Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கம்யூனிசக் கருதுகோள்:அலைன் பதியு

அறிமுகம்

அலைன் பதியு (Alain Badiou) பிரெஞ்சு மார்க்சியக் கோட்பாட்டாளர். 1937 ஆம் ஆண்டு மொராக்கோவில் பிறந்த அலைன் பதியு, அல்தூஸர், லக்கான், லியோதார்த் போன்றவர்களின் சமகாலத்தவர். கணிதமுறையில் புலமை பெற்ற அலைன் பதியுவின் எழுத்துக்களில் அதனது இயல்பான திட்டவட்டமான தன்மையை நாம் பார்க்க முடியும். அவரது நண்பர்கள் மறைந்துவிட, அலைன் பதியு இன்றவிலும் முக்கியமான கோட்பாட்டாளராக இயங்கி வருகிறார். அல்தூஸரின் அமைப்பியல் மார்க்சியத்தினாலும், லக்கானது உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டினாலும் அதிகமும் பாதிப்புற்ற அலைன் பதியு பின்நவீனத்துவத்துக்கு எதிரான சிந்தனையாளர் என அறியப்படுபவர்.

அலைன் பதியுவின் இக்கட்டுரை இலண்டனிலிருந்து வெளியாகும் நியூ லெப்ட் ரிவியூ இதழில் (New Left Reviewநே : January-February : 2008) வெளியாகி,  மேற்கத்திய நாடுகளில் அதிகமான விவாதங்களைத் தூண்டிய கட்டுரையாக அமைந்தது. இந்தக் கட்;ரையின் அடிப்படையில் அலைன் பதியு பிற்பாடாக ஒரு முழு நூலை (The Meaning of Sarkozy : Verso : London: 2008) எழுதி முடித்தார்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி, பிரான்சில் தீவிரவலதுசாரிகளின் வெற்றி என்ற பின்னணியில் வரும் ஏழு தலைப்புகளின் கீழ் பகுக்கப்பட்ட அலைன் பதியுவின் இக்கட்டுரையின் முதல் மூன்று தலைப்புகள் குறிப்பான பிரெஞ்சு அரசியலைப் பேசுகிறது. பிற்பாடான நான்கு தலைப்புகளில் கம்யூனிசக் கருதுகோள் குறித்த கோட்பாட்டுச் சர்ச்சைகளை சமகால அரசியல் அனுபவங்களுடன் பேசுகிறது.

2007 ஆம் ஆண்டு, பிரெஞ்சுச் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ராயல் செஜலீனை தோற்கடித்து வாகை சூடிய இன்றைய வலதுசாரி பிரெஞ்சு ஜனாதிபதி சர்கோசி, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ‘1968 தொழிலாளர்-மாணவர் எழுச்சியின் மிச்ச சொச்சங்களை இல்லாது ஒழிப்பேன்’ எனப் பிரகடனப்படுத்தினார்.

பிரெஞ்சு சமூகத்தில் தொழிலாளர்கள்-மாணவர்கள்-பிரான்சில் சேரிகளில் (banleoue) வாழும் குடியேறிகள் போன்றோரிடம் உள்ள அரசுக்கு எதிரான ஒழுக்கக் குலைவுக்கு, 1968 எழுச்சிதான் தொடர்காரணமாக இருக்கிறது என்றார் பிரெஞ்சு ஜனாதிபதி சர்கோசி.

சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஓழுக்கக் குலைவையும் அரசதிகாரத்தையும் இணைத்துக் கண்டு, ஒடுக்குமறையின் மூலம் சொத்துடையவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டிய நாற்பதுகளின் பிரெஞ்சு பெடைனிசத்தின் கூறுகளைக் கொண்டது சர்கோசியின் இன்றைய வாதம் என்கிறார் அலைன் பதியு.

தேர்தல்முறை குடிமக்களிடமும், வேறு வேறு வரக்கத்தவரிடமும் உருவாக்கும் அச்சம் குறித்துப் பேசும் அலைன் பதியு, வெகுமக்களிடம் இந்த அச்ச உணர்வை சொத்துடையவர்கள் எவ்வாறு, அந்நியர்கள் குறித்த பயமாக உருவாக்கி தேசபக்தியைக் கட்டியெழுப்பி, தமது நோக்குக்காகப் பாவிக்கிறார்கள் என்பதைச் சுட்டுகிறார் .

பிரான்சு நாட்டுக்கு அச்சம் தருபவர்களாக உள்நாட்டின் குடியேற்ற மக்களையும், மேற்கத்தியரல்லாத உலக மக்களையும் சுட்டும் பிரெஞ்சு ஜனாதிபதி சர்கோசி, இந்த அச்சத்தின் அடிப்படையில் பிரான்ஸ் அமெரிக்காவின் பின் அணிதிரள வேண்டும் எனவும் சொல்கிறார் என்பதனையும் சுட்டுக்காட்டுகிறார் அலைன் பதியு.

‘கம்யூனிசம் எனும் கருதுகோள்’ (Communist Hypothesis) அதனது பிதாமகனான மார்க்ஸிலிருந்து தோன்றியதிலிருந்து இன்று வரையிலான அதனது வரலாற்றுப் பயணத்தின் கட்டங்களையும் அனுபவங்களையும் பாடங்களையும் வரிசைப்படுத்துகிறார் அலைன் பதியு. பாரிஸ் கம்யூன், அதிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து அக்டோபர் புரட்சி, அதனின்றும் சீனாவின் காலச்சாரப் புரட்சி, இந்த அமைப்புக்களின் நெருக்கடி போன்றவற்றிலிருந்து ‘அந்தக் கருதுகோளை நாம் மீள்கட்டமைக்க வேண்டும்’ என்கிறார் அலைன் பதியு.

லெனின், டிராட்ஸ்கி, மாவோ போன்றவர்களின் கட்சி எனும் அமைவிலிருந்து வேறு வகையிலான தேர்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் இன்றைய தேவையை அலைன் பதியு பேசுகிறார்.

அடையாளங்களை அங்கீகரித்தல், ஓருலகில் ஒடுக்குமறைக்கான எதிர்ப்பில் ஒருமைப்பாட்டைக் காணல் என்பது குறித்து, பிரெஞ்சு அனுபவத்தில் அலைன் பதியு பேசுகிறபோது, அது எம்முடைய நாடுகளிலுமான பொதுத்தன்மைகளைச் சுட்டவே செய்கிறது. கம்யூனிசக் கருதுகோளில் நம்பிக்கை வைத்து, ஒடுக்குமுறையின் வடிவங்களைக் கண்டு, எதிர்ப்புச் சக்திகளின் ஒருமைப்பாடு குறித்த தேட்டத்தினை அலைன் பதியு இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார்.

நமது சூழலிலும் இது முக்கியமான கட்டுரையாகவே கருதப்படும் என நம்புகிறோம். இனி  வருவது அலைன் பதியுவின் மூலக்கட்டுரை.

முன்னுரை

பிரான்சில் சர்கோசியின் வெற்றிக்குப் பிறகு பொதுவாக ஒரு மனத்தளர்ச்சி ஒன்று உருவானதை நாம் ஆழ்மனதில் உணர்ந்தோம். எதிர்பாராத துன்பங்கள் கடுமையானவை. ஆனால் எதிர்பார்த்து நேரும் துன்பமோ தாங்கவியலாதது. கருத்துக் கணிப்புகளில் பெரிதும் உறுதி செய்யப்பட்ட ஒருவர் வெற்றி பெறுவது விந்தையல்ல. அபத்தமான கருத்துகளைக் கொண்ட ஒரு மனிதருக்கு மட்டுமே எதிர்பாராமல் ஒரு கண்ணாடிப் பாத்திரம் உடைந்து சிதறிவிட்ட அதிர்ச்சியை இது அளித்திருக்கும்.

மே 2007ம் ஆண்டு சர்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டது பிரெஞ்சுப் புதிய இடதுசாரிகளின் முகத்தில் அறைந்தது. எந்த ஒன்று குறைபாடாக உள்ளது? சர்கோசி என்பது ஒரு பெயர் மட்டுமா? இதன் விளக்கம் என்ன? சர்கோசியின் வெற்றியானது தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதின் அவசியத்தைக் குறிக்கிறது. பூகம்பத்திற்குப் பின் தோன்றும் நிலஅதிர்வு வரைபடம் போல தேர்தலுக்குப் பின் அதன் குறைபாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்கான அரசியல் உறுதிப்பாடுதான் இல்லை.

மே 2007ம் ஆண்டு ஏற்பட்ட மனத்தளர்ச்சிக்குப் பிறகு நிகழ்ந்தது வரலாறு பற்றிய துயர் தோய்ந்த அதன் நினைவுகள் : இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சில் உருவாகிய அரசியல் அமைப்புகள் இடம், வலமென காலிஸ்டுகள் (Gualists), கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டன. அவை, அந்த அமைவானது ஆதிக்கம், எதிர்ப்பு மற்றும் விடுதலை எனும் சமதளத்தின் மீது பொருந்தியிருந்தன. அது இன்று இல்லை.

சர்கோசி என்ன செய்து கொண்டிருக்கிறார்? மயங்கும் மாலையில் விருந்துகளில் கழிக்கிறார். விடுமுறைகளில் படகுச் சவாரிகள் செய்கிறார். இதிலிருந்தே யாருக்கும் இடதுசாரிகளிடம் பயமில்லை என்பது திண்ணம். ‘வாழ்க வளங்கொழிப்பவர்கள்! மாண்டு போகட்டும் ஏழைகள்!‘ இவ்வாறாகத்தான் நேர்மையான கம்யூனிஸ்டுகள் தங்கள் கடந்தகாலத்தை நினைத்து மருள்கின்றனர். மித்தரன்ட், டிகால், மார்க்கே சிராக், காலிஸ நடைமுறையை ஒத்த பிரஷ்னேவ் (எதையும் செய்யாமல் விட்டுவிட்டால் அமைப்பு சிதறிப் போகும் என்று இயங்கியவர்), இவர்கள் அனைவரும் வாழ்ந்த காலம்தான் எத்தகையது!

ஏற்கெனவே சவமாகிவிட்ட சிராக்கை கடைசி நபராகக் கொண்ட காலிசத்தை சர்கோசி தொலைத்துக்கட்டி விட்டார். அதிபர் தேர்தல் 2002ல் நடந்தபோது ஜோஸ்பின் படுதோல்வி அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவது சுற்றில் அவர் சிராக்கின் ஆதரவாளராக மாறிப்போனது இன்னொரு வீழ்ச்சி. தற்போதைய சோசலிசக் கட்சியின் சிதைவு அரசியல் வறுமை காரணமாக மட்டுமல்ல, வாக்கு சதவிகிதத்தினாலும் அல்ல. 47 சதம் என்பது மோசமான வாக்கு எண்ணிக்கை அல்ல. சர்கோசியின் தேர்வு ஒட்டுமொத்த பிரெஞ்சு வாழ்க்கையிலும் விழுந்த ஒரு பேரிடி, அரசியல் கட்டமைப்பு மீது விழுந்த மறைமுகத் தாக்குதல், எதிர்த்துருவங்கள் இரண்டையும் இணைக்கும் கண்ணியின் மீது விழுந்த ஒரு வெட்டு. குறிப்பாக முற்காலத்திய சோசலிஸ்டுகள் அவர்கீழ் பதவிகளைப் பெறுவதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடியது இத்தகைய ஒரு வீழ்ச்சி.

நடுநிலையான இடதுசாரிகள் அவரது புகழ் பாடுகிறார்கள். மூழ்கும் கப்பலில் பெருச்சாளிகள் நீந்தித் திளைக்கின்றன. இதிலுள்ள கருத்து என்னவென்றால் ஒரே கட்சியின் ஆட்சி என்பதே. அனைவராலுமே தற்போதுள்ள முதலாளித்துவ அதிகார அமைப்பை ஒத்துக்கொள்ள இயலும்போது, அவ்வகையில் அமைந்த பொருளாதாரத்தையும் ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளபோது எதற்காக நாம் கட்சிகளை எதிர்க்க வேண்டும்?

இன்று நாம் காணும் ஒருமைக்குலைவு வாக்களிப்பு முறையிலேயே உள்ள முரண்பாட்டில் உள்ளது. 2007 ஆம் வருடத்திய அதிபர் தேர்தலின் தன்மை குறித்து நான் அன்று கூறியது, ‘சர்கோசியும் ராயல் செஜலினும் மோதிக்கொள்வது இரண்டு பீதிகள் மோதிக்கொண்டன’ என்பதே. முதலாவது பீதியானது செல்வாக்கு மிக்கவர்களுடையது. தாங்கள் வீழ்ச்சியடைந்து விடுவோமோ என்ற அச்சம் சார்ந்தது. இவ்வகை அச்சம் பிரான்சில் உள்ள வெளிநாட்டவர், சேரிகளைச் சார்ந்த இளைஞர்கள், தொழிலாளர்கள், இஸ்லாமியர்கள், கருப்பு ஆப்ரிக்கர்கள் சார்ந்தது. இது சற்றுப் பிற்போக்கானது. ஏதாவது ஒரு சட்டாம்பிள்ளை உங்களை ஆட்சி செய்ய நீங்களே அனுமதிப்பது இதனுடைய நிகழ்கால வெளியீடுதான் சர்கோசி. போலீஸ் தலைவராக உருவெடுத்திருக்கும் தன்னிகரற்ற தலைவர்.

வாக்களிப்பு முறையில் தங்கள் குழு அடையாளத்தை தாங்களே வெளியிட்டுக் கொள்ளும் பிரதிநிதித்துவம் எனப்படும் இது அவ்வாறானது அல்ல. பயத்தின் விளைவாகக் கிடைத்தது. போலீசிடம் உள்ள அச்சம்தான் இது. குட்டி பூர்சுவாக்களுக்கு இவர்களைச் சற்றும் பிடிக்காது, வாக்களிக்கவும் மாட்டார்கள். அச்சத்தின் மீதான அச்சம் என்பது இரண்டாவது; நமது உணர்வுகளிலிருந்து பெறுவது. காரணத்தை அறிய இயலாதது. ராயல் செஜலின் அணியைச் சார்ந்தவர்களுக்கு விளிம்பு நிலையில் உள்ளவர்களையோ ஒடுக்கப்பட்டவர்களையோ தெரியாது. அவர்கள் செய்தது அச்சத்தை வாக்குச்சீட்டுகளாக மாற்றிக் கொண்டதே. இரு தரப்பிலும் பாலஸ்தீன், ஈரான், ஆப்கனிஸ்தான் (இங்கு பிரெஞ்சுப் படைகள் போர் புரிகின்றன), லெபனான் (அவ்வாறே), ஆப்பிரிக்கா (பிரெஞ்சு இராணுவ அதிகாரிகளால் நிரம்பியுள்ளன) குறித்த பொதுவான கருத்துக்கள் உள்ளன. இரு கட்சியிலும் மாற்று வழிக்கான பொது விவாதங்கள் நிரலில் காணப்படவில்லை.

அச்சத்திற்கும் அச்சத்தின் அச்சத்திற்கும் இடையிலான முரண்பாடு செல்வாக்குடையவர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டது. உள்ளுடல் தோற்றம் காட்டிய நாடகம் இங்கு இதனால் அரங்கேறியது. அதுதான் சர்கோசியின் வெற்றியால் திளைத்தவர்களின் கேளிக்கையில் வெளிப்பட்டது. பயத்தால் பயம் கொண்டவர்களின் இதயங்களில் மற்றொரு எதிர்வகை உணர்வு முடிவிலிருந்து கிட்டியது.

2007 ஆம் வருடத்தின் தளர்ச்சி நிறைந்த ஒருமைக்குலைவே இது. அல்தூசர் சித்தாந்தவாத அரசு எந்திரம் என்று அழைத்த ஒன்று குறித்து நாம் குறைத்து மதிப்பிடலாகாது. இன்று ஊடகங்கள் எவ்வாறு உள்ளன? தொலைக்காட்சி, வானொலி ஆகியவை இவ்வுணர்வுகளை எவ்வாறு வெளியிடுகின்றன? வாக்களிப்பு முறையில் ஒரு அச்ச உணர்வை நாம் காண இயலும். அது எதார்த்தத்தைவிட வலுவானது. புராதன காலம் சார்ந்த அச்ச உணர்வைக் காட்டிலும் தீவிரமான அச்சம் அது. அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் கிட்டும். நாம் எதார்த்த நிலைகளுக்கு எதிர்வினை புரியக்கூடியவர்கள். அச்சம் குறித்த அச்ச உணர்வு அந்த அளவீட்டை விழுங்கி நம்மை இன்னும் எதார்த்தத்திலிருந்து தொலைதூரத்திற்குத் தூக்கியெறியக்கூடியது. செஜலின் ராயலின் வெற்று உன்னதங்களிலிருந்து இத்தகு சூன்யத்தை உணரலாம்.

தேர்தல் முறையும் அரசும்

அரசியல் என்பது கூட்டு நடவடிக்கை ஆகும். சில கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுவது இது. இவை தற்போது அதிகார அமைப்பு அழுத்தி வைத்துள்ள உணர்வுகளை விடுதலை செய்யும் காரணத்திற்காக உருவாக்கப்பட்டவை. என்றால் தேர்தல் என்பது முற்றிலும் அரசியல் சார்ந்த ஒன்றல்ல. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரும்பங்கு வாக்களிப்பில் பங்கெடுத்துக் கொள்கிறது. ஆனால் அரசியல் என்பது வெளியே கருத்தியல் அல்லது தத்துவார்த்த நிலையிலான கொள்கைகளைச் சார்ந்தது.

வாக்களிப்பதன் மூலம் எனது அச்சங்களை நான் வெளியிடுகிறேன். எனினும் வாக்களிப்பது தன்னளவில் மிகச் சிறந்த ஒன்று என்ற நம்பிக்கை என்னிடமே இல்லை. தேர்தலால் மக்கள் உணர்வு அழுத்தி வைக்கப்படுகின்றன என்று திட்டவட்டமாகக் கூற இயலாவிட்டாலும் வாக்களித்தல் ஒரு அரசு வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அது ஒரு முதலாளித்துவம் சார்ந்த பாராளுமன்ற அடிப்படையில் அதிகார அமைப்புச் செயல்பாடுகளுக்கு மிகப் பழைமையாக உள்ள ஒரு அமைப்பாகும். இதனால் மக்களுக்குத் தங்களைப்பற்றி தாழ்மையான எண்ணமே கிட்டும். சாதாரண மக்களை வாக்களிப்பிலிருந்து தடை செய்தால் அவர்கள் என்ன செய்வர்? அவர்கள் எழுச்சி பெற்ற அரசியல் உணர்வை அடைவர்.

தேர்தல் என்பது அரசியல் சாராத ஒரு அரசமைப்புச் செயல்பாடு மட்டுமே என்பதால் பயன் என்ன? 2007ஐக் கணக்கில் கொண்டால் அரசின் செயல்பாடுகளில் அச்சம் குறித்த அச்ச உணர்வை ஊட்டுவது இதன் முதல் வேலை. இவ்வாறு அது கும்பல் மனப்போக்கினை அரசு எந்திரங்கள் உருவாக்கும் முதலீடாகச் செய்கிறது. தன்னுடைய பயங்கரத்தையும் பலாத்காரத்தையும் தனக்குத் தெரிந்த மாற்று வழியில் மக்களின்மீது உருவாக்குகிறது. உலகின் தொடுவானில் போரின் குறிகள் ஜனநாயகமற்ற புனைபெயரில் ஆட்டம் காட்டுகின்றன.

மேற்கத்திய நாடுகள் வௌ;வேறு அணிவகுப்புகளை உருவாக்கியுள்ளன. அவர்களுடைய முரண்பட்ட அசுரத்தனமாக உருக்களை இராணுவத்தின் துணைகொண்டு ஏவிவிடத் தயாராக வைத்துள்ளனர். உலகின் பணக்கார, ஏழை மக்களுக்கிடையிலான பேதத்தை பலத்தைக் கொண்டுதான் இறுகக்கட்டி வைத்திருக்க இயலும். இந்தச் செய்கை போர் மற்றும் அச்சம் எனும் இயங்கியல் சார்ந்தது.

நமது அரசுகள் கூறுவது என்ன? மற்ற நாடுகளின் தாக்குதலில் இருந்து நம்மைக் காக்கவே அவர்கள் போர் புரிகின்றனர் என்பது. ஆப்கனிலும் செஸ்னியாவிலும் தீவிரவாதிகளை மேற்கு ஒடுக்கவில்லை என்றால் அவர்கள் இங்கு வந்து சிதறிக் கிடக்கும் எதிர்வாத மக்களை ஒன்றுதிரட்டுவார்கள்.

போர்த்தந்திர புதிய பெடைனிசம்

பிரான்சில் அச்சம் மற்றும் போர் குறித்த ஒருங்கிணைப்பு பெடைனிசம் என்று அழைக்கப்படுகிறது. 1940-44ல் மிகவும் பிரபலமடைந்த இது முதல் உலகப்போர் உருவாக்கிய அச்சத்திலிருந்து பிறந்தது. மார்ஷல் பெடைன் பிரான்சை இரண்டாம் உலகப்போருக்கு முன் காத்தவர் என நம்பப்பட்டது. அவருடைய வார்த்தையில் கூறினால், ‘போரே தோல்வியைவிட அச்சம் தருவது’. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியை நன்கு அறிவர். ரஷ்யர்கள், ஆங்கிலேயர்களைக் காட்டிலும் போர்க்கைதிகள் என்றளவில் மோசமாக நடத்தப்படாதவர்கள். இன்றைக்கு மறைமுகமாக நம்மீது திணிக்கப்படுவது பிரெஞ்சுக்காரர்கள் அமெரிக்காவைப் பின்பற்ற வேண்டும், பிரான்ஸ் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதுதான். இது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகப் பரிமளித்துள்ளது. இதுதான் சர்கோசியின் கதையாடல்களில் காணப்படும் ஒருமைக்குலைவு என நான் வாதிடுவேன். இதன் முழுப்பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள வரலாற்றைக் காணுங்கள். பெடைனிசத்தின் கூறுகளை உற்று நோக்குங்கள்.

நான் இன்றைய சூழ்நிலை 40களைப் போன்றுள்ளது, சர்கோசி பெடைன் என்று கூறவில்லை. சர்கோசியின் பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய வரலாற்று ஆதாரங்கள் பெடைனுடைய உருவரையை பிரதிபலிக்கின்றன என்பது என் கூற்று. இவ்வமைப்பில் ஒழுங்குச் சீர்குலைவு அரசின் உச்சநிலையில் நடனமிடுகிறது. அது வரலாற்றுத் திருப்பத்தை உருவாக்கியுள்ளது. இவ்வித வார்ப்பு பிரெஞ்சு வரலாற்றில் மீண்டும் மீண்டும் வடிக்கப்படுகிறது.

1815 இல் உருவான புரட்சிக்குப் பிந்திய அரசாங்கத்தைக் காணுங்கள். புத்துணர்வுக் காலத்தில் உருவான இவ்வரசு சந்தர்ப்பவாதிகள், அரசியற்குடியேறிகளாலும் ஒத்துழைக்கப்பட்டது. அந்நிய நாட்டவரின் பயணச்சுமைகள் நிறைந்த ரயில் வண்டியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இது களையிழந்துபோன ஒரு மக்கள் தொகையின் உதவியால் ஒப்புக்கொள்ளப்பட்டு பொதுமக்களின் ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தை சீர்செய்ய எத்தனித்தது. 1940ல் நேர்ந்த இராணுவத் தோல்வியானது அரசின் சீர்குலைவுகளுக்கு மறு உருவம் அளித்தது. 1940-44 களில் விச்சியின் அரசாங்கம் தேசம் என்பது பற்றி எப்போதும் அரற்றியது. எனினும் ஜெர்மனியால் ஆதிக்கம் செய்யப்பட்டது. ஒழுக்கச் சிதைவுகளினூடே அதிகார வெறியர்கள் நாட்டை வழிநடத்த நேர்ந்தது. பெடைன் தனது முதிய காலத்தில் உடைமையாளர்க்கு உண்மையான விசுவாசியாக சேவகம் செய்து தேசிய உணர்வின் மறுபிறப்பின் உருவகமாய்த் திகழ்ந்தார்.

இத்தகு புதிய பெடைனிச மரபுகள் இன்றும் காணப்படுகின்றன. கீழ்ப்படியச் செய்தலும் அடிமைத்தனமும் புதிய ஆக்கம் எனவும் மறு உருவாக்கம் எனவும் பெயரிடப்பட்டுள்ளன. சர்கோசியின் பிரச்சாரம் என்ன? நியூலியின் மேயர் இந்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீரமைத்து நாட்டை வளப்படுத்துவார். உண்மையில் உயர்நீதி உடையோரின் ஆளுகைக்கு மக்கள் கீழ்ப்படிந்து நடக்க ஒரு அரசியல், தேசிய மறுபரிசீலனை என்ற பெயரில் நிகழ்கிறது.

இரண்டாவது தன்மையானது முழுக்க சிதைவு குறித்தது. அடக்குமுறைகள் மறு உருவாக்கம் என்ற கருத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் திரளான எழுச்சிக்கு எதிராக ஒழுக்கம் வைக்கப்படுகிறது. கடின உழைப்பு, ஒழுக்கம், குடும்பம் ஆகியவை போற்றப்படுகின்றன. தகுதியும் அவ்வாறே. 1970லிருந்து இத்தகு ஒழுக்கம் என்பது பல சிந்தனையாளர்களாலும் அரசியலுக்கு மாற்றாக வைக்கப்பட்டுள்ளது என்று அறிவோம்.

வரலாற்றின் நீதியை இவ்வாறு ஒழுக்கம் சார்ந்து குலைப்பது தொன்றுதொட்டு நிகழ்கிறது, எதார்த்தம் என்ன? முதலாளிமார்களால் தேசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. மாறாக மக்களின் உணர்வுகள்தான் இதற்குக் காரணமாம். இத்துடன் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சேரி இளைஞர்களையும் இப்போது இணைத்துள்ளனர்.

மூன்றாவது பெடைனிச குணமானது அந்நிய நாட்டு அனுபவத்தின் எடுத்துக்காடு ஆகும். வெளிநாடுகளைப் பாருங்கள். அவர்களது ஒழுக்கச் சீர்குலைவுகளை எவ்வாறு சரிசெய்துள்ளனர். முசோலினியின் இத்தாலியை பெடைன் எடுத்துக்காட்டுவார். ஹிட்லரின் ஜெர்மனி மற்றும் பிராங்கோவின் ஸ்பெயினும் அவ்வாறே. இத்தலைவர்கள் தங்கள் நாட்டை உயர்த்தவில்லையா? அரசியல் அழகியல் ஆனது இவ்வாறு மற்ற மாதிரிகளைப் பின்பற்றுதலால் உருவாவது.

பிளாட்டோவின் சிருஷ்டிகர்த்தாவைப் போல அரசு என்பது சமூகத்தை வெளிநாட்டு உதாரணங்களைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். இன்றைக்கு நமக்கு உள்ள உதாரணங்கள் புஷ்ஷின் அமெரிக்காவும் பிளேரின் இங்கிலாந்தும் தான்.

நான்காவது குணமானது தற்காலச் சிக்கல்களுக்கு கடந்தகால நிகழ்வு காரணம் என்பது. 1815 மறுசீரமைப்புக் காலத்தில் பெடைனிசக் கூறு எப்படி இருந்தது என்றால், புரட்சி தோன்றி அரசர்களைச் சிரச்சேதம் செய்தது. பெடைன் காலத்தில்கூட 1940 இல் தோன்றிய பாப்புலர் பிரண்ட், பிளம் அரசாங்கம் மற்றும் 1936 இல் தோன்றிய பெரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் ஆகியன குறிப்பிடத் தகுந்தவை. உடைமை வர்க்கங்கள் இவ்வொழுக்கக் குலைவுகளை உருவாக்கிய ஜெர்மனி ஆதிக்கத்தை மிகவும் சிறந்தது என்றனர்.

சர்கோசிக்கு, 40 வருடங்களுக்கு முன் 1968 இல் தோன்றிய தீமைகள் தற்காலத்திய மதிப்பீடுகளின் சிதைவைக் கொண்டு வந்துள்ளதை உணரலாம். நியோபெடைனிசத்தை ஒரு எதிர்மறைச் செயல் உருவாக்கிய வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ளுதல் மூலம் உணர்ந்து கொள்ளலாம். நேர்மறையான வரலாற்றுச் செயல்பாடானது தொழிலாளர் கட்டமைப்புகள் மற்றும் மக்கள் அமைப்புகளாலும் இதற்கெதிரான நிகழ்வுகள், அதாவது இவற்றின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வண்ணம் இராணுவம் மற்றும் அரசமைப்புகள் என்று இயங்குவன.

மக்கள் இயக்கங்களை எதிர்மறையாக உணர்வது நியோபெடைனிசத்தின் ஒரு கூறு. 1968 இலிருந்து 2007 வரைக்கும் விரிந்த வரலாற்றுப் பரப்பு சர்கோசி அரசாங்கத்திற்கு அடிப்படையான நியாயத்தை வழங்கியுள்ளது.

முற்காலத்தில் நிகழ்ந்த தவறுகள் அனைத்தையும் திருத்துவதற்கான வரலாற்று நாயகனாக சர்கோசி தன்னை வடிவமைத்துக் கொள்ள விரும்புகிறார். இறுதியாக இனவாதம் பற்றிய சிக்கல் ஒன்று உள்ளது. பெடைன் காலத்தில் இது தீவிரமாகக் காணப்பட்டது. யூதர்களை வெளியேற்றுவது அவர்கள் நோக்கமாய் இருந்தது. இன்றைக்கும் அது நாகரிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. நமது இனம் யாருக்கும் குறைந்தது அல்ல. மற்றவர்களைப் போல் உண்மையான பிரெஞ்சுக் குடிமகன் தன்னுடைய நாட்டின் நியாயமான நடவடிக்கைகளைக் கேள்விகேட்க இயலாது. அல்ஜீரியாவில் நடந்ததைக் கேட்க இயலாது. நாம் குறிப்பிடலாம்: சர்கோசி என்ற தலைப்பில் நிகழ்ந்துவரும் சீர்குலைவானது பெடைனிச தெய்வீகத்தின் தற்கால வெளியீடு.

பிசாசுத் தோற்றம்

முதல் பார்வையிலேயே நமது புதிய அதிபரின் காலத்தில் காணப்படும் ஒழுக்கச் சீர்குலைவுக்கான காரணம் எது என்றும், அதனைச் சீர்திருத்துவதற்காக மே 1968 அனுபவங்களை நாம் கைவிட வேண்டும் என்பதையும் சொல்லும் அவரது அணுகுமுறை விசித்திரமானது. அது என்றோ நிகழ்ந்து முடிந்துவிட்ட ஒன்று. மே 1968 என்ற பெயரில் ஆட்சியை ஆள்வது என்ன? அது கம்யூனிசம் என்ற பிசாசுத் தோற்றம்தான். சர்கோசி கூறுவார், எந்தப் பேயும் நம்மைப் பீடிக்காது. இது ஒரு சர்கோசியப் பயமுறுத்தல்தான். அதன் அனைத்து வடிவங்களையும் நாம் நொறுக்குவோம். அதன் நடைமுறைச் சாத்தியங்கள் அழிந்து விட்டது என்று பொருளில்லை. கம்யூனிசம் என்ற கருதுகோளைக் கூட நாம் நிராகரிப்போம். இது நமது ஒரு தோல்வியைக் குறிக்கும் ஒரு சொல்லாடல் என்றால் அச்சொல்லை நீக்குவோம்.

கம்யூனிசக் கருதுகோள் என்றால் என்ன? அது தோன்றும்போது உருவாக்கப்பட்ட புனித அறிக்கையின் சொல்லாடலின்படி காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளி வர்க்கம் இன்னும் அடிமையாய் இருக்கத் தேவையில்லை. பல்வாறான மக்கள் கொண்ட ஒரு பெருந்தொகுதி அதனை மெய்யாக்கும், உடைமை மீது கொண்ட சமத்துவமின்மையைச் சீராக்கும், உழைப்பிலுள்ள பிரிவினையை அது வேரறுக்கும். பெரும் செல்வத்தைச் சில தனிமனிதர்கள் குவித்துக் கொள்வதையும் அவற்றைப் பரம்பரையாகக் காத்து வருவதையும் அது ஒழிக்கும். அதிகாரம் கொண்ட அரசு ஒன்று மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருத்தலை நீக்கும். மறுசீரமைப்புகளின் மூலம் உருவாக்கப்படும் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு அரசை உதிரச் செய்யும்.

கம்யூனிசம் என்பது இவ்வாறாக சில சமயம் அறிவுப்பூர்வமாகவும் விவாதிக்கப்படுகிறது. காண்ட் இத்தகு ஒரு கருத்து ஒழுங்குச் சீரமைப்பு நடவடிக்கை என்றும் அது ஒரு திட்டமல்ல என்றும் கூறுவார். இத்தகைய கோட்பாடுகளை அறிவீனமானது என்று கூறுவது கற்பனையே. இவைகள் அறிவார்ந்த விவாதத் தொகுப்புகள். நடைமுறையில் சாத்தியப்படும்போது வேற்றுருவை அவை மேற்கொள்ளும். பொதுமக்கள் அதிகார அமைப்பை எதிர்த்து சமத்துவக் கோட்பாடுகளுடன் போராடத் துவங்கும்போது கம்யூனிசக் கருதுகோள் என்பது கருத்தளவில் துவக்கம் பெறும். இதற்கு உதாரணமாக பிரபலமான எழுச்சிகளை நாம் காணலாம். ஸ்பார்டகஸ் தலைமையிலான அடிமைகள், முன்சர் தலைமையில் திரண்ட விவசாயிகள் ஆகியோர்.

பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து கம்யூனிசக் கருதுகோள் நவீன அரசியல் எழுச்சியைத் துவக்குகிறது. வரலாற்றில் நாம் தற்போது கம்யூனிசக் கருதுகோளின் ஒரு புள்ளியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தீட்டப்பட்ட சுவரோவியத்தில் நவீன காலத்தின் இரு நிலைகளை 40 வருட இடைவெளியில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

முதலாவது கம்யூனிசக் கருதுகோள் பற்றிய ஒரு விளக்கம். இரண்டாவது அதன் நடைமுறை நிகழ்வு. முதல் தொடர்ச்சி பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து பாரிஸ் கம்யூன் வரை காணப்படுகிறது. அதாவது 1792லிருந்து 1871 வரை மக்கள் ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி சார்ந்தது இது. பழையனவற்றைத் தூக்கியெறிந்து அது சமதர்மம் மிகுந்த மாற்று ஒன்றை நிறுவ முயல்கிறது. இந்நூற்றாண்டில் நகர்ப்புறம் சார்ந்த மக்கள், கைவினைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பாட்டாளி வர்க்கத் தலைமையில் ஒன்றுதிரண்டனர். பாரிஸ் கம்யூனை உருவாக்கியதில் இத்தகு மக்கள் தொகுப்பு மிக ஆற்றல் வாய்ந்ததாகத் திரண்டது. இவ்வியக்கம் பாட்டாளி வர்க்கம், பொதுமக்கள், ஆயுதம் தாங்கிய போராளிகள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்த தனைமையால் ஆற்றல் வாய்ந்ததாய் இருந்தது. இத்தகைய கம்யூனார்டுகள் புரட்சியைச் சாத்தியமாக்கவோ அது தேசிய அளவில் வெற்றி பெறவோ அல்லது அந்நியப் பின்புலம் உள்ள புரட்சி எதிர்ப்பாளர்களைச் சமாளிக்கவோ இயலாமற் போயிற்று.

1917லிருந்து 1976 வரைக்கும் உள்ளதே கம்யூனிசத்தின் இரண்டாவது கருதுகோள். போல்ஷிவிக் புரட்சியிலிருந்து கலாசாரப் புரட்சிக்கு இடையிலானது இக்காலம். 1966-75களில் உலகம் முழுக்கக் காணப்பட்ட மக்களின் ஆயுத எழுச்சியையும் இது பிரதிபலித்தது. இதன் மையக் கருத்தே பாரிஸ் கம்யூனைப் போல் வீழ்ச்சியடையாமல் நாம் எவ்வாறு வெல்வது, எவ்வாறு புதிய கட்டமைப்பை உருவாக்கிக் பாதுகாப்பது. இது கம்யூனிச சாத்தியப்பாட்டை பரீட்சிப்பது மட்டுமல்ல, அதனை நடைமுறைப்படுத்துவதும் தான். 19 ஆம் நூற்றாண்டு கற்பனை செய்ததை 20ஆம் நூற்றாண்டு நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. வெற்றிக்கான தாகத்தில் இயக்கம் சீரமைக்கப்பட்டதில் கம்யூனிச நிகழ்வு என்பதைச் சாத்தியமாக்க இரும்புக் கொள்கை உருவாக்கப்பட்டது. கட்சி வெற்றிகரமாக இதனைச் செயல்படுத்தியதால் புரட்சி பரவலாயிற்று. எழுச்சி அல்லது தொடர்ச்சியான போர்கள் மூலம் ரஷ்யா, சீனா, செக்கோஸ்லோவாகியா, கொரியா, வியட்நாம், கியூபா ஆகியவை பிறந்தன.

முதலாது கருதுகோளின்போது உருவான சிக்கல்களைச் சமாளிக்க இரண்டாவது கருதுகோளில் உருவாக்கப்பட்ட தீர்வுகளே இச்சமயம் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. கட்சியானது நசிந்து போய்விட்ட அரசாட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிய யுகம் படைத்தது. ஆனால் மார்க்ஸ் கூறிய பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது வேறுவிதமாகச் செயல்பட்டது. அதாவது இங்கு ஒரு தற்காலிக அரசு, அரசு இல்லாத நிலை ஒன்றை உருவாக்கிக் காட்ட வேண்டும். பதிலாகக் கட்சி என்பது புதிய வகை அதிகாரப் போக்குகளை அரசு உருவாக்கத்தில் பிரதிபலித்தது.

சில சாதனைகள் கல்வியிலும் பொது சுகாதாரம் மற்றும் உழைப்பை அங்கீகரித்தலிலும் நிகழ்ப்பட்டதன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு பதிலடி தரப்பட்டது. எனினும் இறுகிப்போன அதன் அமைப்பு நாளாவட்டத்தில் துருப்பிடித்துப் போயிற்று. ஊழல் நிறைந்த அவ்வமைப்பு போலீஸ் அரசு மூலம் சோசலிசத்தைக் கட்டிக்காக்க எண்ணியது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அதன் முதல் எதிரியான முதலாளித்துவம் விதித்த சோதனைகளைத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. இரண்டாம் தொடர்ச்சியில் 1968 மே மாதத்துக்குப் பிறகு கலாசாரப் புரட்சியை நாம் உற்று நோக்கினால் கட்சியால் எவ்வாறு சிக்கல்களைத் தீர்க்கவியலாமல் போயிற்று என்று உணரலாம்.

இடையீடுகள்

முதல் சாத்தியப்பாட்டிற்கும் இரண்டாவது சாத்தியப்பாட்டிற்கும் உள்ள 40 வருட இடைவெளியில் கம்யூனிசக் கொள்கை நிறைவேறாத ஒன்றாக மாறிவிட்டது. 1871லிருந்து 1914 வரை ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் பரந்தது. 1970ம் ஆண்டில் இரண்டாவது சாத்தியப்பாடு முடிந்து விட்டதும் ஒரு இடைவேளை நேர்ந்தது. எதிரிகள் வெற்றிபெறத் துவங்கினர்.

இப்போது நமது தேவையெல்லாம் ஒரு புதிய கம்யூனிசக் கருதுகோளை உருவாக்குவதே. ஆனால் அது இரண்டாம் கருதுகோளைத் தொடர்ந்து இருக்கக்கூடாது. மார்க்சியம் என்பது பாட்டாளிகளின் கொள்கை. லெனினியம் என்பது கட்சி. சோசலிச அரசாங்கம் எனும் இருபதாம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்பு பயனற்றுப் போனது. கோட்பாட்டளவில் நாம் நிறையத் தேடல்களை நிகழ்த்த வேண்டும். ஏனெனில் அரசியல் செயல்பாட்டில் அவை வெற்றிடத்தை உருவாக்கியுள்ளன. இரண்டாம் கருதுகோள் முடிந்தது.

இத்தகைய புதிய சொல்லாடல்கள் நிகழ்ந்து வரும் காலத்தில் நமது எதிரி பலமாக இருக்கும் நிலையில் மூன்றாவது கருதுகோள் என்ன? இதன் நோக்கம் எப்படி இருக்க வேண்டும்?

கோட்பாடு, அரசியற்செயல்பாடு ஆகியவற்றில் ஒரு புதிய பரிமாணத்தை இது கொண்டிருக்க வேண்டும். அதாவது கலாசாரப் புரட்சி என்பது எத்தகைய ஒன்றோ அவ்விதம் புதுமையாக மனப்புரட்சி என்று இருக்கலாம். முதல் கருதுகோளின் வரலாற்றுக் கோட்பாட்டு அனுபவங்களையும் இரண்டாவதின் வெற்றியையும் இதில் இணைக்கலாம். தீர்வு என்பது வடிவமற்றதாகவோ அல்லது பல்வேறு வடிவங்கள் ஒருங்கிணைந்ததாகவோ, இக்காலத்தின் நுட்பம் நிறைந்ததாகவோ இருக்கலாம்.

நெக்ரி மற்றும் உலகளாவியவர்கள் நம்புவதுபோல் அது மக்கள் சார்ந்த கம்யூனிச இயக்கம் என்று ட்ராட்ஸ்கி, மாவோயிஸ்டுகளின் கருத்தைப் போலல்லாது இருக்கலாம்.

19, 20 ஆம் நூற்றாண்டுகளில் கம்யூனிசக் கருதுகோள் என்பது குறிப்பிட்ட தன்மையில் இருந்தது. அதற்கு நாம் திரும்பச் செல்ல இயலாது. சோசலிச அரசு பொய்த்தபின் 68ல் கலாசாரப் புரட்சி தோற்றபின் நாம் புதிய ஒன்றை கொள்கையாக உருவாக்க வேண்டும். தற்கால அரசியல் அனுபவங்களுடன் அது காணப்பட வேண்டும். இது சோதனைக்கு உகந்தது. ஏனெனில் தந்திரங்களைவிட இங்கு சூழ்நிலைகளை மனதில் கொள்ள வேண்டும். கருத்தியல் அளவில் என்றாவது பாட்டாளி வர்க்கச் சர்வதேசியம் மெய்யாகும். இந்த நம்பிக்கை கம்யூனிசக் கருதுகோள் என்றாகும்.

என்ன செய்ய? உடைமை தரும் நன்மைகளுக்கு வெளியே சிந்தனை நிகழ்த்துவது இன்றியமையாத ஒன்று. லக்கான் இதனை செல்வத்தின் சேவை என்பார். எல்லாத் தருணங்களிலும் இச்சேவைக்கு எதிரான உணர்வு உண்மையின் புதிய வடிவைக் காட்டும். இப்பிரகடனம் தவிர்க்கவியலாதது : ஒரே ஒரு உலகம்தான் உள்ளது. இதன் பொருள் என்ன? தற்கால முதலாளியம் தந்ததென்ன? இது ஒரு சீரமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் எதிரிகள்கூட உலகமயமாதலுக்குப் பின் என்று விவாதிக்கின்றனர். இதன் மூலம் இவ்வுலகிலிருந்து நாம் விரும்பும் வழியில் ஓருலகைச் சென்றடைய அரசியல் ஒரு தீர்வு என்கின்றனர்.

மனிதர்கள் அனைவரும் ஒன்றாயுள்ள ஓருலகு உள்ளதா?  உலகமயமான ஓருலகில் எல்லாப் பொருட்களையும் யாரும் விற்பனை செய்யலாம். பணம் இதன் குறியீடு. மார்க்ஸ் இவ்வாறுதான் இதனைக் கண்டார். ஆனால் மக்கள் அனைவரும் உலகில் எல்லா இடங்களிலும் பரந்து விரிய வாய்ப்பு உள்ளதா? அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது விடுதலை மற்றும் ஜனநாயகத்தைச் சாதிக்க விரும்பும் ஓருலகைக் குறிக்கிறது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு புரிகிறது சுவரை வெறுமே நகர்த்தி வைத்திருக்கிறார்கள். கிழக்கு, மேற்கைப் பிரிப்பதற்குப் பதிலாக செல்வமிகுந்த வடக்கையும் ஏழ்மை நிறைந்த நொறுங்கிப்போன தெற்கையும் பிரித்திருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் புதிய சுவர்கள் தோன்றியுள்ளன. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள், மெக்ஸிகோவிற்கு எதிராக அமெரிக்கா, ஆப்பிரிக்க ஸ்பானியத் தடைச்சுவர்கள் ஆகியவை செல்வத்திற்கும் ஏழைகளின் விருப்பத்திற்கும் எதிராகக் கட்டப்பட்டவை. கிராம விவசாயிகள் அல்லது விடுதிகளிலும் அபார்ட்மெண்டுகளிலும் வாழும் நகர்ப்புறவாசிகள் யாவரும் பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிணைக்கப்பட்ட முதலாளியக் கட்டமைப்பில் பிரதேசங்கள் போலீஸ் நாய்களால் பிரிக்கப்பட்டு ஆட்சியதிகாரம், கப்பற்படை ரோந்து, முள்வேலிகள் மற்றும் மக்களைத் துரத்துதல் என்று இவ்வாறாக பிரிக்கப்பட்டுள்ளன. புலம்பெயரும் மக்களின் பிரச்சினைகள் என்பவை உண்மையில் உழைப்பாளிகள் மற்ற நாட்டிலிருந்து பெயர்ந்து சென்று வாழ்விட உரிமைக்காக மேற்கொள்ளும் சிரமங்களையே குறிக்கின்றன. தாராளமயமாக்கப்பட்ட ஒன்றிணைந்த உலகு என்பது ஒரு அவமானம்.

செயல்தளம் சார்ந்த இணைவு

அரசியல் சிக்கல்கள் மாற வேண்டும். உலகம் இன்று இருப்பதைக் கண்டு அதனை ஆய்வு செய்து அதற்கொப்ப நமது செயல்பாடுகளை நிகழ்த்துவது சாத்தியமில்லை. தரம் பற்றிய முரண்களில் நமக்கு வேறுபாடு இல்லை. அது இருத்தலில் உள்ளது. செயற்கையான கொடூரமான உலகப் பிளவைக் கண்டு நாம் மேற்கு-கிழக்கு எனப் புரிந்து கொள்வதை விடவும் ஒரே உலகம் உள்ளதை நாம் காண முயல வேண்டும். அதுவே நம் கொள்கை. ஒரே ஒரு உலகம் தான் உள்ளது என்கிற வெளியீடு புறவயமான முடிவல்ல. அது செயல்பாட்டில் நிறைவடைவது. இது நம் ஆவல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு உண்மையாக விளங்கும் வண்ணம் இப்பிரகடனத்தை உறுதி செய்தபின் கிட்டும் சோதனைகளை நாம் தடையின்றிக் கடந்து செல்ல வேண்டும்.

இதன் முதல் படியாக நாம் உணர வேண்டியது அனைவருமே என்னைப் போல் எல்லா உரிமைகளையும் உடையவர்கள் என்பதே. உணவு விடுதியின் சமையல் கூடத்தில் காணப்படும் ஆப்பிரிக்கப் பணியாள், தெருவில் தோண்டிக் கொண்டிருக்கும் மொராக்கோவினன், பூங்காவில் உள்ள இளைத்த பெண், யாவரும் என் போன்றோரே. இவ்வாறுதான் உலகின் ஆதிக்கப் பார்வையை உடைத்து பொருள்வயமற்ற நிலையில் வாழ்தல், இருத்தல், செயல் செய்தல் என்று எங்கிலும் சமத்துவப் பார்வையை நிலைநிறுத்த வேண்டும். மொழி, உடை, மதம், உணவு என்று எல்லாவற்றிலும் என்னுடன் வேறுபடும் இம்மக்கள் என்னைப் போன்றே உறைபவர்கள். என்னுள்ளே இருப்பவர்கள். அவர்கள் என்னுடன் உடன்படலாம், முரண்பட்டுச் சொல்லாடலாம். ஆனால் யாம் அனைவரும் இங்கு ஒன்றாய் உறைகிறோம்.

கலாச்சாரரீதியான முரண்கள் உள்ளன. நம்முலகம் என்று கூறினால் யார் நம்முடன் மொழி, மதிப்பு என்பவற்றில் இணைகிறார்களோ அவர்களே நம்மவர்கள். அம்மதிப்பு மனித உரிமை, பெண்ணியம், ஜனநாயகம் சார்ந்தது. இத்துடன் உடன்படாதவர்கள் வேற்றுலகினர். நமது மதிப்பீடுகளை ஒப்புக்கொண்டே நம்முடன் இணைய வேண்டும். சர்கோசி கூறுவார், ‘பிரான்சில் வெளிநாட்டினர் இணைய விரும்பினால் அவர்கள் பிரான்சை நேசிக்க வேண்டும்‘. ஆனால் நிர்ப்பந்தங்களை விதிப்பதன் மூலம் கொள்கைகளை நாம் கைவிட்டு விட்டதாகப் பொருள். உலகு என்பது அனைவரும் வாழத் தகுந்த ஒரே இடம்தான். ஒவ்வொரு நாட்டின் சட்டங்களையும் கவனியுங்கள். இந்த ஒற்றை உலகில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அணுகுமுறைகள்தான் இவை.

சட்டத்தை யாரும் காதலிக்க இயலாது. அதற்கு நாம் பணிந்துதான் தீர வேண்டும். ஒற்றை உலகில் வாழும் பலருக்கும் சட்டங்கள் உண்டு. ஆனால் அது கலாசாரம் மற்றும் உள்முகமானதாக இருக்காது. நீங்களும் அனைவரைப் போன்றே காணப்படுகிறீர்கள். ஒற்றை உலகில் வௌ;வேறுபட்ட தன்மைகள் உண்டு. தத்துவார்த்தரீதியாக உலகின் ஒருமை குறித்துக் கேள்வி கேட்பதை விடவும் இவ்வேறுபாடுகள் அதன் இருத்தலின் விதிகளாய் உள்ளன.

நமக்கொரு கேள்வி எழுகிறது. ஏதாவதொன்று இந்தக் கட்டற்ற வேறுபாடுகளை ஆட்சி செய்கிறதா? ஒரே ஒரு உலகம் என்று இருந்தாலும் பிரெஞ்சுக்காரர் ஒருவர் அல்லது மொராக்கன் ஒருவர் பிரான்சில் இருந்தாலும் இஸ்லாமியர் ஒருவர் கிறித்துவ மரபிலுள்ள நாட்டில் வாழ்ந்தாலும் அத்தகைய ஒன்று அர்த்தமற்றது என்று கூற இயலுமா? இத்தகைய அடையாளங்களின் தொடர்ச்சி ஒரு தடைக்கல் ஆகுமா? ஒரு குறிப்பிட்ட தொடரின் குணத்தால் உருவான ஒரு தனிநபர் அல்லது குழுவின் அடையாளம் அவற்றின் நான் என்று அறியப்படும். இந்த நான் என்ற உணர்வு எல்லா அடையாளங்கள் தொகுப்புகளின் தொடர்ச்சியில் மாறாத ஒன்றாக அனைத்திலும் பொதிந்துள்ளதாகக் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு ஓவியனின் அடையாளம் அவருடைய பாணியை முதன்மைத் தன்மையாகத் தருவதால் கிட்டுவது. ஓரினக்கலவி எனும் அடையாளம் வேறுபட்ட உணர்வுகளின் தூண்டுதலால் கிட்டும் மாறிலிகள் நீர்த்துப்போனதால் உண்டான தொகுப்பின் முதன்மை ஆசை ஆகும். ஒரு அந்நியச் சமூகம் ஒரு நாட்டில் அடையாளப்படுத்தப்பட, அந்நாட்டின் குறிப்பிட்ட வடிவங்களான மொழி, அசைவுகள், உடை, உணவுப் பழக்கங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துதலே ஆகும். இவ்வாறாகப் பல்வகை அளவுகளில் அடையாளம் என்பது இரட்டையாக இடப்படுகிறது. ஒரு வகையில் பொதுவான ஒன்றிலிருந்து வேறுபட்டிருப்பது மற்றொரு வகையில் வேறுபடாமல் ஒன்றியிருப்பதன் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது.

அடையாள மேலுருவாக்கம் இரண்டு தன்மைகள் உடையது. முதலாவது எதிர்மறையானது. இதில் நான் என்பது மற்றதல்ல என்பதாகும். இவ்வித வகைப்படுத்தல் மக்களை ஒருங்கிணைப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. உதாரணமாக, ஒரு மொராக்கோவைச் சேர்ந்த தொழிலாளி தனது மரபுகளையும் பழக்கங்களையும் ஒரு குட்டி பூர்ஷ்வா ஐரோப்பியரைப் போலல்லாமல் கட்டிக்காக வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறார். அவருடைய மத அடையாளங்களும் அவர்மீது சுமத்தப்படுகின்றன.

இரண்டாவது ஒரு புதிய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் அடையாளம். நீட்ஷே குறிப்பிடுவது போல நீ என்னவாக விரும்புகிறாயோ அவ்வாறு ஆகு என்பதல்ல அது. மொராக்கோத் தொழிலாளி அவருடைய தனிமனித அடையாளங்களை சமூக மற்றும் தனிநபர் அளவில் உருவாக்கப்பட அவற்றை என்றும் நிராகரிக்க இயலாது. இவற்றை அவர் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து ஒரு ஆக்க அளவில் தான் வாழ்ந்த இடங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் தன்னை இனங்காண்பார். மொராக்கன் ஒருவர் பாரிசில் இருப்பது தன்னை உள்முகமாக காண அல்ல. தன்னை விரிவாக்கிக் கொள்வதற்கே.

ஒரே ஒரு உலகமே உண்டு என்ற சொல்லாடலின் அரசியல் விளைவாக அடையாளங்கள் பொதுமைப் படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பாரிசில் முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் பிரெஞ்சுத் தேசியத்தினர் ஆகியோர் இணைந்த ஒரு மாநாட்டில் சித்திரவதைச் சட்டங்கள், காவல்துறைச் சோதனைகள், தண்டனைகள் ஆகியவற்றை நீக்கவும் அந்நிய நாட்டினர் ஒரு பகுதியில் காணப்பட்டாலே அவர்களை அங்கீகரிப்பதற்குமான கோரிக்கைகளை வைத்தனர். யாரும் சட்டவிரோதமானவர்கள் அல்ல. அனைத்து மக்களின் கோரிக்கைகளும் அவர்களின் இயல்பான இருத்தலியல் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவர்கள் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவர்கள்.

காலமும் துணிவும்

‘இத்தகு இடர் நிறைந்த சூழ்நிலையில் உன்னிடம் என்ன காணப்படுகிறது?‘ என்று கார்னியலின் மெடியாவிடம் தோழி கேட்கிறாள். ‘நான் நானேதான்‘ என்பது பதில். மெடியாவின் பதிலின் பொருள் தன்னால் எத்தகு இடர்களையும் துணிவுடன் எதிர்கொள்ள இயலும் என்பதே. இதுவே இவ்வொருங்குகுலைந்த காலத்தில் நமக்குத் தேவைப்படுவது. லக்கான் இத்தகு மனத்தளர்ச்சி நீக்கும் ஆய்வு ஒன்றை நமக்குச் சமர்ப்பிக்கிறார்.

நாம் துணிவு, நீதி ஆகியவற்றின் அடிப்படையிலான இயங்கியல் விவாதங்களை புளூட்டோவின் உரையாடல்கள் என்ற நிலையில் மேற்கோள்ள வேண்டும். ஜெனரல் லாக்கேஸ் துணிவு குறித்த உரையாடலில் சாக்ரடீஸ் அவரிடம் கேட்கிறார். அப்போது ஜெனரல் லேச்சஸ் தரும் பதிலானது துணிவு என்பது எதிரியை நான் எதிர்கொண்டதும் அவனைப் போருக்கு அழைப்பது என்பது. சாக்ரடீஸ் இதனால் திருப்தியடையவில்லை. அவர், ‘இது துணிவு பற்றிய நல்ல உதாரணம். ஆனால் அவை விளக்கங்களல்ல’ என்கிறார். இவ்வாறே எனது விளக்கத்தையும் நான் அளிக்கிறேன்.

முதலில் துணிவு என்பதனை ஒரு நற்குணம் என்றளவில் அதன் தன்மையுடன் விளங்கிக் கொள்ள வேண்டும். அச்சமின்றி இருப்பதை நாம் பயிற்சி செய்வதால் துணிவடைவோம். கடினமான காலங்களில் நாம் உறுதியுடன் செயல்படும்போது துணிவு நமக்குள் உருவாகும். ஏதோ ஒரு தருணத்தில் கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும்போது இது திடீரென்று உருவாவதில்லை. அது ஒரு வேளை ஹீரோயிசமாய் இருக்கலாம். துணிவல்ல. ஹீரோயிசம் என்பது ஒரு அறம் அல்ல. அது ஒரு நிலை. இடர் நிறைந்த காலங்களில் மனிதர்கள் உறுதியுடன் செயலாற்றும் போது துணிவு தானே உருவாகும். காலம் தான் இதற்கான பின்புலம்.

இவ்வுலகின் விதிகளுக்கு எதிரான கூர்நோக்குடன் நாம் வேறுபட்டுச் செயல்படும்போது துணிவு இயக்கம் பெறும். நாம் செயல்படும்போது அது வேறொரு குறிப்பிட்ட காலத்தை நோக்கமாகக் கொண்டு அமைகிறது. தற்காலிகமான அதிகார அமைப்புகள் சுமத்திய சூழ்நிலைகளில் கைதியாக இருந்து கொண்டு சோசலிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் மொழிவது போல், ‘சிராக்கின் ஆதிக்கத்தில் 12 வருடங்கள் கழிந்தன. இனி தேர்தல் வரட்டும‘ என்று கூறிக்கொண்டிருக்க இயலாது.

மறுபடியும் எவ்வளவு வருடங்கள் காத்திருப்போம்? 17 வருடங்கள்? இப்படியே வாழ்க்கை கழிந்துவிடும். பெருச்சாளிகளைப் போல் நாம் திசைக்கொன்றாய் சிதறிப் போவோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் என்ன கேள்விகளைக் கொண்டு புதுயுகம் பிறந்ததோ அவ்வாறே நாமும் உள்ளோம். இருபதாம் நூற்றாண்டை விடுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் காட்சிகள் இப்போதும் இங்கு விரிகின்றன. வறுமையின் பரப்பு அதிகரித்துள்ளது. சமத்துவமின்மை, அரசியல் என்பது செல்வருக்குப் பணி செய்தல், இளைஞர் பட்டாளம் எதையும் மறுதலிக்கும் எதிர்வாதம், அறிவுஜீவிகளின் அடிமைத்தனம், உடைந்து நொறுங்கிப்போன சில குழுக்கள் கம்யூனிசத்தை உருவாக்க முனையும் கொள்கை ஆகிய யாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டு போலே உள்ளன.

கம்யூனிசக் கருதுகோள் என்பது நெருக்கடியில் உள்ளதென்று இதன் பொருளல்ல. வாழ்நிலையே அவ்வாறு உள்ளது. எதிர்வாத அரங்கேற்றம் நிகழ்ந்து வரும் இக்காலத்தில் நாம் சில இலக்குகளை உருவாக்க வேண்டும். உலகளாவிய சிந்தனைத் தொகுப்புகளை நாம் கண்டடைய வேண்டும். அரசியல் அனுபவம் தனித்து உள்ளூர் நிலையில் இருந்தாலும், உலகளாவிய அளவில் மாற்றம் பெறத்தக்கதா என்று காணத் தகுந்த கம்யூனிசக் கருதுகோள்களை நமது உணர்வுகளில் வடிவமைக்க வேண்டும்.

தமிழில் : ஆர்.பாலகிருஷ்ணன்.

Exit mobile version