Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒற்றுமை கோரும் “பிரதிப் பிரதமரிமரின்” வேண்டுகோள் : அஜித்

“ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை,உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்”.

இவ்வாறு அதிரடியாக ஆரம்பிக்கிறது கலாநிதி ராம் சிவலிங்கத்தின் உடகங்க்ளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை. கலாநிதியைத் தவிர, நாடுகடந் தமிழீழத்தின் பிரதிப் பிரதமர் என்பது ராம் சிவலிங்கத்தின் மற்றொரு தகமை.

நாடுகடந்த தமிழீழத்தின் அதிகாரப் போட்டிக்காக பிரிந்து சென்று, நாடுகடந்த தமிழீழம் – (ஜனநாயக அணி)- என்ற பெயரில் ஆரம்பித்திருக்கும் புதிய குழுவிற்கு எதிரான ஒற்றுமையை கோரும் அவரின் அறிக்கையின் ஆரம்பமே அழிவரசியலின் ஆரம்பத்தைப் போன்றது.

எந்த அணியானாலும் முடிந்துபோனவற்றிலிருந்து கற்றுக்கொள்ளாமல் வெற்று முழக்கங்களோடு எமது நட்புசக்திகள் மத்தியில் பிளவுகளை நிரந்தரமாக்கும் “ஆண்ட பரம்பரை” கருத்தோடு மறுபடி அரசியலை ஆரம்பிப்பதே அபாய ஒலி.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதாலா நாம் இப்போதும் தன்னுரிமை கேட்கிறோம்? நாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் எம்மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடத் துணிகிறோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையோடு கூறுவதற்குக் கூட நாம் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லையா?

அவுஸ்திரேலியாவில் அப்ரோஜின் இன மக்களே ஆண்ட பரம்பரை. அமரிக்காவில் செவிந்தியர்களே ஆண்ட பரம்பரை. இன்னும் பின்னோக்கிச் சென்றால் இலங்கையில் இயக்கர்களும் நாகர்களும் அல்லவா ஆண்ட பரம்பரை. இந்தியாவில் பிராமணர்கள் கூட நாம் தான் ஆண்ட பரம்பரை என்கிறார்களே.

மக்களின் இடப்பெயர்வுகளும், குடியேற்றங்களும், இனக்கலப்பும், புதிய இனங்களின் உருவாக்கமும் சமூக நியதி. வரலாறு முழுவதும் இதனை பதிவு செய்திருக்கிறது.

தேசிய இனங்களின் உருவாக்கம் வரலாற்றின் ஒரு குறித்த காலப்பகுதிக்கே உரித்தானது. சந்தைப் பொருளாதாரம் உருவான அந்தக் காலப்பகுதி, தேசங்களின் உருவாக்கத்தையும் தேசிய இனங்களின் தோற்றத்தையும் தோற்றுவிக்கிறது. இலங்கையில் தேசிய இனங்களின் ஆரம்பம் 18 ம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பமாகிறது. முதலில் ஆண்ட பரம்பரை குறித்த பழமைவாதக் கருத்திலிருந்து முன்னேறிய காலப்பகுதிக்குரிய பார்வையை முன்வைப்பதே உரிமைப் போரின் ஆரம்பப் புள்ளியாக அமைய முடியும்.

வேளாள மேலதிக்க சகதி பூசிய ஆண்ட பரம்பரை என்ற வாதம் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு எதிரான அப்பட்டமான குறுகிய எல்லைகளைக் கொண்ட தேசிய வாதமாகும். இலங்கையில் ஏனைய ஒடுக்கபடும் தேசிய இனங்களான முஸ்லீம்களையும், மலையக மக்களையும் “ஆளாத பரம்பரை” என அவமானப்படுத்தும் அயோக்கியத்தனமான கருத்தாகும். எமது பிரதான நட்புசக்திகளான சிங்கள் ஒடுக்கப்படும் மக்களை அன்னியமாக்கும் ஆபத்தான வாதமாகும். இந்தியாவிலும், உலகெங்கிலும் தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் தேசிய இனங்களையும், மக்களையும் பயமுறுத்தும் அகங்காரமாகும். நந்திக்கடலில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவிகளை இலங்கை அரச பாசிசத்திற்குப் பலிகொடுத்த போராட்டத்தின் அரசியல் ஆண்ட பரம்பரை என்பதிலிருந்தே ஆரம்பமாகியிருந்தது.

முஸ்லீம்களை எதிரிகாளக்கியதும், மலையக மக்களை அன்னியர்களாக்கியதும், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை அறுத்தெறிந்ததும் இதே ஆண்ட பரம்பரை வாதம்தான்.

ஐரோப்பிய அரசுகளை அடிபணிய வைக்கும் அத்தனை போராட்ட அமைப்புக்களும் அப்பாவிகள் சாரி சாரியாகக் கொல்லப்பட்ட போது இணைந்து கொள்ள மறுத்ததும் இந்த ஆண்ட பரம்பரைகளோடு தான்.

சந்தர்ப்பவாதிகளையும், அரசியல் வியாபாரிகளையும் அரவணைத்துக்கொண்டு உறுதி மிக்க நண்பர்களைத் தூரே துரத்தியதும் ஆண்ட பரம்பரைதான்.
நாம் ஆண்ட பரம்பரையாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட புதிய வீரம் செறிந்த பரம்பரையாக முன்னெழுந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் ராஜபக்ச குடும்பம் இரசாயனக் குண்டுகளை மக்கள் குடியிருப்புக்களில் வீசியெறிந்து கொசுக்களைப் போல் எமது பரம்பரையை கொலை செய்திருக்க முடியாது. உங்கள் பார்வையின் வீச்சை குறுகிய தேசிய வாத வட்டத்திற்கு வெளியால் செலுத்துங்கள் தோல்வி கற்றுத்தரும். நண்பர்களை அறிமுகம்செய்யும். எமக்காக, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்காக, தெருக்களில் போராட தமிழ் நாட்டிலிருந்து, மத்திய இந்தியாவிலிருது, காஷ்மீரிலிருந்து, நேபாளம் வழியாக, அரபு நாடுகளைக் கடந்து ஐரோப்பாவரை குரல் கொடுக்க சாரி சாரியாக மக்கள் தெருவிற்கு வருவர்.

அறிக்கையின் முழுமை:

ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை,……….உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்.

தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில் நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா? தேசியம் பேசிய நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைச் சிதைக்கலாமா?

பிரிந்து சென்ற்தோடு நிறுத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு – ஜனநாயக அணி என்ற பெயருடன் ஏட்டிக்குப் போட்டியாக நீங்கள் தொடங்கியிருப்பது ஒற்றுமையை வேண்டி நிற்போருக்கு ஒரு சவுக்கடியாகவும், எம் இனத்தின் எதிர்காலத்துக்கு ஒர் தடைக்கல்லாகவும அமைந்துவிட்டதே.

எமக்குள் யார் பிரிந்தாலும் இழப்புத் தமிழருக்கே என்ற உண்மையை உணர்ந்தல்லவா நீங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். பேசித் தீர்க்க்க வேண்டிய விடயத்தை பிரிந்து சென்று எதிரி விரிக்கும் வலைக்குள் நீங்களாகவே விழுந்து விட்டீர்களே. பிரிந்து செல்லும் உங்கள் செயலுக்கும், ராஜபக்சவின் விருப்பத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லையே. இருவரும் வேண்டிநிற்பதும் தவமிருப்பதும் நாடுகடந்த தமிழீழ அரசை அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது ஒன்றுமட்டுமே.

ஜனநாயகம் பற்றிப் பேசுகிறீர்களே, எது ஜயா ஜனநாயகம்? பிரிந்து நிற்கும் முப்பது பேர் கூறுவதை மற்றைய அறுபத்தட்டுப்பேரும் ஏற்றால்தான் ஜனநாயகமா? அல்லது, அவர்கள் ஏற்கமறுததால் நீங்கள் பிர்ந்து செல்வதுதான் ஜனநாயகமா? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம்! சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம் என்கிறீர்களே. நல்ல விடயம். ஆனால் முதலில் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுத்து நடவுங்கள்.

உங்கள் விருப்பு நிறைவேறாததால் உண்மையைக் கூறமுடியாமல், வலுவில்லாத காரணங்களை உலகுக்குக் கூறி, நாடுகடந்த தமிழீழ அரசை பலவீனப்படுத்தும் நோக்குடன் நீங்கள் செயற்படுவது எந்த விதத்தில் எம் இனத்துக்கு நன்மை தரும் என்பது எமக்கு விளங்கவில்லை.

சிறிய விடயங்களை பெரிதாக்கி, நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்க முயலும் உங்கள் பரிதாப நிலை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனையடைகிறேன். நீங்கள் நினைப்பது நடக்கவில்லை என்பதற்காக எம் இனம் பலியிடப் படவேண்டுமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

உங்களைத் தேர்வு செய்த எம் மக்களைப் பற்றியோ, ஈழத்தில் வாடும் எம் உறவுகளைப் பற்றியோ சிந்திக்காது நீங்கள் இப்படி நடப்பது தவறல்லவா? எம் மக்கள் முட்டாள்களல்ல அரசியலை நன்கறிந்தவர்கள். எம் ஒவ்வொருவரையும் மயிரிடை கூடத் தவறாமல் எடைபோட வல்லவர்கள். நானும் உங்களில் ஒருவன் என்பதை மற்ந்துவிடாதீர்கள். எமது மக்கள் உங்களை வெறுப்பதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.

கனிவான உள்ளமும், பணிவான குணமும் கொண்ட உருத்திரகுமாரன் தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். நாடுகடந்த தமிழீழ அரசை வழிநடத்தவல்ல அந்த உத்தமரை, திறமைசாலியை நீங்கள் கே. பி யுடன் இணைத்து அவரை கேவவலப்படுத்துவது நீதியும், நியாயமுமற்ற செயலல்லவா? தலைமையை அகற்றி, நாடுகடந்த தமிழீழ அரசைச் செயலிழக்க வைத்தால் அதனால் யார் நன்மை அடைவார்கள் என்பது கூட உங்களுக்கு விளங்கவில்லையா?

தமிழினத்தை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் சிங்களத் தலைவர்களின் ஒற்றுமையைப் பாருங்கள். அதேவேளை வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து அல்லல் படும் எம் உறவுகளின் வாழ்வை ஒர் முறை சிந்தித்துப் பாருங்கள், ஆண்டுக்கணக்காக சிங்களச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளை ஒரு தரம் நினைத்துப் பாருங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்று தனித்துப் போட்டியிட்ட கஜேந்திரகுமாரின் தோல்வி எமக்குத் தந்த பாடத்தை மறவாதீர்கள்.

வரலாறு படைத்தவர்கள் சண்டாளர்களின் கையில் சிக்கி சிறைகளில் அல்லல் படும்போது, நாட்டை ஆளும் வல்லமை படைத்தவர்கள் நரக வாழ்க்கை வாழும்போது நீங்கள் அணிகளை உருவாக்கி தமிழினத்தைக் கூறு போடுகிறீர்களே. இது சரியென உங்களுக்குப் படுகிறதா?

எம் வீரத்தைக்கண்டு வியந்த உலகம் எமது ஒற்றுமை கண்டும் வியக்கவேண்டும். ஒன்றில் எம் இனத்தின் மானத்தைக் காக்க, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்க, தேசியத் தலைவரின் இலட்சியத்தை தலைமேல் வரித்துச் செயற்படும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் இணைந்து செயற்படுங்கள். அல்லது குழப்பம் விளைவிக்காது அவர்களையாவது நிம்மதியாகச் செயற்பட விடுங்கள்.

எமது உற்வுகள் கோரமான சுனாமியால் பாதிக்கப்பட்டு, கொடிய போரை எதிர்கொண்டு, தாங்கொணா வெள்ளத்தால் தாக்கப்பட்டு மூன்று ஜென்மங்களை இந்தத் தலைமுறையில் கடந்தவர்கள். எம் மக்களுக்குப் பிரிவும், வெளிநடப்பும் புதிதுமல்ல, பெரிதுமல்ல. அவர்கள், ஒரு பலமான அரசியல் தளத்தை நாடுகடந்த தமிழீழ அரசுக்கு நிச்சயம் தருவார்கள்.

எம் மக்களின உதவியுடனும் ஒத்தாசையுடனும் இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாடு விரைவில் மலரும். அந்த வேளை, நீங்கள் பார்வையாளர்களாக அல்லாது அங்கு பங்காளிகளாக இருக்கவேண்டும். இதுவே என் ஆசை.

ஊடகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆதரவு தந்தால் பொய் உண்மையாகிவிடுமா? எமது மக்களை எவரலும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை டக்ளசும் கருணாவும் உணர்ந்தது போல் நீங்களும் உணரவேண்டுமா? எம் இனத்தின் நன்மை கருதி நாடு கடந்த தமிழீழ அரசைத் தூற்றுவதை நிறுத்துங்கள். அது எதிரிக்குத்தான் நன்மையாக முடியும்.

காலத்தைக் கடத்தாமல், நாடுகடந்த தமிழீழ அரசு பெருந்தன்மையுடன் நீடித்த மூன்று கிழமைக்குள் யாப்பினை ஏற்று, பராளுமன்ற சட்டதிட்டங்களுக்கு அமைய நடப்போம் என்று கையொப்பமிட்டு ஒன்றிணைந்து செயற்படுங்கள்.

யாப்பில், தமிழருக்கு நன்மைதரும் வேறு விடங்களும் சேர்க்கப்பட வேண்டுமாயின் அடுத்த அமர்வில் அதையும் சேர்த்துச் செயற்படுவோம். அதற்கான ஒத்துழைப்பை நான் உங்களுக்குத் தவறாது தருவேன். பாராளுமன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் சென்றாலும் தேவை வரும்போது யாப்பைத் திருத்துவதும் மாற்றுவதும் வழமையான விடயம்தானே.

எம் இனத்தின் பெயரால் உங்களிடம் அன்பாகக் கேட்கிறேன், தயவாக வேண்டுகிறேன், மன்றாடி நிற்கிறேன் நீங்கள் தவறான பாதையில், தப்பாகச் செயற்படுவது முறையல்ல.

இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைக்கவல்ல நிலையில் எம்மிடம் உள்ளது நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றே. அதையும் அழித்துவிட்டால் அல்லது பலவீனப் படுத்தினால் எம் உறவுகளின் நிலை என்ன என்பதை மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

கலாநிதி ராம் சிவலிங்கம்
பிரதிப் பிரதமர் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
email: r.sivalingam@tgte.org

Exit mobile version