Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிமா ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் சந்திரசேகரனின் சிந்தனையில் அவற்றின் தாக்கமும் : பி.ஏ.காதர்

ஆசிரியர் குறிப்பு:

அன்பான வாசகர்களே! எனது தொடர் கட்டுரை இன்னும் பூர்த்தி பெறவில்லை. அடுத்தடுத்த தொடர்களில் சிலவேளை உங்களின் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம். சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலே போகலாம். ஏனெனில் நான் முழு மலையக வரலாறை இங்கு எழுதவில்லை சந்திரசேகரனின் வாழ்வோடும் அவரது உருவாக்கத்தோடும் சம்பந்தப்பட்ட வரல்ற்று பின்புலத்தை மாத்திரமே இங்கு பதிவு செய்கிறேன். தயசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

 உங்கள் அரசியல்ரீதியிலான கருத்துக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். வரவேற்கின்றேன். அவற்றை கருத்தில் கொள்கிறேன் நன்றி. 

அதேசமயம்  அவதூறுகளுக்கும் தனிப்பட்ட வசைபாடல்களுக்கும் தகுந்த பதியடி கொடுக்கத்தான் வேண்டும்.

தங்களை மேதாவிகளென நினைக்கும் ம(மா)கான்களுக்கு ஆதரங்களோ உண்மைகளோ தேவையில்லை. அவர்களுக்கு அனைத்து அந்தரங்கங்களும் தெரியும். அவர்கள் சொல்லுவதை அப்படியே மற்றவர்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அவர்கள் அரசியல் தேவதூதர்கள். ஓ ஏ யின் ராம பக்த அனுமன் கனவில் வந்து அவர்களிடம் அனைத்தையும் கூறிவிடுவார்கள். அந்த அவதார புத்திரர்களில் ஒருவர் துர்-கா என்ற பெயரில்  conspiracy theory   சதி-சூத்திரமொன்றை வைத்திருக்கிறார். நானும் லோறன்சும் சந்திரசேகரனை திட்டமிட்டே இதொகாவின் தலைமையைக் கைப்பற்றுவதற்காக இதொகாவுக்கு அனுப்பி வைத்ததாக வெட்கம் இல்லாமல் எழுதியிருக்கிறார்.

இவரிடம் சிலகேள்விகள்: நானும் சந்திரசேகரனும் லோறன்சும் இவ்வாறு திட்டமிட்டதை நீர் என்ன ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தீரா? நானும் லோறன்சும் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் கைபொம்மையா சந்திரசேகரன்? இந்த கீழ்த்தரமான கற்பனை யாருடையது எதற்காக எப்போது அப்படியொரு கதை புனையப்பட்டது என்பதை நானறிவேன். வாழ்க்கையில் சதியைத்தவிர வேறு எதுவுமே தெரியாத இத்தகைய பிரகிதிகளிடமிருந்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

1970 மே மாதம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமா பண்டாரநாயக்க ஆட்சி 1977 வரை நீடித்தது. இந்த ஏழாண்டு காலத்தில் மலையகத்தில் அதுவரை நிலவிய மாமுல் வாழ்க்கை அடியோடு சீர்குலைந்தது. அதுவரை மலையக மக்கள் நவீன கூலி அடிமைகளாக வாக்குரிமை யற்றவர்களாவும் – கணிசமானோர் நாடற்றவர்களாவும் – வாழ்ந்தபோதும் அவர்களுக்கு நிச்சயமான வருமானமும் குடியிருக்க லைன் அறையும் இருந்தது. சமூக பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை எதுவுமிருக்கவில்லை. ஆனால் சிறிமாவின் ஆட்சியில் நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. அதுவரை கம்பெனிகளுக்கும் தனியாருக்கும் சொந்தமாயிருந்த தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. தோட்ட நிர்வாகத்திற்கு அத்துறையில் நிபுணத்துவமுள்ளவர்கள் நியமிக்கப்படுவதற்கு பதிலாக சிங்கள அரசியல்வாதிகளின் சொந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். காணிசீர்திருத்தம் என்ற பெயரில் பெருந்தோட்டங்கள் கபளீகரம் செய்யப்பட்டு சிங்கள அரசியல்வாதிகளின் குண்டர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டன. அவற்றில் குடியிருந்த தோட்ட தொழிலாளர்கள் அடித்து விரட்டப்பட்டனர். காடு மீளாக்கம்  கொத்மலைத் திட்டம் போன்ற பல்வேறு தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் மலையகத்தில் அமுலாக்கப்பட்டன. சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய கடவுசீட்டு பெற்று இந்தியா செல்லவிரும்பாமல் தங்கி இருந்த ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் ஆடுமாடுகளைப் போல் உடுத்திருந்த துணியோடு வேன்களில் ஏற்றப்பட்டு கொம்பனித் தெரு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். 1973 ல் உருவான பொருளாதார நெருக்கடியும் உணவு தட்டுப்பாடும் மலையகத்தை மிக மோசமாகப் பாதித்தது.

அக்காலப்பகுதில் ஒருவர் வாகனத்திலும் சரி ஆள்சுமையாகவும் சரி ஒரு மிகக்குறிப்பிட்டளவு அரிசியே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் அரிசி கொண்டு செல்லுவது சட்டவிரோதமாகக்கப்பட்டிருந்தது. இதனால் அரிசி விளையாத மலையகம் பெரிதும் பாதிக்கப் பட்டது –பஞ்ச நிலைமை உருவாகி பட்டினியால் பலர் உயிரிழந்தனர். இப்படியான பயமும் பீதியும் நிறைந்த ஒரு வாழ்க்கையை மலையக மக்கள் முன்னர் ஒருபோதும் அனுபவித்ததில்லை.

மலையகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இந்த அரசியல் பொருளாதார மாற்றங்களோடு அங்கொரு முக்கியமான சமூகமாற்றமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறியளவிலான படித்த துடிப்பான வாலிபர் அணி ஒன்று மலையகத்தில் முதற்தடவையாக ஒரு சமூக சக்தியாக உருவாகிக் கொண்டிருந்தது. சிறிமா ஆட்சி மலையக மக்களுக்கு பல அநீதிகளை இழைத்திருந்தாலும் ஒரு நல்லகாரியத்தையும் அது செய்தது. அதுவரை தோட்டப்பாடசாலைகள் என அழைக்கப்பட்ட பாடசாலைகளில் ஒரு ஆசிரியரால் ஐந்தாம் வகுப்புவரை மாத்திரமே அறைகுறையாக பாடம் நடத்தப்பட்டன. பெயருக்குத்தான் அவை பாடசாலைகள்.

யதார்த்ததில் அவை தோட்டத்தில் வேலைக்குச் சென்ற தமது பெற்றோர்கள் திரும்பி வரும்வரை பிள்ளைகள் தேயிலைச் செடிகளை சேதப்படுத்திவிடாமல்  அவர்களை அடைத்து வைத்து ஒரு ஆசிரியரின் கண்காணிப்பில் வைத்திருக்கும் ஒரு மடுவமாகவே செயற்பட்டு வந்தன. சிறிமா ஆட்சியில் கல்வி அமைச்சர் பதியுத்தீன் முகம்மத் காலத்தில் இப்பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டு பொது நீரோட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டன. முதற்தடவையாக மலையகத்துக்கென படித்த மலையக இளைஞர்கள் ஆசியர்களாக நியமிக்கப்பட்டனர். அதுவரை கல்வியை புறக்கணித்திருந்த மலையக பெற்றோர் முதற்தடவையாக தமது பிள்ளைகளை படிக்கவைப்பதில் அக்கறைக் காட்டத் தொடங்கினர்.

இம் மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகித்தவர் பிரபல தொழிற்சங்கவாதியான காலஞ்சென்ற அப்துல் அசீஸ் (அப்போது அவர் நியமன எம்பியாக சிறிமா அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்தார்.) அத்துடன் காலஞ்சென்ற இரா.சிவலிங்கத்திற்கும் இதில் ஒரு பாத்திரமுள்ளது. இவரும் அப்துல் அசீஸூம் அப்போது அரசியல் நண்பர்கள். இவரது கருத்துகளுக்கு அசீஸ் மதிப்பு கொடுத்து வந்தார். கல்வி அமைச்சில் தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக தனியான பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கு காலஞ்சென்ற இரா.சிவலிங்கம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த மாற்றங்கள் யாவும் இளம் சந்திரசேகரனின் கண்முன்னால் நடந்தேறிக் கொண்டிருந்தது. அந்த சமூகமாற்றத்தோடு சேர்ந்தே அவரது இளமைக்கால சிந்தனைகளும் மாற்றமடைந்து வந்தன. அதே சமகாலத்தில் வடக்கில் ஏற்பட்டுக்கொண்டிருந்த தீவிர அரசியல் மாற்றங்களும் அவரது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்திவந்தன.

1970 – 1977 சிறிமா ஆட்சிகாலத்தில் வடக்குகிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் இடம் பெற்று வந்தன. இக்காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தமும்  கல்வி தரப்படுத்தலும் இங்கு பெரும் போராட்டங்களைத் தோற்றுவித்தன. புதிய படித்த இளைஞர் அணிஒன்று பலம்மிக்க சக்தியாக உருவாகியிருந்தது. 1970களை வரலாற்று ஆசிரியர்கள் இளைஞர்களின் தசாப்தம் எனக் குறிப்பிடுவார்கள். உலகெங்கும் இளைஞர்கள் ஒரு பலமிக்க போராட்ட சக்தியாக உருவெடுத்திருந்தார்கள். 1971ல் இந்தியாவின் ஆதரவுடன் பாக்கிஸ்தானிலிருந்து தனியாகப் பிரிந்து பங்களாதேஷ் என்ற ஒருநாடு புதிதாக உருவானமையும் அதே ஆண்டில் இலங்கையின் தெற்கில் றோகண விஜே வீர (அவரது உண்மையான பெயர்
Patabendi Don Nandasiri Wijeweera).

வின் ஜேவிபி தலைமையில் வெடித்த ஆயுத கிளர்ச்சியும் வடக்கின் இளைஞர்களது அரசியல் சிந்தனையில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தின. 1970ல் புதிய அரசியலமைப்பை எதிர்த்து தமிழ் மாணவர் பேரவை நடத்திய கண்டன ஊர்வலம் 1971ல் புதிய அரசியமைப்பை பகிஷ்கரித்து பாராளுமன்றை விட்டு தமிழரசு கட்சி வெளியேறியமை காந்தி பிறந்த செப்தம்பர் 2ம் திகதி நந்தி கொடி ஏற்றப்பட்டு ஆரம்பிகக்ப்பட்ட எஸ். ஜே.வி செல்வநாயகம் தலைமையிலான சத்தியாகிரகம்  1972 மே மாதம் திருகோணமலை நகரமண்டபத்தில் எஸ். ஜே.வி செல்வநாயகம் தலைமையில் தமிழர் கூட்டணி உருவானமை அதில்  செல்வா ஜீ.ஜீ பொன்னம்பலம் தொண்டமான் ஆகிய மூன்று ‘பெரும்’ தமிழ் தலைவர்களும் முதற்தடவையாக ஒரே அமைப்பின்கீழ் அணிதிரண்டமை 1972 மே அரசியல் யாப்பு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து அங்கு வெடித்த இளைஞர் போராட்டங்கள் சாத்வீதமுறையில் போராடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளானமை 1973 ஜனவரியில் இடம் பெற்ற தமிழிளைஞர் பேரவையின் 50 நாள் தொடருண்ணாவிரதம் 1973 டிசெம்பரில் விடுதலையான கவிஞர் காசி ஆனந்தனுக்கும் மாவை சேனாதிராசாவுக்கும் வழங்கப்பட்ட எழுச்சிமிகு வரவேற்பு 1974 ஜனவரி உலகத் தமிழராய்ச்சி மாநாடு இறுதிநாள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 7 தமிழர் பொலிசாரால் கொல்லப்பட்டமை 1975 மேயர் துரையப்பா இளைஞர்களால் கொல்லப்பட்டமை உரும்பிராய் சிவகுமாரன் ஏற்படுத்திய எழுச்சியும் 1975ல் அவரது அகாலமரணமும் 1976 ல் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனம் தமிழர் கூட்டணி தமிழர் விடுதலை கூட்டணியாக பெயர் மாற்றப்பட்டமை…. இப்படியான அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் பற்றி சந்திரசேகரன் மிக ஆர்வத்தோடு வாசிப்பார் தனது சக தோழர்களுடனும் கலந்துரையாடுவார்.

இவருக்கு நெருக்கமான அரசியல் நண்பர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் நடேசன். இதொகாவின் தலவாக்கெலை மாவட்ட தலைவர் அப்போது அவர்தான். அவர் இப்போது உயிரோடு இல்லை. அவரை அனைவரும் நடேசன் தலைவர் என்றே மரியாதையுடன் அழைப்பர். சந்திரசேகரனை விட குறைந்தது இருபத்தி ஐந்து வயது மூத்தவர். ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். இவரோடு மனம்விட்டு அரசியல் பேசுவார். தினமும் ஒருவரை ஒருவர் சந்திக்காவிட்டால் இருவருக்குமே தலை வெடித்துவிடும். பிற்காலத்தில் சந்திரசேகரன் இதொகாவில் இணைந்ததற்கு இவரும் ஒரு காரணம். அவர் தனது தொழிற்சங்க போராட்ட அனுபவங்களை சுவைபட கூறுவார்.

 சந்திரசேகரனை கோவை மகேஸ்வரனின் எழுத்துகள் வெகுவாகக் கவர்ந்தன. காலையில் அவர் தினமும் தானே சுடுநீர் வைத்து குளிப்பது வழக்கம். சிலசமயம் சுதந்திரன் பத்திரிகை வந்ததும் அறையில் கட்டிய துவாயோடு குளிப்பதை மறந்து அப்படியே உக்கார்ந்துவிடுவார். அதைவாசித்து முடித்த பின்பு ஆறிய நீரை மீண்டும் சுடவைத்து குளிப்பார்.

1977 தொடங்கும் வரையிலான இந்தகாலகட்டத்தில் சந்திரசேகரனுக்கு இன்னும் 20 வயதாகவில்லை. பாடசாலையை விட்டு வியாபாரத்தில் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த நேரமது. அனுபவசாலிகளையும் அறிவாளிகளையும் மதித்து பணிவோடு விடயங்களை அறியும் ஆர்வமும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் வேட்கையும் அவரிடமிருந்தது. ஆரம்பத்தில் அவருக்கு ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களையும் பிடிக்கும்:

சண்முகதாசனையும் தொண்டமானையும் இரா.சிவலிங்கத்தை மாத்திரமல்ல இலங்கை ஆசிரியர் சங்கத்தலைவர் எச். என். பெர்ணான்டோவையும் அவருக்குப் பிடிக்கும். வடக்கில் ஒடுக்குமுறைக்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் அதற்கு தலைமை கொடுத்த அனைத்து தலைவர்களையும் அவர் நேசித்தார். தந்தை செல்வாவையையும் அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரத்தையும் ஜீ ஜீ பொன்னம்பலத்தையும் அவர் மதித்தார். கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகளும்; மாவை சேனாதிராசாவின் பேச்சுக்களும் கோவை மகேஸ்வரனின் எழுத்துக்களும் அவரைக் கவர்ந்தன. அதேசமயம் சிவகுமாரனின் வீரமும் தியாகமும் அவரை மிகவும் பாதித்தன. சுருங்கச்சொன்னால இவருக்கு தமிழ் பற்று அதிகம் இருந்தது. தமிழ் தலைவர்கள் தமிழ் இளைஞர்களின் போராட்டங்கள் அனைத்தும் அவரைக்கவர்ந்திருந்தன. அதேசமயம் சந்திரசேகரனும் அனைவராலும் விரும்பப்படுகின்ற வசீகரதோற்றமும் பணிவான பண்பும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

 அத்துடன் தமிழநாட்டின் திமுக தலைவர்கள் அனைவரும் தந்தை பெரியாரும் இவரது விருப்பத்திற் குரியவராக இருந்தனர். இதைத்தவிர சர்வதேச அரசியல் பற்றி அவர் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. யாரை தனது ஆதர்சதலைவராக தேர்ந்தெடுப்பது என்பதிலோ எந்த சித்தாந்த வழிகாட்டலை தனது கண்ணோட்டமாகக் கொள்வது என்பதிலோ அதிகம் அக்கறை காட்டவில்லை.

மொத்தத்தில் அவரது சிந்தனையில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய தேசிய ஒடுக்குமுறையின் பாதிப்பும் அப்போது மேலோங்கியிருந்த தமிழ் தேசியவாதத்தின் தாக்கமும் அதிகம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது. அவர் 1977 கள் வரை மலையக தேசியவாதத்தை வேறுபடுத்தி அடையாளம் காணவில்லை.

(இன்னும்வரும்…)

Exit mobile version