Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இனி எங்கிருந்து தொடங்குவது – சிங்கள தேசிய இனத்தைப் புரிந்துகொள்ளல்(1) : சபா நாவலன்

முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி சமூக உணர்வுள்ள அனைத்து சமூக உணர்வுள்ள சக்திகள் மத்தியிலும் எழும் கேள்வியாகும். இதற்கான பருமட்டான அரசியல் அறிக்கை கூட கூட்டு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படலாம். அதன் ஆரம்ப முயற்சியாக எனது பங்களிப்பை வழங்கலாம் என எண்ணியதன் விளைவே இந்தக் குறிப்புக்கள். இவை பகிரங்க விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும்.
சிங்கள தேசிய இனத்தைப் புரிந்துகொள்ளல்
சிங்கள மகள் மத்தியில் வர்க்கங்களும் சாதியமும்
தமிழ்ப் பேசும் தேசிய இனங்களும் வர்க்கங்களும்
பிரதேச முரண்பாடுகளும் தேசிய இனங்களும்
சாதீயமும் தமிழ்ப் பேசும் மக்களும்
உலகமயமாதலின் பின்னர் அதிகார ஒழுங்கமைப்பில் இலங்கையின் நிலை
இனி என்ன செய்யலாம்
என்ற ஆரம்ப்த் தலைப்புக்களில் விவாதங்களை முன்னெடுக்க அனைத்து சமூக உணர்வுள்ளோரதும் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

தேசிய இனம் என்பது வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் தேசிய இனங்கள் உருவாகும் காலத்தில் கலாச்சாரமாக மாற்றம் பெறுகிறது. தேசிய இனம் உருவாகும் காலம் என்பது முதலாளித்துவக் காலகட்டமே. முதலாளித்துவம் உருவாகும் போது அச்சு ஊடகங்கள், அதி விரைவான போக்குவரத்து, தொலை தொடர்பு சாதனங்கள் என்பன போன்ற பல தொழில் நுட்ப வளர்ச்சிகள் மக்களை ஒன்றிணைக்கிறது. இவ்வாறான ஒன்றிணைவு அந்தத் தேசிய இனங்களின் அதிகாரமட்டத்திலிருக்கும் தேசிய முதலாளிகளுக்கு அவசியமாகிறது. அவர்கள் உள் நாட்டில் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் தேசியம் என்ற கருத்தும் அதனூடான ஒருங்கிணைவும் அவசியமாகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தேசிய உருவாக்கத்தில் அந்த நாடுகளின் அதிகாரவர்க்கத்தின் பங்கு மறுக்கமுடியாததாக அமைந்தது. ஆனால் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தேசியம் உருவாகும் போது அதனுடன் கூடவே இன்னொரு வர்க்கம் தேசிய முதலாளிகளுக்கு எதிரானதாக உருவானது. ஏகாதிபத்திய மூலதனத்தோடு சமரசம் செய்துகொண்டு அதன் முகவர்களாக அல்லது தரகர்களாகத் தொழிற்படும் தரகு முதலாளித்துவ வர்க்கமே அது.

சிங்கள தேசியம் உருவானது எப்போது அதன் பின்புலம் மற்றும் கலாச்சாரம் என்பன எவ்வாறு உருப்பெற்றது என்பன மிகவும் ஆழமாகப் பகுத்தாராயப்படவேண்டியவை. அவற்றிலிருந்து இன்றைய சிங்களத் தேசியத்தைப் புரிந்துகொள்ளல் மிகவும் அவசியமானதாகும். இலங்கையில் இலங்கையில் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டமாகட்டும், வர்க்கப்போரட்டமாகட்டும் இந்த அடிப்படையான புரிதலிலிருந்தே புதிய அரசியல் வேலைத்திட்டம் கூட வகுத்துக்கொள்ளப்பட முடியும்.

முதலாளித்துவத்தின் தோற்றத்தோடும் அதற்கான சந்தையின் உருவாக்கத்தோடுமே தேசிய இனங்கள் உருவாகின்றன என்ற மார்க்சியப் பகுப்பாய்வின் லான கருத்தை துறைசார் கல்வி சமூகத்தில் முதலில் முன்வைத்தவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகப் பேராசிரியர் ஏர்னஸ்ட் கெல்னர் எனலாம். இவரது கருத்தை மறுத்த பகுதியினருக்கு தலைமைவகித்தவர்களுள் பேராசிரியர் ஹொப்ஸ்பாம் என்பவர் குறிப்பிடத்தக்கவர்.

இலங்கை குறித்து பல துறைசார் ஆய்வுகளை முன்வைத்துள்ள ஹொப்ஸ்பம், இலங்கையில் தேரவாத பௌத்தம் காலனிய காலத்தின் முன்னரேயே தேசியவாதத்தைக் கொண்டிருந்தது என்றும் சிங்களம் பேசும் இலங்கையர்கள் தேசியவாதிகாளாக இருந்தனர் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

ஹோப்ஸ்பாமின் கருத்து அறிவியல் பூர்வமானதல்ல. விஞ்ஞானத்திற்கு முரணானது. ஆனால் அவரது வாதத்தில் சில உண்மைகள் இருந்ததைக் காணலாம். சிஙகள் மக்கள் மத்தியில் வர்க்கங்களைக் கடந்த கூட்டு உணர்வு என்பது மன்னர் காலத்திலிருந்தே காணப்பட்டதை மறுக்க முடியாது.

அவ்வாறான கூட்டுணர்வு தேசியம் என்று அழைக்கப்பட முடியாதாயினும் ஒருவகையான அடையாளம் அவர்களிடம் காணப்பட்டது. மகாவம்சம் என்ற சிங்கள ஐதீக நூலில் அது இழையோடுவதைக் காணலாம். மேலும் மன்னர்கள் இடையேயான போரில் கூட சிங்களம் என்ற மொழி அடையாளம் முதன்மைப்படுத்தப்படிருந்தது. துட்ட காமினி மற்றும் எல்லாளன் ஆகிய மன்னர்களிடையேயான போரில் சிங்களம் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டிருபது காலனியத்திற்கு முன்னைய சிங்கள அடையாளத்தின் அழுத்ததைக் காணலாம்.

முதலாளித்துவத்திற்கு முன்னர் சிங்கள அடையாளம் தோற்றம் பெற்றதன் வரலாற்றுக் காரணம் என்ன என்பது குறித்த பருமட்டான ஆய்வு இன்று எமக்க்கு அவசியமானதாகும்.

மன்னர்களின் காலம்

மன்னர்களும் சாம்ராஜ்யங்களும் தோன்றிய காலம் என்பதே நிலப்புத்துவம் உருவான காலம். அப்போது அதிகமாக நிலங்களை உடமையாக வைத்திருக்கும் வர்க்கமே ஆதிக்கத்திலிருந்தது. ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பது உலகில் நிலப்பிரபுத்துவம் அமைப்பு முறை காணப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் வாசகமாக அமைந்திருந்தது.

முதலாளித்துவக் காலத்தில் தேசியம் என்பது எவ்வாறு மக்களை இணைக்கும் சங்கிலியாக அமைந்திருந்ததோ அவ்வாறே நிலப்பிரபுத்துவக் காலத்தில் மக்களை இணைக்கும் சங்கிலியாக மன்னர்களே திகழ்ந்ததனர்.

மன்னர்களின் தத்துவார்த்த பலமாக மதங்கள் அமைந்திருனதன. மன்னர்கள் எந்த மததைத் தழுவுகிறார்களோ மக்களும் அந்த மதத்தைச் சார்ந்தவர்களாக மாறும் வரலாற்றுப் பாடங்களைப் படித்திருக்கிறோம். ரோமானிய சாம்ராஜ்யத்திலிருந்து சமணர்கள் காலம் ஈறாக ராஜராஜசோழன் வரை இவற்றை கண்டிருக்கிறோம்.

நிலப்பிரபுத்துவம்…

ஒரு சமூக அமைப்பு மக்களின் தேவைகளைத் திருப்திசெய்ய முடியாத போது அந்த சமூக அமைப்பின் அழிவுகளிலிருந்து புதிய சமூககக் கட்டமைப்பு உருவாகிறது.

இந்தியாவில் குழு நிலை சமூக அமைப்பின் அல்லது குறு நில மன்னர்களின் ஆதிக்கத்திலிருந்து நிலப்பிரபுத்துவ அமைப்பு அல்லது விரிந்த சாம்ராஜ்யங்கள் உருவாகின்றன. எவ்வாறு ஜேர்மனியில் நிலப்பிரபுத்துவ விழுமியங்களைப் பாதுகாக்க நீட்சே தனது குரலை உயர்தினாரோ அவ்வாறே இந்தியாவில் புத்தர் குழு நிலை சமூகங்களின் பெறுமானங்களைப் பாதுகாக்க நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார். பௌத்த மதம் என்பதே இந்தப் போராட்டத்தின் கோட்பாட்டு வடிவமாகத் திகழ்ந்தது. நிலப்பிரபுத்துவத்தில் சக்கரவர்த்திகளின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான புத்தரின் கருத்துக்கள் சமாதானத்தைப் போதித்தன.

நிறுவன மயமான போர் அழிவுகளுக்கு எதிரான தியானம் போன்ற உய்வடைதல் போன்ற வழிமுறைகளை முன்வைத்தார்.
இலங்கையில் நிலப்பிரபுத்துவம்

இலங்கையில் நிலப்பிரபுத்துவம் குறு நில மன்னர்களை ஆக்கிரமிக்கும் போர்கள் ஊடாக எழவில்லை. இலங்கை தென்னிந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்பைச் சந்திதது. அவர்கள் நிலப்பிரபுத்துவத்திற்கே உரித்தான குறு நில மன்னர்களைப் போர்கள் ஊடாகவோ அன்றி வேறு வழிகளிலோ ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக சில குறு நிலங்களை ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்ட தென்னிந்திய மன்னர்கள் அங்கே தமது ஆட்சியை நிரந்தரமாக நிறுவவில்லை.

தென்னிந்தியாவில் காணப்பட்ட விரிந்த அரசுகளுடன் அவை இணைந்து ஒரு நிலமாக ஆட்சி ஏற்படுவதற்குப் பதிலாக அங்கே தென்னிந்திய மன்னர்களின் பினாமிகளே ஆட்சி செய்தனர். அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சாம்ராஜ்யங்களுக்கும் இடையே தொடர்ச்சியான தொடர்புகள் காணப்படவில்லை. மையப்ப் பேரரசு ஒன்றின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சி தோற்றம் பெறவில்லை. 12 ஆம் நூற்றண்டுக்கு முன்பதாக இலங்கையில் ஆட்சியிலிருந்த தென்னிந்திய மன்னர்கள் அவர்களின் ஆட்சி செய்த மக்கள் பகுதிகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக அந்த மக்களுக்கு எதிரான ‘சமூக விரோத’ச் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

தென்னிந்திய மன்னர்களின் பினாமிகள் இலங்கைக்கு வருவதும் அங்கே தமது படைகளோடு கொள்ளையிட்டுக்கொண்டு திரும்புவதுமான செயற்பாடுகளை வரலாற்று நூல்கள் அனைத்திலும் காணலாம்.

மக்களை மைய அரசை நோக்கி ஒருங்கிணைப்பதற்கும் சட்டம் ஒழுங்கு போன்றவற்றை ஒழுங்கமைப்பதற்கும் நிலையான ஆட்சி நீண்ட காலமாகக் காணப்படவில்லை. இலங்கையைச் சார்ந்த மன்னர்கள் இவ்வாறான ஆட்சியை தோற்றுவிக்க முனைந்தபோதும் தென்னிந்தியப் படையெடுப்புக்கள் அவற்றைக் காலத்திற்குக் காலம் சீர்குலைத்தன. இவ்வாறான சீர்குலைவுகளிலிருந்து சுதாகரித்துக்கொள்ள இலங்கையில் மக்கள் தங்களைத் தாமே ஒழுங்குபடுத்தும் ஒரு சமூகக் கட்டமைப்பு தேவைப்பட்டது. இதன் ஒரு வெளிப்பாடே பத்தாம் நூற்றாண்டுகளிலிருந்தே கம் சபா போன்ற கிராமிய சபைகள் உருவாகின.

சமூகவியலாளார்கள் இலங்கையின் நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை முக்கோண வடிவிலமைந்த அதிகாரமாக ஆரம்பித்தது என்பர். முக்கோணத்தின் ஒரு முனையில் மன்னரும், மறு முனையில் பௌத்த துறவிகளும் இறுதி முனையில் கம் சபாக்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட மக்களும் காணப்பட்டனர். எதிரியை எதிர்கொள்வதற்குரிய போர்படைகள் தேவைப்பட்டால் மன்னர் பௌத்த துறவிகளிடமும், அவர்கள் மக்களிடமும் கோருவதற்குரிய அந்த அமைப்புமுறை பத்தாம் நூற்றாண்டளவிலேயே உறுதியான அமைப்பாக உருவாகிவிட்டது.

தென்னிந்தியப் படையெடுப்பை எதிர்கொள்ளும் ஒரு புதிய வகையான அமைப்பு முறை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறையோடு இரண்டறக் கலந்திருந்தது.

இலங்கையில் நிலப்பிரபுத்துவமும் தேரவாத பௌத்தமும்

தேரவாத பௌத்தம் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான தத்துவார்த்த மேல்கட்டுமானத்தை வழங்குவதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியது. உலகத்தின் மிகவும் பழமைவாய்ந்த தொல்பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் அபயகிரி விகாரை கி.மு 2 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்ப்பட்டது. 3ம் நூற்றாண்டளவில் பிரித் என்ற பௌத்த துறவிகளின் மந்திரம் தமிழில் ஓதுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது.

தமிழ் நாட்டில் பௌத்தம் இந்து மத ஆக்கிரமிப்பால் அழிந்த போது அந்த அழிவிலிருன்க்து தேரவாத பௌத்ததைப் பாதுகாப்பதற்கான சின்னமாக அபயகிரி விகாரை திகழ்ந்தது. தமிழில் பிரித் ஓதப்பட்ட மகாவிகாரை அழிக்கப்பட்டு அந்த விகாரையின் அழிவுகளிலிருந்து அபயகிரி விகாரையில் ஒரு மண்டபத்தை மகாசேனன் கட்டுவித்தான் என்ற வரலாறு உண்டு. இன்று வரைக்கும் அபயகிரி விகாரை சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தின் சின்னமாகத் திகழ்கிறது.

இலங்கையில் நிலப்பிரபுத்துவத்தின் தத்துவார்த்த மேற்கட்டுமானமான பௌத்தத்தின் வேர்களிலிருந்தே தென்னிந்திய எதிர்ப்புக் காணப்பட்டது. இதுவே பின்பதாக தமிழ் எதிர்ப்பு என்ற நிலை உருவாவததற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்தது.
தவிர, சிங்கள பௌத்தம் என்பது தேசிய இனமாக தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே ஏனையவர்களுக்கு எதிரான அச்ச உணர்வு என்பது சமூக உளவியலாக உருவாகியது.

இஸ்ரேல் உருவான காலத்திலிருந்தே அரபு நாடுகளுக்கு எதிரான அச்ச உணர்வு என்பது சியோனிசத்தை உருவாக்கியது. இஸ்ரேலின் சியோனிசத்தை விடப் பழமைவாய்ந்த பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம்.

இஸ்ரேலின் சியோனிசத்தைப் போன்ற சிந்தனை வடிவத்தைக் கொண்ட சிங்கள பௌத்த மேலதிக்கவாதக் கருத்துக்களை பேராசியர் ஹொப்ஸ்பாம் நிலப்பிரபுத்துவ தேசியவாதம் என்ற தவறான கோட்பாட்டு விளக்கைத்தைக் கொடுக்க முயன்றார். சிங்கள தேசிய இன உருவாக்கத்தில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்த தென்னிந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் எதிரான கூட்டு உணர்வும், ஏனைய இனக் குழுக்களுக்கு எதிரான அச்ச உணர்வும் பெரும் பங்கு வகித்தது.

தொடரும்..

Exit mobile version