Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும்  காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக  அரசாங்கம்  அறிவித்திருந்தது.

இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கும் இக்காப்புறுதி வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் அரசாங்கத்தினால் இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பாடசாலைகளிலிருந்து உணவுகள் வழங்கப்படமாட்டாது என பாடாசலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் யுத்தம் இடம்பெற்றதால் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இம்மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வீட்டில் ஒழுங்கான உணவு வழங்கப்படுவதில்லை. சில மாணவர்களுக்கு வீட்டில் உண்பதற்கு உணவிருக்காது.

இவ்வாறான நிலையில், பாடசாலைகளில் வழங்கப்படும் இலவச உணவானது நிறுத்தப்பட்டு அதற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியே காப்புறுதித் திட்டமாக  மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமான உணவை நிறுத்தி, மாணவர்கள் நோயாளியாகும் பட்சத்தில் அவர்களுக்கான வைத்தியச் செலவுக்காகவே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

உயிர்வாழ அவசியமான உணவையே நிறுத்தி காப்புறுதித் திட்டம் வழங்கும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான முடிவால் பெருமளவு பாடசாலை மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்பதை மறுக்கமுடியாது.

அத்துடன், மாணவர்களை அரசாங்கமே நோயாளிகளாக்கி, அதில் ஆதாயம் பெறுகின்றது. இலவசம் என்ற பெயரில், பெரியதொரு கொள்ளையை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.

Exit mobile version