பிரகடனப்படுத்திய யுத்தம் ஒன்றை இந்திய அரசு நடத்திவருகிறது. இரண்டு யுத்தங்களினதும் பின்புலத்தில் பொருளாதார வியாபார நலன்கள் மட்டுமே காரணமாய் உள்ளது.

70 களின் பின்னர் சிறுகச் சிறுக ஐரோப்பாவிலிருந்து மலிவான கூலியையும் சந்தையையும் வளங்களையும் தேடி ஐரோப்பிய உற்பத்தி மையங்கள் ஆசிய நாடுகளை நோக்கி நகர ஆரம்பித்தன. 90 களின் ஆரம்பத்தில் இந்த நகர்வு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது. 70 களில் அறிமுகப்படுத்தப்பட்ட நவ-தாராளவாதக் கொள்கை உலக மயமாதல் திட்டமிடலின் கீழ் 90 களில் துரிதப்படுத்தப்பட்டது.

இந்தத் தசாப்தத்தின் ஆரம்பத்தில் உலகமயமாதல் மற்றொரு புதிய நெருக்கடியைத் தோற்றுவிக்க ஐரோப்பியப் பொருளாதாரம் சரிவடைய ஆரம்பித்தது. இவ்வேளையில் ஆசியப் பொருளாதாரம் புதிதாக உருவானது. சீபா ஒப்பந்தத்தின் மையப்பகுதி இந்தியப் பொருளாதாரத்தின் எல்லைகடந்த விரிவாக்கம்.

“மேலெழுந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகளின் சர்வதேச சக்திகளானது 20ம் நூற்றாண்டில் அமரிக்காவின் சக்திக்கும், 19ம் நூற்றாண்டின் ஒருங்கிணைந்த ஜேர்மனியின் சக்திகும் இணையானதாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அமரிக்காவின் National intelligent council” தனது அறிக்கையில் கூறுகிறது.

எதிப்பியக்கங்களை அழித்தல்

ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதாரம் போலல்லாது புதிய மூர்க்கத்தனமான சுரண்டல் வழிமுறைகளை இந்தப் பொருளாதாரம் முன்வைக்கின்றது. குறித்த சில பணக்காரர்களை மேல் நிலையிலுள்ளவர்களாகவும் அவர்களைச் சுற்றி உருவாகும் மேல் மத்தியதர வர்க்கத்தை அதன் ஆதரவுத் தளமாகவும் கொண்ட இந்த ஆசியப் பொருளாதாரத்தின் மூன்றாவது அணியாக மத்தியதர வர்க்கத்தின் உழைக்கும் பகுதி உருவாகியுள்ளது.

சமூகத்தின் விழிம்பை நோக்கித் தள்ளப்படுகின்ற மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளும் ஏனைய வறிய மக்களும் ஆசியப் பொருளாதாரத்தின் நவீன அடிமைகள். இவர்களும் உரிமைக்காகப் போராடும் மக்கள் பகுதியினரும் ‘மனிதர்களாகவோ’, ‘மக்களாகவோ ‘ மதிக்கப்பட மாட்டார்கள். விலங்குகளைப் போல பொஸ்பரஸ் குண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் பாவித்து ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான நியாயம் இதிலிருந்துதான் உருவாகிறது.
மத்திய இந்தியாவில் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருகும் மலைவாழ் மக்களின் கொலைக்கான சமூகச் சமன்பாடும் இதே புதிய உலக ஒழுங்கின் பண்பு.

எதுவுமே அறியாத முப்பதாயிரம் அப்பாவிகளை அறிவிக்காமல் சில கணங்களில் கொன்று குவித்தபின் எஞ்சியவர்களை நடுத்தெருவில் விலங்குகளாகக் கைவிட்ட கோராம் இங்கிருந்துதான் தெளிவாகிறது.

இவ்வாறு இந்திய அதிகாரத்தால் மக்கள் என்று கருதப்படாத் ஒரு பகுதியினரே உரிமை கேட்ட இலங்கைத் தமிழர்களும் இந்திய வறிய மக்களும். இவர்கள் எப்போதும் விலங்குகள் போல அழிக்கப்படலாம்.

இவாறான அழிப்பிற்கு எதிரான போராட்டங்களும் உரிமைக்காகப் போராடும் எதிர்ப்பியக்கங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதற்கான வியுகங்களே ராஜபக்ச கைச்சாத்திட்ட சீபா ஒப்பந்தத்தின் இரண்டாவது பகுதி.

 

இந்திய ஜனநாயகப் பின்னணியில் முதலீட்டிற்கு உகந்த பிரதேசங்களை உருவாக்குதல்.

 இலங்கை அரசு சார்ந்தளவில் வட கிழக்குத் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் இனச்சுத்திகரிப்பு என்பதை சிங்கள மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆயுதமாகவும் பயன்படுத்துகிறது. வட கிழக்குப் பகுதிகளில் இந்திய நிறுவனங்களில் வேலையாட்களாக சிங்கள மக்கள் குடியேற்றப்படுவார்கள்.

தேசிய இன அடையாளம், இந்திய வியாபார நிறுவனங்களைப் பாதுகாப்பது என்ற தலையங்கத்திலும் அபிவிருத்தி என்ற பேரிலும் அழிக்கப்படும். இதற்கெல்லாம் எதிரான உரிமைப் போராட்டம் வன்னிப் போரில் குண்டுகள் சுமந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை காத்திருக்காது. இன்னும் சிலவருடங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு இந்திய முற்போக்கு இயக்கங்களின் ஆதரவோடு புதிய உத்வேகத்துடன் வளர்ச்சியடைவது தவிர்க்க முடியாத்து.

ஒப்பந்தத்தின் இரண்டடாவது நோக்கம் இதற்கு எதிரான முன்நடவடிக்கையே.

ஆசியாவின் துருவ வல்லரசுகளாக உருவாக்கமடைந்துள்ள இந்தியாவும் சீனாவும் தமக்கே உரித்தான ஜனநாயாக முறைமையைக் கொண்டிருக்கின்றன. அடிப்படை மனித விழுமியங்களையும் உரிமைகளையும் ஒரு குறித்த எல்லைவரைக்குமாவது உறுதிசெய்த ஐரோப்பிய முதலாளைத்துவ ஜனநாயக முறைமையை இந்தியா கொண்டிருக்கவில்லை. போராடக் கற்றுக்கொண்டிருக்கும் ஐரோப்பிய உழைக்கும் மக்கள் வென்றெடுத்த ஜனநாயக உரிமைகளைக் கூட இந்திய ஜனநாயகம் உள்ளடக்கவில்லை.

சீனாவின் சர்வாதிகாரத்திற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் பண்பளவில் மிகப்பெரிய வேற்றுமைகள் இல்லை. சமூகத்தின் விழிம்பிலுள்ள வறிய மக்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளில் ஒன்றான இந்தியாவின் ஜனநாயகம் அந்த மக்களின் அழிவிலிருந்தே கட்டியெழுப்பப்படும் ஒருசில வணிகர்களுக்கான ஜனநாயகமாகும்.

ராஜபக்ச இந்திய ஜனநாயகத்தின் யுத்தகால இலங்கைப் பிரதிநிதி. 90 களின் பின்னர் உருவான ஆசியப் பொருளாதாரத்தின் இராணுவ அடியாள்.
இந்த கோரமான ஜனநாயகத்தைக் கொண்ட சமூகப் பகைப்புலத்திலிருந்தே வியாபாரத்திற்கான சூழல் கட்டமைக்கப்பட வேண்டும். எதிர்ப்பவர்களை அழித்தல் என்பது இதன் முதன்மையான அம்சம்.

இலஙகையைப் பொறுத்தவரை வரலாற்று வழியாக சிங்கள மக்கள் மத்தியில்ருந்துவரும் இந்திய எதிர்ப்புணர்வை வட இந்தியக் கலாச்சார மேலாதிக்கதினூடாக இல்லாதொழித்தலும் பௌத்த சிங்கள மேலாதிக்க உணர்வை ஊக்கப்படுத்தலுமான இரண்டு நிகழ்ச்சி நிரல்களை உள்ளடக்கியது.

இந்திய மேலணிகளின் பொழுதுபோகுக் கலாச்சாரச் சீரழிவை ஏற்றுமதி செய்தலும் என்பது முதலாவதும், சிங்கள மயமாக்கலூடாகஇரண்டாவதுமாக திட்டமிடப்பட்டுள்ளது. சீபா ஒப்பந்தத்தின் மூன்றாவது நோக்கம் இது.

இந்திய ஆக்கிரமிப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும், விரிவாக்கத்திற்கும் ஆதரவான ஒரு அணி என்பது உரிமைக்கு எதிராக அபிவிருத்தியையும், மறுசீரமைப்பையும், மீள்கட்டமைப்பையும் முன்வைக்கும். ஆக, இனப்படுகொலையைத் திட்டமிட்டு நிகத்திய இந்திய அதிகாரம் ஒப்பந்தத்தின் வழியாக அதன் அறுதியான நோக்கங்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்:

இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம்.

புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து..

இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள்

இந்திய அரச பயங்கரவாதம் : காலத்தின் தேவை

 

Exit mobile version