வன்னியிலிருந்து வீமன் அனுப்பியுள்ள கட்டுரை இனியொருவின் கருத்துக்களல்ல. விவாத நோக்கில் மட்டும் கட்டுரை முழுமையாக, மாற்றங்களின்றிப் பதியப்படுகிறது.
இது உலகறிந்த வரலாற்று உண்மை. ஆயுதப் போராட்டம் என்பது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதே தவிர இதற்கு வேறேதும் காரணங்கள் இருந்ததாக இல்லை. இந்த ஆயுதப் போராட்டம் தொடங்கிய போதுதான் அண்டைய நாடுகள் தமது பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பச் செய்தன. போராடவேண்டிய கட்டாயத்துள் தள்ளப்பட்ட இனம் உதவி நாடிச் சென்றபோது ஆயுதக் குழுக்களை இரண்டு முகாம்களாக பிரித்து (வலது இடது என) அனைத்து உதவிகளையும் செய்வதுபோல் செய்து முரண்பாடுகளை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்த அவர்களை வளர்த்து இறுதியில் அவர்களைப் பயங்கரவாதிகளாக்கி அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களை மட்டுமல்லாது தமிழ் மக்களையும் சேர்த்து அழிக்கும் வேலையை அனைத்துலக நாடுகளும் செய்துள்ளன.
தமிழ் மக்களின் போராட்டம் உண்மையான போராட்டம். அவர்களை யாரும் கொச்சைப்படுத்தி விடமுடியாது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் விபரிக்க முடியாதவை.
உயிரிழப்பு என்பது தமிழ் மக்களுக்கு பொதுவான ஒன்றாயிற்று. இலங்கை அரச படைகள் சுடும் போதும் சாகவேண்டும் தமிழ் இயக்கங்கள் சுடும்போதும் சாகவேண்டும் அண்டை நாட்டுப் படை சுடும்போதும் சாகவேண்டும்
இது மாத்திரமா? சொல்லமுடியாதளவுக்கு சிறைகளும் சித்திரவதைகளும் பாலியல்பலாத்காரக்; கொடுமைகளும் நடந்தன. மேலும் கைகால்களை இழந்து கண்குருடாகி உறவுகளை இழந்து இனிமேல் இழப்பதற்க்கு எதுவும் இல்லாத நிலையில் மக்கள் முள்வேலி முகாமுக்குள் இருக்கும்போதுதான் எல்லோரும் எங்களைப் பாவித்து பயன்படுத்தி அகதிகளாக்கி நிற்கதியான அநாதைகளாக ஆக்கிவிட்டார்கள் என்று உணர்ந்தார்கள்.
இந்த வரலாற்றை மேலே சுருக்கமாகப் பார்த்துள்ளேன.; இன்று உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு; ஓர் சர்வதேச தமிழ் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் நமது நியாயமான ஜனநாயகத் தீர்வை எம்மக்களுக்கு வழங்க அவர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யும்படி உலக நாடுகளையும் அதன் மக்களையும் வலியுறுத்த வேண்டும். தொடர்ச்சியாக நாம் ஒருமித்த குரலில் ஒரே கருத்தோடு போராட வேண்டும்.
இதை விடுத்து இலங்கை அதிபருக்கு அல்லது இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டும் போதும் என்று நினைப்பது நமது பிரச்சனைக்குத் தீர்வாகுமா? மாறாக இனவாதம் மேலும் கூர்ப்படையும் நிலைதான் உருவாகும். இனவாதத்திற்கு தூபம் போடுவதற்கு பலர் முயற்சிக்கின்றனர். இவற்றை நாம் சரியான அரசியல் முன்னெடுப்புக்கு பயன்படுத்த வேண்டும். இல்லை தண்டிப்பதுதான் நம்முடைய இலக்கு என்றால் அதில் இலங்கை அதிபர் இராணுவத்தினர் மட்டுமல்ல தமிழ் இயக்கங்கள் அனைத்திற்கும் தண்டனை கொடுக்க வேண்டும்.
அந்நியப் படையெடுப்பு செய்தவர்கள் கடைசி முடிவுவரை துணைநின்றவர்கள் அனைவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியமா? யாருக்கு யார் தண்டனை கொடுப்பது? இது இத்தருணத்தில் செய்யவேண்டியதல்ல. எம்மிடம் அதற்கு களமும் இல்லை. பலமும் இல்லை.
தற்போது நாம் செய்யவேண்டியது எஞ்சியிருக்கும் நம் மக்களுக்கு மறுவாழ்வழிப்பதுடன் உலக நாடுகளிலும் ஜநா மன்றத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஈழப் பிரச்சனையை ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக ஒலிக்கச் செய்வதனமூலம் எமது மக்களின் ஜனநாயக அரசியல் பலத்தை உலக அரங்கில் உறிதிப் படுத்த முடியும். அப்போதுதான் எமக்காக பேச்சளவ்pல் அனுதாபமும் ஆதரவும் தருகின்ற நாடுகளும் மக்களும் மேலும் மேலும் எங்களுக்காக நடைமுறையில் பலம் சேர்ப்பார்கள். இவைதான் எமது மக்களை ஒரு தூய்மையான அரசியல் தீர்வை நோக்கி இட்டுச் செல்லும். அதுமட்டுமல்ல எமது போராட்டத்தை அழிக்க நினைத்தவர்கள் எமது எதிரிக்கு துணைபோனவர்கள் அனைவருக்கும் கொடுக்கின்ற தண்டனையாகவும் மாறும்.
ஒற்றுமைதான் எமக்குப் பலம் நாம் ஒற்றுமையாவதற்கு என்ன உயிர்த்தியாகமோ செய்யவேண்டும்? இத்தருணத்தில்தான் புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் நம் மக்களுக்கு தன்னலமின்றி விஞ்ஞான பூர்வமான அரசியல் வழிகாட்டல்களை இடையூறு இல்லாமல் தொடர்ச்சியாக செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஒருவித மாயைக்குள் இருந்தும் அந்தஸ்த்து கௌரவம் போன்றவற்றிலிருந்தும் விடுபட்டு எம்மேல் சுமத்தப்பட்டிருக்கும் வரலாற்றுக் கடமையை செய்ய மக்கள் முன்வருவார்கள்.
இதுதான் எமது போராட்டத்தில் அளப்பெரும் உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் எந்த அடிப்படை வாழ்வாதாரமுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் அளப்பெரும் பணியென எண்ணிப்பார்ப்போமாக.
தற்போதைய சூழ்நிலையில் உலகநாடுகளினதும் அதன் கூட்டமைப்பான ஜநாசபையினதும் முடிவுகள் பற்றிய கேள்விகளும் கருத்துக்களும் ஆய்வுக்குரியவையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ஜநா முடிவின்படி ஜனாதிபதி போர்க்குற்றவாளி என்றால் போர் செய்தது சரிதான் ஆனால் போரில் மீறல்கள் நடந்ததற்காக மட்டுமே தண்டனை என்று பொருள்.
போருக்கு முற்பட்ட காலத்தில் பண்டாரநாயக்கா தொடங்கி ராஜபக்சே வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றமும் நடக்கவில்லையா? இவர்களுக்குமட்டும் தண்டனை கொடுத்தால் தமிழ் மக்கள் தங்கள் கண்களை துடைத்துக்கொண்டு வாழவேண்டியதுதானோ? இது ஒருபுறமிருக்க தமிழ்மக்கள் சம்பந்தமாக ஜநாவோ அல்லது உலக நாடுகளோ எந்தத் தீர்வையும் இதுவரை முன்வைக்கவில்லை. அது உள்நாட்டு பிரச்சனை போலும்.
போர் செய்யும்போது இப்படி செய்யவேண்டும் என்பதுதான் இவர்கள் பிரச்சனை. தமிழ் மக்களின் பிரச்சனையை தமிழ் மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்பதுதான் மறைமுகமாகத் தெரிகிறது. அது போன்றுதான் இலங்கைப் பிரச்சனை அது உள்நாட்டுப் பிரச்சனை அவற்றை இலங்கை அரசே முடிவு செய்யுமென கடைசியில் முடிவுக்கும் வருவார்கள்.
எனவே தமிழ்பேசும் மக்களாகிய நாம் நமது ஒருமித்த குரலை ஒலிக்கச்செய்வதின் மூலமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன் வைத்து தொடர்ந்து சென்றால் நிட்சயம் உலகம் எம்மை மதிக்கும். எம்மக்களின் துயர் துடைக்க ஜனநாயக வழியில் ஓர் அரசியல் தீர்வை நோக்கி முன்னேற முடியுமென அனைவரும் எண்ணுவோமாக. ‘விடியலை நோக்கி ஒலிக்கட்டும் மக்கள் குரல்’ விடியல் எம் மக்களுக்காகவே என்ற ஜதார்த்தத்தை நடைமுறையில் செய்து காட்ட அனைவரும் அணிதிரள்வீர்.
நீதிக்கு தண்டனை கொடுத்தவர்கள் அநீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஒருநாள் எரிமலையாக வெடித்துச் சிதறும். அப்போது உண்மையும் தர்மமும் வெல்லுமென்பது நிட்சயம்.
நாட்டின் அனைத்து மக்களையும் வழிநடத்தக் கூடிய முற்போக்கான அரசியலை தேர்ந்தெடுக்காமல் போனதன் விளைவே இன்று நாம் மீண்டும் எம்மை தயார் படுத்திக்கொண்டு எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடுவதற்கு காரணம். ஓற்றுமை இல்லாமல் எமக்குள்ளே அடிபட்டு பிரிவினையை உருவாக்கி இன்று எமக்கு இவ்வளவு மோசமான அடி விழுந்ததும் எம்மால் உலக அரசியலுக்கோ அல்லது எமது நாட்டு அரசுக்கோ அழுத்தம் கொடுக்கக்கூடிய அரசியலை முன்னெடுக்க முடியவில்லை என்றால் இதற்குக் காரணமும் எமது அரசியல் தோல்விதான். இது நம் எல்லோருக்கும் தெரிந்ததும்தான்.
முற்போக்கான கட்சிஅரசியல் இல்லாத எந்தச் சமூகமும் முன்னோக்கிச் செல்லமுடியாது என்பதற்கு நல்ல உதாரணம் நாம்தான். அரசியல் இல்லாமல் போராடமுடியாது என்பதற்கும் நல்ல உதாரணம் நாம்தான்.
ஏதோ ஒரு வழியில் உலகம் ஓர் அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாலும் அதை முகங்கொடுக்கவோ அல்லது ஆட்சிசெய்ய முன்வரவோ வேண்டுமாயின் அதற்;கு முக்கியம் முற்போக்கான அரசியல் கூட்டு தலைமைதான் என்பதை உணர்ந்து ஈழத்தமிழ்பேசும் மக்களின் எதிர்கால வாழ்வை கருத்திற் கொண்டு ஓரணியில் சென்று ஒரேகுரலில் உலகிற்கு உரக்கச் சொல்வோம்.